என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே பிறந்து 50 நாட்களான குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர்-டாக்டர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி - குண்டவெளி பகுதி காவெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 26). இவரது மனைவி மீனா (22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 3-வதாக கர்ப்பமடைந்த மீனாவுக்கு மீன்சுருட்டி சுகாதார நிலையத்தில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் ராமராஜ் - மீனா தம்பதியினர் தங்களது உறவினரான கடலூர் மாவட்டம் வடலூர் குறவர் தெருவை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்து விடலாம் என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து கார்த்தி வடலூர் நாயுடு தெருவைச் சேர்ந்த சித்தா டாக்டர் மெகபூர்னிசா (60), அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி (57) ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கோவை ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (40)-புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்து இருந்தனர். அவர்களது உறவினரான கோவையை சேர்ந்த அய்யாமோகன் என்பவரை மெகபூர்னிசா, சாரங்கபாணி இருவரும் தொடர்புக் கொண்டு குழந்தையை ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர். அந்த பணத்தில் ராமராஜ் - மீனா தம்பதியினரிடம் ரூ.80 ஆயிரத்தை மட்டும் மெகபூர்னிசா, சாரங்கபாணி கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் மீன்சுருட்டி சுகாதார நிலைய மருத்துவர்கள் குழந்தைக்கு 45-வது நாள் தடுப்பூசி போடுவதற்கு ராமராஜ் - மீனா தம்பதியினர் கொண்டு வராததால் டாக்டர்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட குழந்தையை கேட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக கூறியதையடுத்து கலெக்டர் மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் முகமது யூனிஸ்கான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து முகமது யூனிஸ்கான் மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராமராஜ், மீனா, சித்தா டாக்டர் மெகபூர்னிசா, சாரங்கபாணி, செல்வராஜ், புலவர் அய்யா மோகன் ஆகிய 6 பேரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 6பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிமடம் அருகே கோவிலில் இருந்த வெண்கல சாமி சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஓலையூர் கிராமம் கலியன்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் அக்கோவிலின் பூசாரி சுப்பிரமணியன் (வயது 45) கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மார்கழி மாத பூஜையையொட்டி ஒலிப்பெருக்கியில் பாடல் போடுவதற்காக மருதுபாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலின் வெளிப்புற கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூசாரி சுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகி கலியபெருமாள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கோவில் கருவறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த வெண்கல காளியம்மன் சிலை திருட்டு போயிருந்தது கண்டு திடுக்கிட்டனர். சிறிய காளியம்மன் சிலை திருட்டு போகவில்லை. இதற்கிடையே சிலை திருட்டு நடந்த சம்பவத்தை அறிந்ததும் பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நித்யா (ஆண்டிமடம்), வேலுசாமி (ஜெயங்கொண்டம்) ஆகியோர் காளியம்மன் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் உண்டியல் சற்று தூரத்தில் கிடந்தது தெரியவந்தது. ஆனால் அதில் பணம் ஏதும் இல்லை.

    மேலும், துப்பு துலக்க போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சற்று தூரம் வரை ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    திருட்டு போன சாமி சிலை 3¼ அடி உயரம் கொண்டது. சிலையின் பொலிவுக்காக அதில் 1 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு ரூ.2½ லட்சம். கடந்த ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பின்னர் தான் இந்த வெண்கல சிலை கோவிலில் வைக்கப்பட்டது என்று கோவில் நிர்வாகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து திட்டமிட்டே இந்த சிலை திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ஆண்டிமடம் அருகே நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் காளி சிலைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலை யூர் கிராமத்தில் ஏரிக்கரையோரம் மிகவும் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் இங்கு ஆண்டு தோறும் திருவிழாவும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கோவில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் இருந்து வருகிறார். தற்போது மார்கழி மாதத்தையொட்டி தினமும் அதிகாலையிலேயே கோவில் திறக்கப்பட்டு பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரவு கோவில் அடைக்கப்படும்.

    இந்த நிலையில் நேற்று இரவு பூசாரி சுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை மார்கழி மாதத்தை முன்னிட்டு பக்தி பாடல்கள் இசைப்பதற்காக ரேடியோ செட் அமைக்கும் தொழிலாளி கோவிலுக்கு வந்துள்ளார்.

    அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கோவிலின் முன் மண்டப பகுதியில் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோவில் தர்மகர்த்தா கலிய பெருமாளுக்கு நேரில் சென்று தகவல் கூறினார்.

