என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பணிகள் அனைத்துக்கும் பேக்கேஜிங் டெண்டர் முறையை பின்பற்றி காண்டிராக்டர்களுக்கு பணிகள் வழங்கப்பட நடவடிக்கை.
    • இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார், ராயர், ரெங்கராஜன் உள்ளிட்ட 8 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நாங்கள் அனைவரும் தமிழக அரசின் முதல் நிலை காண்டிராக்டர்கள். திருச்சி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.

    இந்தப் பணிகளின் மதிப்பு ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரை உள்ளது. இதில் மொத்தம் 49 சாலைப் பணிகள் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்துக்கும் பேக்கேஜிங் டெண்டர் முறையை பின்பற்றி காண்டிராக்டர்களுக்கு பணிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால் எங்களைப் போன்ற காண்டிராக்டர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். பல்வேறு பணிகளையும் ஒரு சிலரிடம் ஒப்படைப்பதால் சம்பந்தப்பட்ட பணிகள் முழுமையாக சிறப்பாக நிறைவேற்றப்படுவது இல்லை.

    நபார்டு வங்கி மூலம் நிறைவேற்றப்படும் சாலை பணிகளுக்கு தனித்தனியாக டெண்டர் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதுபோல பொதுப்பணித்துறையில் நடைமுறையில் இருந்த பேக்கேஜிங் டெண்டர் முறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையிலும் பேக்கேஜிங் டெண்டர் முறைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்." என குறிப்பிட்டிருந்தது.

    இதே போல மேலும் சிலரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, புதுக்கோட்டை மாவட்டத் தில் சுமார் 50 முதல் நிலை காண்டிராக்டர்கள் உள்ளனர். சாலை பணிகளுக்கான பேக்கேஜிங் டெண்டர் முறையினால் சில காண்டிராக்டர்கள் மட்டுமே பயனடைகின்றனர். இதனால் விரைவாக பணிகளை முடிக்க இயலாததால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என வாதாடினார்.

    பின்னர் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்படுவது வெவ்வேறு துறை சார்ந்த நடவடிக்கை. எனவே அவர்களின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், குறிப்பிட்ட சில காண்டிராக்டர்கள் மட்டும் முன்னேற்றம் அடைந்தால் சரியாக இருக்குமா? சிறிய காண்டிராக்டர்கள் உள்பட அனைத்து தரப்பு காண்டிராக்டர்களும் வேலை பெறுவது தான் சரியானது என கருத்து தெரிவித்தனர்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பேருந்தில் ஏற்ற முயன்றனர்.
    • காவல்துறை வாகனத்தில் தான் செல்வோம் என இந்து அமைப்பினர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள இந்து மக்களை அங்குள்ள காவல் துறையினர் தாக்கி கைது செய்து ஆலயங்களை சேதப்படுத்துவதை கண்டித்தும், இந்து மக்கள் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ் .எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பாஜக., மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அரசு பேருந்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் காவல்துறை வாகனத்தில் தான் செல்வோம் என இந்து அமைப்பினர் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு காவல்துறை வாகனம் மூலம் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

    • கடந்த 20-ந் தேதி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவு விதித்தனர்.
    • வருகிற 11-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கடந்த 2009-ம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதற்கான பணிகளை செய்து வந்த நிலையில் அந்த ஆண்டு அப்போதைய நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிதி வழங்கப்பட்ட தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தற்போது ஊருக்கு வெளியே விமான நிலைய சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில் அந்த கிராம மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், 2009 கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட நிதியை, 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் வீடுகளை இழந்த தங்களுக்கு அரசு 3 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து அதில் மீள் குடியேற்றம்-குடியிருப்புகள் அனைத்து வசதிகளுடன் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து அதுவரை தங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 13-ந் தேதி சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 20-ந் தேதி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவு விதித்தனர். மேலும் நிலம் கையகப்படுத்துதல் சட்ட பிரிவின்படி நோட்டீஸ் வழங்க வேண்டும். அதனைப் பின்பற்றி நிலங்களை கையகப்படுத்தலாம். அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    மேலும் வருகிற 11-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் இன்று மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    • உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்.
    • மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

    இதனையடுத்து இன்று திருப்பூர் மார்க்கெட் மற்றும் பூண்டு மண்டிகளில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனா பூண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

    • விடுதிக் கட்டிடங்களானது, சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டிடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனிக் கட்டிடமாகவும் கட்டப்பட்டுள்ளது.
    • 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநிலக் கல்லூரியில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால், சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும் என்று கூறி இருந்தார்.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், விடுதிகளை திறந்து வைத்து பார்வையிட்ட பின், அங்கு தங்கியுள்ள சிறப்பு மாணவ, மாணவியர்களிடம், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், வேறு என்ன வசதிகள் தேவை என்றும் வினவினர். அதற்கு அம்மாணவ, மாணவியர்கள் தேவையான வசதிகள் உள்ளது என்றும், விடுதியை அமைத்து தந்ததற்கு தங்களது நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.

    இவ்விடுதிக் கட்டிடங்களானது, சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டிடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனிக் கட்டிடமாகவும் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 64,455 சதுர அடி கட்டிட பரப்பளவில் 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

    இச்சிறப்பு மாணவ, மாணவியருக்கான விடுதிகளின் அனைத்து தளங்களிலும் தொட்டுணரக்கூடிய வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் கூடிய தரை அமைப்பு, பார்வையற்ற சிறப்பு மாணவர்களுக்கான பிரெய்லி பலகைகள், அனைத்து அறையிலும் அவசர அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொண்டர்கள் வரவர வலுக்கட்டாயமாக பிடித்து பஸ்களில் ஏற்றினார்கள்.
    • ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக ஒலிபெருக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன.

