என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
    • இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெர்லின்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜெர்மனியில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கிய இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. அவைகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

    லீக், நாக் அவுட் மற்றும் கால் இறுதி போட்டி முடிவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரை இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர் லாந்தையும் வீழ்த்தின.

    ஐரோப்பிய கால்பந்து கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 14-ந்தேதி நள்ளி ரவு 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

    3 முறை சாம்பியனான ஸ்பெயின் (1964, 2008, 2012) 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. அந்த அணி 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஸ்பெயின் அணியில் டானி ஓல்மோ 3 கோல்களும், பேபியன் ரூயிஸ் 2 கோலும் அடித்து உள்ளனர். அந்த அணி அனைத்து பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இங்கிலாந்து அணி இதுவரை ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில்லை. கடந்த 2020-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முதல்முறையாக முன்னேறியது. இதில் இத்தாலியிடம் தோற்றது.

    தற்போது 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (3 கோல்), ஹூட் பெல்லிங்காம் (2 கோல்), சகா, லாட்கிங்ஸ் (தலா ஒரு கோல்) உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    இங்கிலாந்து அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
    • சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சேலத்தில் நடந்த 9-வது லீக்கில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சேலம் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராபின் பிஸ்ட் 23 ரன்னும், கேப்டன் ஷிஜித் சந்திரன் 20 ரன்னும் எடுத்தனர். நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

    அடுத்து களம் இறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அஜிதேஷ் 45 ரன்னும், சூர்யபிரகாஷ் 43 ரன்னும் (நாட்-அவுட்) விளாசினர். நெல்லைக்கு இது 2-வது வெற்றியாகும். சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். அடுத்த கட்ட ஆட்டங்கள் கோவையில் நடைபெறுகிறது. கோவையில் நாளை நடைபெறும் ஆட்டங்களில் மதுரை பாந்தர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.15 மணி), கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • நாளை இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஹராரே:

    சுப்மன்கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய போட்டியில் இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டிங்கில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், ருதுராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பந்து வீச்சில் அலேஷ்கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

    சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, தொடரை இழக்காமல் இருக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் பென்னாட், டியான் மியர்ஸ், மாதேவேரே, முசராபானி, சத்தரா, ரிச்சர்ட் நிகரவா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    வெற்றி கட்டாயத்துடன் களம் இறங்கும் ஜிம்பாப்வே அதற்காக கடுமையாக போராடும். ஆனால் இளம் இந்திய அணி வலுவாக இருப்பதால் ஜிம்பாப்வேவுக்கு கடினமாக இருக்கும்.

    • இங்கிலாந்து தரப்பில் சாக் கிராலி 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிகைல் லூயிஸ் 27 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக சாக் கிராலி - டக்கெட் களமிறங்கினர். டக்கெட் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒல்லி போப் கிராவ்லியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    57 ரன்னில் போப்பும் 76 ரன்னில் சாக் கிராலியும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து ரூட்- ஹரி ப்ரூக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அற்புதமாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். 50 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரூக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ரூட் 68 ரன்னில் வெளியேறினார். இறுதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி ஸ்மித் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதலில் ஆடிய சேலம் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்துவருகிறது. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே நெல்லை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

    இதனால் சேலம் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினர்.

    இறுதியில், சேலம் அணி 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராபின் 23 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, குரோசிய வீராங்கனை வெகிக் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 2-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (10-8) என வென்றார்.

    இறுதியில், 2-6, 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்ற பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரிபாகினா அல்லது கிரெஜ்சிகோவாவை எதிர்கொள்கிறார் பவுலினி.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
    • மார்ச் 1-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    மினி உலகக் கோப்பை தொடர் என்று அழைக்கப்படும் "சாம்பியன் டிராபி" முதன் முதலில் 1998-ம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மார்ச் 1-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார். அவருக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இங்கு கோலி விளையாடுவதை பார்க்க ஆவலாக உள்ளோம்.

    இவ்வாறு ஷாஹித் அப்ரிடி கூறினார்.

    • ஜூலை 10 அன்று 592 உறுப்பினர்களைக் கொண்ட அணியை அறிவித்தது.
    • பட்டியலில் 314 பெண்கள் மற்றும் 278 ஆண்கள் உள்ளனர்.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் பங்கேற்க ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண்களை அமெரிக்க அணி அனுப்புகிறது.

    இந்த பட்டியலில் 314 பெண்கள் மற்றும் 278 ஆண்கள் உள்ளனர். 16 முதல் 59 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 46 மாநிலங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

    அமெரிக்க ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழு ஜூலை 10 அன்று 592 உறுப்பினர்களைக் கொண்ட அணியை அறிவித்தது.

    இந்த அணி இந்த மாத இறுதியில் பாரிஸ்க்குச் செல்கிறது. 66 ஒலிம்பிக் சாம்பியன்கள் மொத்தம் 110 தங்கப் பதக்கங்களையும் மூன்று ஐந்து முறை ஒலிம்பியன்களையும் பெற்றுள்ளனர்.

