என் மலர்
திருநெல்வேலி
- தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை.
- நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம்.
நெல்லை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வந்துள்ளேன். முருகப்பெருமான் எப்படி பாசிச சக்திகளை சூரசம்காரம் செய்தாரோ அதேபோல் சூரசம்காரம் செய்ய வேண்டி தரிசனம் செய்து முடித்துள்ளோம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை 4 மணி முதல் 4.50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கோவை செல்கிறார். அங்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சேர்ந்து பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றி எழுச்சி மிக்க ஒன்றாக அமைந்துள்ளது. தினந்தோறும் 25, 50 என வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் நாளுக்கு நாள் இறங்கி கொண்டே போகிறது என்று மாம்பழத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த பேச்சு எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதிகாரிகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களே அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை. ரூ.4 கோடி பிடிபட்ட பிறகும் ஒரு வாரம் கடந்த நிலையிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் வேட்பாளரிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. மக்கள், தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக வண்டி கூட இல்லை.
ரஜினிகாந்த் கர்நாட காவில் பிறந்து தமிழகத்தில் வந்து நடித்து வருகிறார். பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து போட்டியிடுபவரை இறக்குமதி வேட்பாளர்கள் என்கிறீர்கள். அவர் இறக்குமதி வேட்பாளர் இல்லை. அவர் தென் இந்தியா முழுவதும் மிகவும் பரிச்சயமான வேட்பாளர்.
அவர் ஒரு மத போதகர். இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்பவர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான தேர்தல் இப்போது நடக்கிறது.
நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம். அவரது வருகை மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.
- உடனடியாக கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று காலை திடீரென கரடி ஒன்று புகுந்துள்ளது. தொடர்ந்து இந்த கரடி செய்வதறியாமல் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களில் ஓடியது.
இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 57) பெண்ணை அந்த கரடி தாக்கி உள்ளது.
இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பெண் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக அந்த கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே கரடி ஊருக்குள் புகுந்து பொது மக்களை விரட்டிய காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
- நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
- நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.
நெல்லை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இதனையொட்டி பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கூட்ட மேடையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தென் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.
சிவகங்கை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை பிரகடனம் என்ற பெயரில் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

தேசத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக் கிறது. இந்தியா கூட்டணி எழுச்சியோடு வெற்றி வாகை சூட போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நாளை மாலை நெல்லையில் பிரசாரம் செய்ய இருக்கிறோம்.
நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். ஹெலிகாப்டர் இறங்கும் ஜான்ஸ் கல்லூரி மைதானம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை வாகன பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. ரோடு-ஷோவுக்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும் சாலையின் இரு புறங்களிலும் திரளான மக்கள் வந்து ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு வழங்குவார்கள்.
பிரதமர் மோடி தமிழகத்தில் பேசும் ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் இந்தியா கூட்டணியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.
தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம், சி.ஏ.ஜி. அறிக்கை உள்ளிட்ட புகார்கள் மற்றும் அந்த ஊழல் தொடர்பான விளக்கங்களை பற்றி மோடி முதலில் வாயை திறக்கட்டும்.
ஒரு முறை எங்களை பார்த்து கையை நீட்டுகிறார் என்றால் 4 விரல் அவரைப் பார்த்து இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நெல்லை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்கபாலு, மேலிட பார்வை யாளர் ஸ்ரீ வல்லபிரசாத், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.
வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி நேற்று வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக நெல்லை வருகிறார். அவர் வருகிற 15-ந்தேதி ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வர உள்ளார். இதனையொட்டி நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனையொட்டி இன்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் மேடை அமைப்பதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர்பட்டி தனியார் பள்ளியில் பிரதமர் மோடி வந்திறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்திலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
நெல்லை:
தமிழ்நாட்டிற்கு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தேசிய கட்சியான பா.ஜனதா, காங்கிரசும் தங்களுக்கே உரித்தான வழியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களை நோக்கி முக்கிய தலைவர்களின் கண் பார்வை தற்போது விழுந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு கட்சி மேலிட நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.
பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி நேற்று வரை 7-வது முறையாக தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கடந்த மாதம் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அம்பை அகஸ்தியர் பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு சிறப்பு விமானத்தில் வருகிறார். அங்கிருந்து சிவகங்கை தொகுதிக்கு செல்லும் அமித்ஷா, ரோடு- ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கோட்டை பைரவர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் விமானத்தில் மீண்டும் மதுரை செல்கிறார். அங்கு மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரையில் இரவில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார்.
பின்னர் காரில் குமரி மாவட்டம் தக்கலைக்கு செல்லும் அமித்ஷா அங்கு பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று கார் மூலமாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அமித்ஷா, மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசிக்கு புறப்படும் அமித்ஷா, இலஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆசாத் நகர் முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்படும் அமித்ஷா, இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லை வந்திறங்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்ட மேடை வரை ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.
பின்னர் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார். பின்னர் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் பேசுகிறார்.
அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் உதயநிதி நெல்லைக்கு வருகிறார். அவர் நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து நாங்குநேரி பஜார் தெருவில் வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து கடையநல்லூர் மணிக்கூண்டு பெரிய பள்ளிவாசல் பகுதியில் பிரசாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார். பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக நாளை மாலை கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பும், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை யூரணியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் முன்பும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
அடுத்தடுத்து தலைவர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்வதால் தென் மாவட்ட தொகுதிகளின் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.
- கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாவட்டம் வாரியாக பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தேர்தல் நெருங்குவதையொட்டி தென்மாவட்டங்களில் இந்த வாரத்தில் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சிகளின் நிர்வாகிகள் உற்சாகத்துடன் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களின் இந்த படையெடுப்பால் தென்மாவட்டங்களில் தேர்தல் களம் அனல்பறந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தென் மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் பிற்பகலில் நெல்லை வரும் ராகுல் காந்தி பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து திறந்த வாகனத்தில் செல்லும் ராகுல் காந்தி ரோடு-ஷோ செல்கிறார். அப்போது அவரை பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அவர் செல்லும் வழியில் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் ஹெலிபேடு தளம், அவர் செல்லும் திருச்செந்தூர் சாலை மற்றும் பிரசாரம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை மாநகர் முழுவதும் இன்று காலையில் தொடங்கி நாளை மறுநாள் காலை வரையிலும் டிரோன்கள் பறக்கவும் தடை விதித்து கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள், பக்தர்கள் சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி திருவிழாவினை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் காண்பதற்காக செல்வார்கள்.
இதனால் தேவைக்கேற்ப சிறப்பு சேவையாக கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இருந்து 22-ந்தேதி காலை முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும், அதேபோல் சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள், பக்தர்கள் இந்த சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
- புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உவரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார்.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதனை ஒட்டி தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார். அவர் அன்றைய தினம் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பிரசாரத்தின் போது நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
இதனையொட்டி நெல்லை மாநகர் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 13-ந்தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் நெல்லை மாநகர பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.
- தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள்.
நெல்லை:
தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.
இந்த காலகட்டங்களில் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் வாரம் தோறும் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது.
- கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை எட்டயபுரம் கால்நடை சந்தைக்கு அடுத்தபடியாக இந்த மேலப்பாளையம் சந்தையில் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.
இங்கு வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நெல்லை சுற்று வட்டார பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால் மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இன்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர் என்று வியாபாரிகள் கூறினர். இதனால் ஆடு விற்பனையானது சுமார் ரூ.3 கோடி அளவுக்கு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆடுகளும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் விலை போனது. கொங்கு ரக கிடாக்கள் 2 சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தை பகுதியில் குவிந்தனர். இதனால் அந்த சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
நெல்லை:
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட தென் மண்டல பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இதனை ஒட்டி பாளை பெல் மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தமிழக நிதி அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று காலை பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிற 12-ந் தேதி நெல்லையில் பிரசாரம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி என்பது உறுதியாக இருந்தாலும் ராகுல் காந்தியின் வருகை அவரது வெற்றியை மேலும் வலுப்படுத்தும்.
ராகுல் காந்தியின் வருகைக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்கு அடுத்த நாளோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வது குறித்து ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவரது பிரசார பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் வரும் 100 நாட்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் அளிக்க வேண்டும்.
தி.மு.க.வின் வக்கீல் அணியும் இது போன்ற தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அளித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கென பிரத்தியேக வார்-ரூம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






