என் மலர்tooltip icon

    சென்னை

    • திருச்சியில் வருகிற 31அம் தேதி பேரணி நடைபெற இருந்தது.
    • மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என திருமாவளவன் அறிவிப்பு.

    திருச்சியில் வருகிற 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    "மதச்சார்பின்மை காப்போம்" என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.

    • மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிய இது ஒன்றும் மானங்கெட்ட அடிமை அதிமுக ஆட்சி அல்ல.
    • தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு.

    பொழுது விடிந்தால் திமுக அரசுக்கு எதிராக எந்த அவதூறைப் பரப்பலாம் எனப் பித்தாலாட்ட அரசியல் செய்யவதையே முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார் பித்தலாட்ட பழனிசாமி.

    கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்.

    தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பதில் திராவிட மாடல் அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் எடுத்துவரும் நடவடிக்கைகளினால் பள்ளிக் கல்வியில் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்திறனை அண்மையில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதம் சொல்லும்.

    தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்யும் திட்டங்களால் இன்றைக்கு அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74 விழுக்காடாக உயர்ந்து வரலாற்றுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 விழுக்காட்டைத் தொட்டுச் சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.

    இந்தச் சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடனும் வயிற்றெரிச்சலுடனும் செயல்படும் தமிழர் விரோத ஒன்றிய அரசுக்கு எரிச்சலூட்டுவதில் ஆச்சரியமில்லை. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய 2152 கோடி ரூபாயை ஒதுக்குவோம் என மிரட்டியது ஒன்றிய அரசு. மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிய இது ஒன்றும் மானங்கெட்ட அடிமை அதிமுக ஆட்சி அல்ல. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு. அந்தத் தொகையையும் மாநில அரசே ஏற்கும் என அறிவித்து மாணவர்களின் கல்வி உரிமையைக் காத்து நின்றது.

    தமிழ்நாட்டிற்கு எப்படியாவது நெருக்கடியைத் தந்து தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி கனவை சிதைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை தராமல் இழுத்தடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இது குறித்துப் பல்வேறு நிலைகளில் வலியுறுத்திய போதும் தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் அளித்துள்ள போதும் அமைதிக்காத்து தனது தமிழ்நாட்டிற்கு எதிரான தனது சதியை நடத்திக் கொண்டிருக்கிறது.

    இந்த ஆதிக்கத்தைக் கேள்வி கேட்க துப்பில்லாத பாஜகவின் எடுபிடி எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு அரசைக் குற்றம் சுமத்தி அவதூறு பேசியிருக்கிறார்.

    தரங்கெட்ட தறுதலை மொழியில் பச்சைப் பொய்களை அறிக்கையாக வெளியிட்டால் அவை உண்மையாகிவிடாது என்பதை அறியாமல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் எனும் பொறுப்பிற்குக் கொஞ்சமும் தகுதியற்ற முறையில் பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் தொடைநடுங்கி பழனிசாமி.

    முதலமைச்சரின் தலைமையில் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு வரலாற்றில் இல்லாத வகையில் நிதியை ஒதுக்கி சாதனைப் படைத்திருக்கிறது.

    தமிழ்நாட்டிற்குரிய கல்விநிதியை ஒதுக்காமல் மாணவர்களின் கல்வி உரிமையைச் சிதைக்கத் துடிக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் கேள்விக் கேட்க முடியாமல் தொடைநடுங்கிக் கிடக்கும் துரோகி. பழனிசாமிக்குத் துணிவிருந்தால், உண்மையில் மாணவர்களின் நலனில் அக்கறை இருந்தால் ஒன்றிய அரசை நோக்கி கேள்வி கேட்கட்டும்.

    "அமைச்சர் பெயர் முக்கியமல்ல, செயல்தான் முக்கியம்!" எனத் தனது ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பெயர் கூடத் தெரியாமல்தான் விளையாட்டுத் துறை செயல்பட்டது என ஒத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    இன்றைக்கு விளையாட்டுத் துறையில் இந்தியாவை அல்ல உலகத்தையே ஈர்க்கிற வகையில் புகழ்பெற்றிருக்கிறது தமிழ்நாடு. இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 2021-2022 ஆம் ஆண்டில் 225.62 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்ட நிதி ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து நடப்பு ஆண்டிற்கு 572 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை வலுவாக்கி தமிழ்நாட்டு இளைஞர்களின் திறனை உலகத் தரத்திற்கு வளர்த்து வருகிறது திராவிட மாடல் அரசு.

    விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு, இந்தத் திட்டத்தில் பயன்பெறுகிற பயனாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இன்றைக்குத் தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலகளவில் பல்வேறு பதக்கங்களை ஆண்டுதோறும் வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால் மாண்புமிகு துணை முதலமைச்சரின் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் உயர்தரத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளும்தான் காரணம்.

