என் மலர்
தேனி
- விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
இருந்தபோதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 51.71 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 706 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 2223 மி.கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து இரு போக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களான சங்கீதா, ஷஜீவனா, பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாகவும், நீர் இருப்பு 2005 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.60 அடியாக உள்ளது. வரத்து 1200 கன அடி. திறப்பு 862 கன அடி. இருப்பு 3341 மி.கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. வரத்து 403 கன அடி. திறப்பு 112 கன அடி. இருப்பு 1702 மி.கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர்.
- கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் ஏ.புதுப்பட்டி பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கொடைக்கானலில் இருந்து கம்பம் நோக்கி சென்ற கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் 250 கிராம் கஞ்சா, ஒரு பாக்கெட் கஞ்சா சிகரெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காரில் 50 கிராம் எடை கொண்ட 30 மெத்தபட்டமைன் போதை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவரவே அதனை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.75 லட்சமாகும். இதனை தொடர்ந்து காரில் வந்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த விகாஸ் ஷியாம் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த ஆரிப் ராஜா (22), கம்பம் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களுடன் வந்த சல்மான் என்பவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் பெங்களூரில் இருந்து ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்து போதை பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. போதை கும்பல் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்க ளில் தேடுதல்வேட்டை மேற்கொண்டனர். கோவையை சேர்ந்த அன்பழகன் (25), வருசநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் (23), பெங்களூரை சேர்ந்த யாசர் முத்தர் (23) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 25 கிராம் மெத்தபட்டமைன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 6 பேர்களையும் தேனி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம் மெத்தபட்டமைன், 10 கிராம கோகைன், போதை ஸ்டாம்பு, கஞ்சா சிகரெட்டுகள் ஆகியவையும், 2 கார்கள், 5 செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய குற்றவாளி களான நோகன் மற்றும் சல்மான் ஆகியோர் கேரளா மற்றும் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
இந்த கும்பல் கொடைக்கானலில் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எவ்வளவு விலை கொடுத்தும் போதை பொருட்களை வாங்கிவிடுவார்கள் என்பதால் அதுபோன்ற நபர்களை குறிவைத்து இவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி போல பணத்தை செலுத்தியதும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு போதை பொருட்கள் வந்து சேர்ந்துவிடும். இதனால் யாருடைய முகமும் தங்களுக்கு தெரியாது என்று போதை விற்பனை கும்பல் தெரிவித்துள்ளனர். இதன் நெட்ஒர்க் பல மாநிலங்களை கடந்து செல்வதால் மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.
- பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பருவமழை தொடங்கியும் போதிய அளவில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டது.
கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.60 அடியாக உள்ளது. அணைக்கு 1898 கன அடி நீர் வருகிறது.
வைகை அணையின் நீர் மட்டம் 50.20 அடியாக உள்ளது. 928 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
- அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1946 மி.கனஅடியாக உள்ளது.
கூடலூர்:
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.30 அடியாக உள்ளது. அணைக்கு 2469 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் பாசனம் உள்ளிட்ட தேவைக்களுக்காக 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3281 மி.கனஅடிநீர் இருப்பு உள்ளது.
இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. அதனை தொடர்ந்து போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டமும் உயராமல் இருந்தது.
தற்போது கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் லோயர் கேம்ப்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களில் 108 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1113 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 49.64 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் 50 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1946 மி.கனஅடியாக உள்ளது.
கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடிவரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து கை கொடுத்தால் இந்த வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என அவர்கள் நம்பிக்கையுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 30 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.24 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.2, தேக்கடி 6.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கூடலூர்:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.
கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.
கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.
இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
- அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கூடலூர்:
கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
ஆனால் அதனைத் தொடர்ந்து சாரல் மழை மட்டுமே பெய்து வந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
பருவமழை தீவிரம் அடைந்ததால் 2001 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3579 கன அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று முன்தினம் 117.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 118.55 அடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்ததால் 119.90 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணையில் இருந்து நீர் திறப்பு 878 கன அடியில் இருந்து 967 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 87 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.87 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 556 கன அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.32 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 74.8, தேக்கடி 53.4, கூடலூர் 7.8, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 5.8, போடி 1.2, வைகை அணை 0.2, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1, வீரபாண்டி 17, அரண்மனைப்புதூர் 3.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
- மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் ரித்திகா (வயது8) என்பவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி தனது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த வகுப்பறையில் பழுதான மேற்கூரை கட்டிடம் இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் அருகில் இருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த விபரத்தை கேட்டு அழுதபடியே மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிமாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை இடித்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது
- கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று சமர்ப்பித்தது.
அதில் உள்ள முக்கிய பரிந்துரைகள்:
- அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது
- தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்
- குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது
- ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்
- கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
- மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
இந்நிலையில், தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில், சாதி மோதலுக்கு எதிரான சந்துரு குழுவின் அறிக்கையை கிழித்து பாஜகவை சேந்த ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கையில் கயிறு கட்டக்கூடாது என கூறுவது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜபாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
- துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வைச் சேர்ந்த நிபந்தன் என்பவர் வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் முறையிடச் சென்றனர்.
அப்போது துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று தேவதானப்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் 40-க்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியாளர் அல்லாத தனி நபர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன் மீது பொய் புகார் கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் புகார் கொடுத்த நபர் துப்புரவு பணியாளர் அல்லாத நபர் என்றும் நடைபெறாத செயலை சித்தரித்து தனது சுயலாபத்திற்காக பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குரங்கணி மலை கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம் அறிவிக்கப்படாத சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது.
இங்குள்ள குரங்கணி நீரோடை, கொட்டகுடி ஆறுகளில் இருந்து வரும் நீர் மூலம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை காரணமாக குரங்கணி அருவி நீரோடை பகுதிகளில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குரங்கணி அருவி, நீரோடைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்புகின்றனர். கனமழை எச்சரிக்கை காரணமாக எந்த நேரமும் அருவி நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று நிலையில் சுற்றுலா பயணிகள் அருவி நீரோடை இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் முடிந்து வருகின்ற 10ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதன் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் குரங்கணி மலை கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது.
- அணையில் இருந்து பாசனத்திற்காக 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- பெரியகுளம் 28, வீரபாண்டி 1.8, அரண்மனைபுதூர் 7.2, ஆண்டிபட்டி 2.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.
குறிப்பாக ஆண்டிபட்டி, பெரியகுளம், வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட அணைகளுக்கும் மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது. நேற்று 96 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை 201 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. 68 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.11 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 16.4, தேக்கடி 4.4, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 2.2, போடி 7.6, வைகை அணை 63.2, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 21, பெரியகுளம் 28, வீரபாண்டி 1.8, அரண்மனைபுதூர் 7.2, ஆண்டிபட்டி 2.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது.
- தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.
மேலும் தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர் 2022ம் ஆண்டு மேலும் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்த்து ஐவர் குழுவாக மாற்றப்பட்டது.
தற்போது குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.
இந்த குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற 13, 14-ந் தேதிகளில் மத்திய கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளா சந்தேகம் எழுப்பி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. தற்போதும் பரபரப்பான இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக்குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






