என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா என்பது பழனியில் `தீர்த்தக்காவடி' என அழைக்கப்படுகிறது.

    அதாவது கோடை வெயில் உக்கிரமாக உள்ள பங்குனி, சித்திரை மாதங்களில் நவபாஷாணத்தால் ஆன பழனி முருகப்பெருமானை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு ஆகும். குறிப்பாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வருவார்கள்.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா, கடந்த 18-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து வழிபட்டு வருகின்றனர். விழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள், தீர்த்தக்காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மதியம் 11.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தனித்தனி தேர்களில் எழுந்தருளிய விநாயகர், அஸ்திர தேவருக்கு தீபாராதனை நடைபெற்று தேர் இழுக்கப்பட்டது.

    தொடர்ந்து பெரிய தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    தேரோட்டம்

    பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது. அதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனையடுத்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்ற சரண கோஷம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    • வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் `தீர்த்தக்காவடி திருவிழா' என அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனி சிறப்பு வாய்ந்தது. அதாவது கோடை காலமான பங்குனி, சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இந்த காலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு ஆகும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மாலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப் பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து, மண கோலத்தில் சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளினார். முன்னதாக திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிதேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேர்பவனி தொடங்கியது. சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதிகள் வழியாக சென்று நிலை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

     திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், காவடி சுமந்தும் ஆடிப்பாடியும் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து வருவது அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளக்கவி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி என்பதே கிடையாது. குண்டும், குழியமான மலைச்சாலையில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.

    மேலும் குடிநீருக்காக பெண்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

    எங்கள் கோரிக்கையை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ ஊராட்சி தலைவர், யூனியன் தலைவர் என அனைவரிடமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள். எனவே இந்த முறை கண்டிப்பாக புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனர்.

    இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

    • பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    நிலக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வத்தலக்குண்டு அருகே பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரைக்கு வந்த வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து டிரைவர் நடராஜன் (வயது 34), மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கமலநாதன் (49) ஆகியோரிடம் விசாரித்த போது மதுரையில் உள்ள 3 நகை கடைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அப்போது நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    பறக்கும்படை சோதனையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
    • பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பழனி கோவிலுக்கு ரெயிலில் வருகை தந்தார். மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல பழனி ரெயில்நிலையம் வந்தபோது கேரளாவை சேர்ந்த 3 பேர் பழனி ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்துள்ளனர். அவர்களை ஏற்கனவே கேரளாவில் பார்த்திருந்த முருகேசன் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தார். அதன்பின் சொந்த ஊருக்குச் சென்ற அவர் கேரள மாநில டி.ஜி.பி.க்கு பழனி ரெயில் நிலையத்தில் நடந்த விபரங்கள்குறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தார்.

    பின்னர் அங்கிருந்து தமிழக டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் சுனில்குமார், பழனி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சேர்ந்து வெடிகுண்டு உள்ளதா என்று சோதனை மேற்கொண்டனர்.

    பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், குப்பை தொட்டி, கடைகள், ரெயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடுத்துவரும் 3 நாட்களுக்கும் தொடர் சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    மொகாலி:

    ஐ.பி.எல்.போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மொகாலியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் 14 மாதங்களுக்கு பிறகு களம் இறங்குகிறார். முழு உடல் தகுதியுடன் இருக்கும் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10-வது இடத்தை பிடித்தது. தற்போது ரிஷப் பண்ட் வருகையால் டெல்லி அணியின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். பஞ்சாப் அணி கடந்த சீசனில் 8-வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.

    இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் தலா 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது.

    இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    சொந்த மண்ணில் கொல்கத்தா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெல்லும் வகையிலும் சவால் கொடுத்து விளையாடும்.

    இரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய போட்டியில் கொல்கத்தா 5 ரன்னில் வெற்றி பெற்றது. 

    • பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம்.
    • குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற குருவி வடிவிலான மலர்கள் தற்போது அதிக அளவில் பூத்துள்ளது. மேலும் இந்த பூ பார்ப்பதற்கு குருவி போன்ற தோற்றம் கொண்டு இருப்பதால் குருவிப்பூ என (குரெட்டலேரியா) என அழைக்கபடுகின்றது.

    மேலும் இந்த பூவானது மரத்தில் மலரக்கூடியதும், மரத்தில் உள்ள கிளையில் குருவி அமர்ந்து 2 பக்கம் இறக்கையை விரித்து பறப்பது போலவும் இயற்கையாக அமைந்துள்ளது.

