search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலம்"

    • 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கி மெதுவாக நடக்கிறது.

    இந்த மேம்பால பணியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 2,437 சதுர மீட்டர் தனியார் நிலத்தையும் 194 சதுர மீட்டர் அரசு நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

    வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளம் கொண்டதாகும். 15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது.

    மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2860 சதுரமீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகி றது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் சென்னை கலெக்டரால் நியமிக்கப்பட்டு நடக்கிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அதிகாரிகள் மூலம் இவை நடத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த மேம்பாலம் கான் கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் (கிரேடர்) இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ரெயில்வே மேம்பாலங்களுக்கு இதுபோன்ற இரும்பு உத்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும்.

    இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
    • பாலத்தின் பாதி பகுதிகள் கட்டப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    சென்னை:

    சென்னை பட்டாபிராமில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பகுதிக்கு செல்லும் தண்டவாளத்தின் குறுக்கே உள்ள லெவல் கிராசிங்கில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இந்த வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்னை- திருவள்ளூர் இடையே செல்கின்றன.

    ஆனால் பல்வேறு தடங்கல்களை தாண்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் இந்த பாலம் கட்டுமான பணியில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இதனால் பாலம் கட்டுமான பணி தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதி வழியாக செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பாலத்தை எப்போது கட்டி முடிப்பார்கள் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    பட்டாபிராம் பாலம் கட்டுமான திட்டம் இன்னும் கனவு திட்டமாகவே உள்ளது. பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது. மேம்பாலத்தின் இருபுறமும் 7.25 மீட்டர் அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் சர்வீஸ் சாலைக்கு 3.5 மீட்டர் அகலமே விடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இந்த வழியாக ஆவடி மற்றும் திருவள்ளூர் நோக்கி தினமும் லட்சக்கணக்காணவர்கள் பயணிக்கிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 வருடங்கள் ஆகியும் 4 வருடங்களுக்கு முன்புதான் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆனாலும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலம் கட்டுமான பணிகள் காலதாமதம் ஆனது.

    பின்னர் வருவாய் துறையினர் தலையிட்டு 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தினார்கள். ஆனாலும் இந்த திட்டம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. பாலத்தின் பாதி பகுதிகள் கட்டுப்பட்டு அப்படியே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாகன போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் சர்வீஸ் சாலையை பராமரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சர்வீஸ் சாலையை பராமரிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த வழியாக ஆம்புலன்சு செல்வதில் கூட சிரமமாக உள்ளது. அவசர காலங்களில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாலம் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பட்டாபிராம் செல்லும் வாகன ஓட்டிகள் போலீஸ் நிலையத்தில் யூ வளைவில் திரும்பி தற்போதுள்ள சாலையில் ஏறி திருநின்றவூர் நோக்கி சென்று சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் கட்டுமான பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதிகாரிகள் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பாலம் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் என்று நம்புகிறோம்' என்றார்.

    • விமானம் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல்.
    • விமானம் சிக்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் நேற்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி சேதமான இந்த விமானத்தை அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியில் உள்ள பிப்ரகோதி என்கிற மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது.

    இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டது.

    மேம்பாலம் அடியில் விமானம் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதேபோல், கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் கொண்டு செல்லப்பட்டபோது ஆந்திரா மாநிலத்தில் உள்ள பபாட்லா மாவட்டத்தில் மேம்பாலம் அடியில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை டவுட்டனில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. இது மிகவும் பழமையான பாலமாகும். இந்த பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் டவுட்டன் மேம்பாலம் தற்போது சேதம் அடைந்து வருகிறது.

    நெரிசல் மிகுந்த இந்த மேம்பாலத்தின் பல இடங்களில் பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பாலத்தில் 500 மீட்டர் தூரம் வரை ஆங்காங்கே பள்ளம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பிறகு இந்த பாலத்தில் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மழை பெய்யும் போது இந்த வழியாக செல்லும் வாகனங்களால் மேம்பாலம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. வாகன போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுவதால் பாலம் தினமும் கூடுதலாக சேதம் அடைந்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் பள்ளிகள் இருப்பதால் பாலத்தில் மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் பெற்றோரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இந்த பாலத்தை சீரமைக்குமாறு அந்த துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எனவே பாலம் விரைவில் சீரமைக்கப்படும்' என்றனர்.

    • ருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது.
    • 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இணைப்பு சாலைகள், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன. வெளி மாநில வாகனங்கள், கன்டெய்னர்கள், டிப்பர், மணல் லாரிகள், சரக்கு வேன்கள், ஆம்புலன்சுகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கின்றன.

    கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக பல்லடம் உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இணையாக விபத்துகள், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி ரிங் ரோடு, கரூர்- கோவை பசுமை வழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. சமீபத்தில் பல்லடம் - காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் இது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்லடம் வட்டாரத்தில் நடந்த வாகன விபத்துகள், மற்றும் உயிரிழப்புகள் புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

    இதில் 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 110 பேர் வரை வாகன விபத்துகளில் மட்டும் உயிரிழக்கின்றனர். இதனால் எண்ணற்ற குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல்லடத்தை காட்டிலும் குறைந்த அளவு போக்குவரத்து கொண்ட தாராபுரத்தில் கூட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல்லடம் தொகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது கானல் நீராகவே உள்ளது. எனவே சந்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை தவிர்க்கவும் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாநகராட்சி பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
    • பல வருடங்களுக்கு முன்பு இரண்டு ரெயில்வே கேட்டுகளும் மூடப்பட்டன.

    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சி 12-வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    அந்த பகுதியில் மேலும் மாநகராட்சி பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

    50 வருடம் பழமையான ஆலந்தூர் மார்க்கெட்டும் உள்ளது. இதில் அரிசி மண்டி, காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், சமையல் மற்றும் எரிவாயு எண்ணைய் அங்காடிகள், ஜவுளி கடைகள் என பல்வேறு கடைகள் உள்ளது.

    இரண்டு பகுதிகளிலும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூரை இணைக்க முன்பு பரங்கிமலை ரெயில் நிலைய ரெயில்வே கேட் மற்றும் நிதி பள்ளி ரெயில்வே கேட் என இரண்டு ரெயில்வே கேட் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு இரண்டு ரெயில்வே கேட்டுகளும் மூடப்பட்டன.

    அதில் பரங்கிமலை ரெயில் நிலைய கேட் நெடுஞ்சாலை துறை சார்பாக சுரங்க பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இதில் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்த சுரங்கப்பாதை கீழ்கட்டளையில் இருந்து ஆலந்தூர் வழியாக கிண்டி செல்ல ஏதுவாக உள்ளது. தற்பொழுது இந்த சுரங்கபாதை பிரதான சுரங்க பாதையாக மாறி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலை நேரமான காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அதிலும் குறிப்பாக ஆதம்பாக்கத்தில் இருந்து கருணீகர் தெரு வழியாக சுரங்கப்பாதை செல்வதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

    மேலும் மூடப்பட்டிருந்த நிதி பள்ளி ரெயில்வே கேட் எல்.சி.-15 வழியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் அவ்வப்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது.

    இதை அடுத்து ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் இரு பகுதி மக்களும் மூடப்பட்டிருந்த நிதி பள்ளி ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2013-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சி இரு பகுதியை இணைக்க சுரங்கபாதை அமைக்க பூஜை போடப்பட்டது.

    இந்த பணி தொடங்குவதற்கு சென்னை மாநகராட்சி சார்பாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 3 கோடி ரூபாய் ரெயில்வே துறைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் மெட்ரோ குடிநீர் ராட்சத பைப் இருப்பதால் சுரங்கபாதை அமைவதற்கு வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரிய மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுரங்கப்பாதை திட்டம் மாற்றப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மேம்பாலத்திற்கு சாய் தள மேம்பாலம் என்றும் பெயரிடப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களான ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் பயன்படுத்து வதற்காக கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக மேம்பாலம் கட்டும் பணிகள் காலதாமத மானது. பின்பு 2016 அ.தி. மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சி உட்கட்டமைப்பு இல்லாததால் (கவுன்சிலர்கள் இல்லை) இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது .

    தற்போது எல்.சி.-15 ரெயில்வே கேட் முழுவதுமாக மூடப்பட்டு ஆதம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் இரு பக்கத்திலும் சுமார் 12 அடி உயரத்திற்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டாலும் பொது மக்கள் மிகவும் சிரமமடைந்து உள்ளனர்

    ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் செல்ல ஒரே வழியான பரங்கிமலை சுரங்கப் பாதை வழியாக தான் செல்ல வேண்டும்.

    இதனால் ஆதம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் செல்ல குறைந்தது மூன்று கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சம் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் இரு பகுதி மக்களும் சிறிய வாகனங்கள் செல்லும் சாய்தள மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர். ஆனால் இலகுரக வாகனங்கள் இல்லாமல் பாதசாரிகள் மட்டும் செல்லும் மேம்பாலமோ, சுரங்கபாதையோ வேண்டாம் என்று பொது மக்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அதற்கு காரணம் பாத சாரிகள் மட்டும் பயன் படுத்தும் மேம்பாலம் அல்லது சுரங்கபாதையில் பிச்சைக்காரர்கள் மற்றும் சாலையில் வசிப்பவர்கள் அதன் இருபுறமும் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

    மேலும் மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் உட்பட பெண்கள் தனியாக நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

    ஏனென்றால் ஏற்கனவே ஆலந்தூர் ஆசர்கானாவில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்ல பாத சாரிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது. அது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குகையாக மாறி வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் பெண்கள் பகல் நேரங்களில் கூட தனியாக செல்வது இல்லை. இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவு.

