என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாஜக பூத் கமிட்டி பணிகளை வலுப்படுத்த தொகுதி வாரியாக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்
    X

    பாஜக பூத் கமிட்டி பணிகளை வலுப்படுத்த தொகுதி வாரியாக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

    • பணிகள் முடிவடையாத பூத்களில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
    • மாநாட்டில் மத்திய உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

    நெல்லை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தனது கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், அதே கருத்துடைய பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வுடன் கை கோர்த்துள்ளது.

    இதனிடையே தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்திடும் பணிகளில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. முழுவீச்சில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இதற்காக அவர் மாவட்டம் தோறும் சென்று பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தமிழகத்தை 7 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்த நிலையில் முதல் மாநாடு நெல்லையில் வருகிற 17-ந்தேதி நடக்கும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி மாநாட்டுக்கான பணிகள் ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 5 பாராளுமன்ற தொகுதிகளிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் செய்து பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

    அதன்படி நேற்று விருதுநகர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பணிகள் முடிவடையாத பூத்களில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

    இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    எந்தவொரு கட்சியின் வெற்றிக்கும் அதன் அடித்தளமாக விளங்கும் பூத் கமிட்டிகள் வலுவாக இருப்பது அவசியம். 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் 17-ந்தேதி நடத்தப்படுகிறது.

    இதில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்காக தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் நேற்று அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி தொகுதிகளில் ஆய்வு செய்தேன். தொடர்ந்து நாளை முதல் மற்ற தொகுதிகளில் ஆய்வு பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

    பா.ஜ.க.வில் 1 பூத்துக்கு 12 கமிட்டி பொறுப்பாளர்கள் வீதம் நெல்லை மண்டலத்தில் 9 ஆயிரம் பூத்களில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டது. வருகிற 17-ந்தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிந்து எப்படியும் 1 லட்சம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இந்த மண்டல மாநாட்டில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அது தொடர்பாக முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×