என் மலர்
சென்னை
- அகரம் பவுண்டேஷனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான்.
- நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது என சூர்யா தெரிவித்தார்.
சென்னை:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இதில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பேசியதாவது:
நான் சினிமாவிற்கு வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. உங்களின் இந்த அன்பு இருந்தால் போதும் எப்பொழுதுமே நான் நன்றாக இருப்பேன்.
வாழ்க்கை எப்போதுமே அழகானது. வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையை நம்பினால் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்பு வரும்போது அதை தவற விட்டு விடாதீர்கள்.
அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் தான் வாய்ப்பு வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொண்டால் எல்லாருமே ஜெயிக்கலாம். அனைவருக்குமே அழகான வாழ்க்கை இருக்கும்.
நடிகராக இருந்த என்னை ஜெயிக்க வைத்து அகரம் என்ற பவுண்டேஷனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான். நான் தனி ஆளாக செய்யவில்லை.
நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது. தற்போது அகரம் பவுண்டேஷன் மூலம் 10 ஆயிரம் தம்பிகள், தங்களை பட்டதாரி ஆகி இருக்கிறார்கள். இன்னும் பல பேர் இதன்மூலம் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
ரெட்ரோ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
- ஜனாதிபதி உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
யார் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது என்றும் ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன.
எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொது விவாதத்தில் வலதுசாரி கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது, கவர்னர்கள், துணை ஜனாதிபதி, அவ்வளவு ஏன் மாண்புமிகு ஜனாதிபதி உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது. ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக நியமிக்கப்படுபவர்களால் அரசு நடத்தப்படக்கூடாது. இதையே நமது சுப்ரீம்கோர்ட்டும் சுட்டிக்காட்டி உள்ளது,
வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்த சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
- பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
ஜி.எஸ்படி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுவதால், மேற்படி பணி நடைபெறும் 2004 2025 முதல் 2204.2025 வரை மூன்று நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
போக்குவரத்து மாற்றம்:
தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நத்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
மேலும் காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையிலிருந்து ஒரு வழி பாதையாக இருக்கும். அண்ணாசாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை. மேலும் அண்ணாசாலையில் இருந்து செனடாப் 1வது தெருவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் செனடாப் 1வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.
கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும்.
அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு. அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சீரான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
- சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டது. தற்போது ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது அதனுடன் சேர்த்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது தொடக்க விழா நடத்தப்படவில்லை.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட 14 புதிய புறநகர் ரெயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அப்போதும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது. தற்போது சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என கூறினர்.
இந்நிலையில், நாளை முதல் தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் 29 கிமீ பயணத்திற்கு ரூ.95 ஆகவும், 9 கிமீக்கு ரூ.35 ஆகவும், 24 கிமீக்கு ரூ.70 ஆகவும், 34 கிமீக்கு ரூ.95 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
- எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!
2026-லும் #DravidianModel ஆட்சிதான் என்றும் தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு!
தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…
எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!
2026-லும் #DravidianModel ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு.
- தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில், 466 கி.மீ. நீளத்திற்கு குழாய் அமைக்கப்படும் நிலையில் 260 கி.மீ. ஆணைய பகுதிகளில் வருகிறது. ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
- கல்லூரி மாணவர்கள் மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கருத்து.
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் குற்ற நடவடிக்கைகள் நடப்பது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
- இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
- நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து அலுவலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ செல்லம் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்து பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபரால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
- நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன.
நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது.
முன்னதாக விசாரணையின்போது," நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நியோ மேக்ஸ்-க்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ரூ.600 கோடி சந்தை மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது.
- மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூா், ராஜம்பேட்டை, கா்நாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, தினசரி சுமாா் 100 டன் அளவுக்கு எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் எலுமிச்சை பழத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களாக எலுமிச்சை பழங்களின் வரத்தும் பாதியாகக் குறைந்துவிட்டது. (வியாழக்கிழமை)நிலவரப்படி 5 லாரிகளில் 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை திடீரென 2 மடங்காக அதிகரித்துள்ளது.
இதன்படி, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மழைக்காலம் தொடங்கும் வரை இந்த விலை உயா்வு மேலும் அதிகரிக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.
- பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- பஸ்களை திருப்புவதற்கும், பஸ் நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களில் செல்ல விரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் நடந்து ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது பொருட்கள், பெரிய பைகளுடன் வரும் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதால் பலரும் கால்டாக்ஸியை நாடுகின்றனர்.
எனவே விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மாநகர பஸ்களை அனுமதித்து இதற்காக தனியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பஸ்கள் விரைவில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகர பஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பயணிகளின் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். விமான அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மாநகர பஸ்கள் விமான நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்கு தயாராக உள்ளோம். ஆனால் பஸ்களை திருப்புவதற்கும், பஸ்நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன. இது சரிசெய்த பின்னர் மாநகர பஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் என்றனர்.






