என் மலர்
நீலகிரி
- ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார்.
- நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
குன்னூர்:
குன்னூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் பலியானார்கள்.
இந்த விபத்திற்கு மனிதப் பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதில் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் சிக்கி இறந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.
இந்த விபத்திற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின்னர் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின் அடிப்படையிலேயே, பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு மனித பிழையே காரணம் என விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.
- மக்கள் ஓடி வருவதை பார்த்த அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
- போலீசார் ரோந்து மேற்கொண்டு, அந்த மர்மநபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறித்து வைத்து மர்மநபர் ஒருவர் வீடுகளின் கதவை தட்டி வருகிறார்.
மேலும் கதவை திறக்கும் பெண்களின் மீது மிளகாய் பொடியையும் தூவி சென்று வருகிறார். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குன்னூர் வி.பி.தெரு பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டு கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நள்ளிரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் அந்த பெண் அதிர்ச்சியானார்.
சுதாரித்து கொண்ட அந்த பெண் வீட்டின் கதவை திறக்காமல், வீட்டின் மேல் பகுதியில் வசிப்பவர்களை போனில் தொடர்பு கொண்டு, கதவை யாரோ தட்டுகிறார்கள். யார் என தெரியவில்லை என தெரிவித்தார். உடனே அந்த வீட்டில் இருந்தவர், வீட்டின் விளக்கை எரியவிட்டார். இதனால் அதிர்ச்சியான மர்மநபர் அங்கிருந்து ஓடி விட்டார்.
மீண்டும் 1 மணி நேரத்திற்கு பின்பு அதே மர்மநபர், மீண்டும் அந்த பகுதிக்குள் நுழைந்தார். அந்த பகுதியில் குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டின் அருகே சென்ற நபர், அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். இரவில் யார் கதவை தட்டுகிறார்கள் என அந்த பெண்ணும் கதவை திறந்துள்ளார். அப்போது வெளியில் நின்றிருந்த மர்மநபர், தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை, அந்த பெண்ணின் முகத்தில் வீசினார்.
இதனால் அதிர்ச்சியான அந்த பெண் சத்தம் போட்டார். பெண்ணின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வீடுகளை திறந்து வெளியில் ஓடி வந்தனர். மக்கள் ஓடி வருவதை பார்த்த அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள், குன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்குள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் தெருவில் ஒரு நபர் கையில் பையுடன் சுற்றுவதும், ஒரு வீட்டின் அருகே வந்து கதவை தட்டும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை கைப்பற்றி அந்த நபர் யார்? உள்ளூரை சேர்ந்தவரா? அல்லது வெளியூர் நபரா? நள்ளிரவு நேரத்தில் சுற்றி திரியும் அந்த நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இங்கு வந்தரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்ட்மென்ட் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், ஒரு வீட்டின் கதவை வேகமாக தட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன வீட்டில் இருந்த பெண், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது வெளியில் மர்மநபர் நிற்பதை பார்த்ததும், உடனடியாக அருகே உள்ளவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து வெளியில் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தனியாக இருக்கும் பெண்களின் வீடுகளை குறி வைத்து மர்மநபர் கதவை தட்டுவதும், கதவை திறக்கும் பெண்களின் மீது மிளகாய் பொடியை வீசி செல்லும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து மேற்கொண்டு, அந்த மர்மநபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மழையுடன் குளிரும் நிலவுகிறது. நேற்றும் குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழை எதிரொலியாக குன்னூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாதலங்கள் வெறிச்சோடியது.
கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், வாகனங்கள் கூட தெரிவதில்லை. அந்தளவுக்கு மேகமூட்டம் உள்ளது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை கவனமாக இயக்க போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நிலவிய மேகமூட்டத்தால் குன்னூர் மலைப்பாதையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேபோல் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத மரம் விழுந்ததில், டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி பொறியாளர் ஜான்சன் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடும் மேகமூட்டத்தால், குன்னூரில் இருந்து காட்டேரி கிராமத்திற்கு சென்ற பஸ், ஓட்டுனர் பிரேக் போட்டதால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
மேலும் கொலக்கம்பையில் இருந்து மானார், சுல்தானா, பால்மரா, மூப்பர் காடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பழங்குடியின மக்கள் வாகனங்கள் எதுவும் வராததால், தங்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.
இன்று அதிகாலை மலைப்பாதையில் கடும் மேகமூட்டம்நிலவியது. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடந்த 3 நாட்களாக மழையுடன் கடும் குளிரும் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
- தேயிலை தோட்டங்களில் பணியாற்றியவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடியே தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.
- சாரல் மழையுடன் கடும் குளிரும் காணப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரம் பரவலாக மழை பெய்தது. அதனை தொடர்ந்து சில நாட்கள் மழை குறைந்து இருந்தது.
மழை குறைந்தாலும் கடும் நீர்பனியும், மேகமூட்டமும் காணப்பட்டது. பகல் நேரங்களிலேயே கடுமையான பனிமூட்டமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்ணாரபேட்டை, வண்டிச்சோலை, ஆழ்வார்பேட்டை, அட்டடி, பர்லியார், அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
விட்டு, விட்டு மழை தூறல் போட்டு கொண்டே இருந்தது. இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்தது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அவர்கள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.
