என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார் என்கிறது விசிக.
- நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் எழுச்சி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் எனக் கூறினார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி அமைத்ததும் ஸ்டாலின் அப்படியே அப்செட் ஆகிவிட்டார். சட்டசபையில் திடீரென ஸ்டாலின் எழுந்து, என்னைப் பார்த்து பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் அதிமுக-வில் இருக்கிறாரா? திமுகவில் இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. அதிமுக கட்சி நம்ம கட்சி. நாம் யார் கூட வேண்டுமென்றாலும் கூட்டணி வைப்போம். இவர் ஏன் சட்டமன்றத்தில் பதறுகிறார். பயம். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.
பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்து திமுக-வின் கூட்டணி கட்சிகளும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கிறார் எனக் கூறினார். அதிக சீட் தருவதாக கூறினார் என விடுதலை சிறுத்தைகள் கூறுகிறது. நாங்கள் எங்கே சொன்னோம். நீங்கள் எங்களை வைத்து அடையாளம் படுத்தாதீர்கள். திமுக கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கட்சியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்தால் விழுங்கிவிடும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை.
- 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியை மேம்படுத்த உத்தரவு.
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவினை 2021-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவைப் போற்றும் வகையிலும், அந்தப் பேரரசனின் அழியாப் புகழினை உலகிற்குச் சொல்லும் வகையிலும், ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான திட்டம் மற்றும் ஆரம்ப கட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
மாமன்னன் ராஜேந்திர சோழன் கடாரம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை வெற்றிகண்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் இந்த வருடம் 23.07.2025 ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அரியலூர் மாவட்டம், பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி ராஜேந்திர சோழ மன்னரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஏரியாகும். ராஜேந்திர சோழ மன்னர் ஆட்சிகாலத்தில் சோழகங்கம் என்றும் அழைக்கப்பட்டது.
கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் நாட்டு மக்களின் தேவைக்காக கங்கை நீரைக் கொண்டு சோழகங்கம் என்ற ஏரியை (பொன்னேரி) ராஜேந்திர சோழன் உருவாக்கினார் என்பது திருவாலங்காட்டு செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம்.
மாமன்னன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய இந்த ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படும். மேலும், 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைத்தல், 4 வடிகால் பகுதிகளை தூர்வாருதல், 4 மதகுகளை புனரமைத்தல், 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் பிச்சனூர், குருவாலப்பர் கோவில், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை மற்றும் ஆயுதகளம் ஆகிய கிராமங்களில் 1374 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மேலும், சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடர்பு மையம், நடைபாதை சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவர், வழிகாட்டிப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள், கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
- உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது நீதிமன்றம்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அவர் தொடங்கி வைத்த நாள் முதல் மத்திய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுக-வின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்கத் தொடங்கினர்.
அதோடு எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கோடு திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என்ற அளவிற்கு முதலமைச்சர் ஒவ்வொரு குடும்பத்தையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அதிமுக-வினருமே கூட முதலமைச்சர் பின்னால் அணி திரள்வதைக் கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால் , நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுக-விற்கு நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது. மேலும் OTP மட்டும் கேட்காமல் வழக்கம்போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி திமுக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜக-வின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், "சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்" என்ற வகையில் OTP பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.!
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொது மக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில் OTP பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் நீதிமன்ற வழிகாட்டலை மதித்து அந்த நடமுறைக்கு மாற்றாக கீழ்காணும் நடமுறையை கடைபிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு கழக உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய வழிமுறைகள்:
மக்களுடன் ஸ்டாலின் App யை அனைவரும் Update செய்து கொள்ளுங்கள்.
1) OTP கேட்கும் முறை தற்போது இல்லை.
2) அலைபேசி எண் கட்டாயம்.
3) தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு அலைபேசி எண் என்ற முறை வந்துள்ளது. ஆனால் வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து அலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ளவும்.
