என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள்.
    • அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தொடர்ந்து பேசியதாவது:-

    * உங்கள் அரசவைப் புலவர்கள் யாராவது இருந்தால் கைக்குட்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்.

    * சட்டசபையில் தொடங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் த.வெ.க. மேல்தான் அவதூறு பரப்புகிறார்கள்.

    * நாம் ஆட்சிக்கு வந்தா... அது என்ன வந்தா... வருவோம்... மக்கள் நம்மை கண்டிப்பாக வரவைப்பார்கள்.

    * மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வழிவகை செய்யப்படும்.

    * வீட்டிற்கு ஒரு மோட்டார் வாகனம் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.

    * வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக பாட திட்டத்தை மாற்ற வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும்.

    * வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பை முடித்திருக்க வழிவகை செய்யப்படும்.

    * சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக வைத்து அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். 

    • மணல் திருட்டின் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்து உள்ளனர்.
    • 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

    மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தி.மு.க. தனது கொள்கைகளை அடகு வைப்பதாக விமர்சித்த விஜய் தொடர்ந்து பேசியதாவது:-

    * த.வெ.க.வுக்கு கொள்கை இல்லை என்று சொல்லும் தி.மு.க.வின் கொள்கையே கொள்ளை தானே...

    * விமர்சனம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னரே அலறினால் எப்படி?

    * காஞ்சி மக்களின் உயிரோடு கலந்துள்ளது பாலாறு.

    * பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது.

    * 22.70 லட்சம் யூனிட் மணல் கொள்ளை அடித்து காஞ்சிபுரத்தில் ஜீவநதியான பாலாற்றை அழித்துவிட்டார்கள்.

    * மணல் திருட்டின் மூலம் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்து உள்ளனர்.

    * 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பேருந்து நிலையம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

    * அரசால் வேறு ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையத்தில் கட்டிக்கொடுக்க முடியாதா?

    * பரந்தூர் விவகாரத்தில் விவசாயிகள் பக்கம் தான் த.வெ.க. நிற்கும்.

    * நெசவாளர்கள் வறுமை, கந்துவட்டி கொடுமையால் அவதிபடுகின்றனர்.

    * மக்களை பற்றி யோசிக்கவே தி.மு.க.வினருக்கு நேரம் இல்லை என்றார். 

    • அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?
    • மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்?

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க. தலைவர் விஜய், 'நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே கண்ணா இருந்தார் என எம்.ஜி.ஆர். பாடலை பேசியதாவது:-

    * அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்?

    * மிகப்பெரிய மனவேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

    * தனிப்பட்ட முறையில் தி.மு.க. மீது எந்த வன்மமும் இல்லை.

    * மக்களை பொய் சொல்ல ஏமாற்றி ஆட்சி வந்த தி.மு.க.வை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?

    * மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யார்?

    * த.வெ.க.விற்கு கொள்கையில்லை என பேசுகிறார் தமிழக முதலமைச்சர்.

    * பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா?

    * கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என கூறிய த.வெ.க.விற்கு கொள்கை இல்லையா? என்று பேசி வருகிறார்.

    • இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார்.
    • காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் அவர் தொடங்கினார்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் கடும் வேதனைக்குள்ளான விஜய் தனது பிரசார பயணத்தை தள்ளி வைத்திருந்தார்.

    ஒரு மாதம் கழித்து உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

    இதன் பின்னர் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தும் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இருப்பினும் விஜய் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறாமலேயே இருந்து வந்தன. பொது இடத்தில் விஜய் மக்களை சந்தித்து பேசினால் அதிகம் பேர் திரண்டு வருகிறார்கள். இதற்கு உரிய அனுமதி பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு விஜய் உள் அரங்கில் மக்களை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதன்படி காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடன் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதற்காக சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள கூட்ட அரங்கில் உள் அரங்கு நிகழ்ச்சியாக விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இன்று விஜய்யை சந்தித்து பேசுவதற்காக 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

    இவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணியில் இருந்தே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். விஜய்யை சந்திக்க வருபவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.

    இதன்படி தங்களது செல்போன் மூலமாக கியூஆர் கோடை ஸ்கேன் செய்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே விஜய்யை சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வந்த பொது மக்களை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார். இதற்காக இன்று காலையிலேயே கூட்டம் நடைபெறும் கல்லூரிக்கு அவர் வருகை தந்து முன்னேற்பாடுகளை மேற்கொண்டார்.

