என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே காணப்படுகிறார்க்ள்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.
    • தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்று சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் வரலாற்றில் புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,805-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-09-2025- ஒரு கிராம் ரூ.137

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    29-08-2025- ஒரு கிராம் ரூ.131

    • காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது.
    • வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.

    காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.

    இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பருவகால மாற்றம் காரணமாக இன்புளூயன்சா வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் தான் அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது. மருத்துவ சிகிச்சை தேவை. இதேபோல, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிந்து செல்வது நல்லது. ஆனால், கட்டாயம் கிடையாது. வெளியே சென்று வந்த உடன் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
    • மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது.

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நூதன முறையில் கடத்தி வரப்பட்ட கொகைனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சுமார் ரூ.60 முதல் 70 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ கிராம் கொகைன் எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

    சந்தேகம் வராமல் இருக்க, Ferrero Rocher என்ற பிரபல வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்டு பெட்டிகளில் கடத்தி கடத்தி வரப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முதற்கட்ட விசாரணையில் கடத்துவரப்பட்ட கொகைன், மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள கொகைன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது. 

     அண்மையில் இதேபோல் வெளிநாட்டு சாக்லேட் போர்வையில் டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 5.4 கிலோகிராம் கோகைன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.
    • எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல்.

    மக்கள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தியவுடன், அதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.

    இன்று இந்தியாவில் மோடி அரசு என்றால் அது வாக்குத் திருட்டின் சின்னம். மக்களால் நேசிக்கப்படாததால் தேர்தலில் நேர்மையாக வெல்ல முடியாத அரசுதான் பா.ஜ.க. அரசு. சதி, வஞ்சகம், வாக்குத்திருட்டு என்ற மூன்று தூண்கள்மேல் தான் இந்த அரசு தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதன் தோல்வியையும் பயத்தையும் மறைக்கவே ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் என்ற சிரிக்கத்தக்க பொய்க்குற்றச்சாட்டு பவன் கெரா மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உண்மையை வெளிப்படையாகச் சொன்ன காங்கிரஸ் தலைவர்களை மௌனப்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம்.

    ஆனால் இந்த நாட்டின் மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டார்கள். வாக்குத் திருடனை வாக்குத் திருடன் என்றுதான் அழைப்போம். எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, பவன் கெரா அவர்களுடன் உறுதியுடன் நிற்கிறது. மோடி எத்தனை தந்திரங்கள் செய்தாலும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் காங்கிரசின் போராட்டம் இன்னும் தீவிரமாவதே தவிர தளராது என பதிவிட்டுள்ளார் .

    • நேரடி தேர்வுக்கு எதிராக மேல்முறையீடு.
    • இந்த வழக்கில் தமிழக அரசு, பணி நியமனம் வழங்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தங்களுக்கு சேர வேண்டிய 2% ஒதுக்கீடு இல்லாமல் நியமன ஆணை வழங்கக் கூடாது என ஆசிரியர் அல்லாதோர்  முறையீடு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையில் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அனுமதி அளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி, 2500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில், ஆசிரியர்கள் அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்காமல், நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமனம் வழங்கக் கூடாது என அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2500 பேருக்குப் பணி நியமனம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. மேல்முறையீட்டாளர்கள் தரப்பில், "தனி நீதிபதியின் இடைக்காலத் தடையால் 2500 பேரின் பணி நியமனம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்கி, அவர்களுக்குப் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

    தமிழ்நாடு அரசின் தரப்பில், "நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாகப் பணி நியமன உத்தரவுகளை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர். பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றம்.
    • 40 வாக்குறுதிகள் பரிசீலனைஉயில் உள்ளதை அமைச்சர்கள் விளக்கியுள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சோவி செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.

    இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வர் காலை உணவு திட்டம் (#CMBreakfastScheme), நான் முதல்வன் (#NaanMudhalvan), புதுமைப்பெண் (#PudhumaiPenn), தமிழ் புதல்வன் (#TamilPudhalvan) போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் (#ElectionManifesto) குறிப்பிடப்படாதவை!

    முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!

    Accessibility, Accountability, Transparency, Inclusivity, Responsibility, Sustainability இதுதான் தி.மு.க.!

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? 'சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' கதை தானா?

    2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யுரைத்து வந்த நிலையில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில், விடியல் எங்கே? என்ற ஆவணத்தை தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் வெளியிட்டேன்.

