என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 6யூனியன், 2நகராட்சி, 2 பேரூராட்சி, 201 கிராம ஊராட்சிகள் உள்ளது.  8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும்  மாவட்டத்தின் தலைநகரமாக அரியலூர் திகழ்ந்து வருகின்றது. 

    அரியலூரில் கிராமபுற கூட்டுறவு வங்கிகளை தவிர்த்து 84 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் 14 ஏ.டி.எம். மையங்கள்  பூட்டப்பட்டுள்ளது. 20  ஏ.டி.எம். மையங்கள் பாதி திறந்த நிலையில் உள்ளது. மற்ற  ஏ.டி.எம்.மிலும் சரியான முறையில் பணம் வைப்பதில்லை. பழைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து, புதிய நோட்டுகளை வைப்பதற்கு ஏற்ற  வகையில் ஏ.டி.எம். எந்திரம் சீரமைக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது.

    சுமார் 30 லட்சம் வரை பணம் நிரப்பி வந்த  ஏ.டி.எம். எந்திரங்களில் தற்போது சுமார் 5லட்சம் வரை பணம் நிரப்புவதால் ஒருசில மணிநேரங்களில் தீர்ந்துவிடுகின்றது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அனைத்து ஏ.டி.எம்.  மையங்களிலும் போதுமான அளவு பணம் நிரப்ப வேண்டும், காவலரை நியமிக்க வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டினத்தில் உள்ள சூசையப்பர் ஆலயத் தில் திருவிழா நடை பெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.

    வாடிவாசல் வழியாக காளைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக விழாக் குழுவினர் அவிழ்த்து விட்டனர். போட்டியில் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் சேலம், கரூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் 300 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். சூசையப்பர்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு ஜல்லிகட்டு போட்டியை ரசித்து பார்த்தனர். போட்டியில் காளையை அடக்கிய வீரர்கள் மற்றும் அடங்காத காளை மாட்டு உரிமையாளர்களுக்கு கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், சேர், தங்க காசுகள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிகட்டில் போட்டியில் பிராஞ்சேரி கண்ணன், சோழங்குறிச்சி வேல்முருகன், சூரியா, காடு வெட்டாங் குறிச்சி அன்பு மொழி உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர்.
    கள்ளூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கள்ளூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தின் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங் கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் கீழகொளத்தூரை சேர்ந்த விக்னேஷ்ராஜ் (வயது 18), பொய்யூரை சேர்ந்த ராமையன் (35), கள்ளூரை சேர்ந்த சரத்குமார் (25), ஆண்டிபட்டாகாடு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (25), இலந்தை கூடத்தை சேர்ந்த பாண்டியன் (55) உள்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப் பட்டது.


    ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சைக்கிள், நாற்காலி, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கள்ளூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சத்துணவு அமைப்பாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் சத்துணவு அமைப்பாளர் சங்க மாநாடு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பெரியசாமி மாநாட்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட தலைவராக ராமலிங்கம், மாவட்ட செயலாளராக செல்வராஜ், மாவட்ட பொருளாளராக அலமேலு, மாநில செயற்குழு உறுப்பினராக சுமதி ஆகியோர் அரியலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

    மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்து தர வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    முன்னதாக சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் செல்வி வரவேற்றார். முடிவில் மாநில பொது செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
    அ.தி.மு.க. மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    ஆண்டிமடம்:

    தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தினை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. கொறடா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

    இந்த 2 வழக்குகளையும் விசாரித்த தலைமை நீதிபதி அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம்  எம்.எல்.ஏ.ராம ஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

