என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

    தற்போது ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடந்து வரும் நிலையில் கடந்த 27-ந்தேதி பி.காம் பட்டப்படிப்புக்கான தொழில் சட்டம் எனும் இண்டஸ்டிரியல்லா என்ற பாடத்தின் தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

    இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில் கடந்த 26-ந்தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையர் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு நம்பரில் இருந்து மறுநாள்(27-ந்தேதி) நடக்க இருந்த தொழில்சட்டம் பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், இதனால் அந்த தேர்வினை ரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை பேட்டை போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316 (நம்பிக்கைக்கு மோசடி செய்தல்), 318(ஏமாற்றுதல்), 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3,4 மற்றும் 5(தேர்வில் முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே தேர்வாணையரின் செல்போன் வாட்ஸ்அப்புக்கு வினாத்தாள் அனுப்பிய எண்ணை சோதனை செய்தபோது அது அறிவுச்செல்வன் மதுரை என்ற பெயர் வருவதாகவும், அந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது.
    • அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் யார்? என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதலுக்கு பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்பும் கிடையாது. பின்னணியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி பிரச்சனை. அதைப்பற்றி கருத்து கூறவும் முடியாது.

    பா.ம.க. மோதல் விவகாரத்தை சமாதானம் செய்ய நாங்கள் முயற்சி எடுக்கவில்லை. உட்கட்சி பிரச்சனைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது.

    நெல்லையில் மட்டுமல்ல எல்லா மாநகராட்சிகளிலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவி வருகிறது. கொரோனா 3-வது தொற்றும் வருவதாக கூறுகிறார்கள்.

    எல்லா மாநகராட்சிகளிலும் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஒரு கவுன்சிலரை கைநீட்டி அடிப்பது போன்ற புகைப்படங்கள் வந்துள்ளது.

    ராணிப்பேட்டையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. காவல்துறையினர் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதலமைச்சர் மார்தட்டி பேசுகிறார்.

    இது போன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. நெல்லையில் 200-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

    தாமிரபரணி கூட்டுக் குடிநீரை 30 நாட்களுக்குள் அமைச்சர் சரி செய்து தருகிறேன் என்று கூறினார். இன்னும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசு அதன் மீது கவனம் செலுத்த வேண்டும். எல்லா குளங்களில் உள்ள மணல்களையும் தூர்வார வேண்டும். தூர்வாரினால் தான் அதிக அளவு தண்ணீர் பிடிக்கும்.

    தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

    கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு பிரச்சனை வந்தது என்று கூறியுள்ளார். இது தேவையில்லாத பேச்சு. யாருடைய பூர்வீகத்தை எடுத்துப் பார்த்தாலும் பல்வேறு பிரச்சனைகள் வரும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றபோது அங்கே இருப்பவர்கள் ஜெயலலிதாவிடம் கன்னடம் வாழ்க என்று கூற சொன்னார்கள். ஆனால் அந்த நேரத்தில் ஜெயலலிதா உயிரே போனாலும் சொல்லமாட்டேன் என்று கூறினார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானை உள்ளது. அதை நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். இதை விதிமுறைகள் பின்பற்றி முதலமைச்சரிடம் பேசி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் யார்? என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. குறித்து பேசுபவர்களின் பார்வையில் கோளாறு இருக்கலாம்.
    • வரும் சட்டமன்றம் முடிவதற்குள் முழுமையாக அனைத்து பேச்சுகளும் ஆன்லைனில் ஏற்றப்படும்.

    நெல்லை:

    சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகள் பதில் கூறிவிட்டார்கள். முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது. வேடம் போடுவது நடிகர்களுடைய செயல்.

    பவன் கல்யாண் நடிகர். அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது. மக்களுக்கு தேவையானவற்றை அவர் செய்து கொடுத்துள்ளார்.

    பல்வேறு கோவில்கள் குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. ஓடாத தேர்கள் ஓடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. குறித்து பேசுபவர்களின் பார்வையில் கோளாறு இருக்கலாம். அறநிலையத் துறை சார்பில் கல்லூரிகள் கட்டுவதற்கு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நீதிமன்றத்திற்கு சென்று அதற்கு தடை வாங்கி விட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு நடந்து வருகிறது. எந்த குறைபாடு இருந்தாலும் அதனை சுட்டிக்காட்டினால் உடனடியாக சரி செய்து கொடுக்கப்படுகிறது.

    சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த கேள்விகள் ஒளிபரப்பு செய்ய வேண்டுமோ அதை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறோம். மீதமுள்ள செயல்பாடுகளை எப்படி நேரலை செய்யலாம் என கலந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    எந்தெந்த வார்த்தைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக நேரலை செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசியல் தொடர்பான கருத்துக்கள் பேசிவிடக் கூடாது என்பதற்காக உன்னிப்பாக அந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே உள்ள அரசை போன்று நாங்கள் செய்ய முடியாது என சொல்ல மாட்டோம். தமிழகம் சட்டப்பேரவை ஆரம்பித்து 104 ஆண்டு ஆகி உள்ளது. 1952-ம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை ஆன்லைனில் தேடினால் எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    1921-52 வரை உள்ள சட்டமன்ற நடவடிக்கைகள் எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றம் முடிவதற்குள் முழுமையாக அனைத்து பேச்சுகளும் ஆன்லைனில் ஏற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 99 மையங்களில் இன்று காலை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வந்திருந்தனர்.
    • தற்போது கசிந்த வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

    சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 106 கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    இங்கு 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 107-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.

    இந்நிலையில் தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரிகளில் 'இண்டஸ்ட்டிரியல் லா' என்ற பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 99 மையங்களில் இன்று காலை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வந்திருந்தனர்.

    தொடர்ந்து மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே அந்த வினாத்தாள்கள் மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டன. வினாத்தாள் ஏற்கனவே கசிந்துவிட்டதாகவும், அதனால் இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும் மையங்களில் தேர்வு பணியில் இருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்த பதிலில், இண்டஸ்ட்டிரியல் லா என்ற பாடத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம் என்றனர்.

    இதனிடையே வருகிற 29-ந்தேதி வரை கல்லூரிகளில் பருவத்தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே தற்போது கசிந்த வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்படும். அதனை தொடர்ந்து இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வருகிற 30 அல்லது 31-ந்தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வாளர்கள் தெரிவித்தனர்.

    பல்கலைக்கழக தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் கசிந்தது எப்படி?, இதற்கு காரண மானவர்கள் யார்? என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.

    • நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    • 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    நெல்லை:

    அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் வானிலை மைய அறிவிப்பை அடிப்படையாக கொண்டு நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான கூத்தங்குழி, கூட்டப்பனை, பஞ்சல், இடிந்தகரை, கூடங்குளம், கூடுதாழை, உவரி உள்ளிட்ட 9 கிராம மக்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் சுமார் 1,200 நாட்டுப்படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த தடையால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • அடுத்த 2 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் இருந்து மக்கள் வெளியேற மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தினால் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில் 2 நாட்களாக பிற்பகலில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை முதலே பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாகவும், ஆங்காங்கே சாரல் மழையும் பெய்து வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகாலை முதலே சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. மேலும் நேற்று மாலையில் இருந்து பரவலாக தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று வரை நீர்வரத்து சுத்தமாக இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,328 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இன்று ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்து 83 அடியாக உள்ளது. அங்கு 21 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 49.65 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 45 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே நேரம் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை ஏதும் இல்லாததால் நீர் வரத்து இல்லை.

    புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சேரன்மகாதேவி, முக்கூடல், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதோடு குளிர்ந்த காற்று வீசியதால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அடவிநயினார், குண்டாறு, கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தென்காசி நகர் பகுதி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அடுத்த 2 நாட்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் இருந்து மக்கள் வெளியேற மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் கோவில் அணையில் 52 மில்லிமீட்டரும், குண்டாறில் 44 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 23.50 மில்லிமீட்டரும் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    • கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.
    • அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள குடோன்களில் எரிகோல்கள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து அணுமின் உலை அமைத்துள்ளது.

    இதில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் இயங்கி வருகிறது. இதில் இருந்து தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த அணு உலையில் எரிக்க பயன்படுத்தும் எரிகோல்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் எரிகோல்கள் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று 3 கண்டெய்னர் லாரிகளில் எரிகோல்கள் ஏற்றப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் வந்தடைந்தது.

    அங்கு அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள குடோன்களில் எரிகோல்கள் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    • அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்.
    • ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நெல்லையப்பர் கோவிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளித்தேருக்கு பக்தர்களால் 175 கிலோவிற்கு மேலாக உபயமாக வெள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. நானும் 1 கிலோ வெள்ளி கொடுத்துள்ளேன்.

