என் மலர்
திருநெல்வேலி
- காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
- பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம்.
இந்திய பிரதமர் உத்தரவின்படி பாகிஸ்தானில் போர் தொடுத்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்திய நாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. பல ஆண்டுகாலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல் கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவுப்படி காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பேரணி உள்ளிட்டவைகளை நடத்த அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் நடத்திய பயங்கரவாத சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அந்த நாட்டை சேர்ந்த அமைச்சரே உறுதி செய்துள்ளார். திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக சொல்லி உள்ளார்.
இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுத்தி அமைதி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. பயங்கரவாதம் எங்கும் இருக்கக் கூடாது. அதனை வேரறுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாகிஸ்தான் செயல்பாடுகள், பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.
மும்பை தாக்குதல் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த தற்போது உள்ள பிரதமர் மோடி சம்பவ இடத்தை பார்வையிட்டு பிரதமர் என்பவர் 56 இன்ச் மார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என அப்போதைய பிரதமரை விமர்சனம் செய்ததை மறக்கமுடியாது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் காவல் துறை, ராணுவம் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தது. உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
- நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.
இதேபோல், நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும்.
மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாளை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
- பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.
- நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று.
நெல்லை:
நெல்லை மண்டலத்திற்குட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட தலைவர்களின் கூட்டம் நெல்லையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏற்பட்ட சந்தோஷத்தை விட, இன்று சந்தோஷம் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும்.
பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தெலுங்கானா காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காகவும், தேச ஒற்றுமை பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசியதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தம் அடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
இந்தியாவின் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்க காரணம் கணவனை இழந்த பெண்கள் செந்தூரம் அதாவது குங்குமத்தை வைக்க முடியாது. அதனால் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 177-வது வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவில்லை. இது போன்ற வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. எனவே விரைவில் கூட்டணியை முடிவு செய்து ஆபரேஷன் சிந்தூர் போல 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை தொடங்குவோம்.
பா.ஜ.க.வில் இருந்து திருமாவளவனுக்கு நான் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். மற்றவர்கள் யாரும் பேசினார்களா என தெரியவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்றுள்ளீர்கள். நீங்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளீர்களா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்,
நான் தமிழக முதலமைச்சரை பெரிதும் மதிக்கிறேன். நயினார் நாகேந்திரனுக்கு எதற்கு பாதுகாப்பு. அவர் தான் எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்க கூடியவர் என அவர் நினைத்திருக்கலாம் என கூறினார்.
பின்னர் மத்திய அரசால் வழங்கப்படும் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கேட்டுள்ளீர்களா? என கேட்டதற்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கூறினார்.
- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- முதலமைச்சர், கவர்னரை பற்றியே முழுவதும் விமர்சனம் செய்து வந்தார்.
நெல்லை பெருமாள்புரத்தில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் எல்லா எம்.எல்.ஏ.க்களையும் வேலை பார்க்க சொல்கிறார். அடுத்த ஓராண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அப்படியென்றால் கடந்த 4 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்கள் எந்த வேலையையும் செய்யவில்லை என்பதை தான் அது குறிக்கிறது.
அவர் எதிர்கட்சி காரர்களை பார்த்து உங்களது கூட்டணி சரி இல்லை என்று சொன்னால் அது எந்த விதத்தில் சரியாக இருக்கும். அவர்களுடைய கூட்டணி சரி இல்லை என்று சொன்னால் அது பரவாயில்லை. எதிர்கட்சி கூட்டணியை போய் முதல்-அமைச்சர் சரியில்லை என சொல்லுகிறார். தோல்வி பயத்திலேயே இவ்வாறு அவர் கூறி கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர், கவர்னரை பற்றியே முழுவதும் விமர்சனம் செய்து வந்தார். தீர்மானம் மட்டுமல்லாது, சட்ட மன்றத்திலும் கவர்னரை நிறைய விமர்சனம் செய்தார்கள். தற்போது கவர்னருடன் அதிகாரப் போட்டி இல்லை என்று சொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பாஜக நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
- முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 1 மாதத்திற்கும் மேலாக கோடை மழையானது அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஓரளவுக்கு பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், பிற்பகலில் பரவலாக மழை பெய்வதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை சிறிது நேரம் பெய்தது. அங்கு அதிகபட்சமாக 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. காக்காச்சியில் 10 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அம்பை சுற்றுவட்டாரத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்தடை பாதிக்கப்பட்டு ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. கல்லிடைக்குறிச்சி அருகே வெள்ளாங்குளியில் சுடலைமாடசுவாமி கோவில் அருகே உள்ள மரம் சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற காரின் முன்பகுதி கண்ணாடி உடைந்தது. காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனாநதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மெல்ல அதிகரித்தது.
அதிகபட்சமாக கருப்பாநதியில் 40 மில்லிமீட்டரும், கடனா நதி நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 28 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழையால் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவிற்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி கிடந்ததால் இன்று 2-வது நாளாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சிவன் தெரிவித்தபோது, 1 மணி நேரம் பெய்த கனமழைக்கு சங்கரன்கோவிலில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் வாறுகால்களின் அளவு சுருங்கி விட்டது.
