என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
    • கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர்.

    செங்கல்பட்டு:

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 22-ந்தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகினர். 

    • 7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
    • 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது.

    7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. 2-வது அலகில் மட்டும் மின்உற்பத்தி நடந்து வந்தது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த அலகில் 220 மெகாவாட் மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ந்தேதி 2-வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்" என்றனர்.

    • வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக காலையில் பனி மூட்டத்துடன் மழை பெய்வது போன்று பனித்துளி பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர்.

    மதியம் ஆனதும் வழக்கம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.

    இந்த காலநிலை மாற்றத்தால் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு செல்ல சிரமமாக உள்ளதாகவும், மீன்களின் வரத்தும் கடலில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் இடம், வாகன நிறுத்தும் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து செல்லும் வண்ணம் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.
    • தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர், ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார். மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாற்று திறனாளி 2 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தொழில் கடன் உதவி, குடியிருப்பு வீட்டிற்கான கிரையபத்திரம் பெயர் மாற்றம், பெயர் திருத்துதல், சொத்து வரி உட்பட 100 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ. கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக அருண்ராஜ் உள்ளார். இவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார்.

    இவருக்கும் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறவினரான மேகநாதன் - ஜெயந்தி தம்பதியரின் மகளான டாக்டர். கவுசிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உற்சவ மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவில் உற்சவர் மண்டபத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    திருமண விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் இரு வீட்டார் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசுதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

    கலெக்டர் அருண்ராஜ்-டாக்டர் கவுசிகா திருமண வரவேற்பு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெற உள்ளது. திருமணத்தையொட்டி திருப்போரூர் முருகன் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் கோவில் வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
    • பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.

    மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாமல்லபுரத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளை மாமல்லபுரத்துடன் இணைக்கும் பணிகள் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துக்களின் கணக்கெடுப்பும் நடந்து வருகிறது.

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உடைய "யுனஸ்கோ" அங்கீகாரம் பெற்ற சர்வதேச சுற்றுலா நகர பகுதி என்பதால், அதன் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    • மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.
    • பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகரத்தின் முக்கியமான பகுதியான அண்ணாநகர் பகுதியில் மாமல்லபுரம் செல்லும் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியை அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் மேலமையூர் மற்றும் திருமணி ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தின் கீழ் பகுதிவழியாக சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பகுதி தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது. பாலத்தின் அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள்.

    இதனால் அந்த இடம் தற்போது இரவு நேர மதுபாராக மாறி உள்ளது.

    தினந்தோறும் மதுபோதையில் மோதல் சம்பவமும் நடந்து வருகிறது. போதை நபர்கள் பயன்படுத்திய காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் குப்பை கழிவுகள் அங்கேயே அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. அந்த இடமே குப்பை கிடங்குபோல் மாறி உள்ளது.

    பகல் நேரங்களிலும் பாலத்தின் கீழ் பகுதியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதால் அவ்வழியே செல்லும் பொது மக்கள், பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்த வெளிபாராக மாறி உள்ளதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இன்ஸ்டன் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
    • சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 1330 மாணவ, மாணவியர்களை வைத்து திருவள்ளுவர் உருவம் அமைக்க அன்பு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் முடிவு செய்தது.

    இதையடுத்து 1330 மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து திருவள்ளுவர் உருவத்தை பள்ளி அருகே திறந்தவெளி மைதானத்தில் வடிவமைத்தது.

    இதனை "இன்ஸ்டன்" உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து அதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அரசு பள்ளிக்கு அதற்கான சான்றிதழையும் வழங்கியது.


    அதில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.பி செல்வம் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நளினி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் சேர்மன் அரசு, அறக்கட்டளை தலைவர் பாபு, ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்திற்குள் தங்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார குடியுரிமை வேண்டும்.
    • மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், சமூக ஆர்வலர் மேத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென்பகுதி கடலோரத்தில் பல ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட இருளர்கள் தற்காலிக குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களுக்கு குடியிருப்பு வசதி, ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய வசதிகள் இன்றி குடும்பத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் இன்று முதல் முறையாக 76வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து குடில் குடியிருப்பு வாசிகளும் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் தேசியக்கொடி ஏற்றினர்.

    பின்னர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்திற்குள் தங்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார குடியுரிமை வசதிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.

    மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், சமூக ஆர்வலர் மேத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சென்னை மறைமலைநகரில் 42 -வது வணிகர் தினம் 7-வது மாநிலமாநாடு நடைபெற உள்ளது.
    • மாநாடு வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும்.

    சென்னை:

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் த.ரவி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மே.5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மறைமலைநகரில் 42 -வது வணிகர் தினம் 7-வது மாநிலமாநாடு நடைபெற உள்ளது. சென்னை மறைமலைநகர் நகராட்சி திடலில் மிகபிரமாண்டமாக இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்து உள்ளோம்.

    "வணிக விரோத சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு" என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும்.

    இதற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். வணிகர் நலன் கருதி இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு கொளத்தூர் த.ரவி கூறினார்.

    • கடம்பாடி ஊராட்சி பொதுமக்கள் வனத்துறை, மற்றும் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.
    • போலீசார் தேக்குமரங்களை வெட்டி கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலகுப்பம் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு ஊராட்சி சார்பில் தேக்கு, பனை, தென்னை, மாமரம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வைத்து வளர்க்கப்பட்டது. இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்த நிலையில் இருந்தன. இந்த மரங்கள் ஏராளமான மயில்கள் உள்ளிட்ட பறவைளுக்கு வாழ்விடமாகவும் இருந்தது. இந்த நிலையில் இங்கிருந்த சுமார் 500 தேக்கு மரங்களை நள்ளிரவில் மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.

    தற்போது அங்கு தேக்குமரக்கிளைகள் மட்டும் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்கிருந்த சுமார் 100 மயில்களும் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடம்பாடி ஊராட்சி பொதுமக்கள் வனத்துறை, மற்றும் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் தேக்குமரங்களை வெட்டி கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருக்கழுகுன்றம் தாசில்தார் ராதா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் புஷ்ப ராஜ், கிராம நிர்வாக அதிகாரி நரேஷ் ஆகியோர் வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இப்பகுதியில் மனைப்பிரிவு விரிவாக்கம் செய்வதற்காக இந்த மரங்களை மர்ம நபர்கள் வேரோடு வெட்டி சாய்த்து உள்ளனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    ×