என் மலர்
புதுச்சேரி
புதுவை கவர்னர் மாளிகையில் பணியாற்றி வருபவர் இளம்பெண் ஈஷா. கோவையை சேர்ந்த இவர் கவர்னரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் பணிகளை கவனித்து வந்தார்.
சமீபத்தில் அவர் கோவைக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குகொரோனாதொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி மற்றும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) தெரியவரும்.
ஏற்கனவே கவர்னர் மாளிகையில் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கவர்னர் கிரண்பெடிக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து ஏற்கனவே கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் புதிய கொரோனா பரவுவதால் ஜனவரி 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசின் கடிதத்தை வெளியிட்டு கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதனை காவல்துறை, நகராட்சிகள், வர்த்தகர்கள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவ வல்லுனர்கள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
இதை மாற்றி செய்பவர்கள் அதற்கான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மக்களும் தங்களை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை பின்பற்றவேண்டும். இது வர உள்ள புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு மிகமிக அவசியம்.
இதற்கான உத்தரவினை மத்திய அரசு அனைவருக்கும் வினியோகித்துள்ளது. அனைத்து வழிகாட்டுதல்களும், நீதிமன்ற அறிவுறுத்தல்களும் விளக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுகிறது. கலெக்டர்கள் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள்தான் சட்ட அமலாக்க உத்தரவினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளர்கள் ஆவர். சட்டம், விதிமுறைகள், நீதித்துறை வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் உறுதியாக இருங்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் 1992-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் இந்த யோகா திருவிழாவில் பங்கேற்பார்கள். ஆண்டு தோறும் ஜனவரி 4 முதல் 7-ந்தேதி வரை இந்த திருவிழா புதுவையில் நடத்தப்படும்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யோக தெரபி, யோகா உணவு, மாணவர்களுக்கான போட்டிகள் என நகரின் பல்வேறு பகுதியில் இந்த திருவிழா நடத்தப்படும். 27-வது சர்வதேச யோகா திருவிழா இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.
இதுதொடர்பான கோப்பு சுற்றுலாத்துறையில் இருந்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்னும் ஒரு வார காலமே அவகாசம் உள்ளதால் 27-வது சர்வதேச யோகா திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சர்வதேச யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுனாமி தாக்குதல், தானே புயல் தாக்குதலின்போது உலக யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவையில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனை சுட்டிகாட்டி, கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை காணொலி மூலமாக தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஜம்மு-காஷ்மீரில் நடந்த தேர்தல்கள் நம் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதைக் காட்டுகிறது.
ஆனால், 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும் புதுவையில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடக்கவில்லை.
புதுவை அரசு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை தவிர்த்து வருகிறது. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் நடத்துபவர்கள் தான் புதுவையில் ஆட்சியாளர்களாக இருக்கின்றனர் என்று கூறினார்.
இதற்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்து கூறியதாவது:-
பிரதமர் மாநில அரசாங்கத்தை குற்றம் கூறுவது அர்த்தமே கிடையாது. மாநில அரசிற்கு உண்டான அதிகாரத்தை முழுமையாக பறித்து கொண்டு கவர்னர் இந்த தேர்தலை நடத்தவில்லை. இதை பிரதமர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
மாநில உரிமையை பறிப்பது தான் ஜனநாயகமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பறிப்பது ஜனநாயகம் இல்லை என்று பிரதமருக்கு தெரியவில்லை. அவர் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயக முறைப்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தியதாக கூறுகிறார். ஆனால் வேட்பாளர்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் செய்வது தான் ஜனநாயக முறையா? வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வெளியே செல்ல முடியவில்லை.
சிறைப்பிடித்து வீட்டுக் காவலில் வைத்து இருந்தனர். இதனால் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலா?
அப்படியிருந்தும் காஷ்மீர் வாழ் மக்கள் பா.ஜனதா கட்சிக்கு எதிராகத் தான் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளனர். ராணுவத்தை வைத்து கொண்டு முழுவதுமாக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது. மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
இதனிடையே புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் கூறியது போல புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புக்கு தேர்தல்கள் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பகுதிகள் வளர்ச்சிக்கான நிதியை இழந்து விட்டது. மேலும் போதிய சுகாதாரம் இல்லை, மோசமான நீர், அட்டவணை மேலாண்மை, வறட்சி, பள்ளி கல்வி மற்றும் பல பாதிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
புதுவையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த்.
நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த் தனது குழுவினருடன் ஆழ்கடலில் பல புதுவிதமான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. அதுபோல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
புதுவை கடற்கரை சாலை காந்தி சிலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்று கிறிஸ்துமசை கொண்டாடினார்.
இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பி.வி.சி. பைப் மூலம் தயாரிக்கப்பட்ட சாண்டா கிளாஸ் வாகனம் கடலுக்குள் இறக்கப்பட்டது.
அந்த வாகனத்தில் சாண்டா கிளாஸ் உடை அணிந்து வந்த நீச்சல் வீரர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கல்குவாரியில் உள்ள நீர் நிலையின் ஆழத்திலும் அரவிந்த் குழுவினர் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. இங்கு நாளை (27-ந் தேதி) அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
இதையொட்டி ஐகோர்ட்டு உத்தரவுபடி கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில் நிர்வாகம் விழா ஏற்பாடு செய்துள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் முககசவம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். நளன் குளத்தில் நீராட அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புக்காக காரைக்கால், புதுச்சேரியை சேர்ந்த 2 ஆயிரத்து 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பில் உள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையில் செயல்படும் வயர்லெஸ் பிரிவில் பணியாற்றும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இன்றும் (சனிக்கிழமை), நாளை (27-ந் தேதி) கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றுதான் கோவிலுக்கு வரவேண்டும்.
கொரோனா தொற்று இல்லை என முடிவு தெரிந்தபின்னர்தான் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொற்று இல்லை என்ற சான்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
கோவிலுக்கு வர முடியவில்லை என்றால் விழாவை நேரடியாக காணொலியில் பார்க்கலாம். இதற்காக சிறந்த காமிராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஊடகங்கள் சார்பில் செல்லும் நபர்களும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






