என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது.
    • 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது என்றார்.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ரியான் பராக் கூறியதாவது:

    எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது. 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது.

    இந்த தோல்விக்கான பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் நின்று போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே வீசினர்.

    பவுலிங்கிலும் கடைசி ஓவர் மட்டும்தான் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. சந்தீப் சர்மாவை நம்பினோம். ஆனால், அவருக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை. 165-170 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தி விடுவோம் என நினைத்தோம்.

    கடைசி ஓவர் நாங்கள் நினைத்தபடி செல்லவில்லை என்பதால் அது நடக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் சில தவறான பந்துகளை வீசினால் அது ஒட்டுமொத்த போட்டியையுமே பாதிக்கும் என்பதற்கு இது உதாரணம் என தெரிவித்தார்.

    • அவுட்டானவுடன் வைபவ் கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார்.
    • அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், ஆட்டம் இழந்தவுடன் வைபவ் திடீரென கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார். அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் 36-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் அரை சதம் கடந்து 66 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய அப்துல் சமத் 10 பந்தில் 4 சிக்சர் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதம் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அசத்தினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா 8 ரன்னில் வெளியேறினார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால்- ரியான் பராக் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 39 ரன்னில் அவுட்டானார்.

    ஹெட்மயர் 12 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தானுக்கு கிடைத்த 6வது தோல்வி ஆகும்.

    லக்னோ சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

    • ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.
    • மருத்துவர்கள் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சேர்ந்தவர் மணிஷ். இவருக்கு சமிபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கோட்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களின் அவரின் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறிக்கப்பட்டிருந்தது. மணிஷுக்கு துணையாக அவரது தந்தை ஜெகதீஸ் மருத்துவமனையில் உடன் இருந்தார். ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.

    சம்பவத்தன்று மணிஷ் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே ஜெகதீஸ் இருந்தார். அங்கு வந்த மருத்துவர்கள் சிலர் ஜெகதீஸ் என்பவரை சிகிச்சைக்காக அழைத்துள்ளனர்.

    அப்போது இவர் தனது கையை உயர்த்தினார். பின்னர் அந்த மருத்துவர்கள் ஜெகதீஸை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவரது கையில் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர்.

    இதனை அறிந்த அவரது மகன் மணிஷ் அதிர்ச்சியடைந்தார். இதனால் உடனடியாக அங்கு சென்ற மணிஷ் மருத்துவர்களிடம் வாக்கு வாதம் செய்தார்.

    இதனையடுத்து அவரது தந்தைக்கு கையில் 6 தையல் போடப்பட்டு திருப்பி அனுப்பி உள்ளனர். நோயாளி என நினைத்து மற்றொரு நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
    • விராட் கோலி அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது.

    பெங்களூரு சார்பில் ஹேசில்வுட், குருணால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பில் சால்ட் 65 ரன்னும், விராட் கோலி 62 ரன்னும், படிக்கல் 40 ரன்னும் அடித்தனர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.

    இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்தார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

    • பலூனின் ஒரு பக்க கயிற்றை பிடித்தபடி தரையில் நின்றுகொண்டிருந்தார்.
    • பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதும் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தின் 35வது ஆண்டு நிறுவன விழா கடந்த மூன்று நாட்களாக கொண்டாடப்பட்டது.

    நிறைவு விழாவான நேற்று ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு காலை 7 மணியளவில் நடக்க இருந்தது. பலூனை இயக்கும் நிறுவனத்தின் ஊழியர் வாசுதேவ் காத்ரி(40 வயது) பலூனின் ஒரு பக்க கயிற்றை பிடித்தபடி தரையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ராச்சத பலூன் வான் நோக்கி பறக்க தொடங்கியது. இதில் கயிற்றுடன் அவர் மேலே சுமார் 100 அடி உயரத்திற்கு காற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். பின் கயிறு அறுந்து அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தின்போது அவர் மேலே இழுத்துச்செல்லப்பட்டு கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பலூன் இயக்குவதில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதும் வாசுதேவ் காத்ரியின் எதிர்பாராத மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார்.

    ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு 'விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ளது.

    ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்து போலீசாரிடம் புகார் அளித்த பின்பு இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

    சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அறக்கட்டளையின் அலுவலகத்தை சோதனை செய்து காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காவல் அதிகாரி, பெண்களை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள். காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார்.

    சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இது மாதிரியான 1500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று தெரிவித்தார்.

    • கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.
    • ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது.

    ராஜஸ்தானில் தலித் தலைவர் வந்து சென்றபின் கங்கை நீரை தெளித்து கோவிலை சுத்தப்படுத்திய பாஜக மூத்த தலைவர் ஞான் தேவ் அஹுஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கடந்த வாரம் ராம நவமி தினத்தன்று, ஆல்வாரில் உள்ள ஒரு ராமர் கோவிலில் பிராண-பிரதிஷ்ட விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திகா ராம் ஜூலியும் பங்கேற்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞான்தேவ் அஹுஜா மறுநாள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ராமர் இருப்பதை மறுப்பவர்களின் வருகையால் கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.

    இதற்குப் பிறகு, ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது. இதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

    "இது எனது தனிப்பட்ட நம்பிக்கை மீதான தாக்குதல் மட்டுமல்ல, தீண்டாமை என்ற மனிதாபிமானமற்ற மனநிலையை ஊக்குவிக்கும் செயல். அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் நேரடி அவமதிப்பாகும்" என்று திகா ராம் ஜூலி தெரிவித்தார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தனது எக்ஸ் பக்கத்தில், '21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாகரிக சமூகத்தில் இத்தகைய குறுகிய மனப்பான்மை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சிந்தனையுடன் உடன்படுகிறதா என்று பாஜக பதிலளிக்க வேண்டும்?" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் சர்ச்சை வலுத்ததால் ஞான்தேவ் அஹுஜாவை பாஜக கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஞான்தேவ் அஹுஜா தனது செயலுக்கு மூன்று நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
    • இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

    ஜெய்ப்பூரில் நகர்கர்க் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவில் நேற்று மாலை சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

    அங்கிருந்த மக்கள் காரை துரத்திச் சென்று பிடித்ததில் கார் ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆனால் படுகாயமடைந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குடிபோதையில் கார் ஓட்டிய நபரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது. 

    • வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இதையடுத்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் பீவார் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கரில் இருந்து நேற்று நச்சு வாயு கசிந்தது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலை உரிமையாளர் சுனில் சிங்கால் (47) நேற்று இரவும்,தயாராம் (52), நரேந்திர சோலங்கி ஆகியோர் இன்றும் இறந்தனர்.

    பாடியா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக இயக்கப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நைட்ரிக் அமிலக் கசிவு காரணமாக நேற்று இரவு 53 பேர் நோய்வாய்ப்பட்டனர். வாயுவை சுவாசித்த பின் அருகிலுள்ள பலர் நோய்வாய்ப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    சுவாசப் பிரச்சனை மற்றும் வாந்தி போன்ற புகார்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர் அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாயுக்கசிவைத் தொடர்ந்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவை அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
    • வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
    • கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.

    ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

    கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

    கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×