    மேலும் இந்த பூவின் அடி பகுதியில் மகரந்த தாள் பகுதி நூல் போன்று அமைந்துள்ளதை பிடித்து இழுக்கும் போது குருவி தனது தலையை ஆட்டுவது போல இருப்பது இந்த பூவின் விசேஷமாகும்.


    இந்த பூவின் நடுப்பகுதியில் தேன் இருந்தும், அதனை தேனீக்கள் எடுக்கமுடியாதவாறு இதழ்கள் மூடி காணப்படுவதால் தேனை எடுக்கமுடியாமல் தேனீக்கள் ஏமாற்றமடைகிறது.

    மேலும் இவ்வகையான அபூர்வ வகை குருவி மலர்கள் தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்குகின்றன. இதனையடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் இந்த பூக்களை கண்டு ரசிப்பதுடன் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
    • தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டராக உள்ள சுரேஷ் பாபுவிடம் 2 தவணைகளாக ரூ.40 லட்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    அதன் பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த 20-ந் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் அங்கித் திவாரி சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது.

    அந்த உத்தரவில் திண்டுக்கல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அப்போது அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியாமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் அங்கித் திவாரியின் பெற்றோர் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வந்தனர். அதனுடன் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இடைக்கால நிபந்தனை ஜாமீன் நகலையும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து விரைவில் அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

    • காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    திண்டுக்கலில் நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது.

    பாபா ஆசியுடனும், பக்தர்களின் பேராதரவுடனும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதானம் கூடம் திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா வருகின்ற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    • தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
    • வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு, கோழி, சேவல் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    பெரும்பாலும் ஆடு, கோழிகள் வாங்குவதற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகை தருவதுண்டு. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிக அளவு பணம் சந்தைக்கு கொண்டு வர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. பங்குனி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஆடுகள் பலியிடப்படும்.

    மேலும் ரம்ஜான் பண்டிகைக்காகவும், தேர்தலுக்காக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும் ஆடுகள் அதிக அளவு விற்பனையாகும் என நினைத்து ஏராளமான செம்மறி, வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டன. மெயின் ரோட்டில் வழியாக வராமல் புறவழிச்சாலையில் உள்ள கிராமப்புறங்கள் வழியாக அதிக அளவு வாகனங்கள் சந்தைக்கு வந்தன.

    தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.8000 வரை விற்கப்பட்டது. விதவிதமான சேவல்களை கிராமப்புறங்களில் வளர்த்து வரும் வாலிபர்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ரூ.3000 முதல் ரூ.30000 வரை சேவல்கள் விற்பனையாகின. தேர்தல் சமயத்தில் ஆடு, கோழிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகுமோ என்று விவசாயிகள் கவலையடைந்த நிலையில் அதிக அளவு கால்நடைகள் எதிர்பார்த்த விலைக்கு விற்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது.
    • மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நத்தம்:

    திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொண்டு வருபவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நத்தம் வேம்பரளியில் தேர்தல் பறக்கும்படை சார்பில் இன்று சோதனை நடத்தப்பட்டு வந்தது. அப்போது மதுரையில் இருந்து நத்தம் நோக்கி காரில் வந்த ஒரு நபரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அந்த காரில் ரூ.1,27,780 பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லை. மதுரை கடச்சநேந்தலைச் சேர்ந்த மாரிமுத்து என்ற அந்த நபர்தான் ஒரு காய்கறி வியாபாரி என்றும் மொத்தமாக மதுரையில் இருந்து காய்கறிகள் வாங்கி விற்று வருவதாகவும் தெரிவித்தார். இருந்தபோதும் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). விவசாயி. இவருக்கு பிரியதர்ஷினி (வயது 15), சுரபிகா (8), ராஜேஸ்குமார் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களில் பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கருப்பசாமி தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று நடந்த பிளஸ்-1 தேர்வுக்காக மாணவி பிரியதர்ஷினி படித்துக் கொண்டு இருந்தார். தனது தந்தையின் மரணச் செய்தி கேட்டதும் கதறி அழுதார். அவரது வகுப்பு ஆசிரியர் கண்ணபிரான் மாணவிக்கு ஆறுதல் கூறி தைரியமாக தேர்வு எழுத செல்லுமாறு கூறினார்.

    வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி பிரியதர்ஷினி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ×