என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • முதுகலை பட்டதாரியான கயல் விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணமாகியது.
    • பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரது மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கோவி லுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கயல்விழி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு கடந்த 8 மாதங்களாக தேடிய நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி என்பவர் கயல்விழியை காரில் அழைத்துச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சேரன் மகாதேவியில் 80 அடி அகல கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கால்வாயில் இருந்து கயல்விழியின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதுகலை பட்டதாரியான கயல் விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணமாகியது. பின்னர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கணவரை பிரிந்துவிட்டார். மீண்டும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கயல்விழி பல கோவில்களுக்கு சென்று வேண்டி வந்தார்.

    இந்நிலையில் அவர் தனது பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதனை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டி ராஜா பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் கயல்விழியை காதல் கண்ணோட்டத்தில் மாயாண்டி ராஜா நெருங்கி உள்ளார். ஆனால் கயல்விழி அதற்கு உடன்படவில்லை. இதனால் அவரிடம் மாந்திரீகம் செய்யும் தனது மாமா சிவசாமியிடம் அழைத்துச்சென்று பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வாழ வைப்பதாக கூறி நம்பவைத்து பல்வேறு தவணைகளாக கயல்விழியிடம் மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் சிவசாமி, மாயாண்டிராஜா ஆகியோர் பறித்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவதை அறிந்த கயல்விழி தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி கயல்விழியை சுசீந்திரத்துக்கு வரவழைத்து சிவசாமியும், அவருடைய சகோதரி மகனான மாயாண்டி ராஜா, வீரவ நல்லூரை சேர்ந்த கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்து கொண்டு கயல்விழி உடலை காரில் எடுத்துச் சென்று சேரன்மாதேவியை அடுத்த கங்கணாகுளம் அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் உடலை வீசிவிட்டு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சிவனேஸ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரையும் பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். 

    • தமிழ்நாடு மிக மிக பாதுகாப்பான மாநிலம்.
    • தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை எப்படி சுட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

    நெல்லை:

    நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் இல்லை என்பதை கண்டித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அமைச்சர் கே.என் நேரு பதில் அளிக்கையில், நயினார் நாகேந்திரன் புதிதாக தலைவராகி உள்ளார். தேர்தல் வருகிறது. அதற்காக புதிது புதிதாக கண்டுபிடித்து விரதம் இருக்கிறார்.

    தமிழ்நாடு மிக மிக பாதுகாப்பான மாநிலம். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். ஏ.டி.ஜி.பி. குறித்து புகார் வந்தபோது கூட முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நயினார் நாகேந்திரன் ஏதாவது செய்து கொண்டிருப்பார் என்றார்.

    தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் தலை விரித்தாடுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அமைச்சர் கே.என். நேரு பதிலளிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை எப்படி சுட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

    ஒரு சில இடங்களில் ஒரு சிலர் செய்யும் செயல்களை தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு மற்றும் சாதி கலவரம் இல்லாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அனைவரையும் அழைத்துப் பேசி சிறப்பாக ஆட்சியை கொண்டு போய் கொண்டு இருக்கிறார். தேர்தல் வரும்போது தங்களது இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

    பா.ஜ.க. தேர்தலுக்கு அவர்கள் வேலையை செய்கிறார்கள். தி.மு.க. எங்கள் வேலையை செய்கிறோம். நாங்கள் பிடித்த இடங்களை விடுவோமா? விடமாட்டோம். கூடுதலான இடங்களை வெல்வதற்கு நாங்களும் முயற்சி எடுப்போம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எடுக்கும் முயற்சிகளை விட கூடுதலான முயற்சிகளை தி.மு.க. எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார்.
    • அ.தி.மு‌.க.வில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாயில் இன்று காலை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீரானது அடுத்த 138 நாட்களுக்கு அதாவது வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை பாசனத்திற்காக திறந்து விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவின் பேரில் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 10 கிராமங்களில் கிட்டத்தட்ட 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தற்போது இந்த தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்தில் இருந்து இன்று முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஆயிரத்து 13 ஏக்கர் நிலம் 52 குளங்கள் மூலமாக பாசன வசதி பெறும். மீதமுள்ள நிலங்கள் நேரடி பாசன நிலங்களாக இருந்தாலும் கடந்த காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நேரடியாக சென்றதில்லை. இந்த முறை இந்த குளங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இரட்டை இலை சின்னத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு உள்ளார். அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பலர் இருக்கிறார்கள்.

    அவர்களுக்கு கொறடாவும் இருக்கிறார். கொறடா முறைப்படி இது போன்ற புகார்களை எனக்கு எழுதி தர வேண்டும். இதுவரை அ.தி.மு.க.வினர் ஏனோ தெரியவில்லை புகார் மனு எதுவும் என்னிடம் தரவில்லை.

    ஆனாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 10-வது அட்டவணை படியும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் ஒரு சின்னத்தில் வெற்றி பெற்று அந்த சின்னத்திற்கு எதிராக ஓட்டு போட்டாலோ அல்லது இவர்கள் சொல்வது போல் அந்த கட்சிக்கு எதிராக அவரது செயல்பாடு இருந்தாலும் நிச்சயமாக அதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரம் எனது ஆய்வில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
    • 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.

    நெல்லை:

    பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    * ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது.

    * உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    * பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை.

    * சிவகிரி இரட்டைக்கொலை, விடுதியில் பள்ளி மாணவி வன்கொடுமை என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிப்பு.

    * சிவகிரியில் இரட்டைக்கொலையில் பிடிபட்டவர்கள் இதற்கு முன்பு 19 கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

    * 19 கொலைகள் தொடர்பாக இதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா?

    * சிவகிரி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான் குற்றவாளி என்பதில் நம்பிக்கை இல்லை.

    * 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.

    * 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார். 

    • கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
    • முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஆறுமுக செல்வம். இவரது நண்பர் மாரியப்பன்(வயது 25). இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆறுமுக செல்வம் வீட்டின்மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோவில் கொடை விழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    போலீசார் பிடியில் சிக்கியவர்கள் மாரியப்பன், அவரது கூட்டாளிகள் மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த கொம்பையா, பாலசங்கு, வீரவநல்லூர் அருகே உள்ள காருக்குறிச்சியை சேர்ந்த வேல்சாமி பாண்டியன், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதில் கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    அந்த கும்பல் ஆறுமுக செல்வத்தை தீர்த்துக்கட்டுவதற்காக சம்பவத்தன்று அரிவாளுடன் அங்கு வந்ததும், வீட்டின் வெளியே அவர் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா தகராறில் ஆறுமுக செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாரியப்பன் தரப்பினரை பாட்டிலால் தாக்கி உள்ளனர். அப்போது அந்த கைகலப்பு தொடர்பாக போலீசில் புகார் அளிக்க ஆழ்வார்குறிச்சி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாரியப்பன் தரப்பினர் புகார் அளிக்காமல் சென்றுவிட்டனர்.

    இதனால் அவர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்று போலீசார் சந்தேகித்த நிலையில், அன்றைய தினம் இரவிலேயே அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் யாதவர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 58). இவருக்கு இளங்கோ (22), தமிழன் ( 21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அடைச்சானி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தனது நண்பர்களுடன் சென்றனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் இளங்கோவன் தமிழனும் தங்களது வீட்டுக்கு வந்து விட்டனர். அன்று இரவில் சுந்தரம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்ட நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.

    இதில் அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு சுந்தரம் வீட்டின் கதவு மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு சுந்தரம் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து சுந்தரம் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் தகராறு நடந்துள்ளதால் அந்த முன்விரோதத்தில் யாரேனும் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது தொடர்பாக அதில் சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பல்வீர்சிங் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

    இதையடுத்து விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அவரது சஸ்பெண்டு உத்தரவை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொடுங்குற்றம் புரிதல், கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல், ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 14 போலீசார் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    நெல்லை 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மற்றும் போலீசார் இன்று ஆஜராகினார்.

    இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் தரப்பில் ஆஜரான வக்கீல் மாடசாமி, மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற வேண்டும் என முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சத்யாவிடம் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்த கோரிக்கை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் மாடசாமி கூறுகையில், இந்த விவகாரம் முழுவதும் மனித உரிமை மீறல். இதனை மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் நீதிபதி அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். சிறையில் கைதிகளுக்கு மிக பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை. இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    • பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.
    • தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது.

    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதிக்குள் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.

    தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் மணி முத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான நிலையில் 10 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறைந்த நிலையிலும் மாஞ்சோலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 3 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 5 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 9 மில்லி மீட்டரும், ஊத்தில் 6 மில்லி மீட்டரும் இன்று மழை பதிவாகி உள்ளது.

    • வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரியிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. கடந்த 27-ந்தேதி பி.காம் பட்டப்படிப்புக்கான தொழில் சட்டம் எனும் இண்டஸ்டிரியல் லா என்ற பாடத்தின் தேர்வு நடைபெற இருந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு கடந்த 30-ந்தேதி தேர்வு நடைபெற்றது.

    இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ், பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பேட்டை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதேநேரம் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரியிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த வழக்கில் மேற்கொண்டு எவ்வித முன்னேற்றமும் இல்லை.

    இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் பேட்டை போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக எழுத்துப் பூர்வமாகவும் அவரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விரைவில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி கூறுகையில், தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேநேரம் இந்த விவகாரத்தில் 4 மாவட்டங்கள் சம்பந்தப்படுவதால் விசாரிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன.
    • 2-ம் வகுப்பு பெட்டிகளை குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக நெல்லை ரெயில் நிலையம் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டிக்கொடுக்கிறது.

    தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளை தலைநகரான சென்னையுடன் இணைப்பதில் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நெல்லை சந்திப்பு-சென்னை எழும்பூர் இடையே நெல்லை எக்ஸ்பிரசும், செங்கோட்டை-சென்னை எழும்பூர் இடையே பொதிகை எக்ஸ்பிரசும் இருமார்க்கத்திலும் தினசரி இயக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 22 பெட்டிகளை கொண்ட ரெயில்களாகும்.

    இந்த ரெயில்கள் 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-5, 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள்-2 மற்றும் முதலாம் வகுப்பு ஏ.சி. பெட்டி-1 உள்பட 22 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்பட்டு வருகிறது. எப்போதும் இந்த ரெயில்களில் இருக்கைகள் நிரம்பியே இருக்கும்.

    இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகள் தலா 1 குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி-1 இணைக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்த அறிவிப்பு வெளியானதுமே பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனிடையே 2-ம் வகுப்பு பெட்டிகளை ஒருபோதும் குறைக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று தென்னக ரெயில்வேயின் மதுரை போக்குவரத்துப் பிரிவு சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆகஸ்ட் மாதம் ஏ.சி. மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகள் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    தற்போது உள்ளது போல் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்த ரெயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரசின் பெட்டிகளில் அறிவிக்கப்பட்ட மாற்றம் அந்த அறிவிப்பின்படியே நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே சரியில்லை.
    • எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்? என்பதே.

    நெல்லை:

    மதுரையில் இந்த மாதம் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நெல்லை தெற்கு, வடக்கு, தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்பவர்கள் உண்மையான முருக பக்தர்கள் அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

    அமைச்சர் சேகர்பாபு சபரிமலைக்கு போகக்கூடியவர். நல்ல பக்தர். அவர் இருக்கக்கூடிய இடம் சரியில்லை. அதனாலேயே கூடுதலாக பேசி வருகிறார். முருகர் அதை பற்றி கேட்பார்.

    ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே சரியில்லை. குற்றப்பத்திரிகையை சரியாக தாக்கல் செய்தால் தான் நீதி கிடைக்கும். அந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரித்து இருக்க வேண்டும். எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்? என்பதே.

    ஒரத்தநாட்டில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் எல்லாம் ஏன் 157 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படவில்லை.

    காவல்துறை தங்களது பணியை செய்வதே இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறை ஏவல் துறையாக மாறி விட்டது.

    இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கிறது. அந்த மொழி, இந்த மொழி என்று பிரித்து பார்க்க வேண்டிய தேவை இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தான் பா.ஜ.க.வும் விரும்புகிறது.

    சட்டமன்ற தேர்தலில் பெட்டி பெட்டியாக பணம் இறக்குவார்கள் என்று த.வெ.க தலைவர் விஜய் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த முறை தி.மு.க. பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தேர்தலில் தோற்பது உறுதி.

    பென்னாகரம், திருமங்கலம் தேர்தல்களில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். தற்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு தயாராகி வருகிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.

    பா.ம.க.வில் இருப்பது உட்கட்சி பிரச்சனை. அது பற்றி பேச முடியாது. ஆனால் பா.ம.க. எங்களோடு கூட்டணியில் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

    தற்போது ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடந்து வரும் நிலையில் கடந்த 27-ந்தேதி பி.காம் பட்டப்படிப்புக்கான தொழில் சட்டம் எனும் இண்டஸ்டிரியல்லா என்ற பாடத்தின் தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

    இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில் கடந்த 26-ந்தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையர் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு நம்பரில் இருந்து மறுநாள்(27-ந்தேதி) நடக்க இருந்த தொழில்சட்டம் பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், இதனால் அந்த தேர்வினை ரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை பேட்டை போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316 (நம்பிக்கைக்கு மோசடி செய்தல்), 318(ஏமாற்றுதல்), 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3,4 மற்றும் 5(தேர்வில் முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே தேர்வாணையரின் செல்போன் வாட்ஸ்அப்புக்கு வினாத்தாள் அனுப்பிய எண்ணை சோதனை செய்தபோது அது அறிவுச்செல்வன் மதுரை என்ற பெயர் வருவதாகவும், அந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×