என் மலர்
பீகார்
- கொடிய சதித்திட்டம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார்
- மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்று கூறினார்.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆர்.ஜே.டி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகவுள்ளார்.
தேர்தல் ஆணையம், ஜூன் 24 அன்று பீகாரில் தகுதியுள்ள குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக சிறப்பு திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.
நகரமயமாக்கல், புலம்பெயர்தல், புதிய வாக்காளர்கள் மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் போன்றவர்களை கண்டறிய இந்த இந்த திருத்தம் அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஆனால் ஏற்கனவே ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஆர்.ஜே.டி எம்.பி. மனோஜ் ஜா இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இந்த உத்தரவு இளம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையில் இருந்து பறிக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது பாஜக-விற்கு சாதகம் என்றும் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதை கொடிய சதித்திட்டம் என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்றும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறினார்.
ஆர்ஜேடி முக்கிய தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்த திருத்தப் பணி ஏன் பீகாரில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த திருத்தப் பணியை ஆதரித்து, எதிர்க்கட்சிகள் தோல்விக்கு சாக்குப்போக்கு தேடுவதாகக் குற்றம் சாட்டியது.
தேர்தல் ஆணையம், பீகாரில் திருத்தப் பணியின் முதல் கட்டம் சீராக முடிவடைந்துள்ளதாகவும், இந்த செயல்முறை ஆளும் கட்சிக்கு சாதகமாக கையாளப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 25 வரை ஆவணங்களை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
- கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார்.
பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் போலீஸ் ஒருவர் வந்து தனது பைக்கில் ரூ.120க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி இருக்கிறார்.
ஆனால், பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
இதனால், கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், போலீசாரை சுற்றி வளைத்து தாக்கினர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பின் மோதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பீகாரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
- பா.ஜ.க.வின் நோக்கம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வது என்றார்.
பாட்னா:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பீகார் சென்றடைந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான், ஆட்சியில் நீடிப்பது.
ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடையும் கொள்கைகளை உருவாக்குவது. அனைவருக்கும் சுயமரியாதையுடன் வாழ உரிமை உண்டு என்பதை உறுதி செய்வது. எங்கள் அரசாங்கத்தால் இதுவும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடுகிறோம் என தெரிவித்தார்.
- மலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர்வீழ்ச்சி ஆக்ரோஷமாக மாறியது.
- மேலும் மூன்று பெண்கள் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள லங்குரியா மலை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த ஆறு பெண்களை உள்ளூர் கிராம மக்கள் துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை லங்குரியா நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது, ஆறு பெண்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென மலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர்வீழ்ச்சி ஆக்ரோஷமாக மாறியது. இதனால் மற்ற சுற்றுலாப் பயணிகள் பயத்தில் ஓடிவிட்டனர். ஆனால், இந்த ஆறு பெண்களும் வெள்ளத்தின் நடுவில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாகச் செயல்பட்ட உள்ளூர் கிராம மக்கள், முதலில் ஒரு பெண்ணை பாறையைக் கடந்து பாதுகாப்பாக மீட்டனர். அப்போது மேலும் மூன்று பெண்கள் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனாலும், கிராம மக்கள் அவர்களை மிகுந்த சிரமத்துடன் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டனர். மற்ற இரண்டு பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின்போது, ஒரு பெண் பாறையில் மோதி காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் லங்குரியா நீர்வீழ்ச்சியில் இவ்வளவு கடுமையான நீர் ஓட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
- வனத்துறை மரங்களை வெட்ட அனுமதி மறுப்பு.
- மாவட்ட நிர்வாகம் மரத்தை அப்படியோ விட்டுவிட்டு சாலை போட்டுள்ளது.