    ஜூலை 26 ஆம் தேதி பாரிஸில் தொடக்க விழா நடைபெறுகிறது, விளையாட்டு வீரர்கள் படகுகளில் ஒன்றுகூடி சீன் ஆற்றின் குறுக்கே ஈபிள் கோபுரத்தை நோக்கி செல்கிறார்கள். போட்டி ஜூலை 24ல் தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைகிறது.

    அமெரிக்க அணி, பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. நீல்சனின் கிரேஸ்நோட் 123 பதக்கங்களை பெற்றார். அவற்றில் 37 தங்கம்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார்.
    • இவரது பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம்.

    டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா திகழ்வதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார். பும்ரா புதிய பந்தை பயன்படுத்தி அதி வேகமாக வீசுகிறார். இதுபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார்.

    இதைப் போன்று வெள்ளை நிற கிரிக்கெட் பந்தையும் அவர் அபாரமாக வீசி நெருக்கடி கொடுக்கின்றார். பும்ராவை நீங்கள் பந்துவீச்சு தொடக்கத்திலும் பயன்படுத்தலாம். இதே போன்று டெத் ஓவரிலும் பயன்படுத்தலாம். ஒரு ஓவருக்கு 12- 13 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இறுதி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இருந்தால் அபாரமாக யாக்கர்கள் வீசுவார். இந்த பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே பும்ரா எந்த காலத்திலும் ஒப்பிட்டு பார்த்தால் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் தான்.


    பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முன்னேறி வருவதை நான் பார்த்து சந்தோஷப்படுகிறேன். பும்ராவுடன் இணைந்து பணியாற்றியதும், அவர் வீசும் போது கிரிக்கெட் வர்ணனையும் செய்வதையும் நான் மகிழ்ச்சியுடன் செய்கின்றேன்.

    இதைப் போன்று ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். பும்ராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

    இவ்வாறு பிரெட் லீ கூறினார்.

    • தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
    • இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருடைய சாதனை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் என்னுடைய இந்த சாதனையை யார் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சோபர்ஸ் (365) அடித்த சாதனையை 1970 மற்றும் 80-களில் யாருமே முறியடிக்கவில்லை. அதுவும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடும் போதும் அதை தொட முடியவில்லை. இதைப்போன்று என்னுடைய காலகட்டத்தில் சேவாக், கிறிஸ் கெயில், ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹஜ், மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட பல வீரர்கள் கடும் சவால் அளித்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால் இந்த வீரர்கள் எல்லாம் 300 ரன்கள் மேல் அடித்தார்கள். அவர்கள் எல்லாம் அதிரடி வீரர்களாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் கில் மட்டும்தான் அதிரடியாக விளையாடுகிறார்கள். 

    இந்த இருவரும் சரியான சூழலில் சரியான நேரத்தில் விளையாடினால் நிச்சயம் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும்.

    என்று பிரையன் லாரா கூறினார்.

    • இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணை வெளியானது.
    • ஜூலை 26-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.

    கொழும்பு:

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

    டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அட்டவணை வெளியானது.

    முதல் டி20 போட்டி வரும் 26-ம் தேதியும், 2-வது டி20 போட்டி வரும் 27-ம் தேதியும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 29-ம் தேதியும் நடக்கவுள்ளது.

    இதேபோல், ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வனிந்து ஹசரங்கா ராஜினாமா செய்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வனிந்து ஹசரங்கா டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி தலைமைப் பொறுப்புகளை துறந்து ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.

    ஒரு வீரராக எனது சிறந்த முயற்சிகளை இலங்கை எப்போதும் கொண்டிருக்கும், நான் எப்போதும் போல் எனது அணி மற்றும் தலைமைக்கு ஆதரவளிப்பேன் என ஹசரங்கா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.
    • இதில் இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் 6-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.

    நார்த்தாம்ப்டன் :

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான வேர்ல்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியின் முன்னாள் வீரர்களும் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் இந்திய சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இக்கட்டான சூழலில் இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் குவித்தது.

    இந்நிலையில் ஸ்டேய்ன் ஓவரில் இர்பான் பதான் சிக்ஸ் அடிக்க முயற்சிக்க பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேல்நோக்கி சென்றது. இதனை பிடிக்க வந்த கிப்ஸ் கேட்சை தவறவிடுவார். இதனை பார்த்த பதான் 2-வது ரன்னுக்கு முயற்சிப்பார். இதற்கு யூசப் வேண்டாம் என சைகை காட்டுவார். ஆனால் இர்பான் பாதி வரை வந்துவிடுவார். இதனால் அவர் ரன் அவுட் ஆகிவிடுவார்.

    உடனே யூசப் பதானை பார்த்து கோபத்துடன் ஏதோ கூறுவார். பதிலுக்கு அவரும் கோபத்தில் பேசுவார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    ×