    அதனால் ஆதம்பாக்கம் -ஆலந்தூரை இணைக்கும் இந்த எல்.சி.15 ரெயில்வே கேட் பகுதியில் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையிலும் பொது மக்கள் ஓரமாக நடந்து செல்லும் வகையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இப்படி மேம்பாலம் அமைத்தால் அது மழைக் காலங்களிலும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோரிக்கையை தற்பொழுது உள்ள அரசால் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    • கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.
    • சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்.

    டெல்லியில் மூன்று வழிச்சாலை கொண்ட சராய் காலே கான் மேம்பாலத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த 5 ஆண்டுகளில் 30 மேம்பாலங்கள் கட்டியதில் 557 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், "கெஜ்ரிவால் அரசாங்கம் சராய் காலே கான் மற்றும் ஆசிரமம் இடையே உள்ள பகுதியை மாற்றியுள்ளது.

    முன்பு, ஆசிரமத்திற்குச் செல்வது என்பது நெரிசலில் சிக்கி மணிக்கணக்கான நேரம் ஆகும். ஆனால் ஆசிரமம் வரையிலான மேம்பாலம் நீட்டிப்பு மற்றும் சுரங்கப்பாதை ஆகியவை அந்த சிக்கலைத் தீர்த்துவிட்டன. இந்த மேம்பாலம் திறப்பது சாராய் காலே கானை நெரிசல் இல்லாத பகுதியாக மாற்றும்" என்றார்.

    • விஜய்வசந்த் எம்.பி.தகவல்
    • வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:- குழித்துறை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கிராசிங் எண் 14-ல் ரெயில் போகும் சமயங்களில கேட் நீண்ட நேரமாக அடைத்து வைப்பதின் காரணமாக இருபுறம் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நடைக்காவு, சூழால், விளாத்துறை, ஊரம்பு, பைங்குளம், மங்காடு, நித்திரவிளை, முன்சிறை, புதுக்கடை, ஐரேனிபுரம், கொல்லஞ்சி, காரவிளை போன்ற இடங்களில் உள்ள பொதுமக்கள் மார்த்தாண்டம் ரெயில் நிலையம் மற்றும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்து செல்ல போக்குவரத்து நெருக்கடி காரணமாக சரியான நேரத்திற்குவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் குழித்துறை ரெயில் நிலையம் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    விஜய்வசந்த் எம்.பி. ரெயில்வே அதிகாரிகளையும், ரெயில்வே அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பாராளுமன்றத்தில் பேசியதின் மூலமாக ரெயில்வே நிர்வாகம் அந்த இடத்தை ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து முழு செலவையும் ஏற்று ரூ.45 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க முன்வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சீராகுவது மட்டுமல்லாது அப்பகுதி விரைவில் வளர்ச்சி பெறும். அதுபோல நீண்ட நாட்களாக விரிகோடு பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களும், வாகன ஓட்டிகளும் மார்த்தாண்டம், நாகர்கோவில், திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர்.

    மாற்று இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் விரிகோட்டை சுற்றியுள்ள மக்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பேசி முழு முயற்சி எடுத்து வருகிறேன். எனவே அப்பகுதி மக்களின் விருப்பத்தின் படி அவர்களின் கோரிக்கை ஏற்றவாறு விரிகோட்டில் விரைவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதவரம் பகுதியிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
    • பாதசாரிகள் சாலையை கடப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது.

    கொளத்தூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறைந்த தூரத்தில் சாலை பயணம் செல்லவே வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் மாதவரம் பகுதியிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மாதவரம் பஸ் நிலையம் முதல் கோயம்பேடு வரையிலான ரோடு கிரான்ட் நார்த்தன் டிரக் சாலை என்று அழைக்கப்படுகிறது. 100 அடி அகலம் உள்ள இந்தச் சாலையின் இரு பக்கமும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், மாநகர பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

    குறிப்பாக நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, தடா, பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம், மாதவரம் பகுதியில் உள்ள வணிகர்கள் வாகன ஓட்டிகள் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, வேளச்சேரி பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய பிரதான சாலையாக இந்த 100 அடி சாலை உள்ளது.

    சீரிப்பாயும் வாகனங்களுக்கு இடையே கொளத்தூர் அடுத்த ரெட்டேரி, அம்பேத்கர் நகர், செந்தில் நகர், தாதங்குப்பம் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது.