    சென்னை:

    வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மை யினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு இயக்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் தனசேகரன், கிருஷ்ணகுமார், மனோகர், சாய் சத்யன், காளிதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் லதா சண்முகம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்ட இருந்த பேனரை கட்டவிடாமல் தடுத்ததோடு ஆர்ப்பாட்டம் நடத்தாமல் தடுப்பதில் போலீசார் குறியாக இருந்தனர்.

    தொண்டர்கள் வரவர வலுக்கட்டாயமாக பிடித்து பஸ்களில் ஏற்றினார்கள். அங்கு யாரையும் கூடுவதற்கே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் அனைவரையும் பிடித்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக ஒலிபெருக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன், கரு.நாகராஜன் உள்பட இந்து அமைப்பினர் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் எழும்பூரில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்கள்.

    திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், முகாம்களில் இருந்து மக்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு, வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது.

    ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த விடியா திமுக அரசு.

    வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த விடியா திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.

    பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலினி-ன் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாலமுருகனை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பாலமுருகனுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். இங்கு விபத்து காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சமீபத்தில் பெய்த தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மானாமதுரை நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் தாழ்வாக செல்லும் மின்சார வயர்கள், மரங்களின் மீது உரசும் வயர்களால் ஏற்படும் மின்தடையானது பல நேரங்கள் கழித்த பிறகே சரி செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்தநிலையில் இது போன்ற மின்தடையால் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மானாமதுரை அருகேயுள்ள கீழபசலை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ரெயில்வே ஊழியரான இவரை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி சரிந்தார்.

    இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தயாரானார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பாலமுருகனுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    அப்போது டாக்டர்கள் வேறு வழியின்றி செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் செல்போன்களில் டார்ச் லைட்டை எரியவிடுமாறு கூறினர். அந்த வெளிச்சத்தில் அரிவாள் வெட்டு காயம் அடைந்த பாலமுருகனுக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இன்று வைரலாகி உள்ளது.

    அவசர கால சிகிச்சைக்கு கூட ஒரு ஜெனரேட்டர் வசதியோ அல்லது பேட்டரி வசதியோ இல்லாத நிலையில் ரெயில்வே ஊழியருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • காவிரி ஆற்றின் இருகரையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு சென்றன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றின் இருகரையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு சென்றன.

    நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்று 2-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பரிசல் ஓட்டிகள் பரிசலை காவிரி ஆற்றின் கரையோரம் கமத்தி வைத்தனர்.

    குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமலும், பரிசலில் பயணம் செல்ல முடியாமலும் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் சுற்றுலா பயணிகள் குளிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 85 ஆகவும் கார்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு ரூ. 525 ஆக இருந்தது ரூ.550 ஆகவும் உயர்ந்து உள்ளது.
    • இருசக்கர வாகனங்களும் இந்த கட்டண உயர்வுக்கு தப்பவில்லை.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி அடுக்குமாடி வாகன நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்தது. அப்போது ஏற்கனவே இருந்த வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மேலும் வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு மீண்டும் வெளியே கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கான வழிகள் தெளிவாக இல்லை என்று பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணம் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.5 முதல் ரூ.50 வரை அதிகரித்து இருக்கிறது.

    கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 85 ஆகவும் கார்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு ரூ. 525 ஆக இருந்தது ரூ.550 ஆகவும் உயர்ந்து உள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆகவும் 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது ரூ.1,100-ஆக அதிகரித்து உள்ளது. பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆகவும் 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது ரூ.2,205 ஆகவும் உள்ளது.

    இருசக்கர வாகனங்களும் இந்த கட்டண உயர்வுக்கு தப்பவில்லை. 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஏற்கனவே ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.35 ஆகவும், 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95 தற்போது ரூ.100 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    கோவை:

    வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவையிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டார். போராட்டத்தில் கோவை மாநகர் மாவட்டத்தை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி, வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அனுமதியை மீறி இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தையொட்டி அங்கு காட்டூர் துணை கமிஷனர் கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    முன்னதாக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவின் ஆட்சி எதிர்க்கட்சிகள் மற்றும் ராணுவத்தின் சதியால் அகற்றப்பட்டுள்ளது. அங்கு புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    சிறுபான்மை மக்களான இந்துக்கள் அதிகளவில் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள், பொருட்கள், கோவில்கள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இஸ்கான் நிர்வாகி ஒருவரை கைது செய்தனர். அவரை ஜாமினில் எடுக்க முயன்ற வக்கீல் கொல்லப்பட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அண்டை நாடான வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களை ராகுல் காந்தியோ, மம்தா பானர்ஜியோ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் வங்காள தேச இந்துக்களின் பாதுகாப்புக்காக போராட அனுமதி கேட்டோம். அதற்கும் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதேபோல் பொள்ளாச்சியில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் குண்டுக்கட்டாக ஏற்றி கைது செய்தனர்.

    30 பெண்கள் உள்பட மொத்தம் 155 பேர் கைதானார்கள். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    ×