என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முதலமைச்சர் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.
    • தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.

    புதுச்சேரி:

    ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நடந்த திருப்பாவை முற்றோதல் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததுடன் அறவழியில் தன்னுடையபோராட்டத்தை தொடங்கி தனக்குத் தானே அடித்துக் கொண்ட சாட்டையடி, தி.மு.க. ஆட்சிக்கான சவுக்கடி.

    சென்னையின் பிரதான பகுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவத்தில், பொறுப்பாக பதில் அளித்து இருக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.

    ஆனால், சம்பந்தமே இல்லாமல் தி.மு.க. பிரமுகர்களெல்லாம், இது குறித்து கருத்தும் விளக்கமும் சொல்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.

    அண்ணாமலை நடத்திய போராட்டத்தை தான் விமர்சிக்கின்றனர். இதன் வாயிலாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சி களும் மக்கள் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அண்ணா பல்கலை மாணவி பிரச்சினையில், தி.மு.க. அரசு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க உதவியாக இருக்கக்கூடாது.

    தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு தான். நிர்வாக செலவுகள், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தல், வரி வருவாயை அதிகரித்தல் உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

    பா.ம.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி சரி செய்து கொள்வர். இதில் தலையிடுவது அர்த்தமற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறினார்.
    • முகுந்தன் என்பவர் அன்புமணியின் சகோதரி மகன் ஆவார்.

    புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

    முகுந்தன் என்பவரை மாநில இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.

    நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.

    எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

     

    அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.

    சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.

    பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.

    முகுந்தன் என்பவர் அன்புமணியின் சகோதரி மகன் ஆவார்.

    • புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன.

    புதுச்சேரி:

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே இருக்கிறது. இதையொட்டி புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி தயாராகி வருகிறது. இப்போதே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    இதன் காரணமாக அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் சுற்றி வருகின்றன.

    இதற்கிடையே புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கானவர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். ஒயிட்டவுன் பகுதியில் வாகனங்கள் செல்வதை தடுக்க செஞ்சிசாலை, ஆம்பூர் சாலை சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் கடலில் இறங்காமல் தடுக்கவும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இரும்பு, மரக்கம்புகளை வைத்து இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங் தலைமையில் போலீசார் நேற்று இரவு கடற்கரையில் ஆய்வு செய்தனர். 

    • பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. மனைவி மீது தாக்குதலை கண்டித்து மறியல்.
    • தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை ஜோதி நகரை சேர்ந்தவர் பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவியை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் தாக்கினர்.

    அதை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. அசோக்பாபு தலைமையில் அக்கட்சியினர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு முதலியார் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.


    இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையறிந்து ஆத்திரமடைந்த முதலியார் பேட்டை, தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத்தின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், நள்ளிரவு 12 மணியளவில், முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து எப்படி வழக்குப்பதிவு செய்யலாம் என ஆக்ரோஷத்தோடு இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசாரை தள்ளி தாக்க முயற்சி செய்தனர்.

    இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
    • தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு 5, 8-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது.

    குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகியுள்ளது.

    புதுச்சேரியிலுள்ள பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளில் மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகியுள்ளது. முதல்முறையாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வுகளையும் புதுவை மாணவர்கள் எழுத உள்ளனர்.

    இந்த நிலையில் கட்டாய தேர்ச்சி ரத்து குறித்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்தார். இதயைடுத்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரி மத்திய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவை புதுச்சேரி அரசு ஏற்று செயல்படும். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும். அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியாக 114 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    அதில் விடுபட்ட 131 பாரம்பரிய கட்டிடங்கள் 2-ம் கட்ட பட்டியலில் சேர்த்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியலில் பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தனியார் கட்டிடங்களும் இடம் பெற்றன. இந்த 2 பட்டியலிலும் சேர்த்து இதுவரை 245 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கிடையில் புதுச்சேரி புல்வார்டு பகுதியில் பிரெஞ்சு கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ள தமிழர் பாரம்பரிய கட்டிடங்களும் தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

    இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் 3-வது பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலும் வெளியாக உள்ளது.

    புல்வார்டு பகுதி மட்டுமின்றி அதனையொட்டிய பகுதிகளுக்கு அப்பாலும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. குறிப்பாக ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகள் உள்ளன.

    இதுமட்டுமின்றி வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவில், வில்லியனுார் லூர்து மாதா ஆலயம் உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. எனவே இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன. இதன் மூலம் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் புதுச்சேரி இடம் பெறவுள்ளது.

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலில் இந்திய மாணவர் சங்கம்(SFI) மற்றும் பகுஜன் மாணவர் கூட்டமைப்பு (BSF) கூட்டணி வெற்றி பெற்றது.

    பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தல் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.

    பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி சமுதாயக்கல்லூரி, காரைக்கால், அந்தமான், மாகி பகுதியில் உள்ள கல்லூரிகளில் உள்ள 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மாணவர்கள் வாக்களித்தனர்.

    சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ். எப்.ஐ.) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்களை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

     வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்நிலையில் 58 இடங்களில் SFI வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். SFI கூட்டணியில் போட்டியிட்ட BSF வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். காயத்ரி எஸ். குமார் கவுன்சிலில் தலைமையேற்றார்.

