என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர்.
- விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டன. கூட்டணி அமைக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்ததாக ஒவ்வொரு கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக குழு அமைக்கும் நடவடிக்கை யிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர் களிடம் இருந்து ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க.வில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டு விட்டது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ஏராளமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். விருப்பமனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியுள்ளார்.
த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்தும் விருப்பமனு பெறப்பட்டு உள்ளது. த.வெ.க.வில் போட்டியிட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய் பெயரிலும், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பெயரிலும் ஏராளமானவர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். த.வெ.க.வில் இன்று மாலை வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி 2 அணிகள் தரப்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு விட்டது. தே.மு.தி.க. சார்பிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. முதல் விருப்பமனு விஜயகாந்த் பெயரில் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரேமலதா பெயரிலும் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு கட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
தி.மு.க.வும் தேர்தல் பணியில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி முடித்துள்ள தி.மு.க., அடுத்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு வருகிறது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு மூத்த தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில், நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விருப்பமனு குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இன்று முதல் மார்ச் 2-ந்தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த மனுக்களை கொடுக்கும்போது பொது தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிகளில் போட்டியிட ரூ.15 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகத்தில் விருப்பமனு வினியோகம் இன்று காலையில் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பு பவர்களுக்கு விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன.
முதல் நாளான இன்று விருப்பமனு வாங்குவதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர்களில் ஏராளமானோர் விருப்ப மனு வாங்கினார்கள்.
விருப்ப மனுவில் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன. தி.மு.க.வில் வகிக்கும் பொறுப்பு, பொதுப்பணியில் வகித்த மற்றும் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி மன்றம் மற்றும் வேறு அமைப்புகளில் வசிக்கும் பதவி, தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.
விருப்ப மனுக்களை பெற்றவர்கள் அந்த விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா,செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே. எஸ். இளங்கோவன், ஆஸ்டின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நே.சிற்றரசு 7 விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார். இதேபோல் ஏராளமானோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
விருப்ப மனுக்கள் மார்ச் 2-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன. பூர்த்தி செய்த விருப்ப மனுக்கள் அன்று மாலை வரை பெறப்பட உள்ளன. விருப்ப மனுக்கள் பெறப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
- காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டல் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
- பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 'காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்' என கிண்டல் செய்து இருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைகோவுக்கு பதிலடி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன்.
பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது
- புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

காலையில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்கு செல்ல புறப்பட்டவர்கள் செய்வதறியாமல் திண்டாடினர்.
சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து புறநகர் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மறுசீரமைப்பு பணி காரணமாக 5, 6-வது நடைமேடையில் ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சென்னை:
இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுக்குள்(வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும். அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்துக்குள் பனி முற்றிலுமாக விலகிவிடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
- விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று பா.ஜனதா மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மூழ்கும் கப்பலுக்கு சென்றுள்ளார். விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார். அவருடைய கட்சி இந்த முடிவை எடுத்திருப்பது வருந்தத்தக்கது.
தொண்டர்களின் விருப்பம் என பிரேமலதா சொல்கிறார். தமிழக அரசியலில் கேப்டன் என தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டிருந்த ஒரு கட்சி மூழ்கும் கப்பலில் கேப்டனாக போனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமங்களுக்கான அதிகார பகிர்வை கொடுக்காமல் அவர்கள் எப்படி மாநில உ மைகள் பற்றி பேசுகிறார்கள். தோல்வி பயத்தால் இன்று மாநில சுயாட்சியை கையில் எடுத்திருக்கிறார்கள்.
தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளது. பெண்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் 28 மாதங்கள் கொடுக்காமல் இப்போது கொடுக்கிறார்கள் என்றால் ஓட்டுக்காகத்தான்.