    கரூரில் செப்டம்பர் 27-ந்தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் பொதுமக்களை சந்திக்காமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் 55 நாட்களுக்கு பிறகு விஜய் மீண்டும் இன்று மக்களை சந்தித்தார். இதற்காக காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இதனை தொடர்ந்து இதுபோன்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலமாக தேர்தல் வியூகங்களையும் வகுத்து உள்ளார். இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்கி உள்ளனர்.

    • கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்களை த.வெ.க. நிறுத்தியது.
    • QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க.வினர் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அதில், நுழைவுச் சீட்டு வைத்துள்ள 2000 பேருக்கு மட்டுமே உள்ளே அனுமதி என கட்சித் தலைமை அறிவுறுத்தியது. அதன்படி, நிகழ்வுக்கு நுழைவுச் சீட்டு வைத்துள்ளவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதற்காக ஜேப்பியார் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வலர்களை த.வெ.க. நிறுத்தியது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியை தொண்டரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    பாதுகாப்பு கருதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதாலும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் த.வெ.க.வினர் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. 

    • தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
    • சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.

    வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    • தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும்.
    • காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருமண வீடு என்றாலே அங்கு காஞ்சிபுரம் பட்டுக்கு தான் முதல் மரியாதை. மணமகள், மணமகன் குடும்பத்தினர் அனைவருமே பட்டு ஆடைகளை உடுத்தி புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பார்கள்.

    அதிலும் மணமகள் அணியும் பட்டுச்சேலையானது அசல் தங்கம், வெள்ளி ஜரிகைகளுடன் புத்தம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும். மணமகள் அணியும் முகூர்த்த பட்டுச்சேலையின் அழகை திருமணத்துக்கு வரும் பெண்கள் அனைவருமே பார்த்து ரசிப்பார்கள். வியக்கவும் செய்வார்கள்.

    இந்த பாரம்பரிய புடவைக்கு அழகு சேர்ப்பது தங்கம், வெள்ளி ஜரிகைகள் தான். ஆனால் தங்கமும், வெள்ளியும் கடந்த 2 மாதங்களாகவே வரலாறு காணாத விலை உயர்வை கண்டுள்ள நிலையில், அதன் தாக்கம் காஞ்சிபுரம் பட்டுச்சேலையிலும் எதிரொலித்து வருகிறது.

    இதன் விளைவு காஞ்சிபுரம் பட்டுச்சேலையின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதாவது அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் இப்போது ஏழைகளுக்கு காட்சி பொருளாக மாறி விட்டது.

    காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் பயன்படுத்தப்படும் ஜரிகையின் அளவை பொறுத்து அதன் விலை அதிகரித்து உள்ளது. காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சேலை 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் தாமிரம் மற்றும் 24 சதவீதம் பட்டு நூல்கள் இருக்கும்.

    தற்போது தங்கம் விலை சவரன் ரூ.90 ஆயிரத்தையும், வெள்ளி கிலோ ரூ.1.65 லட்சத்தையும் தாண்டி விற்பனையாகிறது. பட்டுச் சேலை ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவை குறைக்க முடியாததால் அதன் விலை அதிகரித்துள்ளது.

    இதற்கு முன்பு ஜரிகை கிலோ ரூ.85 ஆயிரமாக இருந்தது. அது இப்போது ரூ.1.35 லட்சமாக அதிகரித்து விட்டது. ஒரே வருடத்தில் கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் உயர்ந்துள்ளது.

    குறைந்த அளவிலான ஜரிகைகள் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த சேலைகளின் விலை தற்போது ரூ.20 ஆயிரமாக அதிகரித்து விட்டது. அதிக ஜரிகைகள் கொண்ட பட்டுப்புடவை விலை ஏற்கனவே ரூ.2 லட்சத்துக்கும் மேல் விற்கப்பட்டது. இந்த சேலைகள் விலை தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளன.

    திருமணங்கள் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளின் போது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவருமே பட்டுச்சேலை அணிவது நமது பாரம்பரியங்களில் ஒன்றாகும். ஆனால் இப்போது திருமண நிகழ்ச்சிகளை வைத்திருக்கும் ஏழை குடும்பத்தினரால் மிக குறைந்த ஜரிகைகள் கொண்ட பட்டுச்சேலைகளையே வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக ஜரிகைகளை கொண்ட பட்டுச் சேலைகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு விலை அதிகமாக தெரிகிறது. இதனால் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பட்டுச் சேலைகளை வாங்க பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகளை விற்பனை செய்யும் கடைகள் 1000-க்கும் மேல் உள்ளன. மேலும் அங்குள்ள பல வீடுகளிலும் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன.

    தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் என்பதால் அப்போது பட்டுச் சேலைகள் விற்பனை களை கட்டும். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பட்டுச் சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருகிறார்கள்.



    மேலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பட்டுச்சேலைகள் வாங்க காஞ்சிபுரத்துக்கு வருவது உண்டு. அவர்கள் பல லட்சம் செலவு செய்து பட்டுச் சேலைகளை வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது பட்டுச் சேலைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சேலை வாங்க வருபவர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட விலை கொண்ட பட்டுச் சேலைகளை வாங்குவதை தவிர்க்கிறார்கள். மேலும் குறைந்த விலை கொண்ட சேலைகளையே தேர்வு செய்து வாங்குகிறார்கள். மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே சேலைகளை வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பட்டுச்சேலை விற்பனையும் குறைந்து வருகிறது.

    பட்டுச்சேலை விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தங்கத்தின் விலை உயர்வு பட்டுத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். இதனால் இப்போதே பல தொழிலாளர்கள் வேறு தொழில்களை நோக்கி செல்லத் தொடங்கி விட்டனர். இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்து செல்ல முடியாது என்பதால் பட்டுத்தொழில் மிகவும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கி உள்ளது.

    தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிலர் மட்டுமே ஆதாயம் அடையலாம். ஆனால் இந்த விலை உயர்வானது பலரது வாழ்வாதாரத்தையே அழித்து விடும் என்பதற்கு பட்டுத் தொழில் ஒரு சாட்சியாக கண்முன் வந்து நிற்கிறது.

    இனி வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலையானது கட்டுக்குள் இருந்தால் மட்டுமே பட்டுத்தொழிலும் தொடர்ந்து நடைபெறும். தங்கம், வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்தால் அது காஞ்சிபுரம் பட்டுத் தொழிலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    • நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.
    • மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

    சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனினும் புதிய விமான நிலையத்திற்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர். கடந்த ஜூலை 9-ந்தேதி பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் தங்கள் நிலங்களை, முதன்முதலாக விமான நிலைய திட்டத்திற்கு வழங்கினார்கள்.

    கடந்த செப்டம்பர் மாத வரையிலான கணக்கீட்டின்படி, 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் அக்டோபர் மாதம் இறுதியிலான கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இதற்காக இழப்பீடு தொகையாக, 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்திற்கு தேவையான மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • பிரியதர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
    • பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார்.

    பூந்தமல்லி:

    மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது 2½ வயது மகள் பிரணிகாஸ்ரீ. பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை பிரிய தர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பிரிய தர்ஷினியை வீட்டின் வெளியே வந்து தேடியபோது அருகில் உள்ள காலி மைதானத்தில் தேங்கி இருந்த மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக மகளை மீட்டு மலையம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை பிரணிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வீட்டில் தாயுடன் தூங்கியபோது எழுந்த பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாங்காடு போலீசார் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை பிரணிகா ஸ்ரீ உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    தொடர் கனமழை காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன

    காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ. 12 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ரூ. 16 கோடி உபயதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

    திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஆன்மீகவாதிகளில் பொற்காலம் எனப் போற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களைக் கணக்கெடுத்து, இதுவரை 3707 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மன்னர்கள் விட்டுச் சென்ற திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன.

    ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்து 65% நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் முக்கிய திட்டமான தங்க முதலீடு திட்டத்தின் மூலம், இறைவனுக்குத் தேவைப்படாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலுக்கு அனுப்பி வைத்து, இதுவரை 1074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 17 கோடி வைப்பு நிதி வருவாயாகப் பெறப்படுகிறது. தற்போது நான்கு திருக்கோவில்களில் இருந்து 53 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 கோயில்களில் இருந்து 308 கிலோ தங்கம் இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. உபயதாரர்களிடமிருந்து இந்த ஆட்சியில் சுமார் ரூ. 1512 கோடி நிதி வந்துள்ளது என்றும், இது வேறு எந்த ஆட்சியிலும் வரவில்லை.

    காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்வதாகவும், இது இந்து அறநிலையத் துறைக்கு இழுக்கான சூழலை ஏற்படுத்தவில்லை, அவர்களுக்குத் தான் இழுக்கான நிலை ஏற்படுகிறது.

    எனவே, பிரச்சனை செய்யாமல் இரு பிரிவினரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

    சமயபுரம் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியவர் நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

    மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளது.

    இந்நிலையில், கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

    சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×