என் மலர்
திண்டுக்கல்
- குகேஷ் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை.
- விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கூடலூர்:
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த குகேஷ் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். இதன் மூலம் இளம்வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவரது சாதனையை கவுரவிக்கும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சிற்பி இளஞ்செழியன் என்பவர் தர்ப்பூசணியில் குகேஷின் உருவத்தை வரைந்துள்ளார். இந்தியாவின் இளம் வயது செஸ் சாம்பியனுக்கு வாழ்த்துக்கள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இளஞ்செழியனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இவர் ஏற்கனவே அப்துல்கலாம், இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை தர்ப்பூசணியில் செதுக்கி பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பலக்கனூத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி அதே ஊரைச் சேர்ந்த 7 வயது முதல் 10 வயது வரை உள்ள 7 சிறுமிகளை தேர்வு செய்து அவர்களை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு சப்தகன்னிகளாக 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை சப்தகன்னிமார் தெய்வங்களாக பாவிக்கப்பட்டு, மஞ்சள் உடை அணிவித்து கையில் காப்பு கட்டி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
பின்னர் சிறுமிகள் கோவிலில் தங்க வைக்கப்பட்டு சுவாமிகளுக்கு பூஜை நடத்துவது போன்று அவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விழாவின் 7ம் நாளான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஊர் எல்லையில் இருந்து சப்த கன்னிகளான 7 சிறுமிகளை நெய் விளக்கு ஏந்தி மேள தாளம் முழுங்க ஊர்வலமாக முக்கிய வீதியின் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டது.
அதை தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக ஆழி வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு சப்த கன்னிமார்கள் 7 சிறுமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு குருசாமிகள் வீரப்பன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சுவாமி ஐயப்பன் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அக்கரகாரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 34). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அக்கரகாரப்பட்டியில் நிலக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். பின்னர் கடையில் 4 உளுந்த வடை மற்றும் 3 பருப்பு வடை பார்சல் வாங்கினார்.
அந்த வடைகளை தனது அக்காள் அழகு ராணியிடம் ஜெயபிரகாஷ் கொடுத்தார். இதையடுத்து அழகு ராணி மற்றும் அவரது குழந்தைகள் 3 உளுந்த வடைகளையும் சாப்பிட்டனர். தொடர்ந்து பருப்பு வடையை எடுத்து 2 ஆக அழகுராணி பிரித்தார். அதற்குள் இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அழகுராணி மற்றும் குழந்தைகள் வாந்தி எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் டீ கடையில் வாங்கிய ஒரு வடையில் பிளேடு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே நிலக்கோட்டை பகுதியில் உள்ள டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
கொடைக்கானல்:
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடந்த 3 தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சாரமும் அதிக நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் மலைச்சாலையின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகரின் பல பகுதிகளில் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய டோபிகானல் பகுதி வழியாக ஓடும் நீரோடையில் நட்சத்திர ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் அதிகமாக வெளியேறுவதாலும் தொடர் மழையாலும் அதிகமான நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால் இப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள வீட்டில் தங்கி இருப்பவர்கள் முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை நேரத்தில் மழை அளவு குறைந்து கடும் பனிமூட்டம் நிலவியது.இதனால் நகரின் பல பகுதிகளில் அதிகமான பனிமூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
மேலும் நீண்ட நேரம் இப்பனிமூட்டம் நீடித்தது.நட்சத்திர ஏரிப்பகுதியில் சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகமாக காணப்பட்ட பனிமூட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
நட்சத்திர ஏரியை ஒட்டிய நடைமேடையில் கேரள கல்லூரி மாணவிகள் பனிமூட்டத்தை ரசித்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். மிக நீண்ட நேரம் நீடித்த பனிமூட்டத்தை ஏரிச்சாலையை சுற்றி வந்த சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் நகர் பகுதியில் அவ்வப்போது பனிமூட்டத்துடன் கூடிய லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.இன்று காலை மேகமூட்டம் கூட இல்லாமல் வெயில் தலை தூக்கி உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும்.
- ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பெட்டி நாயக்கன்பட்டியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த அய்யாவு (வயது75) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் எவ்வாறு எடுத்துச் செல்வது என்று தெரியாமல் விழித்தனர். இவர்கள் மயானத்திற்கு உடலை எடுத்து செல்லும் பாதையில் உள்ள சுரங்கத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருந்தது. இன்று காலையும் இடைவிடாமல் மழை பெய்ததால் வேறு வழியின்றி பெட்டி நாயக்கன்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக இடுப்பளவு தண்ணீரில் உடலை தூக்கி பிடித்து ஆற்றைக் கடப்பது போல் கடந்து சென்றனர். பின்னர் திண்டுக்கல்-திருச்சி சாலை ஓரம் உள்ள தங்களது மயானத்தில் வைத்து இறுதிச்சடங்கை செய்தனர்.
இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு, கோவிலூர், பாளையம், அய்யலூர் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீரை ரெயில்வே துறை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நின்றாலும் அந்த தண்ணீர் பல நாட்கள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
- கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடந்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில்காடு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். மேலும் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மலைக்கிராமப்பகுதியில் இருந்து மூங்கில்காடு பகுதிக்கு செல்ல விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும்.
பலமுறை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு முடிவுக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்மலை கிராம பகுதியில் கீழான வயல் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை கடந்து செல்வதில் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதேபோல் கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வீடுகளில் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டாலும் முறையான சாலை பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நள்ளிரவு மிக கனமழையாக பெய்த நிலையில் காலையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதே போல் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனிடையே பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் விழுந்த பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் வாகனங்கள் மறு உத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் சிறு வாகனங்கள் மட்டும் எச்சரிக்கையுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- நாடு மிகப்பெரிய ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளது.
- ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் அரசியல் சக்திகள் எதிர்த்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மணிக்கூண்டில் கடந்த 22.2.2016-ம் தேதி மக்கள் நல கூட்டணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் உள்பட ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 12 பேர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதனை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 4 மாதத்திற்குள் முடித்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் இன்று திண்டுக்கல் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் சவுமியா மேத்யூ முன்பு வைகோ உள்பட 12 பேர் ஆஜரானார்கள். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பின் கோர்ட்டுக்கு வெளியே வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தற்போது நாடு மிகப்பெரிய ஆபத்தான சூழலை எதிர்கொண்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை பா.ஜ.க. கொண்டுவர திட்டம் தீட்டி வருவதால் அமெரிக்காவை போல அதிபர் ஆட்சிக்கு அடிகோலும் செயலை முன்னெடுத்துள்ளனர். வாரணாசியில் நடந்த இந்துத்துவா மாநாட்டடில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாட்டில் அமுல்படுத்த நினைக்கின்றனர்.
சிறுபான்மையின மக்களான கிறிஸ்தவர், முஸ்லீம், ஜெயினர்கள் ஆகியோரின் வாக்குரிமையை பறிக்கும் நிலையை கொண்டுவர துடிக்கின்றனர். இதனை ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் அரசியல் சக்திகள் எதிர்த்து வருகின்றனர். இருந்தபோதும் இதுகுறித்து வலுவான போராட்டம் தேவை.
தற்போது கடுமையான மழை வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டதற்கு பா.ஜ.க. இன்னும் நிதி வழங்கவில்லை. அதற்குள் மற்றொரு மழை வெள்ளம் மக்களை மிரட்டி வருகிறது. குஜராத்தில் ஒரு மீனவர் இறந்தால் அதற்கு ராணுவமே செல்கிறது. ஆனால் தமிழகத்தில் மீனவர்களுக்கு தினந்தோறும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி ஒதுக்குவதிலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நிதியை சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும்.
வாஜ்பாய் காலத்திலேயே பொது சிவில் சட்டம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் அதனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு அதனை நிறைவேற்ற துடித்து வருகிறது. ஜனநாயகத்திற்கு ஆபத்தாக விளங்கும் இதுபோன்ற சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கி வருகிறோம்.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாளை 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
- கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.
பழனி:
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 7-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலையில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, யாகசாலை, தங்கரதம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று வந்தன.
6ம் நாளான இன்று சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது மூலவர் சன்னதியிலும் கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.
நாளை கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4.30 மணியளவில் சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலைக்கு சென்ற பின்பு பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுதலும், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறும்.