சாலைகள் குண்டும் குழியும் இல்லாமல் அதிக செலவில் போடப்படுவது, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பீகார் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலையில், பெரிய பெரிய மரங்கள் அச்சுறுத்தும் வகையில் கம்பீரமாக மிரட்டும் தோணியில் நிற்பதால், வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்து வாகனம் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாட்னா- கயா பிரதான சாலையில் ஜெஹனாபாத்தில் சுமார் 7.48 கி.மீ. நீளம் கொண்ட சாலையில் மரங்கள் நிற்கின்றன. மாவட்ட நிர்வாகம் 100 கோடி ரூபாய் சாலை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. இதனால் வனத்துறையை அணுகி மரங்களை வெட்ட அனுமதி கேட்டுள்ளது.
ஆனால் வனத்துறை மரங்களை வெட்ட அனுமதி வழங்கவில்லை. அதற்குப் பதிலாக 14 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு கேட்டுள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இழப்பீடு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் இப்படி ஒரு விபரீத முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்து, மரத்தை சுற்றி சாலை அமைத்துள்ளனர்.
இந்த மரங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால் பரவாயில்லை ஒன்றுக்கொன்று குறுக்காக உள்ளதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மாநில மற்றும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
பீகாரில் இந்தாண்டு இறுதியில் அக்டோபர், நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
பீகாரில் பா.ஜ.க., ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் 225 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் அடிநிலை தொண்டர்களின் கூட்டுக்கூட்டத்தை 243 தொகுதிகளிலும் கூட்ட தேசிய ஜனநாயக கூட்டணி முடிவெடுத்துள்ளது.
வருகிற ஜூலை 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை தொகுதி வாரியாக தொண்டர்களை சந்தித்து மாநில மற்றும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
தேர்தலில் வெற்றிப் பெறுவதையே நோக்கமாக கொண்டு கூட்டணியில் கட்சி பேதமின்றி அனைத்துத் தொண்டர்களும் உழைப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்த தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குச் சாவடிகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள தொண்டர்களுக்கு 2 மாத சிறப்பு பிரசாரத்தை தொடங்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார்.
- 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள்
பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் ஆர்ஜேடி - காங்கிரசின் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பல முறை கூட்டணி தாவலுக்கு பின் இறுதியில் பாஜகவின் என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
அந்த வகையில் மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை ரூ.400 இல் இருந்து ரூ.1,100 ஆக முதல்வர் நிதிஷ் குமார் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த ரூ.700 அதிகரிப்பு என்பது மாநிலத்தில் 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் மாதத்தில் 10 ஆம் தேதியில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் நிதிஷ் குமார் விளக்கியுள்ளார்.
- பொதுமக்கள் வலுக்கட்டாயமாக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
- என்.டி.ஏ. கட்சிகள் அரசு இயந்திரத்தையும், பொது நிதியையும் பேரணி கூட்டத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்று பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தார். சிவானில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் மோடியின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேஜ்ஸ்வி யாதவ் பதில் அளித்து கூறியதாவது:-
நாங்கள் பிக்பாக்கெட் பிரதமரை விரும்பவில்லை. பீகார் மாநில நிர்வாகம் கூட்டத்தை கூட்டுவதற்கான குவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வலுக்கட்டாயமாக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அரசு இயந்திரத்தையும், பொது நிதியையும் பேரணி கூட்டத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளது.
இது ஒரு பிக்பாக்கெட் ஆகும். எங்களுக்கு பிக்பாக்கெட் பிரதமரும் வேண்டாம். சுயபுத்தி இல்லாத முதல்வரும் வேண்டாம்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பீகார் துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி "தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து, அவருடைய தரத்தை காட்டுகிறது.
இந்தி படத்தில் அமிதாப் பச்சன் கையில் என் அப்பா ஒரு திருடன் என்று எழுதியிருந்ததுபோல, தேஜஸ்விக்கும் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நீரஜ் குமார் "தேஜஸ்வி தண்டனை பெற்ற நபரின் மகன்" எனத் தெரிவித்தார்.