    இன்றைக்கு உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள மாநிலமாகத் தமிழ்நாடே விளங்குகிறது.

    இச்சாதனைகளால்தான் இந்திய தொழில் கூட்டமைப்புச் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாமல் சீர்கெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி விளையாட்டு மேம்பாட்டுத் துறையைப் பற்றியெல்லாம் பேசலாமா?

    தனது ஆட்சியையே தமிழ்நாட்டு உரிமைகளைப் பாஜகவிடம் அடகு வைக்கும் அடிமை விளையாட்டாக நடத்திய துரோகி பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது.

    பாஜகவின் அடிமைகளிலேயே தான் தான் சிறந்த அடிமை எனக் காட்டுவதற்காகப் பழனிசாமி நடத்தும் இந்தக் கோமாளித் தனங்களைக் கேலிக் கூத்துகளாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் மற்றுமொரு படுதோல்வியைப் பரிசாகத் தந்து பழனிசாமியின் பித்தலாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் காத்திருக்கிறார்கள்.

    • திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
    • மின்தடை ஏற்பட்டு தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு.

    நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 4ம் தேதி நடைபெற்றது.

    நீட் தேர்வின்போது மின்தடை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    மின்தடை காரணமாக குறைந்த வெளிச்சம், மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் மாற்று இடத்திற்கு சென்றதால் சிரமம் ஏற்பட்டது என்றும் இதனால் முழுமையாக நீட் தேர்வை எழுத முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

    மே மாதம் 4ம் தேதி அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து 4.15 வரை மின்தடை ஏற்பட்டு தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீட் மறுதேர்வு கோரிய மனு குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு) முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார்.
    • பலத்த காயங்களுடன் தந்தை சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை பாடி மேம்பாலம் அருகே லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கீழே விழுந்தனர்.

    இதில், பிரியா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பிரியா தலை நசுங்கி உயிரிழந்தார்.

    மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தை கரோலின் பலியான நிலையில், தந்தை சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.
    • அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.

    சென்னை:

    வீட்டு வசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறு வனத்தின் தலைமை அலு வலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.

    இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடை பெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

    இந்த சோதனைகளின்போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.

    பல அமலாக்கத்துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ராமச்சந்திரன் மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேவூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரன் இல்லம் மற்றும் அவரது மகன் இல்லத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி அவர்களையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

    டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலின்-க்கு

    பயத்தை உருவாக்கியிருக்கிறது, பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.

    டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து மு.க.ஸ்டாலின், மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?

    பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை

    அசைத்து கூட பார்க்க முடியாது. இவை அனைத்தையும் நிச்சயம்

    சட்டரீதியாக எதிர்கொள்வோம். வெல்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும்.

    இதனைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால், இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் நேற்று முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள் :-

    * தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    * தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.

    * விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலம் (மருதம்) (வர்டானா) மொழிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.

    இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ்க்கண்டவற்றை நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.

    * விண்ணப்பதாரரின் 4 கருத்துருக்களை தமிழ்-2. ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.

    * பக்கம் எண்ணுடன் கூடிய உள்ளடக்க அட்டவணை.

    * விண்ணப்பதாரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2

    * இணைப்பு-படிவம் I & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

    * தைரியம் மற்றும் துணிச்சலுடன் மேற்கொண்ட அனுபவத்தை பற்றி ஒரு பக்கம் எழுத்து விளக்கம்.

    * படிவம்-I மற்றும் II முழுமையாக நிரப்பப்பட வேண்டும் (தமிழில்-மருதம் எழுத்துரு, ஆங்கிலத்தில்-வர்டானா எழுத்துரு)

    எனவே, அனைத்து மாவட்டங்களிலும், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிட ஏதுவாக, இணைய தளத்தின் மூலம் வருகின்ற 16-ந்தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்.
    • அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமான மூல வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு அரசின் மது வணிக நிறுவனமான டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த இரு நாட்களாக நடத்தி வரும் சோதனைகளில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மது கொள்முதல், ஒப்பந்தம் வழங்குதல் போன்றவை தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இவற்றுக்கு காரணமான மூல வழக்குகளை விசாரணையின்றி ஒழித்துக்கட்ட ஆட்சியாளர்கள் முயல்வது கண்டிக்கத்தக்கது.

    டாஸ்மாக் நிறுவனத்திற்கான போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களை பணியிடமாற்றம் செய்ய கையூட்டு வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட வழக்குகளை தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு பதிவு செய்துள்ளது. அவற்றின் அடிப்படையில் தான் டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணம் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது.

