என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
    X
    கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குவியும் வெளிமாநில பயணிகள்

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிமாநில பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் அனைத்து நிரம்பி வழிகிறது. சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரெசார்டுகளில் ஆட்டம், பாட்டம் என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு களை கட்டும். புத்தாண்டை கொண்டாட தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.

    இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.

    தற்போது புதுவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. சென்னை, பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கொரோனா பரவல் காரணமாக அரசு தடை விதித்துள்ளதால் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் புதுவைக்கு அதிகமாக படையெடுத்து வரத்தொடங்கி உள்ளனர்.

    அதன்படி ஆங்கில புத்தாண்டிற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் புதுவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் புதுவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், ரெசார்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    இந்தநிலையில் கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளூர் மக்களும் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் திரண்டனர். நோணாங்குப்பம் படகு குழாமில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    இதனால் உள்ளூர், வெளியூர் வாகனங்கள் அதிகளவில் சென்றதால் நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரதான சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
    Next Story
    ×