    இந்த தகவல் கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அடுத்த ஒரு சில விநாடிகளில் கோவில் முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 2½ அடி உயரம் மற்றும் 1 அடி உயரமுள்ள இரண்டு காளி சிலைகள் கொள்ளை போயிருந்தது.

    அந்த சிலைகள் வெண் கலத்தால் ஆனதாகும். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் தர்ம கர்த்தா கலியபெருமாள் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மக்கள் நடமாட்டம் அதிக முள்ள, சிறிய கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்த மேலணிகுழி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலை கரும்பு காட்டில் மீட்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேலணிகுழி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (62) என்பவர் பூசாரியாக இருந்து வருகின்றார். இவர் தினந்தோறும் காலை 5 மணி முதல் 7 மணி வரை கோவிலை திறந்து வைப்பது வழக்கம். கடந்த 7ம் தேதி இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

     8-ம் தேதி காலை வழக்கம் போல் பூசாரி ராமலிங்கம் பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது அந்த கோவிலின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்ற பார்த்த போது கோவிலில் இருந்த சிலையை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது. கொள்ளை போன சாமி சிலை சுமார் ஒன்றரை அடி உயரமும், 25 கிலோ எடையும் உடையதாகும். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரனை செய்து வந்தனர். 
     
    இந்நிலையில் நேற்று மாலை அருகில் உள்ள பாப்பாகுடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற விவசாயியின் கரும்பு வயலில் கரும்பு வெட்டிய போது வயலுக்குள் சாமி சிலை கிடப்பது தெரிந்து போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர், உடன் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுசாமி, மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் சிலையை கொள்ளையடித்து வயலுக்குள் கொண்டு வந்து போட்டது யார் என விசாரித்து வருகின்றனர்.
    ரூ.6ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு அதிகாரி- கல்வி அலுவலக ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் ஓய்வூதிய தொகை பெறுவதற்காக ராமலிங்கம், ஜெயங்கொண்டம் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ராஜேந்திரனை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தார். ஆனால் அவர் ஓய்வூதிய தொகை கிடைக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.6ஆயிரம் தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டாராம்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமலிங்கம் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 31-1-2013 அன்று, ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரம் பணத்தை ராமலிங்கத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை ராஜேந்திரனிடம் கொடுத்த அங்கு மறைந்திருந்த போலீசார் ,ராஜேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பு அளித்தார். அதில் ராஜேந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இதே போல் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ராணி. ஆசிரியையான இவர் அங்குள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பள உயர்வு கேட்டு, ஜெயங்கொண்டம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு பணியாற்றி வந்த ஊழியர் குமார், சம்பள உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.6ஆயிரம் தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டாராம்.

    இது குறித்து ராணி , திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கடந்த 31-1-2012 அன்று குமாரை கைது செய்தனர்.

    இந்த வழக்கிலும் அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ரவி இன்று தீர்ப்பளித்தார். அதில் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். லஞ்சம் வாங்கிய கூட்டுறவு அதிகாரி- கல்வி அலுவலக ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழக மீனவர்கள் இறப்பை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் அருகே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக மீனவர்கள் இறப்பை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளர் வைத்தியலிங்கம், மாநில துணை தலைவர் சின்னதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் ஒகி புயலால் கடலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் செந்தில்குமார், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கோகுல், மாநில ஒன்றிய செயலாளர் சக்திவேல், வெங்கடேசன், தம்பிரமேஷ், கருணாநிதி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் இலவச இருதயநல மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.

    அரியலூர்:

    அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் சென்னை குளோபல் மருத்து வமனை நிர்வாகமும், அரியலூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இலவச இருதயநல மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.

    இதில் சென்னை குளோபல் மருத்து வமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரவிக்குமார், பாலாஜி, மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இருதயநல சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

    முகாமில் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் அமர்நாத், பொருளாளர் ராமதாஸ், திட்ட தலைவர் தண்டபாணி, திட்ட செயலா ளர் சீனிவாசன் உட்பட அனைத்து பொருப்பாளர் களும் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஜெயங்கொண்டம் நகராட்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார். ஆய்வின் போது மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருடைய வருகைப்பதிவேடுகள் மற்றும் அனைத்து பதி வேடுகளை ஆய்வு மேற் கொண்டார். மகப்பேறு சிறப்பு சிகிச்சை பிரிவினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் கர்ப்பிணிப்பெண்களிடம் முறையான தடுப்பூசிகள் உங்கள் பகுதியில் உள்ள கிராம செவிலியர்களால் அளிக்கப்பட்டதா என கேட்டறிந்து அதற்கான மருத்துவ அட்டையினை ஆய்வு மேற் கொண்டார். 

