என் மலர்
செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
காதல் திருமணம் செய்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குருவாளப்பர் கோவில் காலனி தெருவை சேர்ந்தவர் உத்தமராசா. இவரது மகள் சத்யா (வயது 19). பட்டதாரி. இவரும் செந்துறை அருகே உள்ள வீரக்கன் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் வசந்தகுமார் என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் வசந்த குமாருக்கும் அவரது மனைவி சத்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. வசந்தகுமார் சத்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சத்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் பெற்றோர் சத்யாவை சமாதானம் செய்து வசந்தகுமார் வீட்டில் விட்டு விட்டு வந்தனர். இருப்பினும் கணவன்- மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார்.
இது குறித்து இரும்புலி குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சத்யாவின் தந்தை உத்தமராசா இரும்புலி குறிச்சி போலீசில், வரதட்சனை கொடுமையால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என புகார் மனு கொடுத்து உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