தேயிலை தோட்டங்களில் பணியாற்றியவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்தபடியே தங்கள் வேலையில் ஈடுபட்டனர். சாரல் மழையுடன் கடும் குளிரும் காணப்பட்டது. குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
குன்னூரில் வருவாய் துறை சார்பில் பேரிடர் மீட்பு குழுவினர், புயல் நிவாரணக்கூடங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. மேலும் தீயணைப்பு, நெடுஞ்சாலை, வனத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உரிய உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்வழுதி ஒலிபெருக்கி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நகராட்சி சார்பில் பாரதியார் மண்டபம், காந்திபுரம், டென்ட் ஹில், வண்ணாரப்பேட்டை, அட்டடி, வண்டிச்சோலை, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று தங்கி கொள்ளலாம்.
முகாமில் தங்குபவர்களுக்கு உணவு, கம்பளி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு, மொட்டுக்காளான் விலை ஏறுமுகமாகவே உள்ளது.
- விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
அதற்கு கூடுதல் முதலீடு தேவை என்பதாலும், சந்தையில் போதிய விலை கிடைக்காதலும் விவசாயிகள் மாற்று விவசாயத்தில் அதிகளவில் ஈடுபடுகிறார்கள். அதன்படி கொய் மலர்கள் சாகுபடி, காளான் உற்பத்தி விவசாயத்தில் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.
குறிப்பாக நீலகிரியில் மொட்டு காளான் வளர்ப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
வங்கிகளில் மானியம் பெற்று தங்கள் நிலத்தில் காளான் உற்பத்தியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். குன்னூர், கேத்தி, குந்தா மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் காளான் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு, மொட்டுக்காளான் விலை ஏறுமுகமாகவே உள்ளது. உள்ளூரில் ஓரளவு விலை குறைந்து இருந்தாலும் வெளியூர்களில், 10 கிலோ கொண்ட ஒரு 'பாக்ஸ்' குறைந்தபட்சம் ரூ.1500 வரை விற்பனையாகிறது.
குன்னூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் மொட்டு காளான் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, ஈரோடு மற்றும் சேலம், கரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட ங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மலை காய்கறி பயிரிடுவதை குறைத்து மொட்டு காளான் உற்பத்திக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது மொட்டு காளான் விலை ரூ.180 முதல் ரூ.250 வரை விற்பனையாகி வருகிறது என்றனர்.
- 2023-ம் ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
- புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஊட்டி:
இந்திய ராணுவ முப்படைத்தளபதியாக இருந்த பிபின்ராவத் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான பகுதியில் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் கடந்த 2023-ம்ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இதில் பிபின்ராவத் உள்ளிட்ட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் அந்த நினைவுத்தூணில் ஆன்மா அழியாதது, அதனை எந்த ஆயுதத்தாலும் துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அழிக்க முடியாது. தண்ணீராலும் ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் உலரப்படுத்த முடியாது என்ற பகவத்கீதையின் வாசகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிபின்ராவத் உள்ளிட்டோரின் 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமான்டண்ட் வீரேந்திரவாட்ஸ் பிபின்ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களும் திரண்டு வந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
- வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.
- தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பகல் 1 மணிஅளவில் அந்த பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், உங்களின் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஊட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றினர்.
தொடர்ந்து மோப்ப நாய்களுடன் வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் அங்குலம்-அங்குலமாக சோதித்து பார்த்தனர்.
ஆனால் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஊட்டி சர்வதேச பள்ளி, குன்னூர் பள்ளி மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்திருந்தது. இதனால் போலீசார் அந்த பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது. தொடர்ந்து போலீசார் மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தினர். பின்னர் இ-மெயிலில் வந்தது பொய்த்தகவல் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மீண்டும் கேத்தி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை யார் செய்கிறார்கள் என்பது குறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் இ-மெயில்கள் வெளிநாடுகளில் இருந்து வருவதால், இதனை யார் அனுப்புகின்றனர், எங்கிருந்து வருகிறது என்பது குறித்த எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதற்கிடையே கேத்தி தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குமுளி, சத்திரம், புல்மேடு, எருமேலி, முக்குழி, சபரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
- பத்தினம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ள போதிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது.