    பின்னர், மருத்துவமனை யில் உள்ள அனைத்து வார்டு களையும் பார்வையிட்டு மருத்துவமனை தூய்மையாக பராமரித்திடவும் பொதுமக்களும் மருத்துவமனையை சுகாதாரமாக பயன்படுத்திட அறிவுறுத்தினார்.

    டெங்கு காய்ச்சல் தொடர்பான சிறப்பு சிகிச்சை வார்டை பார்வையிட்டு காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளிடம் உடனுக்குடன் சிகிச்சை மேற்கொண்டு டெங்கு இல்லா மாவட்டமாக உருவாக்கிட மருத்துவத்துறை மற்றும் இதர துறையினரும் சிறப்புடன் பணியினை மேற்கொள்ளுமாறு ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.
    அரியலூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வருவாய் அதிகாரி பரிசுகள் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூரில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஹாக்கி, கூடைபந்து, கையுந்து பந்து, மேசைபந்து, இறகு பந்து, கால் பந்து, டென்னிஸ், நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சுமார் 2ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா வரவேற்று பேசினார். ஆர்டிஓ மோகனராஜன், தாசில்தார் முத்துலெட்சுமி, கமிஷனர் பிரபாகரன், உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பிச்சையா, பயிற்சியாளர்கள் சதிஷ்குமார்,ஹரிகரன், பொற் கொடி, லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். வளைகோல் பந்து பயிற்சியாளர் லெனின் நன்றி கூறினார்.
    செந்துறை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் ஆணை வாரி ஓடை உள்ளது. இந்த ஓடை பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உற்பத்தியாகி பின்னர் குழுமூர் வழியாக வெள்ளாற்றில் இணைகிறது. 
    தாமரைப்பூண்டி பகுதியில் குவாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.  அப்போது தாமரைப்பூண்டி பகுதியில் உள்ள ஆணைவாரி ஓடையில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து ஓடையில் மணல் அள்ளிய பொன்பரப்பியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராஜீ (வயது 25), முல்லையூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், டிராக்டர் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மணல் அள்ள நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில் குழுமூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஏழாவது ஊதியகுழுவில் உள்ள முரன்பாடுகளை கலைய கோரி சென்னை பள்ளிகல்வி இயக்குனரகம் முன்பு வரும் 18ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக பள்ளி கல்விதுறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
    அரியலூர்:

    சென்னையில் பள்ளி கல்வி இயக்குனரகம் முன்பு 18-ந் தேதி உண்ணாவிரதம் பள்ளி கல்விதுறை அலுவலர் சங்கம் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகல்விதுறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நீதிமணி தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி முன்னிலையில் மாவட்ட தலைவர் சதீஷ் வரவேற்று பேசினார்.பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் முருகன், முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திரபிரசாத், அமைப்பு செயலாளர் குலாம்ரபிக், தலைமைநிலைய செயலாளர் ராம்மூர்த்தி உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ஏழாவது ஊதியகுழுவில் உள்ள முரன்பாடுகளை கலைய வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம், பணிவரை முறை, தகுதிக்கான் பருவம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தினால் சென்னை பள்ளிகல்வி இயக்குனரகம் முன்பு வரும் 18ம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏரி-குளங்களை தூர்வார வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கவியரசன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் எழிலரசன், தங்கஜெயபாலன், தேன்மொழிசம்பந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு :-

    அரியலூர் பஸ் நிலையத்தில் 24 மணிநேரமும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வண்ணம் போலீசாரை நியமிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தொடர் சாலை விபத்தினை தவிர்க்க சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரியலூர் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைத்திட ஆவண செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிவோருக்கு குடியிருப்பு பகுதியை அமைத்து கொடுக்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளங்களுக்கு வரும் வரத்து வாரி வாய்க்கால்கள் ஆக்கிரமித்துள்ளதால் வரண்டு கிடக்கும் குளங்களை தூர்வார வேண்டும். செந்துறை -ஆர்.எஸ். மாத்தூர் சாலை வேலை ஆரம்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது, அதை உடனே முடிக்க வேண்டும். திருமானூர் ஒன்றியம் முடிகொண்டான் - சேனாபதி சாலை போடப்பட்ட 2 மாதத்திலேயே மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த சாலையை உடனே சீர் செய்திட வேண்டும். அரியலூர் ஒன்றியம் கடுகூர் - சென்னிவனம் சாலையை உடனே சீர் செய்திட வேண்டும். உட்பட பல்வேறு தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.
    ×