என் மலர்
புதுச்சேரி
- தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி பார்வையிட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் அக்கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4,500 பேர் பங்கேற்று தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை உருவாக்கினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
மாணவ-மாணவிகள் ஒன்று சேர்த்து உருவாக்கிய அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் பார்வையிட்டு அதிகாரபூர்வமாக பதிவு செய்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.
- 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது.
- 14 பேர் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு கடன் பெற செல்போனில் உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார்.
அவர் வாங்கிய ரூ.10 ஆயிரம் கடனுக்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரி டமிருந்து ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர்.
இருப்பினும், அவரை விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பு எண்ணிலுள்ள அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர்.
இதுபற்றி அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023-ம் ஆண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும் வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-அப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார்-யார் பெயரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர், பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் இந்தியா முழுவதும் 14 பேர் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிபடையினர் விசா ரணையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷபி (வயது 37) என்பவர் கேரளாவில் உள்ள எர்ணா குளத்தில் கைது செய்யப் பட்டார். லாரி டிரைவரான முகமது ஷபி சைபர் கும்பலுடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவருடைய 3 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.10 கோடியே 65 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்க ளின் விவரங்கள் சேகரிக்கப் பட்டது. மொத்தமாக இந்த 14 பேரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து ரூ. 300 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட குஜராத்தை சேர்ந்த சித்தன் முகேஷா என்பவரை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவரின் ரூ.321 கோடி பணத்தை அமலாக்கதுறை முடக்கி வைத்துள்ளது.
மேலும் இந்த மோசடியில் தமிழகத்தை சேர்ந்த முஜிப் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். மொத்தம் 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்யப்படும் போது அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். கடன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
தற்போது புதுச்சேரி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
- வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.
ஏற்கனவே புதுச்சேரியில் சாலைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் நாள்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் வாகன ஓட்டிகள் அல்லாடி வருகின்றனர்.
இதையடுத்து புதுச்சேரி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கேமராக்கள் மூலம் கண்டறிந்து ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நகரின் முக்கிய இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமார் 450 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
அரியாங்குப்பம், வில்லியனூர், மேட்டுப்பாளையம், கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதியில் வாகனங்கள் வரும் பகுதிகளை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இதற்கான கட்டுப்பாட்டு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கிருந்தபடியே ஊழியர்கள் கண்காணித்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன எண்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதேபோல் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை கண்டறிந்து, உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது மழையின்போது புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும் முயற்சியாக மழைக்காலங்களில் முன்கூட்டியே வெள்ள அளவை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சாலைகள், கழிவு நீர் வாய்க்கால்களை கண்காணிக்கவும் கேமரா பொருத்தப்படுகிறது. அதாவது, வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
அதன்மூலம் மழை வெள்ளம் அதிகரிக்கும்போது தாழ்வான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர்.
- ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 11-ந் தேதி விடுதியில் தங்கி படிக்கும் வடமாநில மாணவி ஒருவர், தனது சக கல்லூரி நண்பருடன் நடந்து சென்றார்.
அப்போது மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர். இருவரும் மாறி மாறி வீடியோ எடுத்தபோது மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதில் படுகாயம் அடைந்த மாணவி, கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவி புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி மற்றும் மாணவரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் என தெரியவந்தது.
தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவி மற்றும் மாணவரை ஆபாசமாக திட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
காலாப்பட்டு போலீசார் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்குள் அத்துமீறி நுழைதல், மாணவர்களை ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனியில் பணியாற்றும் அரும்பார்த்தபுரம் ஷாம் (வயது19), வில்லியனூர் திருக்காஞ்சி சாலையை சேர்ந்த அரசு கலை கல்லூரி மாணவர் விமல்(19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.
ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 17 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். விசாரணை நடத்தி அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.
- நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்து, அகற்றுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில வருடங்களாக, போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.
எனவே, போகி அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக், தெர்மோகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் 2024-ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு போகி பண்டிகையன்று காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். காலப்போக்கில் இத்தகைய பொருட்களுடன் வீட்டில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தொடங்கினர்.
இதனால் காற்றில் மாசுக்களின் அளவு அதிகரித்தது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், இத்தகைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், அண்ணா நகர் மற்றும் காரைக்காலில் ஒரு இடத்திலும் போகி அன்று காற்றின் மாசு 24 மணி நேரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மிதவை துகள்களின் அளவு 54 மைக்ரோ கிராம், கந்தக ஆக்ஸைடுகளின் அளவு 10.4 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
2024-ம் ஆண்டில் மிதவை துகள்களின் அளவு 138 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 23.6 மைக்ரோ கிராம் என பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போகி அன்று ஏற்பட்ட சிறு மழை தூறலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் இந்த ஆண்டில் காற்றின் மாசு அளவு குறைய காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- நாராயணசாமி ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்று 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆட்சியில் இருந்தார்.
சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே இவரது ஆட்சி கவிழ்ந்ததால் 5 ஆண்டுகள் முற்று பெறாமல் ஆட்சி காலம் முடிவடைந்தது.
அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடாமல் தேர்தல் பணியாற்றினார். இந்த தேர்தலில், மாகி மற்றும் லாஸ்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்று மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாராயணசாமி மீது சுமத்தப்பட்டதால் நாராயணசாமி இதற்கு பதில் கூறாமல் அமைதி காத்து வந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்த்த நாராயணசாமி தீவிர தேர்தல் பணியை தற்போதே தொடங்கி உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
காரைக்காலில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி. சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்தல் முன்கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று நாராயணசாமி தனக்கு ஆதரவாக கருதும் ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும் இளைஞர்களை குறி வைத்து நாராயணசாமியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்களில் நாராயணசாமி தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வென்று காட்ட மீண்டும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
- தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
- தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.
தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தொற்று குறித்து பயப்படத் தேவை இல்லை எனவும், ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் HMPV கண்டறியப்பட்டது.
சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
- ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
- தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.
அடுத்த 15, 18 மற்றும் 19-ந்தேதிகள் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது. எனவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில்,
அதற்கு இடைப்பட்ட நாளான ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து வருகிற 17-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை சார்பு செயலர் ஷிரன் பிறப்பித்துள்ளார்.
இதேபோல், வருகிற 16-ந் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்காமல், வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்த்து ஏற்கனவே அரசாணை பிறப்பித்து இருந்தது. அதை மாற்றி தற்போது 16-ந் தேதியும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், பிப். 1-ந் தேதி மற்றும் 8 ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது
- புதுச்சேரியில் ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 மற்றும் 15-ந்தேதி விடுமறை.
- தற்போது ஜனவரி 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை அறிவிப்பு.
பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாளும் புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும்.
விடுமுறையை சரிசெய்யும் வகையில் பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 8 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
- சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களை மீட்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாகையிலிருந்து மீன்பிடிக்க காரைக்கால் மாவட்டம் கீழ்காசாக்குடி அன்பழகன், 15 வயது சிறுவன், காரைக்கால்மேடு பாண்டியன், வேலாயுதம், மயிலாடுதுறை மாவட்டம் கலைமணி, தங்கதுரை, செல்வகுமார், ரமேஷ், 16 வயது சிறுவன், நாகை ராஜசேகர் ஆகிய 10 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கடந்த 8-ந் தேதி இரவு 11.30 மணிக்கு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- ஆதாரம் கேட்கப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவிப்பு.
- ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் பேசும்போது, பெரியாரை விமர்சித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.
இதற்கு திராவிடர் இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இன்று புதுவை நெல்லித்தோப்பில் உள்ள கீர்த்தி மகாலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் சீமான் காலை 11 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புதுவைக்கு வரும் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரம் கேட்கப் போவதாக புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை 10.30 மணியளவில் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை சதுக்கம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஒன்று கூடினர். இந்த போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். துணை தலைவர் இளங்கோ, பொதுச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு ஐயப்பன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, திராவிடர் கழகம் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுப்பையா சிலை சதுக்கத்திலிருந்து கீர்த்தி மகாலை நோக்கி முன்னேற முயன்றனர். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் மணிமேகலை பள்ளி அருகே சீமானை வரவேற்க ஒன்று கூடியிருந்தனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர்.

