search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "physical wellness"

    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது.
    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது. மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நிம்மதியின்றி தவிப்பவர்கள் அதற்கு காரணமாக சொல்வது இந்த மனஅழுத்ததைத்தான்.!

    மன அழுத்தம் மக்களை எந்த வகையில் பாதிக்கிறது?

    நம் முன்னோர்கள் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தார்கள். போதுமென்ற மனம் அவர்களிடம் இருந்தது. எதிலும் பேராசையோ பரபரப்போ இருந்ததில்லை. இதனால் மன அழுத்தமும் இல்லை. இன்றைய காலத்து மக்கள் எந்திரத்தனமான அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே குடும்பம், வேலை, தொழில், பணம், படிப்பு என எதுவானாலும் இவற்றின் அன்றாட செயல்களில் கொஞ்சம் மாறினாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே ஏதோ பெரிய பிரச்சினை வந்து விட்டதாக நினைத்து மூச்சு திணறி போகிறார்கள். அது தொடர்பாக யாராவது கேள்வியோ விளக்கமோ கேட்டு விட்டால்போதும் நெஞ்சு படபடத்து “எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம்” என்று புலம்புகிறார்கள்.

    இந்த மனஅழுத்தம்தான் அவர்களை துயரத்துக்குள் அமிழ்த்தி விடுகிறது. வாழ்க்கையே இருண்டு விட்டது,எதிர்காலம் என்ன ஆகுமோ என்று அச்சப்படுகிறார்கள். இதனால் கையில் இருக்கும் வாழ்வை அனுபவிக்காமல் நழுவ விட்டு விடுகிறார்கள்.

    வாழ்க்கை இனிதாக அமைய மன அழுத்தத்தை எவ்வாறு மடைமாற்றம் செய்ய வேண்டும்?

    மன அழுத்தம் குறித்து அமெரிக்காவில் பல ஆண்டுகாலமாக பல்லாயிரம் பேர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் “மன அழுத்தம் என்பது நண்பனுக்கு நண்பன், விரோதிக்கு விரோதி. அதனை சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பாதகமாகவும் ஆக்கிக் கொள்ளலாம்” என்று கண்டறியப்பட்டது. அதாவது ஒரு வேலையை விரும்பி செய்யும் போது பாஸிட்டிவ் ஆன மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பாதிப்பில்லை. மாறாக அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறனை அதிகரிக்க செய்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதற்கான ஆற்றலை, புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ்ஸாக எண்ணக்கூடிய அந்த வேலையை மகிழ்ச்சி தரக்கூடியதாக மாற்றி விடுகிறது.

    அதையே சுமையாக நினைத்து செய்யும் போது நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு நமது செயல் திறனை முடக்கி விடுகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு சோர்ந்து விடுகிறது. மன அழுத்தத்தின் விளைவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரச்சினைகளோ, சூழ்நிலைகளோ உங்களுக்கு எந்த கெடுதலையும் தராது. எந்த நேரத்திலும் உங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்திருந்தால் போதும், அதுவே எந்த பிரச்சினைகளையும் சமாளித்து அந்த சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றி விடும்.

    பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பலரும் அந்த சமயத்தில் தங்களுக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா? என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது அப்படி பட்டவர்களை தேடிச் செல்வார்கள். அங்கு ஆறுதல் கிடைத்தால் சரி, இல்லை என்றால் மன அழுத்தம் மேலும் அதிகரித்து மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

    இதற்கு காரணம் என்னவென்றால் நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் தான் யாராவது நம்மை கவனிக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தை நம் மனதில் உண்டாக்குகிறது. மன அழுத்தம் இருக்கும் சமயத்தில் நீங்கள் ஆறுதலைத்தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக வேறு யாரிடமாவது நீங்கள் பரிவு காட்டினாலே போதும், உங்கள் மனம் அமைதி அடைந்து விடும். ஏன் என்றால் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனுக்கு தேவை ‘கவனித்தல்’ மட்டுமே. அதை நீங்கள் பெறுவதாகவும் இருக்கலாம். கொடுப்பதாகவும் இருக்கலாம்.

    இதற்கு பர்மாவில் நடந்த சம்பவத்தில் இருந்து ஒரு உதாரணத்தை காட்ட முடியும். பர்மாவில் உள் நாட்டு கலவரம் நடந்த போது ஏராளமான மக்கள் தங்கள் வீடு, வாசல், உறவுகள், உடமைகளை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

    அடர்ந்த காடு, மலை, மேடு, பள்ளங்கள் வழியாக நடுக்கத்தோடு கடந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியாமல் தள்ளாடினார். தன் மகனை பார்த்து “என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது, எனவே என்னை பற்றி கவலைப்படாமல் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்றார்.