சொக்கப்பனை ஏற்றப்படுவதால் நாளை தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை திருக்கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. அதன் பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மலைக்கோவிலுக்கு செல்ல யானைப்பாதையையும், கீழே இறங்குவதற்கு படிப்பாதையையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
- 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணி தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறையினர் 2 லாரிகளில் 4 யூனிட் எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொண்டு சென்றனர்.
வல்லக்கடவு சோதனைச்சாவடியில் கேரள வனத்துறையினர் லாரிகளை தடுத்து நிறுத்தி அணைப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். கடந்த 3 நாட்களாக பல்வேறு விவசாய சங்கங்கள் லோயர் கேம்பில் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம், பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்தினர்.
ஆனால் கேரள அரசு இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லாரிகளை அனுமதிக்காததால் 4 நாட்களாக சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கேரள அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லாரியின் டிரைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் வல்லக்கடவு பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக அணை பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக செல்லும் தளவாட பொருட்களை இத்தனை நாட்கள் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் அனுமதித்திருக்க வேண்டும்.
ஆனால் 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது. எனவே இன்று மாலைக்குள் தளவாட பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை அணை பகுதிக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
- சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர்.
- மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
கொடைக்கானல்:
மதுரை மேலக்கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது உறவினர் மகாலெட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சசிகுமார் மகாலெட்சுமி மீது கொண்ட காதல் மோகத்தால் நாடு திரும்பினார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றுலா சென்று வந்துள்ளனர். உறவினர்கள் இவர்களை சந்தேகப்படவில்லை. இந்த நிலையில் மகாலெட்சுமி தனது கணவரிடம் நகை கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் மகாலெட்சுமியை தேடினார்.
இந்நிலையில் மகாலெட்சுமி தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடைக்கானலில் உள்ளேன் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து கொடைக்கானலுக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பு சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர். அதன்படி விஷ மருந்தை மகாலெட்சுமி மட்டும் குடித்துள்ளார். ஆனால் சசிகுமார் அதனை குடிக்காமல் வெளியே வீசினார்.
மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மகாலெட்சுமி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளக்காதலன் சசிகுமாரை தேடி வருகின்றனர்.
- திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்த ரெயில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் நின்றது.
- வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திறக்கப்படாததால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் (வண்டி எண் 20665) வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்டது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். இந்தநிலையில் இரவு 7.45 மணி அளவில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை, வந்தே பாரத் ரெயில் வந்தடைந்தது.
அப்போது ரெயிலில் உள்ள தானியங்கி கதவுகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஆனால் சி 4, சி 5 ஆகிய 2 பெட்டிகளின் கதவுகள் மட்டும் திறக்கப்படவில்லை. மற்ற கதவுகள் தானாக திறக்கப்பட்டது. அந்த பெட்டிகளில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கிச்சென்றனர். ஆனால் சி 4, சி 5 ஆகிய பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் மட்டும் திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் ரெயில் பெட்டிக்குள்ளேயே தவித்தபடி நின்றனர்.
5 நிமிடங்களுக்கு மேலாகியும் கதவுகள் திறக்கப்படாததால் அந்த பெட்டியில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர், ரெயில் என்ஜின் டிரைவரை தொடர்புகொண்டு பேச முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகர தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகளில் ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
இதற்கிடையே திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்த ரெயில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் நின்றது. தொடர்ந்து பயணிகளிடம் பேசிய டிக்கெட் பரிசோதகர், திண்டுக்கல் ரெயில் நிலையத்தைவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் ரெயில் கடந்து வந்துவிட்டது. எனவே கொடைரோடு ரெயில் நிலையத்தில் உங்களை இறக்கிவிட்டு, தூத்துக்குடியில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் ரெயிலில் கட்டணம் இன்றி திண்டுக்கல்லுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் இரவு 8.10 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தை அடைந்தது. வழக்கமாக கொடைரோடு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லாது. ரெயில் பெட்டியில் சிக்கிய பயணிகளுக்காக நேற்று கொடைரோடு ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரெயிலில் இருந்து இறங்கியவர்களில் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் மட்டும் வாடகை காரில் திண்டுக்கல் சென்றார். மற்ற 11 பேரையும், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்றி ரெயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அவர்கள் இரவு 9.15 மணிக்கு திண்டுக்கல்லை வந்தடைந்தனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திறக்கப்படாததால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.






