search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female child"

    தாய்மாமனின் தலைசிறந்த உறவையும், பெண் குழந்தைகளின் தெய்வீக தன்மையையும் போற்றும் வகையில் கொங்கு தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சார மரபு மாறாமல் பொன்னூஞ்சல் விழா நடத்தப்பட்டு வருகிறது. #PonnunjalFestival
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமையிடமான தற்போதைய சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் அரண்மனையில் திருவாதிரையை முன்னிட்டு 3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பொன்னூஞ்சல் திருவிழா நேற்று பாரம்பரிய முறைப்படி நடந்தது.

    இவ்விழா குறித்து கொங்கு பெரிய குலத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னூஞ்சல் விழாவில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பெரியநாயகி அம்மன் உட்பட 7 கோவில்களில் சிறப்பு அபிசேகங்கள் நடத்தப்பட்டு குடும்பத்தில் முதலாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு பட்டாடைகள், அணிகலன்கள் அணிவித்து விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 16 வகை சீர்வரிசைகளுடன் காத்திருக்கும் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு நெற்றியில் தாய்மாமன் தங்க பட்டம் கட்டி தனது தோள் மீது அமர வைத்து ஊர்வலமாக சுமந்து வந்து தங்கத் தகடுகளால் வேயப்பட்ட ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டனர்.

    குழந்தைகளுக்கு உறவினர்கள் வெண்சாமரம் வீச பெரியநாயகி அம்மனாகவே பெண் குழந்தையை ஊஞ்சலில் ஆட வைத்தனர்.

    கரிகால சோழனின் மகள் ஆதிமந்தை என்பவரை சேர நாட்டு மன்னன் அட்டன் ஆத்தி என்பவருக்கு மணம் முடிப்பதற்கு ஆதிமந்தையின் தாய்மாமன் இரும்பிடர் தலையர் பேருதவி செய்தார். அதற்கு நன்றியாக இரும்பிடர் தலையர் வம்சாவழியில் வந்த கொங்கு வேளாளர் பெரியகுல பெண்களுக்கு பொன்னூஞ்சல் பரிசாக வழங்கப்பட்டு, அந்த பொன்னூஞ்சலில் ஆடும் உரிமையும் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 

    தாய்மாமனின் தலைசிறந்த உறவையும், பெண் குழந்தைகளின் தெய்வீக தன்மையையும் போற்றும் வகையில் கொங்கு தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சார மரபு மாறாமல் இன்று வரை பொன்னூஞ்சல் விழா நடத்தப்பட்டு வருகிறது. #PonnunjalFestival

    தாய்மார்கள் எப்படி நடந்துகொண்டால் சமூகத்தில பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும்.
    பெண் பிள்ளைங்க நல்லா படிக்கணும், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று பல வி‌ஷயங்களை யோசிக்கிறோம்; ஆனால், எப்படி நடந்துகொண்டால் இந்த சமூகத்தில அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேசுவது இல்லை. இதனால்தான் பல பெண்கள் தங்களோட வாழ்க்கையில் தடம்புரண்டு விடுகிறார்கள். எனவே பெண் குழந்தைகளை சரியாக வழிநடத்தினால் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

    முன்பெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் சுலபமாக வெளி ஆட்களுடன் பேசிவிட முடியாது. ஆனால், இது செல்போன், கம்ப்யூட்டர் காலம். அதனால தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு யாருடனும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக பேச முடிகிறது.

    எனவே முன்பின் தெரியாத நபர்கள் போனில் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துங்கள். செல்போனை காண்பித்து சில்மி‌ஷத்தில் ஈடுபடுவது; ஆபாச படங்களை காண்பித்து பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது என பல வகைகளில் பெண் குழந்தைகள் திசைமாற்றப்படுகின்றனர்.

    எனவே, இவற்றில் எல்லாம் உ‌ஷாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். 7-வது, 8-வது படிக்கும் குழந்தைகள் முதல் சொல்லித்தரலாம். சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதுப்பற்றி யெல்லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள்.

    எல்லையே இல்லாமல் இ‌ஷ்டத்துக்கு பிள்ளைகளை வளர விடுவது எத்தனை தவறோ, அதே போல்தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் செய்வதும். அதனால், உங்கள் குழந்தைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள்.

    மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக்கூறுங்கள். உதாரணமாக, அடுத்து இருப்பவர்களிடம் பேசும் போது அவர்களின் முகத்தை பார்த்து, நேராக நின்று பேசச் சொல்லுங்கள். குறிப்பாக, ஆண்களிடம் அப்படி இல்லாமல், வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நாணிக் கோணி பேசும் போது, ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் மனதில் நீங்கள் பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவீர்கள்.

    தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்பந்தமான புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பதான் இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அறிய முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்; அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். நல்வழிக்காட்டுங்கள்.
    பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது.
    இன்று (அக்டோபர் 11-ந்தேதி) உலக பெண் குழந்தைகள் தினம்.

    பெண்ணால் படைக்கப்பட்ட இந்த உலகத்தில் பெண்ணை தவிர்த்து பார்க்க முடியாது. பெண் என்பவள் அவளுக்காக வாழ்பவள் அல்ல. பிறருக்காக வாழ்பவள். அதனால் தான் மகாத்மா காந்தியடிகள் கூறினார் பெண்கள் முன்னேற வேண்டும் என்று. இதையே தான் இன்றைய ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோரும் வலியுறுத்துகிறார்கள்.

    ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்து விட்டால் வருத்தப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்து விட்டது. பெண்களை கொண்டாடும் காலமாக மாறிக் கொண்டு இருக்கிறது. எனவே வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் கொண்டாட வேண்டும். பெண்கள் இன்று கல்வி, கலை, விளையாட்டுகளில் ஆண்களை விடமுன்னேறி பல சாதனைகளை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    பிறக்கும் போது பெண்ணாக பிறப்பவள் பல உறவுகளுடன் இந்த உலகத்தில் வாழ்கிறாள். ஒரு ஆண் கல்வி கற்றால் அந்த கல்வி அவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பம், இந்த சமுதாயத்துக்கே பயன்படும்.மேலும் பெண் குழந்தை பிறந்து விட்டால் அவர்களை நிறைய படிக்க வைக்க வேண்டும். அவர்களை குறுகிய வட்டத்தில் அடைத்து விடக்கூடாது. இன்று பெண்கள் பல சாதனையாளர்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    எவ்வளவு வேலை இருந்தாலும் ஆண்களை விட பெண்கள் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றலை பெற்று இருக்கிறார்கள். பெண்கள் என்ன தான் சாதனைபடைத்தவர்களாக வலம் வந்தாலும் அவர்கள் ஒருவரை சார்ந்து இருக்கும் நிலை சமுதாயத்தில் இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை. பெற்றோர் தான் அவர்களது வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என்பதை மறந்து விடக்கூடாது.

    ஒரு பெற்றோர் இருக்கிறார்கள் என்றால் அந்த பெற்றோரை ஆண்களை விட பெண் குழந்தைகள் தான் கடைசி வரை பொறுப்போடும், கடமையோடும் பார்த்துக்கொள்வார்கள். இது நமது சமுதாயத்தில் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்கள் குழந்தை பருவத்தில் கல்வி, கலை, விளையாட்டு துறையில் முத்திரை பதிக்ககூடியவர்களாக விளங்கினாலும் திருமண பந்தத்துக்குள் வரும் போது அவர்களது கல்வி, கலை, விளையாட்டு என அத்தனை தனித்திறமையும் அப்படியே மூழ்கடிக்கப்படுகிறது.

    திருமணத்துக்கு பிறகும் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த சமுதாயம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது குடும்பமும் இந்த சமுதாயமும் முன்னேற்றத்தை காண முடியும். திருமணத்துக்கு பின்னர் பெண்கள் படிக்க விரும்பினால் அவர்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். கல்விக்கு தடை போடக்கூடாது. இன்று பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு உயர்கல்வி பெற்று இன்று சாதனையாளர்களாக மாறி இருக்கிறார்கள். பெண்கள் விருப்பத்தை அவர்களது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.



    அவர்கள் ஒரு தொழில் முனைவோராக, கல்வியாளராகவோ வர விரும்பினால் அதற்கு தடை போடாமல் அவர்களது ஆசையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளப்போகிறாயே இது எல்லாம் வேண்டாம் என அவர்களது கனவை சிதைத்து விடக் கூடாது.அதே போன்று பெண் குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது.

    சொந்த காலில் நிற்க பணமும் தேவைப்படுகிறது. எனவே பொருளாதாரத்திலும் கால்பதிக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும். தயக்கம், தன்னம்பிக்கை, மனதில் உறுதி இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு பெண்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிரான தடைகளை முறியடித்து முன்னேற வேண்டும்.

    பெண் குழந்தைகள் மீது பெற்றோர் மட்டுமல்ல அவர்களை சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண் குழந்தை பிறப்பை பிறவியிலேயே தடுக்கும் செயல் முன்பெல்லாம் நடந்து வந்தது. அந்த குற்ற செயல் இப்போது குறைந்து வருகிறது. அப்படி ஒரு செயல் இன்றும் நடந்து வந்தால் அதனை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். பெண் குழந்தை பிறப்பை தடுப்பது என்பது ஒரு மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். பெண் குழந்தை பிறப்பை சந்தோஷமாக பார்க்க வேண்டும்.கொண்டாட வேண்டும்.

    பெண்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் வகையில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை, ரெயில்வே என பல துறைகளில் இன்று பெண்கள் தடம் பதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும் என சமீபத்தில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெண்கள் அதிக அளவு ராணுவத்தில் சேர வேண்டும். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா போன்று ஒவ்வொரு பெண்களும் ஒரு வீராங்கனையாக வர வேண்டும். தன்னம்பிக்கை, துணிச்சல், திறன் மேம்பாடு போன்றவற்றை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    பெண்ணை தாயாக மதிக்கும் இந்த சமுதாயத்தில் பெண் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. படிக்கிற இடத்திலும் சரி அல்லது பணி செய்யும் எல்லா இடங்களிலும் சரி பெண்களுக்கு பாலியல் ரீதியாக வரும் துன்புறுத்தல், கொடுமைகள் களையப்படவேண்டும். அத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் குறையும். மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ குற்றம் இழைப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

    இந்த சமுதாயத்துக்காகவே படைக்கப்பட்ட பெண்ணினம் தன்னை மட்டும் கவனிக்க தவறி விடும். எனவே எல்லா பெண்களும், பெண் குழந்தைகளும் தங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும்.

    பெண்கள் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகாத்மா காந்தியடிகள் நமது நாட்டில் கிராமம் முன்னேற வேண்டும் விரும்பினார். கிராமமாக இருந்தாலும் நகரத்தின் முன்னேற்றமாக இருந்தாலும் அது பெண்கள் முன்னேற்றத்தை பொறுத்தே அமையும்.பெண்ணை இந்த உலகத்தின் பூமியாகவும், கடவுளாகவும், நதியாகவும் சித்தரித்து கொண்டாடும் நாம் பெண்ணினத்துக்கு துரோகம் இழைப்பதை விட்டு விட்டு பெண்மையை போற்ற உறுதிமொழி ஏற்போம்.

    டாக்டர் கே.மீனா,
    முன்னாள் துணை வேந்தர்,
    பாரதிதாசன் பல்கலைக்கழகம்
    ×