என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    நேற்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற 17 மாணவ, மாணவிகளுக்கு இரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.

    இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய உச்சமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது.
    • தங்கம் விலை நேற்று 2 முறை உயர்ந்தது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.

    இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

    கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89 ஆயிரத்து 480-க்கும், கிராம் ரூ.11 ஆயிரத்து 185-க்கும் விற்பனையானது.

    புதிய உச்சமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது. நேற்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை நேற்று 2 முறை உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. 2-வது முறையாக ரூ.680 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்து 200 அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

    07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

    06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

    05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-10-2025- ஒரு கிராம் ரூ.170

    07-10-2025- ஒரு கிராம் ரூ.167

    06-10-2025- ஒரு கிராம் ரூ.167

    05-10-2025- ஒரு கிராம் ரூ.165

    04-10-2025- ஒரு கிராம் ரூ.165

    • ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
    • கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

    மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது என்று பேசினார்.

    இந்நிலையில் அப்பா, அம்மா என்ற பெயரை மாற்றி விடாதீர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உணர்வு மிக்கவர்.

    * ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.

    * தன்னை போலவே அனைவரையும் எண்ணுகிறார் இ.பி.எஸ்.

    * மருத்துவ பயனாளர்கள் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.

    * கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.

    * பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்க பயப்படுபவர்கள்.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும் முன் யோசித்து பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.
    • கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. வெல்லுகிற கூட்டணி நம் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி. அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.

    (த.வெ.க.) கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டாங்க... எழுச்சி ஆரவாரம்... இந்த கூட்டத்தின் ஆரவாரம் மு.க.ஸ்டாலின் செவியை துளைத்துக்கொண்டு போகப்போகிறது. உங்களுடைய திட்டம் நிறைவேறாது. ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் தங்களது கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு கானல் நீராக போகும். தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வளவு துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போது எல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும். தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதனை கட்டுப்படுத்தக்கோரி சட்டசபையிலும், பல்வேறு போராட்டங்கள் வாயிலாகவும் வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் சட்டம் சந்தி சிரிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் உடல் உறுப்புகளை மக்கள் விற்பனை செய்யக்கூடிய அவலம் இருந்து வருகிறது. தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான ஒரு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கிட்னி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கிட்னி முறைகேட்டை மதுரை ஐகோர்ட்டு கடுமையாக கண்டித்து உரிய விசாரணை நடத்தவும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் தனியாக சிறப்பு விசாரணை நடத்தப்படவில்லை.

    கரூர் சம்பவத்தில் 41 பேரின் உயிர்கள் பலியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு, இரவாக அங்கு சென்றுள்ளார். உடனடியாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?. அதிகாரிகளை வைத்து அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

    அரசியல்வாதிகள் அரசியல் பேசலாம். ஆனால் அதிகாரிகள் அரசியல் பேசலாமா?. இதில் இருந்து கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம்.

    கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். எனவே, மக்களுக்கு நியாயம், உண்மை தெரிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்.

    தி.மு.க. ஆட்சி அமைந்து 53 மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் உங்களுக்கு 7 மாதங்கள் தான் ஆயுட்காலம். விரைவில் தி.மு.க. ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • தேவி ஈஸ்வரி நகர், விவேகானந்த நகர், தென்றல் நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், செந்தில் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    மயிலாப்பூர்: டிடிகே சாலை, பீமன்னா முதலி 1வது மற்றும் 2வது தெரு, சிபி ராமசாமி தெரு, பீமன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்தா சாலை, சிவி ராமன் சாலை, டாக்டர் ரெங்கார்ட், ஆனந்தபுரம், ஸ்ரீ லப்தி காலனி, சுந்தரராஜன் தெரு, லம்பேத் அவென்யூ, அசோகா தெரு, சுப்பிரமணியன் சல்லம் தெரு, மேரிஸ் சாலை, ஆர்.ஏ.புரம், விசாலாட்சி தோட்டம், வி.கே.அய்யர் சாலை, ஸ்ரீனிவாசா சாலை, வாரன் சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ஜெத் நகர் 1 முதல் 3 தெரு, டிவி பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி கார்டன் 1 முதல் 3 தெரு, தெற்கு மாட தெரு, ஜே.ஜே. சாலை, டிரஸ்ட்பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீநிவாஸ் சாலை, ஸ்ரீநிவாசாரா கோலோன், சீதம்மாள் பகுதி ஸ்ரீனிவாஸ் கோலன் கார்டன் தெரு, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோவில் தெரு.

