என் மலர்
புதுச்சேரி
- பெரியார் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் தான் உண்மைகள் தெரிய வரும்.
- அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாக பேசுவதா?
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புதுச்சேரியில் சீமான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தந்தை பெரியார் பேசியது தொடர்பான அனைத்து ஆதாரங்களை நீங்கள் வைத்துக்கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?
* நாங்கள் தான் ஆதாரங்களை காணொலியில் வெளியிட்டு கொண்டிருக்கிறோம்.
* பெரியார் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் தான் உண்மைகள் தெரிய வரும்.
* கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எதிரிகள் என பெரியார் சொல்வதை எப்படி ஏற்கிறீர்கள்?
* நமக்கு கீழே உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரிகள் என்றால் நாம் யார், உங்களில் கீழானவர் யார்?
* தமிழர்கள் என பேசுவது எந்த இனத்திற்கு எதிரி?, திராவிடன் என்பது யார்? இதற்கெல்லாம் சான்று கேட்காதது ஏன்?
* 3 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் யாரும் படிக்கவில்லையா?
* அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாக பேசுவதா?
* பெரியார் வந்த பின்னர் தான் படித்தோம் என்றால் அதற்கு முன்னர் திருக்குறள் உள்ளிட்ட நூல்கள் வந்தது எப்படி?
* பெரியார் வருவதற்கு முன்பு 3,000 ஆண்டுகளாக யாரும் படிக்கவில்லையா? என்று கூறினார்.
- இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் வருகிற 12-ந் தேதி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு முன் மாதிரியாக போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும் என போக்குவரத்து சீனியர் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், நிர்வாக சீர்த்திருத்த துறை அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மிஷன் ஜீரோ திட்டத்தின் கீழ் உயிரிழப்பினை தடுக்க வருகிற 12-ந் தேதி முதல் ஹெல்மெட் உபயோகத்தை கட்டாயமாக அமல்படுத்த உள்ளது. இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும். இது உங்களது தனிப்பட்ட பாதுகாப்பின் நலனுக்காக அறிவுறுத்தப்படுகிறது.
ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நிறுத்தி வைக்கப்படும்.ஹெல்மெட் அணியாதது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகளின் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும்.
அனைத்து நிர்வாக செயலாளர்கள், டி.ஜி.பி., துறைத் தலைவர்கள் இதனை உறுதி செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அப்பா பைத்தியம் சாமி கோவிலில் அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம்.
- ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்தரி அர்ஜூன்ராம் மேக்வால் புதுச்சேரிக்கு வந்தார்.
கவர்னர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்துவிட்டு, கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார்.
அங்குள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து, மத்திய மந்திரிக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அதன்பின்பு, முதல்-அமைச்சர் வீட்டில் ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.
- 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆன்மிக பக்தர்களும் பாதயாத்திரை.
- 28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை.
புதுச்சேரி:
புதுச்சேரி அபிஷேக பாக்கம் அருகே தமிழக பகுதியான சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் ஆலயம் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு உலக நன்மைக்காக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் தீர்த்தம் வழிபாட்டு மன்றம் சார்பில் பாதயாத்திரை நடைபெறும்.
28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை புதுவை வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து இன்று காலை தொடங்கியது.
யாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமனார் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்து தொடங்கி வைத்தார்.
வேதநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினர்களின் நாமசங்கீர்த்தனத்துடன் யாத்திரை சென்றது. இதில் பெரியாழ்வார் திருத்தொண்டு சபை, வணிக வைசிய ஸ்ரீஹரிகர பஜனைக்குழு, பாண்டுரங்க ரகுமாயி ஆன்மிக கைங்கர்ய சபா, வேங்டாத்திரி பஜனை கூடம், பாண்டவதூதன் சங்கீர்த்தன சபா உட்பட பல்வேறு சபை குழுவினர் பங்கேற்றனர்.
மேலும் யாத்திரையில் தமிழகம்-புதுவையை சேர்ந்த திருமாலடி யார்களும், 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆயிரக்கணக்கான ஆன்மிக பக்தர்களும் சிங்கிரி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றனர். யாத்திரை கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுவை, கடலூர் சாலை வழியாக சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை யாத்திரை சென்றடைந்தது. புனித யாத்திரையையொட்டி வைசியாள் வீதி வாசவி மண்டபத்தில் முருகுமணியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
பாத யாத்திரையை யொட்டி புதுவையில் இருந்து சிங்கிரிகோவில் வரை பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், தேனீர் வழங்கப்பட்டது.
புனித பாத யாத்திரைக்கான ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ மேற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.
- புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத.
இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற போது பைக் விபத்து.
- கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்கள் தானம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜய குமார். இவரது மகன் பிரேம்குமார் (வயது19) இவர் கடந்த 31-ந் தேதி இரவு 10 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது கே.டி.எம். டியூக் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி இ.சி.ஆர். சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் இறங்கியதில் பிரேம்குமார் நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அங்கி ருந்தவர்கள் மீட்டு, பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மூலக்குளம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச் சாவு அடைந்தார்.