இருதரப்பினரையும் மோதிக் கொள்ளாமல் இருக்க பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்தனர். போலீசாரை தள்ளிவிட்டு இருதரப்பினரும் முன்னேற முயன்றனர். இதில் சிலர் செருப்பு, கற்களை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் இருதரப்பையும் நெட்டித்தள்ளினர்.
திராவிடர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் கொடிகளை பிடுங்கி கிழித்து எறிந்தனர். சீமான் உருவப்படத்தை அவமதிப்பு செய்தனர்.

இதையடுத்து போலீசார் திராவிடர் இயக்கத்தினரை குண்டுக்கட்டாகத் தூக்கி வேன், பஸ்களில் ஏற்றி அவர்களை அப்புறப்படுத்தினர்.

சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- பெரியார் குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன்.
- பிரபாகரனை பார்த்த பின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரியில் அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி என்றால் நீங்கள் எழுதியது, பேசியது எந்த மொழியில்?
* இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்று பேசியிருக்கிறார் பெரியார்.
* திராவிடம் திராவிடம் என பேசி அதற்கு முன்வந்த பெரும் தலைவர்களை புறக்கணித்துள்ளனர்.
* பார்ப்பனியரும் எதிரி, இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்றால் நீ யார், இடஒதுக்கீடு தவறு என கூறுவது எவ்வாறு?
* பெரியார் குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன்.
* புத்தகங்களை படித்த பின்னர் தான் தற்போது தெளிவு பிறந்தது.
* பிரபாகரனை பார்த்த பின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது.
* திராவிடம் என்றால் திருடர்கள் என்று பிற்காலங்களில் இருந்து தெரிய வந்தது.
* திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் தான் எனது கொள்கை என்று கூறினார்.






