என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே பட்டப்பகலில் சிமெண்ட் ஆலை ஊழியர் வீட்டில் டிப்டாப் ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள அமீனாபாத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். 

    இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன், அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் சக்திவேலின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் வயல் வேலை முடிந்ததும், வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் அடைத்திருந்த வேலியை தாண்டி, 2 டிப்டாப் ஆசாமிகள் ஓடியுள்ளனர். 
    இதனை பார்த்த தாய், மகள் இருவரும் திருடன் திருடன் என கூச்சலிட்டவாரே பின் தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்றனர். 

    ஆனாலும் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகள் தாங்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த ஒரு காரில் ஏறி தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து மகன் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

    மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததோடு, 3 பீரோவின் கதவுகளும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 2 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #tamilnews
    அரியலூர் அருகே நிலத்தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள வெளி பிதுங்கி கிராமத்தை சேர்ந்தவர் செங்கமலம் (வயது 60), விவசாயி. இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு செல்வராஜ், சந்திரஹாசன் என 2 மகன்கள் உள்ளனர்.

    இருவருக்கும் திருமணமாகி விட்டது. செல்வராஜ் கூலி வேலை செய்து வருகிறார். சந்திரஹாசனும், செங்கமலமும் விவசாயம் செய்து அதில் விளையும் பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இதனால் செல்வராஜின் மனைவி மங்கையர்க்கரசி, செங்கமலத்திடம் நீங்கள் இருவர் மட்டும் விவசாயம் செய்து பங்கு போட்டுக்கொள்கிறீர்கள். எனவே எங்களுக்கு உண்டான நிலத்தினை பிரித்து தந்தால் நாங்களும் விவசாயம் செய்வோம் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து மங்கையர்க்கரசி செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சந்திரஹாசனிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை சந்திரஹாசனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் கிடந்த கட்டையால், தந்தை என்றும் பாராமல் செங்கமலத்தை தாக்கியுள்ளார். இதில் அவரது தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு செங்கமலம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமானூர் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள திருமழபாடி சாலையோரத்தில் புதிய டாஸ்மாக் கடை கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. மஞ்சமேடு கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதால் கடை மூடப்பட்டது. 

    இந்நிலையில், மூடப்பட்ட அந்த டாஸ்மாக் கடை மீண்டும் கடந்த டிசம்பர் 31-ந்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மஞ்சமேடு கிராமமக்கள் அக்கடையை அகற்ற கோரி திருமழபாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கலால் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரிகள் சிவக்குமார், கண்ணகி, வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக எழுதி கொடுங்கள் என்று கிராமமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
    செந்துறை அருகே பைக் விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள பொன்னேறி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 60). சம்பவத்தன்று இவர் சென்னிவனத்தில் நடந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது உறவினர்கள் ரமேஷ் (35), ஜெயசந்திரன் (40) ஆகியோருடன் பைக்கில் சென்றார்.

    பின்னர் அங்கு நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்து பொன்னேறி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். அரியலூர்- செந்துறை நெடுஞ்சாலையில் சென்றபோது, அகரம் சீனிவாசன் நகர் அருகே திடீரென பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் படுகாயமடைந்த 3பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மற்றும் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே ஆதிமூலம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ரமேஷ், ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆதிமூலத்திற்கு 4 மகள்கள் உள்ளனர். #tamilnews
    அரசு ஆஸ்பத்திரியில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அரியலூர் கலெக்டர் லட்சுமி பிரியாவை பொதுமக்கள் பாராட்டினர்.

    அரியலூர்:

    அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளில் படிப்பதை தவிர்த்து வருவதாகவும், புறக்கணிப்பதாகவும் தொன்று தொட்டே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதற்கு நேர்மாறாக அனைவருக்கும் முன்னுதாரணமாக சில அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் கலெக்டர் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்தது பொது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    அரியலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி பிரியா. கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட இவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது கணவர் அருண்ராய் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அப்போது அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். இதில் அவர் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. டாக்டர்கள், உடனடியாக அவருக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். டாக்டர்களின் அறிவுரையின்படி கலெக்டர் லட்சுமிரியா, அரசு ஆஸ்பத்திரியிலேயே அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறினார்.

    இதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கலெக்டரை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, கலெக்டராக இருக்கும் ஒருவர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்வது அரிதான நிகழ்வாக உள்ளது. கலெக்டர் லட்சுமி பிரியா அறுவை சிகிச்சை செய்து கொண்டது அவர் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளது என்றனர்.

    அரசு திட்டங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் குறித்து மக்களிடம் பேச்சோடு நின்று விடாமல் தாங்களே களம் இறங்கி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட கலெக்டருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.

    புதுக்கோட்டை கலெக்டராக இருந்த எஸ்.ஜே.சிரு-வின் மனைவி புதுக்கோட்டை அரசு ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடலூரில் கலெக்டராக பணிபுரிந்த ககன்தீப்சிங் பேடியும் அவரது மனைவியை பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார். அவர்கள் வரிசையில் அரியலூர் கலெக்டர் லட்சுமி பிரியாவும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியை தேர்வு செய்துள்ளார்.

    அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்து கொண்ட கலெக்டரின் செயல் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இதே போல் மற்ற அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கடைப்பிடித்தால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    வாரியங்காவல்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினம் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் லூர்துசாமி (வயது 49). 

    லூர்துசாமி மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

    இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி வழக்குப்பதிந்து லூர்துசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    காங்கிரஸ் கட்சியின் 133-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் மாவட்டத் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரசின் கட்சியின் 133-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் மாவட்டத் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் கமலக்கண்ணன் மணிரத்தினம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றினர். 

    அதனை தொடர்ந்து காந்தி பூங்காவிலிருந்து தொடங்கி 4 ரோடு,  கடைவீதி, அண்ணா சிலை வழியாக ஊர்வலமாக சென்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட பொது செயலாளர்கள் சசிக்குமார், தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க துணைத் தலைவர் பாக்கியராஜ், விக்னேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வினோத் நன்றி கூறினார். 

    இதேபோன்று ஆண்டி மடத்தில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 133-வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடினர். இவ்விழாவிற்கு வட்டார தலைவர் குடியரசு தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவர் ராஜதுரை, துனை தலைவர் செல்வராசு, செயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆண்டிமடம் கடை வீதியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை கிருஷ்னமூர்த்தி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரான்ஸிஸ், ரவி, வட்டார செயலாளர் ராஜகோபால், கண்ணபிரான், பரமானந்தம், மார்க்சாமி, சாமிக்கன்னு, அன்பழகன், கலியன் மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவர் (மேற்கு) மாசிலாமணி நன்றி கூறினார்.  
    உரக்கடைகளில் விற்கப்படும் பூச்சி மருந்துகளை கள ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் பேசியதாவது:-

    புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமைக்கருவேலமரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி- வரத்து வாய்க்கால்களை வரும் கோடை காலத்திலாவது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரக்கடைகளில் விற்கப்படும் பூச்சி மருந்துகளை வேளாண்குழுவினர் கள ஆய்வு செய்து அதன் பயன்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகை கடன், கிணறு வெட்டக்கடன் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பருத்தி வயலுக்கு பூச்சிமருந்து அடிக்கும் போது இறந்த கல்லக்குடி ராமர், கருவிடச்சேரி திருப்பதி ஆகியோரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல், பல்வேறு விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, இணை இயக்குனர் (வேளாண்மை) அய்யாசாமி, இணைப்பதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்) தயாளன், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு துறை) நசீர், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விஜயலெட்சுமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

    முன்னதாக விவசாயிகள் ராமர், திருப்பதி ஆகியோரது குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர்.
    செந்துறை அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் பிரஹஸ்பதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ராயம்புரத்தில் இருந்து சென்னிவனம் செல்லும் சாலையில் மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு திருட்டு தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த கீழாயம்புரம் கிராமத்தில் சேர்ந்த வீரப்பன வயது (வயது 48), முருகேசன் மகன் ரமேஷ் வயது (27) ஆகிய 2 பேரையும்  போலீசார் கைது செய்தனர்.  