அதனால் அவரது உடல் உறுப்புகளான கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்களை தானம் கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.
அதனைத் தொடர்த்து, 5 உறுப்புகளும் அந்த மருத்து வமனை டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. ஒரு கிட்னி அதே மருத்துவமனையில் பெறும் சிகிச்சை 47 வயது நபருக்கு பொருத்த கொண்டு செல்லப்பட்டது.
மற்றொரு கிட்னி இந்திரா காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் 24 வயது பெண்ணிற்கு பொருத்துவதற்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்லீரல் கிருமாம்பாகம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 59 வயது ஆண் நபருக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப் பட்டது. இரு கண்கள் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டன.
இந்த உடல் உறுப்புகள் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் சிக்னல்கள் மற்றும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு அதிவிரைவாக அந்தந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறந்த வாலிபர் பிரேம்குமாரால், 7 பேருக்கு உடல் உறுப்பு தானம் கிடைக்கப் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தீபங்கர்சென் எம்.எல்.ஏ.. தனது குடும்பத்தினருடன் தங்கினார்.
- குடும்பத்தினருடன் ஆட்டோவில் வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு, பெலோனியா தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தீபங்கர்சென். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தீபங்கர் சென் எம்.எல்.ஏ., தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக புதுச்சேரி ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அவர் தங்குவதற்கு ஓட்டல்களில் அறைகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், புதுச்சேரி அஜிஸ் நகரில் உள்ள மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தீபங்கர்சென் எம்.எல்.ஏ.. தனது குடும்பத்தினருடன் தங்கினார்.
கட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று காலை குடும்பத்தினருடன் ஆட்டோவில் புறப்பட்ட தீபங்கர் சென் எம்.எல்.ஏ., புதுச்சேரி சட்டசபை வந்தார். ஆட்டோவில் குடும்பத்தினரை காத்திருக்க வைத்துவிட்டு, தனியாக சட்டசபைக்குள் சென்ற தீபங்கர் சென் எம்.எல்.ஏ.,வை சபை காவலர்கள் நிறுத்தி விசாரித்தனர்.
தான் எம்.எல்.ஏ., என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்த பின்பு சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். சட்டசபைக்கு வந்த தீபங்கர் சென் எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
சில நிமிடம் அமைச்சருடன் பேசிய பின்பு, சட்டசபையில் இருந்து மீண்டும் குடும்பத்தினருடன் ஆட்டோவில் புறப்பட்டு, புதுச்சேரியில் பல இடங்களை பார்வையிட்டுவிட்டு புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரான ஆரோவில் சென்றார்.
இதுகுறித்து தீபங்கர் சென் எம்.எல்.ஏ., கூறுகையில், 2 நாட்களுக்கு முன் தமிழகம் வந்தேன். தற்போது புதுச்சேரியை சுற்றிப் பார்க்க வந்துள்ளேன். குடும்பத்தினருடன் ஆட்டோவில் வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரி அழகாக உள்ளது. இங்கு உள்ள இலவச திட்டங்கள் போல் திரிபுராவில் ஏதும் கிடையாது. குடும்பத்தினருடன் ஆட்டோவில் பயணிப்பது பெரிய விஷயம் இல்லை' என்றார்.
- புதுவையில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது.
- பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார்.
புதுவையில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. இதனிடையே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி புதுவையில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55 சதவீதத்தில் இருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. டீசல் மீதான வாட் வரி புதுவையில் 8.65 சதவீதத்தில் இருந்து 11.22 சதவீதமாகவும், காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை புதுவையில் ரூ.94.26-லிருந்து ரூ.96.26 ஆகவும், காரைக்காலில் ரூ.94.03-லிருந்து ரூ.96.03 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல் டீசல் விலை புதுவையில் ரூ.84.48-லிருந்து ரூ.86.48 ஆகவும், காரைக்காலில் ரூ.84.31-லிருந்து ரூ.86.31 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் மாகியில் பெட்ரோல் விலை ரூ.91.92-லிருந்து ரூ.93.92 ஆகவும், டீசல் விலை ரூ.81.90-லிருந்து ரூ.83.90 ஆகவும், ஏனாமில் பெட்ரோல் விலை ரூ.94.92-லிருந்து ரூ.96.92 ஆகவும், டீசல் விலை ரூ.84.75-லிருந்து ரூ.86.75 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4, 29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.
- 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரியின் மொத்த வாக்காளர்களில் 53.03 சதவீதம் பெண் வாக்காளர்கள் ஓட்டளித்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளனர். 2024 பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 5,42,979 லட்சம் பெண் வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர்.
மாகி சட்டசபை தொகுதிகளில் 31 ஓட்டுச்சாவடிகளும் பெண் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடைமுறைகள் பற்றி விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 7,90,895 லட்சம் பேர் ஓட்டளித்த சூழ்நிலையில், கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 8,11,432 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். 2019 பாராளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது 2.5 சதவீதம் ஓட்டு பதிவு அதிகரித்துள்ளது. மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4,29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.