    வெற்றி பெற்ற கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பாரதரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கட்டிடத்தின் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • பஸ் என்ஜின் பழுதாகி தீப்பற்றி எரிந்தது.
    • பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி கடற்கரை, மெரினா கடற்கரை, ஈடன் பீச், சுண்ணாம் பாறு படகு குழாம், திருக்காஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் புதுச்சேரி அரசு சாலை போக்குரவத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை பி.ஆர்.டி.சி. மினி பஸ் சின்ன வீராம்பட்டினம் பகுதிக்கு சென்றுவிட்டு, 6 பெண்கள் உட்பட 10 சுற்றுலா பயணிகளுடன் திரும்பி வந்து கொண்டிருந்தது.

    அப்போது ஓடைவெளி அரசு ஆரம்பப் பள்ளி எதிரே வந்தபோது, பஸ்சின் என்ஜின் பழுதாகி தீப்பற்றி எரிந்ததுடன் அதிலிருந்து அதிக புகை வெளியேறியது. இதை கண்டதும் சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர்.

    இதையடுத்து டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். அப்போது உயிர்பிழைத்தால் போதும் என்று எண்ணி பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.

    பின்னர் டிரைவரும், கண்டக்டரும், என்ஜினில் இணைக்கப்பட்ட பேட்டரி வயரை கழற்றி விட்டு தீ விபத்தை தடுத்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 70 பேர் பயணம் செய்ய முடியும்.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து விமான சேவை தொடங்கி வைக்க அழைப்பு.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி லாஸ்பேட்டை யில் உள்ள விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான சேவை கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க இண்டிகோ நிறுவனம் முன்வந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    புதுச்சேரி விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன சேவைக்காக பிரத்தியேக அலுவலக அறைகள், தொழில்நுட்ப அறைகள், இண்டிகோ நிறுவனம் ஊழியர்கள் பணியாற்றுவதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விமான சேவை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளது.

    புதுவையில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதில் 70 பேர் பயணம் செய்ய முடியும்.

    இந்தநிலையில் இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை சட்டசபை வளாகத்திற்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

    அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தற்பொழுது கிடைத்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.

    அதன் காரணமாக 17.12.2024 முதல் 19.12.2024 தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மற்றவர்கள் புதுச்சேரி கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் இந்த அறிவிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அவ்வப்பொழுது வெளியிடப்படும் அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
    • புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் களைகட்டத் தொடங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது.

    இதுதவிர இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டு பிறக்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி இப்போதே தயாராகி வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரை ஒரு வார காலத்திற்கு புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.

    அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பீச் ரெசார்ட்டுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஓட்டல்களில் உள்ள அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் களைகட்டத் தொடங்கி உள்ளது.

    மேலும் டிசம்பர் 31-ந் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் மூலம் பிரபலங்கள் பங்கேற்க கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அளவில்லாத அசைவ உணவுடன் மது பானங்களும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவும் தொடங்கியுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி புதுச்சேரி நகர பகுதிகளான அண்ணாசாலை, நேருவீதியில் மின்விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த வீதிகள் மின்னொளியில் ஜொலிப்பது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது.

    புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இது உள்ளது.

    போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பணியில் இருந்தாலும் இந்திரா காந்தி சிக்னல், ராஜிவ் காந்தி சிக்னல், நெல்லித்தோப்பு, கொக்கு பார்க் சிக்னல்களில் நாள் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரும் போது மட்டும் போக்குவரத்து போலீசார் தனி கவனம் செலுத்துகின்றனர்.

    புத்தாண்டை கொண்டாட இப்போதே வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவியத்தொடங்கி உள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நேற்று மாலை புதுச்சேரி நகர பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டது.

    • வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது.
    • வரிகள் செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் பார்சலில் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய தபால் துறை மூலம் நம் நாட்டில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஒரு பார்சலில் ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அனுப்பினால் அதை சேவை ரீதியாக எடுத்துக் கொள்ளாமல், வணிக ரீதியாக கருதப்படும் என பல நாடுகள் சர்வதேச தபால் துறை அமைப்பிற்கு தற்போது தெரிவித்துள்ளன.

    உதாரணத்திற்கு உங்களின் உறவினர் ஒருவர் பிரான்சில் இருக்கிறார்.அவருக்கு நீங்கள் தபால் துறை பார்சல் மூலம் 3 சட்டைகள் அனுப்புகிறீர்கள். இதில் 2 சட்டைகள் மட்டுமே சேவையாக கருதப்படும். 3-வது சட்டை வணிக ரீதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதனை ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக கருதப்படுகிறது.

    இதனால் பார்சல் அனுப்புவோர் ஏற்றுமதிக்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள் ஐ.இ.சி., பதிவு எண் மற்றும் ஜி.எஸ்.டி., வரிகளுக்கு செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் அந்த பார்சலில் இருக்க வேண்டும்.


    இந்த ஆவணங்கள் இல்லையெனில் அந்த பார்சல் டெலிவரி செய்யப்படாமல் உடனடியாக திருப்பி அனுப்பப்படும். இதற்கு ஆகும் சேவை கட்டணங்களை செலுத்திய பின்னரே பார்சல் அனுப்பியவருக்கு பொருள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    இந்தியாவில் இருந்து பார்சல்கள் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

    இதனால் தங்கள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவது டன், அன்னிய செலாவணி வருவாயும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல்வேறு நாடுகள் இதுபோன்ற பார்சல்களை தடை செய்து வருகின்றன.

    இதுபோல் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூலம் அனுப்பப்பட்ட சில பார்சல்கள் இதுபோன்ற பிரச்சனையில் திருப்பி அனுப்பப்பட்டதால் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    ×