    பெசன்ட் நகர்: 4வது அவென்யூ, ஊரூர் ஆல்காட் குப்பம், தாமோதரபுரம், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், வெங்கரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், வசந்தா பிரஸ் ரோடு, பிரிட்ஜ் ரோடு.

    திருமுல்லைவாயல்: போண்டேஸ்வரம் மாகரல், தாமரை பாக்கம், கரணி, சரஸ்வதி நகர் சிடிஎச் சாலை, ஆர்த்தி நகர், கொம்மாகும்பேடு, தேவி ஈஸ்வரி நகர், விவேகானந்த நகர், தென்றல் நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், செந்தில் நகர், ஜேபி நகர், பவர் லைன் சாலை.

    ஆவடி: காந்தி நகர், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டிப்போ, எச்விஎஃப் சாலை, பிவி புரம், ஓசிஎஃப் சாலை.

    திருமங்கலம்: அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், W-பிளாக், B, C மற்றும் D பிரிவு, 11வது முதல் 20வது பிரதான சாலை, பேஸ் பில்டர்ஸ் பிளாட்கள், மெட்ரோசோன் பிளாட்கள், NVN நகர், திருவள்ளீஸ்வரர் நகர், CPWD குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, எமரால்டு பிளாட்கள், கிளாசிக் அபார்ட்மென்ட்கள் சத்யசி நகர், வெல்கம் காலனி பிளாக் 1 முதல் 49A வரை, பென் பவுண்டேஷன்ஸ், டிவி நகர், ஜேஎன் சாலை, ஆசியாட், ரோகிணி, பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L, Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், மங்கலம் காலனி, 12வது மெயின் ரோடு AF பிளாக், 2வது அவென்யூ C பிளாக், நேரு நகர், 15வது மெயின் ரோடு 11வது மெயின் ரோடு, AE பிளாக்.

    • 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
    • காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 4½ ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் சார்பாக ஜாக்டோ-ஜியோ முன்வைத்த கோரிக்கைகளில் சரண் விடுப்பு ஒப்படைப்பு தவிர வேறு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 16-ந்தேதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்த அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதேபோல, வரும் நவம்பர் 18-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஜய் வீட்டில் இன்று அதிகாலை வெடிகுண்டு வெடிக்கப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

    மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளது.

    இந்நிலையில், கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

    சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்திவு செய்துள்ளனர்.

    இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார். பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.

    பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் கடந்த 6-ந்தேதி மாலை 4.30 மணியளவில் பலியானோர் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

    கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமார் அம்மா, தங்கை ஹர்ஷினியுடன் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்க கூடாத நிகழ்வு நடந்து விட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு துணை நிற்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன்" என தனுஷ்குமார் தாயார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசியுள்ளார்.

    தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பலியானோர் குடும்பத்துடன் வீடியோ காலில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

    கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுபத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய், விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க காவல்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். 

    • எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    • 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று 30 பேரையும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 47 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

    இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இன்று நடந்த போட்டியில் புனேரி பல்தான், யு மும்பா அணிகள் மோதின.

    இதில் சிறப்பாக ஆடிய புனேரி பல்தான் 37-27 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி பல்தான் அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. தபாங் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

    • “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
    • உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை சென்னையில் நடைபெறும் இடங்கள் குறித்து பார்க்கலாம்..

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் ரெட்டேரி, ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள உமாயா மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-37ல் வியாசர்பாடி, எம்.கே.பி நகர் 3வது பிரதான சாலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-86ல் அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனியில் உள்ள ஶ்ரீ வாரு பார்த்தசாரதி பேலஸ், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், விளையாட்டு திடல் தெருவில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-123ல் கே.பி.தாசன் தெருவில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-131ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாய கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-167ல் நங்கநல்லூர், 100 அடி சாலையில் உள்ள ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-179ல் பெசன்ட் நகர், மீன் சந்தை அருகில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    ×