2019 பாராளுமன்ற தேர்தலில் 643 பேர் தபால் ஓட்டு பதிவு செய்திருந்தனர். இது 2024 பாராளுமன்ற தேர்தலில் 3,708 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர். நோட்டாவை பொருத்தவரை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 12,199 பேர் ஓட்டளித்து இருந்த சூழ்நிலையில், 2024 தேர்தலில் 9,763 பேர் ஓட்டளித்து இருந்தனர். 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது.
- மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நித்தியானந்தம் தரப்பினருக்கும், தொழிலதிபர் வேலழகன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனா தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறைத்துறை வார்டன்கள் கைதிகள் மோதலை தடுத்து நிறுத்தினர். மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி ஜெயிலில் பரபரப்பு ஏற்பட் டது.
கைதிகள் மோதல் தொடர்பாக சிறைத்துறையினர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி நித்தியானந்தம் தரப்பினர் 9 பேர் மீதும், ஜனா தரப்பினர் 4 பேர் மீதும் என மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயில் அடிக்கடி இதுபோன்று கைதிகள் மோதலை தடுக்கும் வகையில் ஒரு தரப்பை சேர்ந்த கைதிகளை வேறு சிறைக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
- கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர்.
புதுச்சேரி:
நாட்டிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிமானவர்கள் கூடும் இடமாக புதுச்சேரி உள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல நகர பகுதிகளில் ஓட்டல்கள், மதுபார்கள், ரெஸ்டோபார்கள், திறந்தவெளி மைதானங்களில் 31-ந் தேதி நள்ளிரவில் இசை, விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர். கடற்கரை சாலையிலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
புத்தாண்டு கொண்டாட நேற்று முதல் ஆயிரக்கணக்கான வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அருகில் உள்ள அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட கார், இருசக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு இன்று மாலை வருவார்கள்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டை கொண்டாடிவிட்டு பாதுகாப்பாக திரும்பி செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரி கடற்கரை மற்றும் நகர பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
போக்குவரத்தை முறைப்படுத்த 300 போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் என ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு பணிக்கு வந்தனர்.
மதியம் ஒரு மணி முதல் ஒயிட் டவுண் பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையிலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டுகள் மூலம் மூடப்பட்டது.
அந்த பகுதியில் வசிப்பவர்கள், ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் காவல்துறை வழங்கிய அடையாள அட்டையை காட்டி சென்றனர். நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் போலீசார் தடை விதித்தனர்.
சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த பாரதிதாசன் மகளிர் கல்லூரி, உப்பளம் மைதானம் உட்பட 10 இடங்களில் நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்தது. இங்கிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவசமாக 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர். மதுபார்களில் இரவு ஒரு மணி வரை மது விநியோகம் செய்ய கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என போலீசாருக்கு உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கேட்கும் தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்து கனிவோடு சுற்றுலா பயணிகளை அணுக வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இசை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறும். இந்தஆண்டு போலீசார் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கவில்லை.
மாநிலத்தின் எல்லை பகுதியிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
- புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
- நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருவதும், மறுபுறம் கிளம்பிச்செல்வதுமாக உள்ளனர். புத்தாண்டுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. விடுதி அறைகள் நிரம்பி வழிகிறது. ஓட்டல்களில் உணவுக்காக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். நகரம் முழுவதும் முளைத்துள்ள சாலையோர உணகங்கள், சிற்றுண்டி கடைகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
நகர பகுதியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வாகனங்கள் ஊர்ந்துசெல்கிறது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்க கடற்ரை சாலை, பாண்டிமெரீனா பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைத்துள்ளனர். போலீசார் கடலில் இறங்கி குளிப்பதை தடுத்து அறிவுறுத்தி வருகின்றனர்.

நேற்று காலை முதல் சண்டே மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு தொடர்ந்து பெய்த மழையால் நகரம், சண்டே மார்க்கெட்டில் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்தனர். கடற்கரை சாலையும் வெறிச்சோடியது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் வெளியே செல்லமுடியாமல் ஓட்டல் மற்றும் விடுதிகளில் முடங்கி போனார்கள்.
வழக்கமாக புதுவையில் டிசம்பர் மாதம் குளிர் வாட்டும். கடந்த சில நாட்களாக புதுவையில் குளிர் அதிகரித்துள்ளது. ஆனால் 2 நாட்களாக அவ்வப்போது பெய்யும் மழையால் வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாளை உச்சமாக இருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கெடுக்கும் வகையில் மழை பெய்யுமோ? என வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். அது மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்கள், மதுபார்கள் திறந்த வெளியில் பல்வேறு இசை, கலைநிகழ்ச்சிகள், மது, உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவை மழையால் சீர்குலையுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர். கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்த 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங்கை அறிந்து கொள்ள கி.யூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களிலிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
பார்களிலும், கேளிக்கை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் இரவு ஒரு மணி வரை மது வழங்க கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுவையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணியிலும் 300 போக்குவரத்து போலீசார் உட்பட 2 ஆயிரம் போலீசாரும், 500 தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பணியிடங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புத்தாண்டை வரவேற்க நாளை மாலை முதல் நள்ளிரவு வரை லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.