த.வெ.க. தலைவர் விஜய் வேலூர் வருகை தர இருப்பது குறித்து கேட்டதற்கு, அவர் வரட்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். எந்த உயிரும் போகக்கூடாது. உயிர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். வேலூருக்கு பிரதமர் மோடி வருகிறார். அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.க. கூட்டணிக்கு ஒரு கட்சி வந்து விட்டதால் தேசிய ஜனநாயக கூட டணிக்கு பெரிய இழப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அங்குள்ள காங்கிரஸ் அங்கேயே இருப்பார்களா? அல்லது விசிலிடம் போவார்களா? என தெரியவில்லை என கூறினார்.
- தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
- இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
சென்னை :
தி.மு.க. பொதுச் செயலாளர் துரை.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் 20.02.26 (இன்று) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறிவித்த நிலையில் மாம்பழ சின்னம் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது.
- நாளை மனு விசாரணைக்கு வரவுள்ளது
பாட்டாளி மக்கள் கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக கருத்துவேறுபாடு நிலவிவருகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு அன்புமணி வசம் இருப்பதால், அக்கட்சியும் அதன் சின்னமான மாம்பழமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மேலும் தேர்தல் ஆணையமும் அன்புமணியை தலைவராக அறிவித்த நிலையில் மாம்பழ சின்னம் அவருக்குதான் என்பது உறுதியாகி உள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்காக அன்புமணி ராமதாஸ் தரப்பு தன்னிச்சையாக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
இந்நிலையில் பா.ம.க.வின் தலைவராக தன்னை தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.
- தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
- இரவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே உணவு உட்கொள்ள வேண்டும்.
தூக்கக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முதல் 'ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை' சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது. தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், 10 மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நரம்பியல், உளவியல் மற்றும் சுவாசம் சார்ந்த தூக்கக் கோளாறுகளுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இத்திறப்பு விழா நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் பங்கேற்றார்.
உறங்கும் நேரத்தில் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை விளைவிக்கக்கூடிய தூக்கத்துடன் தொடர்புடைய கோளாறுகளுக்கு இந்த தூக்கவியல் சிகிச்சை மையம் சிறப்பு சிகிச்சையை வழங்குகிறது. காது-மூக்கு-தொண்டை (ENT) நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் அடங்கிய ஒரு கூட்டு மருத்துவக் குழு உலகளவில் சிறந்த தரநிலைகளுடன் CPAP, BiPAP போன்ற நவீன சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கிறது. மிகத் துல்லியமான, வலியற்ற மற்றும் இரத்தம் வராத எண்டோஸ்கோபி, பிளாஸ்மா அடிப்படையிலான மற்றும் கதிர்வீச்சு அதிர்வெண் சிகிச்சை (RF) வழிமுறைகளும் இதில் உள்ளடங்கும்.

இங்குள்ள பிரத்யேக 'தூக்க ஆய்வகத்தில்', தூக்கத்தின் போது மூளைச் செயல்பாடு மற்றும் இதயத் துடிப்பு கண்காணிக்கப்பட்டு நிகழ்நேர தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. குறட்டை உட்பட உறக்க பிரச்சனைகள், உடலியக்கவியல், மூளையின் செயல்பாடு மற்றும் இதய இரத்தநாள ஆரோக்கியம் ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது என இதன் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும், DISE எனும் நவீன தொழில்நுட்பம் மூலம், மயக்கவியல் மருத்துவரின் ஆதரவோடு நோயாளிக்கு உறக்க நிலையைத் தூண்டி சுவாசப் பாதையில் எங்கு அடைப்பு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஏற்படும் தூக்க நேர மாற்றத்தைச் சரி செய்வற்கான சிறப்பு செயல்திட்டத்தையும், உறக்கத்தின் போது திடீரென மூச்சு நின்றுவிடும் பிரச்சனைக்கு சிகிச்சையையும் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனையையும் (CBT) இந்த மையம் வழங்குகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்நிகழ்வில் பேசுகையில், "குறட்டை விடுவது இயல்பானதாக தெரிந்தாலும், நோய் பாதிப்புக்கான இடர்வாய்ப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் அது இருக்கலாம். இது நிம்மதியான தூக்கத்தைக் கெடுப்பதுடன், தம்பதியினர் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தூங்குவது போன்ற பிரிவிற்கும் வழிவகுக்கிறது. சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருக்கும் உறக்கவியல் சிகிச்சைக்கான இந்த புதிய மையம், உடல்நலத்தை மட்டுமல்லாமல், குடும்ப உறவுகளையும் காக்க உதவும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.

