என் மலர்
நீங்கள் தேடியது "திமுக"
- மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
- தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியில் வருமானவரி அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
மதுரை:
மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என பா.ஜ.க. ஆட்சியின் போது கூறினார்கள். தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதைப்பற்றியே பேசுகிறார்கள். அணை கட்டுவதை தமிழகமும், தமிழர்களும் அனுமதிக்கமாட்டார்கள். மேகதாது விவகாரம் 2 மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நிச்சயம் நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்.
தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியில் வருமானவரி அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். கடமையை செய்ய வந்த அதிகாரிகள் தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என போலீசார் சொல்வது வேடிக்கையாக உள்ளது. காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறியுள்ளது. அதிகாரிகளை தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை தான் கைது செய்ய வேண்டும். அப்போது தான் கடமையை செய்ய வரும் அதிகாரிகளை தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை ஆகும். அதில் எதற்கு சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள்? என தெரியவில்லை.
முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் ரூ.1000 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
- டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சென்னை :
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது.
- எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது.
மதுரை :
மதுரை அண்ணாநகரில், மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமான 9 ஆண்டாக, பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் இருந்துள்ளது. கடைகோடியில் இருக்கிற சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கும் என்பதை யோசித்து பார்த்து வீடு, கியாஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, அந்த வங்கி கணக்கிற்கு பணம், ரேஷன் அட்டை என பல சலுகைகள் மோடி ஆட்சியில் கிடைத்துள்ளன.
ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது. அதனை உடைத்து காட்டியவர், மோடி. 9 ஆண்டுகள் கடந்தும் கூட பிரதமர் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கமுடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை வீடு, வீடாக எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, பல பெருமைகளை கொண்டது. தமிழை வளர்க்க மோடி பாடுபடுகிறார். தமிழின் பெருமை, தமிழனின் பெருமையை உலகெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். ஐ.நா. சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பேசி, திருக்குறளின் பெருமையை பட்டிதொட்டி எல்லாம் எடுத்துரைத்தார். வாரணாசியில், காசி தமிழ் சங்கம் வளர்த்தார். செங்கோலின் பெருமையை பாராளுமன்றத்தில் நிலை நாட்டினார்.
புதிய பாராளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். பாராளுமன்றத்திற்கு எப்போது செங்கோல் சென்றதோ, இனி தமிழகத்திலும் அறம் சார்ந்த ஆட்சிதான் அமையப்போகிறது.
தற்போது இருக்கும் தி.மு.க. ஆட்சிக்கும், அறம் என்ற வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாராளுமன்றத்தில் செங்கோல் மட்டும் நிறுவப்படவில்லை. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக அஸ்திவாரம் நிறுவப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து, பிரதமரை பற்றி குறை கூறி வருகிறார். எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை போல ஊழலில் ஈடுபடவில்லை. ஆனால், 2 ஆண்டுகளே ஆட்சி நடத்திய தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 22 குடும்பங்கள் துயரத்தில் இருக்கின்றன. ஆனால், வெளிநாட்டில் முதல்-அமைச்சர் சொகுசாக இருக்கிறார். தமிழகம் கள்ளச்சாராய மாநிலமாக மாறிவிட்டது. இதற்கு தி.மு.க.தான் காரணம். ரூ.44 ஆயிரம் கோடி டாஸ்மாக் வழியாக வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழகத்தை தி.மு.க. மாற்றி இருக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசு மீது கோபத்தில் இருக்கின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை பேசி கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பா.ஜனதா மண்டல் தலைவர்கள் 1200 பேருக்கு, அண்ணாமலை வெள்ளி மோதிரம் வழங்கினார்.
- சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
- அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.
சென்னை:
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.
கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
- பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது.
மதுரை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற வாதத்தின் படி ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான ஆதாரத்தை பார்க்க வேண்டும். முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். பின்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த வீரர்கள், சுப்ரீம் கோர்ட் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரும், புகார் கூறப்பட்டவரை கைது செய்த பின்னர்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று கூறுவது தவறானது.
தமிழகத்தில் கவியரசு வைரமுத்து மீது எத்தனை புகார்கள் உள்ளது. அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. விசாரணை நடத்தி பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது இலாகா மாற்றம் நடவடிக்கை மதுரை மண்ணுக்கு தி.மு.க. அரசு இழைத்திருக்கும் துரோகம். பி.டி.ஆர். ஒரு தவறும் செய்யவில்லை. முதல்வர் மீது கருத்து சொல்லியதற்காக தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என்றால் இந்த திராவிட மாடலில் யாருக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை எடுத்துரைக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட செல்லும் போது, அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அப்படி தாக்கியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மேயராக மற்றும் பதவிகளில் உள்ளவர்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை இனி ஒரு அரசு அதிகாரிகள் மீது இது போன்ற செயல்கள் செய்யும் நபர்களுக்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெரிய பாடமாக இருக்க வேண்டும்.
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் கட்சியின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கலந்து கொண்டது எந்த வகையில் சரியாகும். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது.
நிச்சயமாக மேகதாது அணையை கட்டினால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.
பாரதிய ஜனதா நடைபயணம் ஜூலை 9-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்குகிறது. 6 மாதம் நடக்கும் இந்த நடைபயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 27-ந்தேதி ஒசாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பிரபல கோட்டையையும் சுற்றிப் பார்த்தார்.
- 28-ந்தேதி புல்லட் ரெயிலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சென்னை:
தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது.
இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருந்த அவர் 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டுக்கான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து பேசினார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வாருங்கள். முதலீடு செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடு. நீங்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார்.
வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக சிங்கப்பூரில் ஹ.பி. இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் மின்னணு பாகங்கள் தயாரிப்புக்கான முதலீட்டில் கையெழுத்திட்டது.