கூடலூர்:
கேரள மாநிலத்தில் 4 மாவட்டங்களுக்கு நவம்பர் 30-ந் தேதி முதல் நேற்று வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்திலும் கனமழை பெய்து பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் எவ்வித சிரமமின்றி சாமி தரிசனம் செய்து திரும்பினர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குமுளி, சத்திரம், புல்மேடு, எருமேலி, முக்குழி, சபரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2ந் தேதி முதல் இந்த பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது கனமழை குறைந்துள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு புல்மேடு பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக புல்மேடு பாதையில் பயணம் செய்வதற்காக சத்திரம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலம் பம்பைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது மண்டல பூஜையின்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் அதனை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரணப்ப டையினர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்து முன் அறிவிப்பு வந்ததும் பம்பையில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் நிவாரண படையினர் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பிறகு புல்மேடு பாதையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஆர்வத்துடன் அதில் பயணம் செய்தனர்.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ள போதிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பக்தர்களை பாதுகாக்க தேவசம்போர்டு சார்பில் சுக்கு உள்ளிட்ட மூலிகை கலந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நடைபந்தல், சன்னிதானத்தில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இந்த மூலிகை குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடும் குளிர் மற்றும் பனியால் பக்தர்களின் உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், புத்துணர்வு ஏற்படவும் மூலிகை குடிநீர் வழங்கப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
ஊட்டி:
சர்வதேச சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து உள்ளன.
கர்நாடக அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர்ப்பூங்கா, ஊட்டி அருகே உள்ள பர்ன்ஹில் பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு சுமார் 38 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக, தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி பூங்காக்களில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதேபோல கர்நாடக அரசு பூங்காவிலும் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்துவதென திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
கர்நாடக அரசு பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆர்கிட், சைக்ளோமன், ரெனன்குலஸ், டியூபெரஸ், பிகோனியா, கிரைசாந்திமம், மேரிகோல்டு உள்ளிட்ட 200 ரகங்களில், 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பசுமைக்குடிலில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக வார நாட்களில் 6 ஆயிரம் மற்றும் வார இறுதி நாட்களில் சுமார் 12 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வரை இந்த பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் கர்நாடக அரசு பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள தொங்குபாலம், மையப் பகுதியில் இருக்கும் மலர் நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வரும் பயணிகளிடம் தலா ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் ஊட்டியின் பல இடங்களிலும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இங்கு 'பார்க்கிங்' கட்டணம் கிடையாது.
இதற்கிடையே ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவருவதற்காக கர்நாடக அரசு பூங்காவில் இந்தாண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி இம்மாதம் 3-வது வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டுமென கர்நாடகா, தமிழக முதலமைச்சர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- இன்று, நாளையும் 2 நாட்கள் மலைரெயில் ரத்து.
ஊட்டி:
வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல், தமிழகத்தை நெருங்கி வந்து, புதுச்சேரியில் கரையை கடந்தது.
புயல் தாக்கம் காரணமாக மலை மாவட்டமான நீலகிரியிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது.
நேற்று மாலை ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் ஊட்டி நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய, கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழைக்கு, ஊட்டியில் ரெயில்வே போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல் ஊட்டி பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள ரெயில்வே பாதையிலும் மழைநீர் அதிகமாக தேங்கியது. பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தார்கள்.
ரெயில்வே பாதையில் தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் காலையில் வேலைக்கு செல்வோர் குடைபிடித்தபடியும், ஜர்க்கின் அணிந்தபடியும் பயணித்தனர்.
ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதுமே பலத்த மழை பெய்தது. காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.
மழையுடன் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரும் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் பயணிப்போர் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களையும் கண்டு ரசித்தனர்.
நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட 3 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார் மற்றும் கொடநாடு பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கூடலூர் பஜார்-73, கொடநாடு-71, கிளைன்மார்கன்-59, அப்பர் கூடலூர்-52, ஊட்டி-40, தேவாலா-39, பார்வுட்-35, கீழ்கோத்தகிரி-33, கேத்தி-32, செருமுள்ளி, வுட் பெரியார் எஸ்டேட்-30, கோத்தகிரி-27.
இதற்கிடையே நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-குன்னூர், குன்னூர்-ஊட்டி இடையே இன்று, நாளையும் என 2 நாட்கள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
- தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நீர்ப்பனி காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன்படி சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் மழை பெய்கிறது.
இதனால் ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப்பாதைகளில் காலை முதல் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் மலைப்பாதையில் செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் தங்களின் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது.
ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் காலைமுதலே சாரல் மழை மற்றும் மேகமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்களின் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கொலக்கம்பை ஆகிய பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் கடும் குளிரும் நிலவிதால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிர்கால ஆடைகள் அணிந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தனர்.
அதிலும் குறிப்பாக குன்னூர் பகுதியில் குளிர் அதிகளவில் இருந்ததால் தொழிலாளர்கள் மாலை 4 மணிக்கே அந்த பகுதியில் தீமூட்டி உடலை கதகதப்பாக வைத்துக்கொண்டனர்.
மேலும் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதால்மலை மாவட்டத்திலும் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
- காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு காட்டுயானை ஒன்று வந்தது. பின்னர் திடீரென தொழிலாளர்களை துரத்த தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர்.
காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில தொழிலாளர்கள் அங்குள்ள மரங்களில் ஏறினர். இதை கண்ட காட்டுயானை அந்த மரங்களின் அடியிலேயே முகாமிட்டு நின்றது. ஆனால் தொழிலாளர்களோ, மரங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை.
பின்னர் அங்கிருந்து யானை சென்று விட்டது. அதன் பிறகு தொழிலாளர்கள் கீழே இறங்கி தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.






