செய்திகள் (Tamil News)
பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த களைகொல்லிகளை தெளிக்கும் விவசாயிகள் - மண்வளம் பாதிக்கும் அபாயம்
குடிமங்கலம் பகுதியில் புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் களைகளின் ஆக்கிரமிப்பால் பலவீனமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடிமங்கலம்:
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் தக்காளி, பீட்ரூட், சின்னவெங்காயம், காய்கறிப்பயிர்கள், தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
களைகளை அகற்றுவதற்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் களைக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது அதிலும் விரைவாக கிளைத்து வளர்ந்து பிரதான பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பார்த்தீனியம் போன்ற களைகளை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாகவே உள்ளது.
எனவே சில விவசாயிகள் விரைவான பலன் வேண்டி விசைத்தெளிப்பான் மூலம் வீரியமிக்க ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
குடிமங்கலம் பகுதியில் புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் களைகளின் ஆக்கிரமிப்பால் பலவீனமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென்னங்கன்றுகளை பிளாஸ்டிக் சாக்குகளால் மூடிவிட்டு களைக்கொல்லிகளை தெளிக்கின்றனர்.
எனவே களைக்கொல்லிகளால் மண்வளம் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்க எளிய முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய யுத்திகளை கண்டுபிடிக்க வேளாண் ஆராய்ச்சியாளர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
அத்துடன் கூலித் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.