தஞ்சையில் திருமண மண்டபத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு
தஞ்சாவூர்:
தஞ்சை ரெட்டிபாளையம் பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மேலவீதியில் உள்ள தனது உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கே சம்பவத்தன்று இரவு திருமண மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் தூங்கினார். இவருடன் மற்ற உறவினர்களும் தூங்கினர். அப்போது திருமண மண்டபத்துக்குள் மர்ம நபர் புகுந்தார். திடீரென அந்த நபர் ஜெயலட்சுமி அருகில் வைத்திருந்த அவரது பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். அந்த பையில் 10 பவுன் தங்க செயின் இருந்தது.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது தங்க செயின் இருந்த பையை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.