இந்த மையத்தின் குறிக்கோள் குறித்து டாக்டர் ரவி பச்சமுத்து கூறியதாவது: "இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையம் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் தூக்கக் கோளாறுகளை கண்டறிவதிலும், சரியான சிகிச்சை அளிக்கும் முறையையும் இந்த மையம் மாற்றியமைத்துள்ளது. நோயாளிகள் வெவ்வேறு மருத்துவ துறைகளுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே இடத்தில் தூக்கம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வுகள் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களையும் இம்மையம் கொண்டிருக்கிறது". என தெரிவித்தார்.
மையத்தின் இயக்குநர் டாக்டர் கார்த்திக் மாதேஷ் ரத்னவேலு கூறியதாவது: "இரவு நேரத்தில் வரும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம், பெரும்பாலும் தூக்கக் கோளாறு உள்ளவர்களுக்கே ஏற்படுகிறது. புகைப்பிடிப்பது எப்படிப் புற்றுநோயை உண்டாக்குமோ, அதேபோல் சிகிச்சையளிக்கப்படாத தூக்கக் கோளாறுகள் இதய நோய்க்கும் வழிவகுக்கும். இங்கு ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு 'வழிகாட்டி' நியமிக்கப்பட்டு, பரிசோதனை முதல் சிகிச்சை முடியும் வரை நோயாளிகளுக்குத் துணையாக இருப்பார்கள்." என தெரிவித்தார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வழுவிழக்கக்கூடும்.
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.
மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
22-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சட்டப்பேரவையில் கோடைக்கால சிறப்பு தொகையை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
- மருத்துவசெலவுக்கு இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்குவதால் திமுக அரசு கோடைக்கால சிறப்பு நிதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் வர உள்ளதால் வெயில் காரணமாக ஏற்படும் மருத்துவசெலவுக்கு இந்த நிதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
- ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை :
பரபரப்பான அரசியல் சூழ்ந்லையில் நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நாளை மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
- விவசாயிகள் ஒருங்கிணைந்து யானை கூட்டத்தை விரட்டினர்.
- உடனடியாக நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கூட்டம் கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. குறிப்பாக தென்னை வாழை மரங்களை தின்றும் மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவும் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் கூட்டம் அங்குள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து வாழைத் தென்னை மரங்களை மீண்டும் சேதப்படுத்தி உள்ளன. இது குறித்த விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த சேஷன்நகர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் தனது விவசாய நிலத்தில் நூற்றுக்கணக்கில் தென்னை-வாழைகளை பயிரிட்டுள்ளார். அவைகள் நன்கு வளர்ந்து இருந்தது. வனப்பகுதியையொட்டி விளைநிலம் இருப்பதால் இரவு நேரத்தில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைக்கூட்டம், விவசாயி விஜயகுமார் நிலத்தில் கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்களை தின்றும், மிதித்தும் சேதம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. பின்னர் விவசாயிகள் ஒருங்கிணைந்து யானை கூட்டத்தை விரட்டினர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,
கடந்த ஒரு வாரமாக யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி எங்கள் கிராமத்துக்குள் புகுந்து தொடர்ந்து தென்னை வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மக்காச்சோள பயிர்கள் காய்கறிகளையும் சேதப்படுத்தி உள்ளன.
கிட்டத்தட்ட இந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தென்னை-வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் எங்கள் பகுதி விவசாயிகள் படும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
உடனடியாக நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் நீண்ட நாட்களாகவே அண்டை மாநிலமான கர்நாடகாவை போன்று யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராதவாறு ரயில்வே தண்டவாள இரும்பு கம்பி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.






