ஐடி ஊழியர் ஆணவக்கொலை: சுபாஷினியிடம் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.சுபாஷினியிடம் விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
ஐடி ஊழியர் ஆணவக்கொலை: சுபாஷினியிடம் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
Published on

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.

கவின் கடந்த 27-ந்தேதி பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் கொலை நடந்த இடத்தில் இருந்து அவர்களும் விசாரணையை தொடங்கினர்.

இதனிடையே சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 5 நாட்கள் போராட்டத்திற்கு பின் நேற்று கவின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சுபாஷினியிடம் விசாரிப்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இன்று அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரிடம் விசாரித்தால் தான் இந்த கொலைக்கான முக்கிய விபரங்கள் தெரியவரும் என்ற காரணத்தினால் அவரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சுபாஷினி விரும்பும் இடத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com