என் மலர்
உள்ளூர் செய்திகள்
- முதலமைச்சர் மாலை அணிவித்து இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார்.
மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மாலை அணிவித்து இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
- கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்நிலையில், சாயல்குடி அருகே கொக்கரசன் கோட்டை, கொண்டு நல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், வி.சேதுரா ஜபுரம், முத்துராம லிங்கபுரம், வெள்ளையா புரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம். கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
இந்த கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், வெங்காயம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, விளாத்திகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமிபும், மாவிலோடை கண்மாய்ககளில் தண்ணீர் நிரம்பி அது காட்டாற்று வெள்ளமாக மாறி கஞ்சம்பட்டி ஓடை வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால் வி. சேதுராஜ புரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலை வழியாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனிடையே, எஸ். தரைக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வெள்ளத்தால் சாலை சேதமடைந்த போக்குவரத்து துண்டிக்கப்பட்ட காரணத்தால், டிராக்டர் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் சேதமடைந்து சாலை துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை துரித வேகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அதனைத் தொடர்ந்து நீர்மட்டமும் கிடுகிடு வென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. அணைக்கு 5531 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் 130 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த வாரம் குடிநீருக்காக 105 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 4547 மி.கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூலவைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை, வருசநாடு, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 59.02 அடியை எட்டியுள்ளது. விரைவில் 60 அடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 7787 கன அடி நீர் வருகிறது. 3424 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 55 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 665 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியான முழு கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. வரத்தும், திறப்பும் 665 கன அடி.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக நிரம்பி உள்ளது.அணைக்கு வரும் 45.03 அடி அப்படியே திறக்கப்படுகிறது.
ஆண்டிபட்டி 15, அரண்மனைபுதூர் 9, வீரபாண்டி 10.8, பெரியகுளம் 31, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 21.6, வைகை அணை 17.2, போடி 11.2, உத்தமபாளையம் 7.8, கூடலூர் 15.6, பெரியாறு அணை 0.2, தேக்கடி 6, சண்முகாநதி அணை 8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- சுமார் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை.
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆவின் பால் விற்பனை அனைத்து நகர வெளிப்புறப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் வகையில் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்பொழுது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால் அதற்கு ஏற்றவாறு 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பால் அறிமுகப்படுத்துகிறோம்.
சில்லறை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து விற்பனையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி. ரூபாய் 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெயின் அருவி கரையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன.
- வெள்ளத்தில் பெரிய அளவிலான கற்களும், மரங்களும் அடித்து வரப்பட்டதால் அருவி கரைகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று அதிகாலை முதல் மழை முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக குற்றால அருவிகளில் இதுவரை இல்லாத அளவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மெயின் அருவி கரையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன. அருவிக்கரை அருகில் போலீசார் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்த இரும்பு கூண்டு அடியோடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் சில பகுதிகளும் சேதம் அடைந்தது.
வெள்ளத்தில் பெரிய அளவிலான கற்களும், மரங்களும் அடித்து வரப்பட்டதால் அருவி கரைகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது.
இன்று காலை முதல் குற்றாலத்தில் மழை இல்லாத நிலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி , புலி அருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. எனினும் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4-வது நாளாக நீடிக்கிறது.
இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் அருவி கரைக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை முதல் வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் மாலையில் வெள்ளப்பெருக்கு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதன் பின்னர் மாலை முதல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைக்கிறார்.
- கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
கோவை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 18-ந் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது, திறமையான பணியாளர்களை உருவாக்குவது தான்.
தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் 31 அரசு பொறியியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.30.62 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மையங்களின் தொடக்க விழா வருகிற 18-ந் தேதி கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைக்கிறார்.
அத்துடன் அன்றைய தினம் மாணவர்கள் சிலருக்கு பணி நியமன உத்தரவு ஆணைகளையும் வழங்க உள்ளார். மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து நிரல் திருவிழா 2.0 என்ற திட்டமும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் துணை முதல்-அமைச்சர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கோவை-சத்தி ரோட்டில் உள்ள பெத்தேல் மாநகர பேராலயத்தில் பெந்தேகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடக்கிறது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவைக்கு வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
- காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
- இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலககுறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நந்தம் பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் , தா.மோ.அன்பரசன், கோவி செழியன், கனிமொழி எம்.பி., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தி.க.தலைவர் கி.வீர மணி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், த.மாகா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத் தினார்கள். தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை தொடர்ந்து இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு பின்னர் வீட்டு அருகே உள்ள எல்.அன்.டி காலனியில் உள்ள மின் மயானத்துக்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
- கள ஆய்வுகள் தொடர்பான செயல்பாடுகள் குறித்து அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.
சென்னை:
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது.
அதன்படி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அவைத் தலைவர் தமிழ் மகன்உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 2523 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருக்கக்கூடிய 1000 சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் இன்றைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
பொதுக்குழு கூட்ட மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுக்குழுவில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.
கள ஆய்வுகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை மரணம் அடைந்தார்.
ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி வரலட்சுமிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
- அந்தமான் கடல் பகுதியில் தற்போது வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவே நீடிக்கிறது.
- நாளை மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் தற்போது வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாகவே நீடிக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
- வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- நாளை இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஆண்டுக்கொரு முறை கார்த்திகை மாத பவுர்ணமியை யொட்டி, 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் புற்றுவடிவ லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்படும்.
அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது தங்க முலாம் பூசிய நாக கவசம் திறக்கப்பட்டது. தொடர்ந்து புனுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறநிலைய துறை உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும். பின்னர் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.
- அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.
- கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.
திமுக அரசு மீது அதன் கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* தேர்தல் வரும்போது மட்டும் முக்கியத்துவம் தரப்படும் கூட்டணி தலைவர்கள் தற்போது ஒதுக்கப்படுகின்றனர்.
* மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வரும்போது எனக்கு தகவல் அளிக்கவில்லை.
* அமைச்சர்கள் எங்களிடம் பேசினால் கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடுமா?
* தேர்தலின்போது அமைச்சர்கள் பேசுவர்; தேர்தல் முடிந்ததும் அமைச்சரின் உதவியாளர்கள்தான் பேசுவார்கள்.
* தமிழகத்தில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரின் கவனத்திற்கு உண்மை தகவல்கள் செல்லவில்லை.
* அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.
* கேள்வி கேட்டால் கூட்டணி கட்சி தலைவர்களை புறக்கணிப்பார்கள். தேர்தலின்போது மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்.
* திமுக ஆட்சியிலும் கூட அதிகாரிகள் தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்.
* மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
* மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடதமிழகம் என்ன பாவம் செய்தது.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரணம் வழங்குகின்றனர்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு நியாயம்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 பிச்சையா போடுகிறீர்கள்.
* கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.
* சட்டசபையை குறைந்தது 10 நாட்களாவது நடத்துங்கள் என கதறினேன். ஆனால் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறினார்.






