search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவி
    X

    தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவி

    • பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
    • வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 42). விவசாயி. இவருக்கு பிரியதர்ஷினி (வயது 15), சுரபிகா (8), ராஜேஸ்குமார் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களில் பிரியதர்ஷினி பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியே கருப்பசாமி தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று நடந்த பிளஸ்-1 தேர்வுக்காக மாணவி பிரியதர்ஷினி படித்துக் கொண்டு இருந்தார். தனது தந்தையின் மரணச் செய்தி கேட்டதும் கதறி அழுதார். அவரது வகுப்பு ஆசிரியர் கண்ணபிரான் மாணவிக்கு ஆறுதல் கூறி தைரியமாக தேர்வு எழுத செல்லுமாறு கூறினார்.

    வீட்டில் தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவி பிரியதர்ஷினி உயிரியல் தேர்வை எழுதி விட்டு திரும்பினார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×