search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன ஆரோக்கியம்"

    • உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன.
    • நம்மை நாமே அன்பு செய்வோம், மகிழ்ச்சியாக வாழ்வோம்.

    இந்த உலகில் எல்லா உயிர்களுமே அன்புக்காக ஏங்குகின்றன. தன் மீது பிறர் அன்பு காட்ட வேண்டும், தன்னிடம் ஆறுதலாக பேச வேண்டும், மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும், தன் செயல்களை அங்கீகரிக்க வேண்டும், தான் சிறப்பாக செயல்பட்டால் பாராட்ட வேண்டும் என ஏதாவதொரு வகையில் பிறர் தன் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று மனிதர்களும் ஆசைப்படுவது யதார்த்தமானது.

    அதேபோல தனக்கு பிடித்தமானவரிடம் அளவில்லா அன்பை பொழிவதும், அவருக்கு பிடித்ததை பரிசாக அளிப்பதும், அவரை சந்திக்க அலாதியான விருப்பம் கொள்வதும் பலரது இயல்பாக இருக்கும். தன்னிடம் அன்பு காட்டுபவருக்காக எதையும் செய்ய துணிந்திடுவார்கள். தம்மால் முடியாததையும் தமது சக்திக்கு அப்பாற்பட்டதையும் கூட செய்ய முயற்சி செய்வார்கள்.

     அதேபோலவே நம்மையும் பிறர் அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் நம்மையே அன்பு செய்ய மறந்து விடுகிறோம். இதனையே சுய அன்பு என்று சொல்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். சுய அன்பு என்பது சுய நலம் அல்ல. அது நமது மன நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும் அற்புதமான திறவுகோலாகும்.

    இன்றைய சமூகச்சூழலில் பலர் வாழ்க்கை மீது வெறுப்பு கொள்வதற்கும், இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு எடுப்பதற்கும் சுய அன்பு இல்லாததே காரணம். சுய அன்பு என்றால் புரியாத புதிரல்ல, அது மிகவும் எளிதானது. நம்மையே நாம் அன்பு செய்வது என்றால் நம்மையே நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வது. நாம் சிகப்போ, கருப்போ, குண்டோ, ஒல்லியோ, குட்டையோ, நெட்டையோ எப்படியாக இருந்தாலும் நாம் நம்மையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள்ளேயே `நான் அழகானவன்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.

     ஒருபோதும் நாம் நம்மை பிறரோடு ஒப்பிடவே கூடாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு வகையில் தனித்துவம் ஆனவர்கள். எனவே நமது தனித்துவ பண்பை ஏற்றுக்கொண்டு அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக நம்மையே நாம் அன்பு செய்வோம். அதன் வெளிப்படாக நமக்காக மேற்கொள்ளும் சிறு, சிறு காரியங்களை ரசித்து, மகிழ்ச்சியுடன் செய்வோம்.

    அதேபோன்று நல்ல செயலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு, அதனை செய்து முடித்து விட்டால் நம்மை நாமே பாராட்டிக்கொள்வோம். அதற்கு தக்க சன்மானமாக ஏதாவதொரு பரிசை வாங்கி நமக்கே நாம் அளித்துக்கொள்வோம். அது ஐஸ்கிரீம் வாங்கி ருசித்து சாப்பிடுவதாகக் கூட இருக்கலாம். இப்படி செய்வது விளையாட்டாக தெரியலாம். ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் உளவியல் தாக்கம் பெரியது என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே நம்மை நாமே அன்பு செய்வோம்...! மகிழ்ச்சியாக வாழ்வோம்...!

    • அழுவதும் உடல் நலனுக்கு நல்லது.
    • மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

    சிரிப்பின் மகிமையை நாம் அனைவரும் அறிவோம். அது கவலையை போக்கும் சிறந்த மருந்துகளில் ஒன்று என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். முழுமனதுடன் சிரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுவது போல, அழுவதும் உடல் நலனுக்கு நல்லது.

    அழுவது எப்படி உடலுக்கு நன்மை சேர்க்கும்? என்று நீங்கள் யோசிக்கலாம். சிரிப்பதால் மட்டும் அல்ல, அழுவதாலும் நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிரிப்பு எந்த அளவிற்கு நம் மனதுக்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கிறதோ, அதற்கு சமமான அளவிற்கு அழுகையும் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மனித உணர்வுகளில் சிரிப்பு ஒரு முனை என்றால், அழுகை மறு முனையாகும். மனிதர்கள் ஏன் அழ மறுக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பலரது பதிலாக இருப்பது அழுகை பலகீனத்தின் அடையாளம் என்பதே. உலகில் கண்ணீரை பலகீனத்துக்குரியதாகவும், வெட்கத்துக்குரியதாகவும் மற்றும் குழந்தைத் தனத்துக்கும் அடையாளப்படுத்து கின்றனர். அழுகை, பலகீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், உண்மையில் அது நன்மையை அளிக்கக் கூடியதுதான்.

    அழுகை பலகீனத்தின் அடையாளம் அல்ல:

    பல சினிமாக்களில் `ஆண்கள் அழக்கூடாது' என்றும், `நான் அழவில்லை, கண்ணு வேர்க்குது' என்று சொல்வதை கேட்டிருப்போம். எவ்வளவு பிரச்சினைகளும், கஷ்டங்களும் வந்தாலும் சிலர் அழ மாட்டார்கள். அப்படி அழக்கூடிய தருணங்கள் வரும்போது, நாம் அழுகையை கட்டுப்படுத்தினால் அதனால் வரும் பாதிப்புகள் அதிகம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். மனம் தாங்க முடியாத அளவிற்கு கஷ்டங்கள் வரும் சமயங்களில் அழுதால் அந்த பிரச்சினையினால் உண்டாகும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

     மன அழுத்தம் அதிகமாக உள்ளபோது, மனம் விட்டு அழுவோமானால், மனம் மிகவும் அமைதியாகி தூக்கம் வருவதை உணரலாம். பின்னர் தூங்கி எழுந்தவுடன், நம் மனச்சோர்வு அனைத்தும் நீங்கியிருப்பதை உணரலாம். அழுவது நிலைமையை மாற்றாது என்றாலும், அது உடனடியாக நிவாரணத்தையும், தற்காலிகமாக ஆறுதலையும் தருகிறது.

    அழுகையை ஒருபோதும் அடக்கக்கூடாது என்று சிலர் சொல்ல கேட்டிருப்போம். அப்படி அடக்கும்போது, காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனப்படலாம். மேலும் அழுகை உணர்வை கட்டுப்படுத்துவதால், மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற நேர்மறை உணர்வுகளை அனுபவிக்கும் திறன் குறையலாம். அழுகையை மறைக்க முயற்சிப்பவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

    நாம் மிகுந்த உணர்ச்சியோடு அழும்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதுதொடர்பாக 30 நாடுகளை சேர்ந்த 4,300 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அழுகைக்கு பிறகு அவர்களின் மன மற்றும் உடல்நலம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வில், அழுகை 88.8 சதவீத மக்களின் மனநிலையை மேம்படுத்தியது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

     அழுகை - ஆரோக்கியமான செயல்பாடு:

    அழுகை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. கோபத்தில் இருக்கும் ஒருவர், மனம் விட்டு உடனேயே அழுதால், அவரின் ரத்த அழுத்தம் குறையும். லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உருவாக்குகிறது. கண்களை ஆரோக்கியமாக வைக்கவும் அழுகை உதவுகிறது.

    கண்ணீரில் லைசோசைம் என்ற திரவம் உள்ளது. இது பாக்டீரியாவை கொல்லும் சக்தி வாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் அழுவது கூட 90 முதல் 95 சதவீதம் பாக்டீரியாக்களை கண்களில் இருந்து அகற்ற உதவும்.

    வியர்வை, சிறுநீர் உடலில் இருந்து பல நச்சுக்களை வெளியேற்றுவது போல கண்ணீரும் நச்சுகளை வெளியேற்றும். மேலும் கண்ணீர் கண்களில் இருக்கும் சவ்வு வறண்டு போகாமலும் பாதுகாக்கும். இதனால் பார்வை நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும்.

    சரி அழுவது நல்லது தான் என்றாலும், எதற்கெடுத்தாலும் அழுதால் அதுவும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றனர். இனி உங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத பிரச்சினை காரணமாக மனம் கடினமாக இருந்தால், கைக்குட்டையை வைத்துக்கொள்ளுங்கள். அழுது விடுங்கள்!

    • மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது.
    • மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்'

    மனஅழுத்தம் மற்றும் அதீத உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவது, பதற்றத்தைக் குறைப்பது, கை தசைகளின் செயல்பாட்டை அதிகரிப்பது, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துவது, கை விரல்களின் அசைவுகளை சீராக்குவது என பல்வேறு விதங்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஸ்டிரெஸ் பால்' எனப்படும் மென்மையான பந்து உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை

    உள்ளங்கையில் வைத்து. முடிந்த வரை ஸ்டிரெஸ் பாலை கடினமாக அழுத்தவும். இவ்வாறு அழுத்தியபடி 5 வினாடிகள் வைத்திருந்த பின்பு மெதுவாக கைகளை தளர்த்தவும், இதுபோல தொடர்ந்து 10 முறை செய்யலாம். ஒரு நிமிட இடைவெளிக்கு பின்பு மற்றொரு கையிலும் இதேபோல் செய்ய வேண்டும்.

    நன்மைகள்:

    ஸ்டிரெஸ் பாலை அழுத்தும்போது கையில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படும். மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய நரம்புகள் உள்ளங்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை தூண்டப்படுவதால், மூளையில் உள்ள உணர்ச்சிகளுக்கான பகுதியில் அமைதிக்கான தூண்டுதல் ஏற்படும். இந்த சமிக்கை உடல் முழுவதும் அனுப்பப்படும். பதற்றமாக இருக்கும் சமயங்களில், கைகளில் ஸ்டிரெஸ் பாலை வைத்து அழுத்தும்போது, தன்னிச்சையாகவே நம்முடைய கவனம் திசை திருப்பப்படும். மேலும், மூளையில் உள்ள நரம்புகள் தொடர்ந்து தூண்டப்படுவதால் 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியை உணர வைக்கும் இந்த ஹார்மோன், வலி நிவாரணியாகவும் செயல்படும்.

    ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும்போது, அது உள்ளங்கை பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற கழிவுப்பொருட்களையும் வெளியேற்றும். யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

    மனஅழுத்தம் உடையவர்கள். அடிக்கடி கோபம் வரும் குணாதிசயம் கொண்டவர்கள், எளிதில் பதற்றம் அடை பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் உள்பட அனைத்து வயதினரும் ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம். கையில் எலும்பு முறிவு, தசைநார் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம்.

    ×