    அந்த ஆவணத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளை பட்டியலிட்டிருந்தேன். வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருந்த நான், அவற்றையும் அந்த நூலில் பட்டியலிட்டிருந்தேன். அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது; எந்த அளவுக்கு செயல்படுத்தப் படவில்லை என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன். அதை திமுக அரசால் மறுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சக அமைச்சர்கள் இருவருடன் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

    மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை" என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்; அதைத் தவிர வேறொன்றுமில்லை. வாக்குறுதிகளின் எண்ணிக்கையை மட்டுமே அமைச்சர் தெரிவித்தாரே தவிர, அவற்றின் பட்டியலை வெளியிட வில்லை. இதிலிருந்தே பா.ம.க.வின் குற்றச்சாட்டுக்கு திமுகவிடம் பதில் இல்லை என்பதை அறியலாம்.

    அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளாக கருத முடியும்? என்று தெரியவில்லை. அமைச்சர் கூறுவதைப் போல 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூட தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு வெளியிட்டு இருந்திருக்கலாம். செய்யாத சாதனைகளையே செய்ததாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, யாருக்கும் பயனற்ற அரசாணை பிறப்பித்திருந்தால் கூட அதைக் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்யவில்லை.

    ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் வீசப்பட்டதைப் போல, பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை எல்லாம் கூவம் ஆற்றிலும், அடையாறு ஆற்றிலும் திராவிட மாடல் அரசு வீசி விட்டதோ, என்னவோ தெரியவில்லை.

    ஒருவேளை அரசாணைகளே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும் தான் அது நிறைவேற்றப்பட்டதாக பொருள் ஆகும். அரசாணைகள் எனப்படுபவை ஏட்டுச் சுரைக்காய்கள் தான்.

    அவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுவதைப் போல அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றபட்டவையாக கருத வேண்டும் என்றால், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, "சீனி சக்கரை சித்தப்பா.... ஏட்டில் எழுதி நக்கப்பா" என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் இருக்குமே தவிர மக்களுக்கு பயன்படாது.

    திமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன? என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். 2021-ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், 221 வாக்குறுதியாக, 'மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும்" என்று கூறப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

    அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மின்துறை அமைச்சரிடம் கேட்ட போது, அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்திர மின் கட்டண வசூல் நடைமுறைக்கு வரும் என்று பதிலளிக்கிறார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு தான் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை. ஏன் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கேட்டால் ஸ்மார்ட் மீட்டரை காரணம் காட்டுவார்கள்.

    திமுக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே தொடரும் என்ற நிலையில், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பது தெரியவில்லை. இப்படியாக திமுக அரசின் அனைத்து விளக்கங்களுமே, "அத்தைக்கு மீசை முளைத்தால்" என்ற ரீதியில் தான் உள்ளன. அத்தைக்கு ஒரு போதும் மீசை முளைக்காது; திமுக அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதேபோல், திமுகவால் இனி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது தான் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும்.

    நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்; தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

    • திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 4 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வந்தார்.
    • அவரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய குழந்தைகளின் கல்விக்கான நிதி 2152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

     

    இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் செந்தமிழன், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஏ ஜி சிதம்பரம் வர்த்தக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சக்தி கண்ணன், தணிகாசலம், நல்லமணி, பெர்னட் ஜான்சன், தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜராஜேஸ்வரி, உமா, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

    • ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி.
    • அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்.

    சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என்ற வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

    • செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
    • ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இருப்பினும் சில மாதங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த சலசலப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பிரிந்து சென்றார்.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு அ.தி.மு.க. பிளவே காரணம் என கூறப்பட்டது. இதன்பின்னர் அ.தி.மு.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முயன்றும் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்க முடியாது என கூறிவிட்டார்.

    இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்தார். இதன்பின், ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பேசி வருவதாக கூறப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசுவேன். அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும் பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க. வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரிந்துள்ளவர்கள் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எது எப்படியோ... அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை... எதிரி இல்லை என்கிற வகையில் வருகிற சட்டசபை தேர்தல் வரை தமிழ்நாட்டு அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை!

    • சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும்.

    சென்னை:

    சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புரசைவாக்கம் பிளவர்ஸ் தெருவில் வசித்து வரும் அரவிந்த் என்பவர் வீட்டுக்கு இன்று காலையில் 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை மாநகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாநிலங்களில் மருந்து நிறுவனத்தை நடத்தி வந்த இவர் சென்னையிலும் அதனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த சோதனையின் முடிவில் தான் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×