அலைப்பேசி எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்ட அனைத்து தரவுகளும் நீக்கப்பட்டு இப்பணியை மீண்டும் தொடக்கத்தில் இருந்து தொடங்கிட வேண்டும் என்பதால் பெறப்படும் அலைபேசி எண்ணின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.
அலைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமர்பித்தால் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும்.
எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026-லும் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு ஆர்.எஸ். பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருச்சி:
வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி ஜெய் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம்,
கணபதிநகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சிநகர், எழில் நகர், அய்யம்பட்டி,
வாழவந்தான் கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இதேபோல் அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ராம்ஜி நகர், கள்ளிக்குடி, அரியாவூர், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர்குட்டப்பட்டு,
பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
- மதுரை மாவட்டம் அழகர் கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- கருவனுர், தேத்தாம்பட்டி, மந்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் அழகர் கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொய்கை கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக் கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூய நெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான் பட்டி, மஞ் சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாத்தூர் பட்டி, தொப்ப லாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுர், தேத்தாம்பட்டி, மந்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை அழகர் கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் இசக்கி தெரிவித்துள்ளார்.
- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பிறந்த நாளான 25ஆம் தேதி பயணத்தை தொடங்குகிறார்.
- நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் பயணம் நிறைவடையவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25-ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு
1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice),
2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை (Women's Right to Live Free from Violence)
3. வேலைக்கான உரிமை (Right to Employment)
4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food)
5. வளர்ச்சிக்கான உரிமை (Right to Development)
6. நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை (Right to Good Governance and Public Services),
7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education)
8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm)
9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை (Right to Sustainable Urban Development)
10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment)
ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பனதான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும்.
பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு:-
ஜூலை 25 -திருப்போரூர் (நிகழ்ச்சி தொடக்க விழா)
ஜூலை 26 செங்கல்பட்டு, உத்திரமேரூர்
ஜூலை 27 காஞ்சிபுரம், திருப்பெரும்பதூர் (காலை: வையாவூர் நத்தப்பேட்டை ஏரிகள் மாசுபாடு பார்வையிடல்
நெசவாளர்களுடன் சந்திப்பு)
ஜூலை 28 அம்பத்தூர், மதுரவாயில் (காலை: குப்பை எரிஉலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாத்தூர்)
ஜூலை 31 - கும்மிடிப்பூண்டி (காலை: அறிவுசார் நகரம் பார்வையிடல்)
ஆகஸ்ட் 1-திருவள்ளூர், திருத்தணி
ஆகஸ்ட் 2 சோளிங்கர், ராணிப்பேட்டை
ஆகஸ்ட் 3 ஆர்காடு, வேலூர் (காலை: ராணிப்பேட்டை குரோமியம் மாசு பார்வையிடல்)
ஆகஸ்ட் 4 வாணியம்பாடி, திருப்பத்தூர்
அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும்.
- வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இரவு கடம்பூர் அருகே கே.என்.பாளையம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஒட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நெடுஞ்சாலையில் புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேலாக அந்த புலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்றது. புலி நெடுஞ்சாலையில் நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். பொதுவாக இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது புலி நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
தற்போது வனப்பகுதியில் மழை பெய்து மரம் செடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால்வன விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. தற்போது கடம்பூர் அடுத்த கே.என் பாளையம் செல்லும் வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. எனவே இந்த வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை.
- அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவிப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா.
- மின் வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.
- அண்ணா நகர், ஜி.கே.எஸ். அவின்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர், பொம்மனம்பாளையம்.
கோவை:
அண்ணா பல்கலைக்கழக துணை மின்நிலையத்தில் நாளை (23-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி. காலனி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், சூரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மியா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ். அவின்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர், பொம்மனம்பாளையம்.
மேற்கண்ட தகவலை சீரநாயக்கன்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
- மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனை தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் புதிய பாஸ்போர்ட்டை வழங்கக்கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தபோது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புது பாஸ்போர்ட் வழங்கக்கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும், நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
24 மற்றும் 25-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27 மற்றும் 28-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