    பின்னர் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    உலக தமிழர்கள் மற்றும் தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்மாவின் புகைப்படத்தை சட்ட மன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற வழக்கு, துணை முதல்வர் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கையும்  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த இரண்டு வழக்குகளுமே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்டது. இது தி.மு.க.விற்கு கிடைத்த சம்மட்டி அடி ஒரு வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு நீதி மன்றம் உத்தரவிட்டதும் (குட்கா) ஆளும் அரசை வாபஸ் பெற சொன்னார். ஆனால் தற்போது இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை ஏற்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் சட்ட பேரவையை பொருத்த வரை சபாநாயகர் மட்டுமே அதிக அதிகாரம் படைத்தவர், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் வரவுள்ள 18 எம்.எல்.ஏக்கள் வழக்கும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.
    அரியலூர் அருகே சொத்து தகராறில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மாமனார்-மாமியார் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 65). விவசாயி. இவரது மனைவி லோகாம்பாள். இந்த தம்பதிக்கு ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், குமார் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் கோவிந்த ராசுக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதனை தனது முதல் 2 மகன்களான ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரனுக்கு பிரித்து கொடுத்தார். குமாருக்கு நிலம் கொடுக்க வில்லை. இதனால் குமாரும் அவரது மனைவி அமராவதியும் கோவிந்தராசுவிடம் சென்று தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் வழக்கின் தீர்ப்பு குமாருக்கு சாதகமாக வருவது போல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராசு, லோகாம்பாள், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் மனைவி செல்வி ஆகிய 4 பேரும் நேற்றிரவு குமார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அமராவதியிடம் , ஏன் எங்களிடம் சொத்து கேட்டு தகராறு செய்கிறாய் என்று கூறி அவரை கட்டையால் தாக்கினர் . இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனிடையே குமார் அங்கு வரவே அவரையும் கத்தியால் குத்தினர். இதையடுத்து 4 பேரும் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த குமாரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews

    குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர்: 

    அரியலூர் அருகே உள்ள எருத்துகாரன்பட்டி ஊராட்சியில் உள்ளது அண்ணாநகர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் சரி வர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வினியோகம் செய்யக் கோரி காலிக்குடங்களுடன் அரியலூர்-கோவிந்தபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் மற்றும் தாசில்தார் முத்துலட்சுமி, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இன்னும் 15 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

    இதனால் அரியலூர்-கோவிந்தபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அரியலூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசினார்.

    அரியலூர்:

    அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை அமைக்கவும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி அரியலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான தாமரை.எஸ். ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது கூறியதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சினையில் கடைசிவரை போராடியவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் 50 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. 1974-ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர் புதுப்பிக்க தவறிவிட்டனர். கட்சத்தீவு பிரச்சினையில் பச்சை கொடி காட்டியது தி.மு.க. ஆட்சியில்தான்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி. இவர்கள் நினைத்திருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் முடித்திருக்கலாம். இதை புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். ஸ்டாலின் செய்த மிகப்பெரிய சாதனையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தது தான்.

    ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தினகரனை நீக்கி வைத்தார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் ஜெயலலி தாவின் வாரிசு என்று கூறி வருகிறார். அ.தி.மு.க. தொண்டன் ஒருவன் கூட அவர் பின் செல்ல மாட்டான். ஸ்டாலின், தினகரன் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

    நான் இந்த மாவட்டங்களை சுற்றி சுற்றி வந்தவன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஜெயலலிதா கூறினார். நான் இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது பொதுக்கூட்டமா? மாநாடா? என்று என்ன தோன்றுகின்றது. நாடாளு மன்ற தேர்தலாக இருக்கட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும்.

    உள்ளாட்சி தேர்தலாகட்டும், வெற்றி பெறப்போவது நாம் தான். இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ? முடியாது. இது காலத்தின் கட்டாயம். அரியலூர் மாவட்ட செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.

    1974-ல் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறியது தி.மு.க.தான். விவசாயிகள் போட்ட வழக்கை வாபஸ் பெற செய்தது கருணாநிதிதான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி. அவர்கள் நினைத்திருந்தால் அனைத்து பிரச்சினையையும் தீர்த்து வைத்திருக்கலாம்.

    தமிழர்களின் உரிமையை அடகு வைத்தவர் கருணாநிதி. தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

    இந்த பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம், உண்ணாவிரதம், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

    ஜெயங்கொண்டம் அருகே அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆண்டிமடம்

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பேருந்து நிறுத்தத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இது குறித்து விடுதலை சிறுத்தை அமைப்பினர் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட மற்றொரு பேனரும் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கங்கை கொண்டசோழபுரம் பேருந்து நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தை  அமைப்பை சேர்ந் தவர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் வேலுச்சாமி, நித்யா ஆகியோர் பேனர் கிழித்தவர்களை கைது செய்து விட்டோம் எனக்கூறினர். 

