என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை அணை திறப்பு"

    • பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
    • சுருளி நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருேக உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கடந்த ஜூன் 15ந் தேதி அணையின் நீர்மட்டம் 61.22 அடியாக இருந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முதல்போக சாகுபடிக்காக 900 கன அடி நீர் வீதம் திறக்கப்பட்டு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் அங்கிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    கடந்த ஜூன் 25ந் தேதி அணையின் நீர்மட்டம் 63.27 அடியாக இருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஆற்றின் வழியாக 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 2ந் தேதி 59.02 அடியாக குறைந்தது. தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மீண்டும் 60 அடிக்கு மேல் உயர்ந்து இன்று காலை 60.81 அடியாக உள்ளது. அணைக்கு 1492 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 9069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3760 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. 1107 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 2062 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5796 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 6.2, தேக்கடி 6.6. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் மேகமலை பகுதியில் உள்ள அணைகளில் 70 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய அணைகளில் தண்ணீர் நிரம்பி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சி அளிக்கிறது. இதனை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    நீர் வரத்து அதிகரிப்பால் இரவங்கலாறு அணையில் இருந்து கீழ்நோக்கி செல்லும் ராட்சத குழாய் மூலம் சுருளி நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    • அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    இருந்தபோதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 51.71 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 706 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 2223 மி.கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து இரு போக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களான சங்கீதா, ஷஜீவனா, பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாகவும், நீர் இருப்பு 2005 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.60 அடியாக உள்ளது. வரத்து 1200 கன அடி. திறப்பு 862 கன அடி. இருப்பு 3341 மி.கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. வரத்து 403 கன அடி. திறப்பு 112 கன அடி. இருப்பு 1702 மி.கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×