    செந்தில்நகர் சாலை சந்திப்பில் குறுக்கும் நெடுக்குமாக 4 சாலைகள் இருப்பதால் பாதசாரிகள் கவனம் சிதறி ஓடும் நிலைமைக்கும் ஆளாகின்றனர். இந்த 100 அடி சாலையை கடக்க 5 முதல் 8 நிமிடம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் சாலையை கடக்கும்போது பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு மாநில நெடுஞ்சாலை துறை செந்தில் நகர் சந்திப்பில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்து உள்ளது. ரூ.13.5 கோடி மதிப்பில் உள்வட்ட சாலை என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு சாலையில் இந்த புதிய நடை மேம்பாலம் அமைய இருக்கிறது. ஆலந்தூரில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டியதைப் போன்று லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களைக் கொண்டிருக்கும்.

    இந்த நடைமேம்பாலம் 5 மீட்டர் அகலமும் 37 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். மேலும் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் தவிர இருபக்கங்களையும் இணைக்கும் படிக்கட்டுகளும் அமைய உள்ளன. மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் லிப்ட்டின் நுழைவுவாயிலில் சாய்தளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.விரைவில் செந்தில் நகர் சந்திப்பில் பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்லும் வகையில் நடை மேம்பாலம் வர உள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கொளத்தூர் செந்தில் நகர் சந்திப்பில் சாலையை கடந்து செல்வது சவாலானது. இந்த இடத்தில் நடைமேம்பாலம் வருவது முக்கியமானது. இந்தப் பணியை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

    இதே போல் ராஜமங்கலம் அருகே உள்ள அம்பேத்கர் நகர் சந்திப்பு மற்றும் தாதங் குப்பத்திலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் சாலையை கடக்க பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அந்த இடத்திலும் நடை மேம்மபாலம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • முன் பக்க சக்கரங்கள் உடைந்து தெறித்தன
    • கனரக லாரிகளை கட்டுப்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக பல்வேறு இடங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் முறையான அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது.

    இதனை தடுத்து நிறுத்தும் படி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் கடத்தல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மரண பயத்துடன் செல்கின்ற னர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதில் யார் முந்தி செல்வது என்ற போட்டியில் ராதாபுரத்தில் இருந்து வந்த கனரக லாரி, மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பகுதியில் மோதியது.

    இதில் மேம்பாலத்தின் நுழைவாயிலில் இருந்த பெயர் பலகை துண்டானது. மேலும் டாரஸ் லாரி யின் முன் பக்க 2 சக்க ரங்களும் துண்டாகி சென்று உள்ளது. லாரியின் முன்பக்கம் முழுவதும் கடுமையாக சிதைந்து சேதமடைந்து உள்ளது.

    இந்தச் சம்பவத்தில் லாரியை ஓட்டி வந்த ஜெயராஜ் (வயது 42) காயம் அடைந்தார். அவரை லாரியின் உரிமை யாளர் மற்றும் சக டிரைவர்கள் அங்கிருந்து காரில் அழைத்துச் சென்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் லாரியில் துண்டான 2 சக்கரங்க ளையும் கிரேன் மூலம் தூக்கி இரவோடு இரவாக அகற்றியதோடு லாரியையும் சாலை ஓரத்தில் ஒதுக்கி உள்ளனர்.

    மேலும் 30 அடி உயரம் உள்ள பெயர் பலகையையும் கிரேன் மூலம் தூக்கி சாலை ஓரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு அப்பகுதியில் விபத்து நடக்காதது போன்று மாற்றி வைத்துள்ளனர்.

    மேலும் சாலை முழுவதும் லாரியில் இருந்த ஆயில் கொட்டி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்ற பலர் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

    விபத்து சம்பவம் நடந்த பிறகும் சம்பந்தப்பட்ட நிர்வாகமோ அல்லது போலீசாரோ கனரக லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார்.

    சேத்தியா தோப்பு, ஆக .18-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஆனைவாரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அண்ணாதுரை மற்றும் கிராம மக்கள் 100- க்கு மேற்பட்டோர் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்க பாதை அமைக்க வேண்டும் என ஒன்று திரண்டு வந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதிஎம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை நகாய் திட்டஅலுவலரிடம் பேசி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேம்பாலங்களுக்கான செலவு ரூ.459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர். சாலை) 4 மேம்பாலங்கள் கட்டுவதற்கு மாநில அரசு ரூ.331 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான முதல் தவணையாக ரூ.50 கோடியை வழங்கியுள்ளது.

    தரமணி-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பு, எம்.ஜி.ஆர். சாலை-பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு, சோழிங்கநல்லூர் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் மேம்பாலங்கள் அமைகின்றன. சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன. 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலங்களுக்கான செலவு ரூ.459.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் சாலை மேம்பாட்டு நிறுவனம் ரூ.331 கோடியும், மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×