இதன் பிறகு சிங்கப்பூர் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சட்ட அமைச்சர் சண்முகம் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இரு தரப்பு வர்த்தக உறவு குறித்து பேசினார்.
சிங்கப்பூர் வாழ் தமிழர்களையும் சந்தித்தார். அங்கு நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
அதன் பிறகு சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு மே 25-ந்தேதி ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அங்குள்ள ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான 'ஜெட்ரோ' வுடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
ஜப்பானின் டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
27-ந்தேதி ஒசாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பிரபல கோட்டையையும் சுற்றிப் பார்த்தார்.
28-ந்தேதி புல்லட் ரெயிலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
29-ந் தேதி ரூ.818.90 கோடி முதலீடு தொடர்பாக 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் ஓமரான் ஹெல்த்கேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இரு நாடுகளிலும் மொத்தம் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1258.90 கோடி அளவுக்கு தமிழ்நாட்டுக்கு முதலீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலையில் ஜப்பானில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
சிங்கப்பூர் வழியாக வரும் அவர் இன்றிரவு 10 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.
- சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந்தேதி வருகிறது.
இந்த ஆண்டு கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா என்பதால் தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.
ஊர்கள் தோறும் தி.மு.க. எனும் தலைப்பில் கொடிக் கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குவது தி.மு.க. குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம் பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
3-ந்தேதி சென்னை புளியந்தோப்பில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
இதே போல் அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள் அரசு ஊழியர்கள் பயன் அடைந்த மக்கள் ஆகியோரை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலட்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
- சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தி.மு.க.வில் கிட்டத்தட்ட 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.
கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந் தேதிக் குள் இப்பணியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதன்படி ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தலைமைக் கழகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்திருந்தனர்.
துண்டறிக்கைகள், திண்ணை பிரசாரங்கள் முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது என்று மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்து பணிகளை துவக்கினார்கள்.
இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கையில் டபுள் என்ட்ரி இருக்ககூடாது, போலியாக பெயர்களை எழுதக் கூடாது, வாக்காளர் அட்டை ஜெராக்ஸ் நகல் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முடிவடையவில்லை.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தான் சேர்த்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான பணத்தை பொது மக்களிடம் இருந்து வாங்க முடியாது என்பதால் அதையும் சொந்த பணத்தில் கட்சிக்காரர்கள் தலைமையில் செலுத்தி வருகின்றனர்.
கட்சி தேர்தலின்போது ஏற்கனவே சேர்த்திருந்த உறுப்பினர்களை இந்த பட்டியலுடன் சேர்க்கக் கூடாது என்று கூறுவதால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் தவித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் உள்ளதால் வீடு வீடாக ஏறி இறங்கி உறுப்பினர்களை சேர்ப்பது சிரமமாக உள்ளதாகவும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்று சொல்லும் போது சிலர் உறுப்பினராக சேர தயங்குவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆனால் அ.தி.மு.க.வில் சத்தமின்றி வீடு வீடாக விண்ணப்ப படிவத்தை கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
எனவே அதிக உறுப்பினர்களை தி.மு.க. சேர்க்குமா? அல்லது அ.தி.மு.க. சேர்க்குமா? என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
- வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை.
- தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை.
திருப்பூர்:
ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த அவைத்தலைவர் துரைச்சாமி திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ம.தி.மு.க. இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியின் முன்னணி தோழர்களை ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்யக்கூறியதுடன், அவர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படி என்றால் ஏற்கனவே நாம் தி.மு.க.வில் இணைந்துவிட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை.
வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. இனியும் ஒரு அமைப்பை வைத்து நடத்த முடியாது. தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த பிரியா மேயராக இருக்கிறார்.
- கவுன்சிலர்கள் அமிர்த வர்ஷினி, சுகன்யா உள்பட சிலர் தங்கள் வார்டுகளில் பணிகள் நடைபெற தி.மு.க.வினர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. எங்கள் கூட்டணி கட்சிதான். ஆனால் எங்கள் வார்டுகளிலும் அவர்கள் தலையிட்டு வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த பிரியா மேயராக இருக்கிறார். மொத்தம் உள்ள 200 கவுன்சிலர்களில் 13 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள்.
இவர்களில் 10 கவுன்சிலர்கள் மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கமிஷனர் டாக்டர் ராதா கிருஷ்ணனை சந்தித்து தங்கள் வார்டு பிரச்சினைகள் பற்றி முறையிட்டார்கள்.
கவுன்சிலர்கள் அமிர்த வர்ஷினி, சுகன்யா உள்பட சிலர் தங்கள் வார்டுகளில் பணிகள் நடைபெற தி.மு.க.வினர் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை அழைத்து சென்று கமிஷனரிடம் முறையிட்டார்கள்.
காங்கிரஸ் வார்டுகளில் தி.மு.க.வினருக்கு தெரியாமல் பணிகள் நடைபெறக்கூடாது என்றும், அவர்கள் சொல்லும் பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பணிகளை தேர்வு செய்வது, நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில வார்டுகளில் வாக்குவாதமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாங்கள் தான் உங்களை ஜெயிக்க வைத்தோம் என்று தி.மு.க.வினர் சொல்ல, அது கூட்டணி கட்சிகளின் கடமை என்று காங்கிரசார் சொல்ல வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
பணிகள் தொடர்பாக வார்டு என்ஜினீயர்களை காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்தித்தால் செய்து கொடுப்பதில்லையாம். தி.மு.க. நிர்வாகி வேறு பணியை சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறார்களாம். இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களால் தங்கள் வார்டுகளில் பணிகளை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் ஒன்றிணைந்து பணியாற்றுவார்களா? என்று மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆதங்கப்படுகிறார்கள்.