    ஆனாலும் கைது செய்தவர்களை காட்டினால்தான் கலைந்து செல்வோம் எனக்கூறினர். தொடர்ந்து  சென்னை-கும்பகோணம் சாலை ஜெயங்கொண்டம் குறுக்குரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அரியலூர் கூடுதல் எஸ்.பி. சண்முகநாதன், மற்றும் எஸ்.பி. அபிநவ்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வாகனம் ஓட்டும் போது விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என அரியலூர் மக்களுக்கு போக்குவரத்து அதிகாரி அறிவுரை வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வரும் 29ம் தேதி வரை நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து  விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேருந்து நிலையம், அண்ணா சிலை, எம்ஜிஆர். சிலை, சின்னகடைத்தெரு, தேரடி, சத்திரம், மாதா கோவில் வழியாக ஒற்றுமை திடலை சென்றடைந்தது.

    வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகர் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, வெங்கடேசன், அசோக்குமார், சுதாகர், ராஜா, ஜெமீன்வெங்கடேசன், ஜீவா, சக்தி, சகானா காமராஜ், மற்றும் ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலர் பேசும் போது,  இருக்கையில் சரியான முறையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டும், வாகனம் ஓட்டும் போது அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும், பாலங்கள், குறுகிய சாலை வளைவுகளில் முந்தக்கூடாது, போக்குவரத்து சின்னங்களை மதித்து சிக்னல் பெற்ற உடன் செல்ல வேண்டும், மஞ்சள் கோட்டை தாண்ட கூடாது, திடீரென தடம் மாறி செல்லக்கூடாது, சாலை விதிமுறைகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும், அரியலூர் மாவட்டம் சாலை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். #tamilnews
    திருமானூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியதில் 15 பேர் காயமடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தின் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் புள்ளம்பாடியை சேர்ந்த மகேஷ்வரன் (வயது 27), பூண்டியை சேர்ந்த சக்திவேல் (27), அயன்சுத்தமல்லியை சேர்ந்த இளங்கோவன் (30), வடுக பாளையத்தை சேர்ந்த முரட்டுகாளை (39), கண்டராதித்தத்தை சேர்ந்த பிரபாகரன் (28) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த பிரபாகரன் மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், நாற்காலிகள், கட்டில் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கீழையூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகளிடம் பணம் பெற்று ஏரியை தூர்வாரினார்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், கடந்தாண்டு விளாங்குடியிலுள்ள பெரிய ஏரியை தூர்வாரி கொள்ள அனுமதி அளிக்குமாறு கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தார். கலெக்டர் அனுமதி அளித்ததையடுத்து, இவர், அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள் ஆனந்தவள்ளி, மருமகன் அம்பலவாணன் அளித்த ரூ.3 லட்சத்து 70 ஆயிரம், ஏய்ம்ஸ் இண்டியா பவுன்டேசன் ப்ரம் அமெரிக்கா என்ற அமைப்பு கொடுத்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் செலவில் பெரிய ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தினார்.

    இதேபோல் இந்த ஆண்டும் இவர், மகள் அளித்த ரூ.3 லட்சத்தை கொண்டு விளாங்குடியிலுள்ள கால்நடை மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிள்ளையார் ஏரி மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டை, ஏரிகளை தூர்வாரும் பணியை நேற்று முன்தினம் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    இது குறித்து தியாகராஜன் கூறியதாவது:-

    மூன்றாம் உலக போர் என்று ஒன்று வருமானால் நீருக்காக தான் வரும். எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த அளவு நீரை சேமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற உடன் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தனது மகளின் உதவியுடன் எனது கிராமத்தில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து தனது மகள் மற்றும் மருமகனுடன் விவாதித்த போது நல்ல முயற்சி என்றனர். மேலும் என்னை ஊக்குவித்ததுடன் பொருளாதார உதவியும் செய்தனர். மேலும் நீர் நிலைகளை தூர்வாருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த வரையில் நீராதாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.  
    ×