    மார்ச் மாதம் நடத்திய சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், ஆட்சியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட பலரது வீடுகளில் மே 16-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகனுடன் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் வாட்ஸ்-ஆப் மூலம் நடத்திய தகவல் பரிமாற்றத்தில் எந்த நிறுவனத்தின் மது வகைகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய வேண்டும்; யாருக்கு பார் ஒப்பந்தம் வழங்க வேண்டும்; வாகன ஒப்பந்தம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனரும் முழுமையாக செய்து முடித்ததற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் நிறுவன செயல்பாடுகளில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய தரகர்களின் தலையீடு இருந்திருக்கிறது; ஊழல்கள் நடந்திருக்கின்றன என்பதற்கு இவையே சான்று.

    டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனரின் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்தப்படும் சோதனைகளில் தொடர்ந்து பல ஆவணங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மேலாண்மை இயக்குனரிடம் அமலாக்கத்துறையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அவரது வீட்டிலும், அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் டாஸ்மாக் ஊழல்கள் குறித்து மேலும் ஏராளமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிவதற்குக் காரணமாக இருக்கும் டாஸ்மாக் நிறுவனம் தான் அரசுக்கு காமதேனுவாக பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. அரசுக்கு மட்டுமின்றி, ஆட்சியாளர்களுக்கும் பணம் காய்க்கும் மரமாக திகழ்வது டாஸ்மாக் தான் என்பதை அண்மைக்காலமாக வெளியாகி வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு மாறாக டாஸ்மாக்கை ஊழல் சுரங்கமாக மாற்றியிருப்பதுடன், அதில் சம்பந்தப்பட்டவர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    டாஸ்மாக் ஊழலை மூடி மறைக்கும் நோக்குடன் அது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று மூடி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, சில வழக்குகள் மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றால், அதை தமிழக அரசு துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், டாஸ்மாக் ஊழல் வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு தொடக்கம் முதலே முட்டுக்கட்டை போட்டு வருகிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு வழக்கு நடத்தியது. ஆனால், தமிழக அரசின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டப்பூர்வமானது தான் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது. அதனால், இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியில்லாததால், அமலாக்கத்துறை சோதனைக்கு காரணமான மூல வழக்குகளை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

    டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள்; அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.
    • 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

    சென்னை அடுத்த கவுல் பஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்ற பீகாரை சேர்ந்த ஜியா குமாரி, 10-ம் வகுப்பில் மொத்த மதிப்பெண் 467-ம், தமிழில் 93 மதிபெண் எடுத்து அசத்தி உள்ளார்.

    இது தொடர்பாக மாணவி ஜியா குமாரி கூறுகையில், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

    * பள்ளியில் கோச்சிங் சிறப்பாக இருந்தது. தினமும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது.

    * 'நான் முதல்வன் திட்டம்' என்னை மிகவும் கவர்ந்தது.

    * சொந்த ஊர் பீகார். படிப்பிற்காக இங்கு வந்தோம். என்னுடைய ஆசிரியர்கள் தமிழில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவினார்கள்.

    அதனால் தான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்தது.

    * வீட்டில் அனைவரும் இந்தி தான் பேசுவோம். அப்பாவிற்கு தமிழ் தெரியாது. அம்மாவிற்கு தமிழ் தெரியும்.

    * 17 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்தோம். ஆரம்பத்தில் தமிழ் படிக்க கடினமாக இருந்தது. போக போக தமிழ் பழகி விட்டது.

    * அதிக மார்க் எடுக்க ஆசிரியர்களும் உதவி செய்தார்கள்.

    * பள்ளியில் வழங்கிய புத்தகம், ஷூ, நான் முதல்வன் திட்டம், சிஜி வகுப்பு உதவியாக இருந்தது.

    * 11-ம் வகுப்பில் பயோ மேக்ஸ் எடுத்துட்டு, நீட் தேர்வு எழுதி டாக்டர் ஆக வேண்டும்.

    * அப்பா வெல்டிங் வேலை செய்கிறார்கள்.

    * தமிழ்நாட்டில் இருந்துதான் நாம் ஏதாவது ஆக வேண்டும் என்றும், graduate, doctor ஆன பிறகு தான் ஊருக்கு போகணும் என்றும் அப்பா சொல்லி இருக்கிறார்கள். அம்மா மெடிக்கல் கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.

    * பீகாரில் education குறைவாக இருந்ததால் இங்கே வந்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி ஜியா குமாரியின் பேட்டி வெளியான நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை! என்று தெரிவித்துள்ளார்.

    • 20-ந்தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
    • கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4நாட்களுக்கான கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கோவை, நீலகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    20-ந்தேதி கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது அதிகாலை வேளையில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    • காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

    பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.
    • தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

    * உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு கண்டனம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் விஜிலென்ஸ் பதிவு செய்த வழக்குகளை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு.

    * எந்த ஆதாரமும் கிடைக்காததால் ரூ.1,000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    * வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது.

    * அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் அரசு எப்போது துணை நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×