    மகன் பலவாறு வற்புறுத்தியும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தார். தந்தையால் நடக்க முடியவில்லைதான், ஆனால் ஆபத்தான சூழலில் அவரை எப்படி விட்டு செல்வது என்று யோசித்த மகன் ஒரு உபாயம் செய்தான். தன் சிறு வயது மகனை அவரிடம் கொடுத்தான். அப்பா இவனாலும் நடக்க முடியவில்லை. அவனை தூக்கிக்கொண்டு போவது எனக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் அவனையும் உங்களுடன் இங்கே வைத்துக் கொள்ளுங்கள். இனி இவன் உங்கள் பொறுப்பு என்று சொல்லி விட்டு வேகமாக நடக்க தொடங்கினான்.

    அவ்வளவுதான் தன் உயிரை பற்றி கவலைப்படாத அந்த பெரியவர் தன் பேரப்பிள்ளையை மகன் விட்டுச் செல்ல போகிறான் என்றவுடன் பதைபதைத்து போனார். “இவனை அழைத்துக் கொண்டு செல்ல உனக்கு சிரமமாக இருந்தால் நீ போ... நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொன்னபடி குழந்தையை வாரி அணைத்துக்கொண்டார். பேரனை காப்பாற்ற வேண்டுமென்ற உந்துதல் அவர் மனதில் ஏற்பட்டது. அந்த அழுத்தம் காரணமாக மற்றவர்களைவிட வேகமாக நடந்தார். பத்திரமாக நாடு கடந்தார்.

    இந்த உண்மை சம்பவம் நமக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான். விருப்பமும் பொறுப்பும் இருந்தால் அழுத்தத்தால் நன்மையே விளையும். அதுவே நம் மனதில் உடலில் திடத்தையும் வேகத்தையும் அளிக்கும். நம்முன் தோன்றும் எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை கொடுக்கும்.

    பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

    உங்கள் மனப்பிரச்சினை களுக்கு இறக்கை கொடுங்கள். அவை உங்களை விட்டு எங்காவது பறந்துச் செல்லட்டும் என்கிறார் அறிஞர் டெர்ரி கில்மெட்.
    பிரச்சினைகளை கையாளத் தெரிந்தவர்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. வாழ்க்கை உங்களை அழுத்தி நீங்கள் கொஞ்சம் தர்மச் சங்கடமாக உணரும் சமயத்தில் ஒரு விசயத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றியின் ஒரு பகுதியே அந்த அழுத்தம். அழுத்தம் இல்லை என்றால் வைரம் இல்லை என்கிறார் அறிஞர் எரிக் தாமஸ்.

    அழுத்தம்தான் குப்பைகளை உரமாக மாற்றுகிறது. அழுத்தம்தான் கரியை வைரமாக மாற்றுகிறது. அதுபோல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தையும் திடமும் ஆற்றலும் கொடுக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஆகவே உங்களுக்கு அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நன்மை பயக்கும் வகையில் அதனை சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி செய்தால் அழுத்தமே ஆனந்தமாக மாறும். அதில் மகிழ்ச்சி என்னும் பூ மலரும்.
    Email:fajila@hotmil.com
    உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் கவலை, மனஉளைச்சல் போன்றவற்றிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அடிக்கடி மருத்துவத்தில் கூறப்படுவது கவலை, மனஉளைச்சல் போன்றவை உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் என்பதுதான். அநேகர் கூறும் சில வார்த்தைகள் என்ன தெரியுமா? குறைந்தது 10 வருடம் முன்னாடி இதெல்லாம் நான் செய்திருந்தால் எனக்கு இன்று மனநலம், உடல் நலம் இரண்டும் நன்றாக இருந்திருக்கும் என்பதாகும். நாமும் அவ்வாறு சொல்லாதிருக்க கீழ்கண்ட வழி முறைகளை இன்றிலிருந்தே கடைபிடிப்போம்.

    * வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.

    * சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.

    * தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.

    * நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.

    * எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.

    * பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. பிறரை வேதனைப்படுத்தாது இருங்கள். காரணம் கோபப்படுபவர்களே அதிக அசிடிடி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.



    * மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.

    * சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.

    * உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.

    மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக. 
    ×