கோவிலை சுற்றி உள்ள சாலைகளின் உயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவில் இருக்கும் இடம் தாழ்வான இடம் ஆகி விட்டது. ஒவ்வொரு முறை புதிய சாலை போடும்போது சாலையை தோண்டி போடாமல் உயரமாக்கிக் கொண்டே செல்வதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதை அரசும் கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு செய்து வடிகால் வசதியை சரி செய்ததால் கோவிலுக்குள் மழை நீர் தேங்காத நிலை உருவாகும் என்றார்.
- சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- ஜெயக்குமார் கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(வயது 60).
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் 4-ந்தேதி வீட்டின் பின்புறம் உடலில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கொலையில் அவர் எழுதியதாக போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஒப்படைத்த கடிதத்தில் வள்ளியூர், திசையன்விளை பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், நண்பர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தனக்கு பணம் தரவேண்டியவர்கள், பணம் கொடுக்க வேண்டியவர்கள் என ஏராளமான நபர்களின் பெயர்களை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அறிவியல் பூர்வ விசாரணையும் மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை கூட தீர்மானிக்க முடியவில்லை.
இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றினர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் நாளையோடு ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து வருகிறது. எவ்வித துப்பும் துலங்கவில்லை. அவரது மரணம் குறித்து விசாரிப்பதில் போலீசார் காட்டும் ஆர்வத்தை கூட அவரது குடும்பத்தினரோ, அரசியல் கட்சியினரோ காட்டவில்லை. இதனால் கொலைவழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழாமல் நீர்த்து போய் இருக்கிறது.
- தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாத வெப்பநிலையானது இயல்பை விட குறைந்தே காணப்படும்.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மே 15 வரை மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 1 முதல் மே 31-ந் தேதி வரையிலான காலக்கட்டமே தமிழகத்திற்கு கோடைகாலமாகும். தற்போது ஏப்ரல் வரையிலான காலத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து இயல்பை விட வெப்பநிலை குறைவாகவே பதிவாகி வந்தது. மேலும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக மழையும் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாத வெப்பநிலையானது இயல்பை விட குறைந்தே காணப்படும். அதாவது கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வெப்பநிலை குறைவாக இருக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை சற்று குறையும். காரணம் மேற்கு திசை காற்று வலுவாக வீசும் என்பதால் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும்.
இதே வேளையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும். அதாவது கிழக்கு திசை கடல் காற்று வீசுவது நின்று மேற்கு திசை காற்று வீச தொடங்கும். வறண்ட மேற்கு திசை காற்று வீசும் என்பதால் சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.
மேலும் மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.ஆனால் கடந்த ஆண்டை போல இருக்காது.
மழையை பொறுத்தவரை மே மாதம் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமழை பெய்யும். குறிப்பாக மே 1-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான காலத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய உள் மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவு கோடைமழையை எதிர்பார்க்கலாம். கொங்கு மாவட்டங்களிலும் மே மாதத்தில் நல்ல மழை பெய்யும்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை மே முதல் 2 வாரத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பதிவாகும். அதே வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளான விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாவில் இயல்பை விட அதிகமழை பெய்யும்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மே 15 வரை மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு உள்ளது. முதல் 2 வாரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக இருந்தாலும் மே 3,4 வாரங்களான அதாவது மே 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலான காலத்தில் தென் மாவட்டங்கள் ஓரளவு நல்ல மழையை பெறும்.
மேலும் வெப்பநிலை அதிகமாக உள்ள நாட்களில் நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார்.
- நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் ரத வீதியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தானை சேர்ந்த ராம் சிங் தனது மகன்களுடன் இணைந்து இருட்டுக்கடையை தொடங்கினார்.
ராம் சிங்கிற்கு 4 மகன்கள் இருந்த நிலையில் 3-வது மகனான கிருஷ்ணசிங் கடையை தனது தந்தையோடு இணைந்து நடத்தி வந்தார். இவரது மறைவிற்கு பிறகு கிருஷ்ணசிங்கின் மகன் பிஜிலி சிங் தனது மனைவி சுலோசனா பாய் உடன் இணைந்து கடையை நிர்வகித்து வந்தார். பிஜிலி சிங் 2000-ம் ஆண்டு உயிர் இழந்த நிலையில் அவரது மனைவி சுலோச்சனா பாய் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அதுவரை இருட்டுக்கடையில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒருவர் மீது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும் வெளிப்படையாக பிரச்சினை விவாதிக்கப்படவில்லை.
சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார். தற்போது வரை இருட்டுக்கடை கவிதாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவரது மகள் திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மகள் தனது தாய் (கவிதா) வீட்டில் வாழ்கிறார்.
இந்த நிலையில் கவிதாவின் மருமகன் குடும்பத்தினர் கடையை தங்களுக்கு வரதட்சணையாக கேட்டதாக கூறப்பட்டதில் இருந்து முதன்முதலாக இப்பிரச்சனை வெளியே வந்தது.
