search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித உரிமை ஆணையம்"

    • ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர்.
    • நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வண்ணாத்திப் பாறை காப்புக்காட்டில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மின்வேலி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் அப்பகுதியில் பதுங்கி இருந்தார். வனத்துறையினரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரனுக்கும், வனத்துறையினருக்கும் இடையே நடந்த தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில ஈஸ்வரன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் முரளிதரன், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தது தெரியவரவே அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரன் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு குற்றவாளி மீது எண்கவுண்டர் நடத்துவது போல வனத்துறைக்கு துப்பாக்கியால் சுட அதிகாரம் கொடுத்தது யார்? எனவே இப்பிரச்சினையில் போலீசாரும் எங்களை சமாதானம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தினால்தான் இதில் உண்மை வெளிவரும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் நாங்கள் அனுமதி அளிக்காமல் கையெழுத்திட மறுத்துவிட்டோம் என்றனர்.

    இறந்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே அவர் அமைத்த மின்வேலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததால்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு 2ம் நாளாக ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. 

    • விசாரணையில் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
    • மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான 5 வாலிபர்களும் இன்று சப்-கலெக்டர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த விசாரணையில் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இதில் நேற்று பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மாரியப்பன், செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் ஆகியோர் சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அதனை பதிவு செய்துகொண்ட ஆணையம் நாளை மறுநாள் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங்கை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரான 5 வாலிபர்களும் இன்று சப்-கலெக்டர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆதரவாக சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாப்பாக்குடி அருகே உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியில், சுமார் 10 அடி உயரத்தில் அவரது படம் பொறித்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.

    தற்போது இந்த டிஜிட்டல் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் உதவி போலீஸ் சூப்பிரண்டு நலமுடன் வாழ சிறப்பு பூஜைகளை அப்பகுதி மக்கள் செய்தனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
    • ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    விழுப்புரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி.

    இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார்.

    இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    இதில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் பட்டில் கேட்டன் பலிராம், ஏக்தாபக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ் குமார், பிஜூவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று விக்கிரவாண்டி வந்தனர்.

    அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    இந்நிலையில் இன்று காலை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூர் சென்றனர். அங்கு ஆசிரமத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராமதுரை தரப்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • வழக்கின் விசாரணை முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்தன். இவர் கொளகூர் பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவரின் நிலப்பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த சென்றார். அப்போது ராமதுரையை சமூகத்தை குறிப்பிட்டு தரகுறைவாக, பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி ராமதுரை தரப்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த இழப்பீடு தொகையை அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் வழங்கவேண்டும் என்றும், அந்த தொகையை ஆய்வாளரிடம் இருந்து வசூல் செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

    இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும்.
    • உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.

    சென்னையில் இன்று மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஷ்ரா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையமானது 1997-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் 1996-ம் ஆண்டு அமைந்த பிறகுதான், மாநில மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை 20.12.1996 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆணையம் அமைக்கப்பட்டது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் மிகமிக அடிப்படையான அம்சம் என்பதே மனித உரிமைகள்தான்.

    சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை, பாதிக்கப்பட்டால் அதற்காகத் தீர்வு காணும் உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்து அரசுகளுக்கும் உள்ளது.

    அந்தக் கடமையிலிருந்து நாங்கள் ஒருநாளும் தவறமாட்டோம் என்ற உறுதியை நான் இங்கே தருகிறேன்.

    மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

    ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இங்கு பேசிய உறுப்பினர் சொன்ன அந்தக் கோரிக்கையின்படி, ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமா னதாக இல்லை என்று சொன்னார். இது குறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும்.

    அதேபோல் மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்.

    மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமைத் தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

    மனித உரிமைக் கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

    ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நெறி தவறாத ஆட்சி முறையே என்பதாகும். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். குறிப்பாக, திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆட்சியர்கள், மதுரை காவல் ஆணையர், கோவை எஸ்பிக்கு விருது வழங்கப்பட்டது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோயாளியிடம் நர்சு, ஊழியர்கள் லஞ்சம் கேட்டது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை அமைப்பின் பொதுச் செயலாளர் ஜாபர்அலி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அமைப்பை சேர்ந்த ஆணையப்பன் என்பவர் புற்றுநோய் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் நர்சுகள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக பணம் கேட்டுள்ளனர்.

    அவர் பணம் கொடுக்காததால் சிகிச்சை அளிப்பதை வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். இதுபோன்ற குறைகளை களைவதற்காக மருத்துவ கண்காணிப்பு குழுவும் இந்த மருத்துவமனையில் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயசந்திரன் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்க கோரி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
    ×