    2004-ம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மூலம் கோவிலுக்கு திருப்பணி செய்ய அனுமதி பெற்று, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரியிடம் பேசப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்று சேர வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்.

    அன்புமணி ராமதாஸ்-ராமதாஸ் பிரச்சனைக்கு பின்னணியில் பா.ஜ.க. இல்லை. அன்புமணிக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக கூறுவது தவறு. நாங்கள் யாருக்கு பின்னாலும் இல்லை.

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதலமைச்சர் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை.

    சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாத காலத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பா.ஜ.க. ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

    ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அது போலவே தங்க நகை கடனுக்கான பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டதும் சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும்.

    என்.ஆர்.சி. என்ற சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது அல்ல. அண்டை நாடுகளில் இருந்து மேற்கு வங்கத்தின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய நாட்டில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் மூலமாக கேரளா தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.

    இவரது மனைவி சரஸ்வதி பாளை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து, முத்துக்குமார் உள்பட 4 பேர் என்பது அடையாளம் தெரிந்தது.

    இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதும், ஏர்வாடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் பறித்ததும் தெரியவந்தது.

    அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சார்பில் 6 தனிப்படைகள், மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் கீதா மேற்பார்வையில் 1 தனிப்படை என மொத்தம் 7 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த கும்பல் சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக கேரளா தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகர போலீஸ் தனிப்படை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு விரைந்தது. அங்கு நேற்று காலை முதல் முகாமிட்டு தீவிரமாக தேடிய நிலையில் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் ஒரு விடுதியில் பதுங்கி இருந்த பொன்ராஜ், இசக்கிமுத்து, முத்துக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை இன்று காலை நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் யார்? எதற்காக அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினர்? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.
    • 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர்(வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.

    நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீடு உள்ள தெருவிற்கு வந்தது. பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை அவர் வீட்டின் மீது வீசி விட்டு தப்பிச்சென்றது. இதில் மின்விசிறி, விளக்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தது.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலில் 3 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

    மேலும் அந்த கும்பல் இந்த 2 சம்பவங்களை நிகழ்த்துவதற்கு முன்பாக ஏர்வாடி அருகே தளபதிசமுத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்ததையும், ஊழியரை தாக்கி விட்டு தப்பி சென்ற காட்சிகளும் சிக்கின.

    இதன்மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் , அந்த கும்பல் டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த கார்த்தி, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 4 பேர் என்பது அடையாளம் தெரிந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 3 தனிப்படைகள், சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் ஆகியோர் தலைமையில் தலா 1 தனிப்படையும், நெல்லை மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் கீதா மேற்பார்வையில் 2 தனிப்படையும் என மொத்தம் 7 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த கும்பல் நேற்று காலையிலேயே சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்றார்களா? அல்லது சென்னை, மதுரை எங்கேனும் தப்பிச்சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த கும்பலிடம் செல்போன் இல்லை. அவர்கள் 4 பேரும் மோடத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலமாகவே தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் அவர்களை செல்போன் சிக்னல் மூலமாக பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    அவர்களது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
    • அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை.

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்நிலையில், நெல்லையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு திமுக எம்.பி.கனிமொழி பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் அதிமுக அரசு நிற்கவில்லை. இந்த வழக்கில் அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை.

    வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை செய்து இருந்தால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.. சிபிஐக்கு மாற்றியதை இபிஎஸ் பெருமையாக நினைக்காமல் வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் வளாகத்தில் இருந்த மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன.
    • 2 பேர் அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் வழக்கம்போல் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து அதனை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வசங்கர் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அவரது வீட்டின் வளாகத்தில் இருந்த மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 வாலிபர்கள் அங்கு வந்து செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. மர்மநபர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வரும் அந்த வாலிபர்கள் வீட்டின் முன்புள்ள தெருவில் வைத்து பெட்ரோல் குண்டை பற்ற வைப்பதும், 2 பேர் அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசுவதும் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்வசங்கர் கட்சி நிகழ்வுகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. செல்வசங்கர் அப்பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் சாமியாடி வந்துள்ளார்.

    இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்த பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். ஏதேனும் அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் அவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனிடையே போலீசாரும் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×