இதனிடைய கவிதாவின் சகோதரர் நயன் சிங் கடையில் தனக்கே உரிமை உள்ளது என பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கு கவிதாவின் தரப்பு மறுப்பு அறிவிப்பை வெளியிட்டது. பிஜிலி சிங் - சுலோசனா பாய் தம்பதிகளுக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் சுலோச்சனா பாயின் சகோதரர் குழந்தைகளான கவிதா மற்றும் நயன் சிங் சொத்துக்காக மோதிக் கொள்ளும் நிலையில் தற்போது புதிதாக ஒருவர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் கடையை நிர்வகித்து வந்த கிருஷ்ணசிங்கின் மூத்த சகோதரர் உதய் சிங். இவரது மகன் வழிப்பேரனான பிரேம் ஆனந்த் சிங் தற்போது சென்னையில் வசிக்கும் நிலையில் அவர் ஆண் வாரிசான தனக்கே கடை உரிமை உள்ளது என்ற அடிப்படையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணசிங்கின் அண்ணன் பேரன் என்ற அடிப்படையில் உரிமை கோரும் அவர் நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வமாக கடையை கைப்பற்றுவேன் என்றும் இது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், வழக்கு தற்போது விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வாய்ந்த இருட்டுக்கடைக்கு ஏற்கனவே இருவர் உரிமை கொண்டாடும் நிலையில் 3-வது நபராக ஒருவர் தற்போது உரிமை கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இதற்காக கட்சி தலைவர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த 26,27-ந்தேதிகளில் கோவையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கு பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக 4 மண்டலங்களிலும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பூத் கமிட்டி கூட்டத்தை நெல்லையில் நடத்த வேண்டும் என நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சி தலைமைக்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் விஜய்யை நெல்லைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இன்று நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
நெல்லை மாநகரப் பகுதியான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், களமும் நமதே.. இனிவரும் காலமும் நமதே.. விஜய் அவர்களே நெல்லை சீமை உங்களை அன்போடு அழைக்கிறது என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் உள்ளது. விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டியும் அந்த போஸ்டர்களில் விஜய்யை வாழ்த்தி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
- பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். தொடர்ந்து அங்கு தற்காலிக பேராசிரியராக சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது அங்கு வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அம்பையை சேர்ந்த கண்ணன்(வயது 55) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும், தனது ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை அவர் ஏற்படுத்தியதாகவும் அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை மாநில மகளிர் ஆணையம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சமீபத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
இதனிடையே இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாணவியாக இருந்தபோது பேராசிரியர் கண்ணன் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டு அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் புகார் அளித்தாா.
அதன் அடிப்படையில் நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கீதா, டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட அந்த முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அவரது புகார் மனு குறித்து பல்கலைக்கழக அளவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்திட நேற்று முன்தினம் துணை வேந்தர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி, டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)-பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.
- நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நெல்லை:
சமீப காலமாக இளைஞர்களும், இளம்பெண்களும் சமூக வலைதளங்களால் தங்களது எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர். தனது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் அதிகமான லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தை உணராமல் வீடியோ எடுக்கச்சென்று உயிரினை இழப்பதும், ஆபாச வீடியோக்களை பதிவு செய்து பொது மக்களின் கண்டனங்களை பெறுவதோடு போலீசாரின் நடவடிக்கைக்கும் உள்ளாகி தங்களது எதிர்காலத்தை இழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் சிறுவர்-சிறுமிகளும் இன்ஸ்டா மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு ரீல்ஸ் செய்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் இடம், பொருள் அறியாமல் அனைத்து இடங்களிலும் ரீல்ஸ் மோகத்தால் ஆடிப்பாடி எதிரில் இருப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு விரும்பத்தகாத செயல்களை புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்புள்ள கோவில் வளாகத்தில் சிறுவர்-சிறுமி ஜோடி ஒன்று தக்லைப் படத்தின் புதிய பாடல் ஒன்றுக்கு முகம் சுளிக்கும் வகையில் ஆட்டம் போட்டு அதனை ரீல்ஸ் ஆக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஹயகிரீவன் என்பவரது இன்ஸ்டா பக்கமான விஜே ஹயாஸ் என்ற பக்கத்திலும், அதே போல் சாக்கோ 36 என்ற இன்ஸ்டா பக்கத்திலும் நடிகர்கள் கமல்ஹாசன்-சிம்பு ஆகியோர் ஆடும் அந்த பாடலுக்கு சிறுவர்-சிறுமி 2 பேரும் சேர்ந்து ஆடிய அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
பாண்டிய நாட்டின் பெருமைமிகு சிவ தலமான நெல்லையப்பர் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்களுடன் கூடிய தனித்தனி சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது.
கோவிலில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து வருவதுடன் 100-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கொண்டு கண்காணிக்க கூடிய பணி நடந்து வருகிறது.
அப்படியிருக்க, சிறுவர்-சிறுமி இருவரும் ரீல்ஸ் நடனமாடியது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்ஸ்டா மோகத்தில் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் தற்போது நெல்லையப்பர் கோவிலிலும் அந்த சம்பவம் நடந்திருப்பது பக்தர்களிடத்தில் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடக்காது என சிவனடியார்கள் கூறுகின்றனர்.