    இதே போல் செந்துறை, சென்னிவனம், ராயபுரம் பகுதிகளில்  சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க காவல் துறையினர் முன் வர வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம் அருகே முன்விரோதத்தில் பெரியப்பாவை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த சாமி மகன் ராமாமிர்தம் (வயது 65). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். ராமாமிர்தம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக மீண்டும் பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு வந்துவிட்டார்.

    இதற்கிடையே இவருடைய பாக நிலம் மற்றும் மனைகளை இவரது தம்பி இளை பெருமாள் மகன் சரவணன் ஆண்டு அனுபவித்து வந்துள்ளார். அவரிடம், நான் இனி எனது நிலத்தில் விவசாயம் செய்து கொள்கிறேன் என ராமாமிர்தம் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் சரவணனின் தந்தை இறந்தபோது ராமாமிர்தம் துக்க காரியத்திற்கு செல்லாமல் ஒதுக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சரவணனுக்கும், ராமாமிர்தத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரிய கிருஷ்ணாபுரம் கோவில் அருகேயுள்ள ஆலமரத்தின் கீழ் ராமாமிர்தம் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த சரவணன் ராமாமிர்தத்திடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ராமாமிர்தத்தின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து ராமாமிர்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்திற்கு சென்று ராமாமிர்தத்தின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூரில் உள்ள வங்கியில் மர்ம மனிதர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.15 கோடி நகை தப்பியது.
    அரியலூர்:

    அரியலூரில் லெட்சுமி விலாஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. 22-ந் தேதி வங்கி பணிகளை முடித்து விட்டு வங்கி மேலாளர் விஸ்வநாத் மற்றும் ஊழியர்கள் வங்கியை பூட்டினர்.

    இந்நிலையில் 3 நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கியை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கதவின் உள்பகுதியில் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர், இரும்பு கதவு வழியாக வங்கியின் உள்பகுதியை பார்த்த போது, அங்கிருந்த ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டு கீழே கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர், இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். அப்போது வங்கியில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

    இதையடுத்து நகை-பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை பார்த்த போது, அதனை கொள்ளையர்கள் உடைக்க முயற்சி செய்து இருந்தது தெரியவந்தது. இதனால் ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளும், ரூ.8 லட்சம் ரொக்கமும் லாக்கரில் இருந்து கொள்ளை போகாமல் தப்பியது.

    பின்னர் வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்து கொண்டு ஒரு நபர், கையில் டார்ச் லைட்டுடன் உள்ளே நடமாடியது தெரிய வந்தது. எனவே அந்த நபர் உள்பட சிலர் சேர்ந்து தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து பார்க்கையில் 24-ந் தேதி அதிகாலையில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு நகைகள் அடகு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலர் வங்கி முன்பு குவிந்தனர். அப்போது போலீசாரும், வங்கி நிர்வாகத்தினரும் கொள்ளை ஏதும் நடக்கவில்லை என்பது குறித்து விளக்கி கூறினர். அதன் பின்னரே வாடிக்கையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம்  குருவாளப்பர் கோவில் காலனி தெருவை சேர்ந்தவர் உத்தமராசா. இவரது மகள் சத்யா (வயது 19). பட்டதாரி.  இவரும் செந்துறை அருகே உள்ள வீரக்கன் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் வசந்தகுமார் என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து  கொண்டனர். 

    இந்நிலையில் வசந்த குமாருக்கும் அவரது மனைவி சத்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. வசந்தகுமார் சத்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சத்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் பெற்றோர் சத்யாவை சமாதானம்  செய்து வசந்தகுமார் வீட்டில் விட்டு விட்டு வந்தனர். இருப்பினும் கணவன்- மனைவி  இடையே தொடர்ந்து  தகராறு ஏற்பட்டு வந்தது. 

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார். 

    இது குறித்து இரும்புலி குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சத்யாவின்  தந்தை உத்தமராசா இரும்புலி குறிச்சி போலீசில், வரதட்சனை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டார்  என புகார் மனு கொடுத்து உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×