என் மலர்
இந்தியா
- இண்டிகோ விமான நிறுவனம் நேற்று 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
- இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
புதுடெல்லி:
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக நேற்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு தொடர்பான அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உள்ள அறிவுறுத்தல்களை விமான போக்குவரத்து இயக்குனரகம் திரும்பப் பெறுகிறது.
இதுதொடர்பாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களிடமிருந்து செயல்பாடுகளின் தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதன் அவசியம் குறித்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, வாராந்திர ஓய்வுக்கு மாற்றாக எந்த விடுப்பும் வழங்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்ட பத்தியில் உள்ள அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதன்மூலம் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க ரஷியா உதவி செய்து வருகிறது என அதிபர் விளாடிமிர் புதின் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர்," கூடங்குளத்தில் 6 அணு உலைகளில் 3 ஏற்கனவே எரிசக்தி வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் 6 அணு உலைகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும்.
இந்தியாவிற்கு எண்ணெய், நிலக்கரி, எரிவாயு வழங்கும் நம்பிக்கையான நாடு ரஷியா" என்றார்.
- நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
- பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.05 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த மாவட்டத்தில் உள்ள தர்சி, முத்துரமூரு, தாளூரு, கங்காவரம், ராமபத்திராபுரம், மாண்டமூரூ, சங்காராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. சுமார் 3 வினாடிகள் மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பிரகாசம் மாவட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
வரும் நாட்களில் இது மீண்டும் நிகழக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லக்கூடிய வகையில், ஏதேனும் சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து அதிகாரிகள் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்," என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் தெரிவித்தனர்.
- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
- திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.
திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
* தமிழ்நாட்டில் மதநல்லிணக்க சூழலை சீர் குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்கிறது.
* நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
* 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
* ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றச் சொல்கிறார்கள்.
* திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.
* இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜிஜூ மிரட்டுகிறார்.
* பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பொய் பிரசாரம் செய்கிறார்.
* மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம்.
* திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல.
* நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன்.
- கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.
இந்தியாவுக்கு வந்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி, ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ரஷிய மொழியில் பகவத் கீதையின் பிரதியை அதிபர் புதினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.
- ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான வர்த்தகம், ராணுவத் தளவாடம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
உலகத் தலைவர்களுடன் நான் உரையாடும் போதெல்லாம், விரிவான கலந்துரையாடல்களில், இந்தியா நடுநிலையானது அல்ல என்று நான் எப்போதும் கூறுவேன். இந்தியாவுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, அந்தப் பக்கம் அமைதி. அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம், அமைதிக்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். இடையே உலகத் தலைவர்களிடம் வலியுறுத்துகிறோம்.
கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. மிக விரைவில், உலகம் கவலைகளிலிருந்து விடுபட்டு, உலக சமூகத்திற்கு சரியான திசையில் ஒரு புதிய நம்பிக்கை எழும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது.
- திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது - டி.ஆர்.பாலு
பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியுள்ளது.
இதனிடையே, இன்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி இருஅவைகளிலும், ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இவ்விவகாரம் அரசு சார்ந்த விவகாரம் கிடையாது எனக்கூறி விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது. இதன்பின் மக்களவை கூடியதும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே பேசிய டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். தனிநீதிபதி அளித்த தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றார்.
டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நீதிபதி சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதற்கு மத்திய அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே நீதிபதி சாமிநாதன் குறித்த டி.ஆர்.பாலுவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.- பா.ஜ.க. எம்.பி.க்கள் மாறிமாறி கோஷமிட்டனர்.
- இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
- பிரதமர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.
டெல்லியில் இன்று நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.
இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கைகலுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை புதின் ஏற்றுக்கொண்டார்.
அங்கிருந்து புறப்பட்ட புதபின் ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. தொடர்ந்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
- கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பேரில் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்றும் கடந்த 3-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர். பின்னர் நேற்று மாலையில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மீண்டும் நேற்று மாலை 7 மணிக்குள் ராம ரவிக்குமார் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும் என்றும் அது தொடர்பான நடவடிக்கையை இன்று காலை 10:30 மணி அளவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை.
பின்னர் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று தீபம் ஏற்ற வலியுறுத்திய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்கள்.
பின்னர் அரசு தரப்பு வக்கீல்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் உள்ளிட்டோர் ஆஜராகி, பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது அதே இடத்தில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற கோருவது ஏற்புடையதல்ல.
இது தொடர்பான வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி முன்பு வாதாடினார்கள்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த காரணத்தால் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கிறேன். இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய படை கமாண்டர் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
திருப்பரங்குன்றம் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஆவணம் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.
- திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.
- திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இருஅவைகளும் கூடியதும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
- ரெப்போ வங்கி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- வீடு, வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வங்கி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி வகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் ஆக உள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்ட நிலையில் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
- பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
புதுடெல்லி:
புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்கள் கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பான் மசாலா போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்தை தொடங்கி வைத்து நிதி மந்திரி நிர்மலா சீதராமன் பேசும்போது கூறியதாவது:-
பான் மசாலாவுக்கு கலால் வரி விதிக்க முடியாத நிலையில், பான் மசாலா உற்பத்திக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நுகர்வுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, அரசு ஒரு தனி செஸ் மசோதாவைக் கொண்டுவருகிறது.
பாவப்பொருட்கள் என்ற முறையில் பான் மசாலா அலகுகளின் உற்பத்தி திறனின் மீது வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பதன் மூலம் இந்த பொருட்களின் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது.
பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்படும்.
பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதற்கு மேல் பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
இந்த செஸ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 களங்களான சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு மற்றும் கணிக்கக்கூடிய வளத்தை உறுதி செய்யும் என்று கூறினார்.