- பீகார் தொழிலாளர்கள் வெளி மாநிலத்திற்கு செல்வதற்கும், மாநில வறுமைக்கும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம்தான் பொறுப்பு.
- பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்சிகள், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர்.
பிரதமர் மோடி பீகாரில் உள்ள சிவான் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* நான் வெளிநாட்டு பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்தேன். வளர்ச்சிக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை பாராட்டுகிறது.
* பீகார் மக்கள் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட காட்டு ராஜ்ஜியம் (Jungle Raj) ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
* பீகார் தொழிலாளர்கள் வெளி மாநிலத்திற்கு செல்வதற்கும், மாநில வறுமைக்கும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள்தான் பொறுப்பு.
* தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் 55 ஆயிரம் கி.மீ. கிராமப்புற சாலைகளை அமைத்துள்ளது. 1.5 கோடி வீடுகள் மின்சாரம் பெற்றுள்ளன. 26 கோடி மக்கள் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் பெற்றுள்ளனர்.
* பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்சிகள், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர்.
* இந்தியாவின் வறுமைக்கு காங்கிரஸின் உரிமை ராஜ்ஜியம்தான் காரணம். குடும்ப தலைவர்கள் கோடீஸ்வரர்களாகும்போது, மக்கள் இன்னும் ஏழையாகவே உள்ளனர்.
* பீகாரின் வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.
* பீகார் மேக் இன் இந்தியா முயற்சியின் மையமாகும்.
* நாங்கள் சப்கா சாத், சப்கா விகாஸ் (Sabka saath, sabka vikas) என்கிறோம். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் பரிவார் கா விகாஸை (parivaar ka vikas) நம்புகிறது.
* ராஷ்டிரிய ஜனதா தளம் அம்பேத்கரை அவமதித்தது. பீகார் மக்கள் ஒருபோதும் அதன் தலைவர்களை மன்னிக்கமாட்டார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- இந்த கிரீடம் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது.
- விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள் அல்லது குழந்தைகள் உள்ள, இல்லாத திருமணமான பெண்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
பாஜக எம்எல்ஏ விஷால் பிரசாந்தின் மனைவியும், முன்னாள் பீகார் எம்எல்ஏ சுனில் பாண்டேயின் மருமகளுமான ஐஸ்வர்யா ராஜ், 'மிஸஸ் பீகார் 2025' பட்டத்தை வென்றுள்ளார்.
"கனவுகள் நனவாகிவிட்டன - உங்கள் பெண் இப்போது மிஸஸ் பீகார் 2025!" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஐஸ்வர்யா ராஜ், தன்னை நம்பிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.
"இந்த கிரீடம் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜ், மாடலிங் மற்றும் திரைப்படங்களில் ஆர்வம் இருந்தபோதிலும், திருமணத்திற்குப் பிறகு தனது கனவுகளை ஒத்திவைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது கணவரின் ஆதரவுடன் மீண்டும் களமிறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மிஸஸ் பீகார் 2025 போட்டியில் 21 முதல் 55 வயது வரையிலான பெண்கள் பங்கேற்கலாம். விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள் அல்லது குழந்தைகள் உள்ள, இல்லாத திருமணமான பெண்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
பீகார் பெண்களின் அழகு, புத்திசாலித்தனத்தை வெளிக்கொணர்வதே இப்போட்டியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2021 இல் திருமணமான தீப்தியை, முதலில் மனரீதியாகவும் பின்னர் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
- தானம் செய்ய மறுத்ததால், தீப்தி தாக்கப்பட்டும், மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளார்.
வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகம் தானம் செய்யுமாறு மாமியார் வற்புறுத்தியதாகப் பீகார் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, 2021 இல் திருமணமான தீப்தியை, முதலில் மனரீதியாகவும் பின்னர் உடல் ரீதியாகவும் மாமியார் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.
கணவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதை அறிந்ததும், வரதட்சணைக்குப் பதிலாக சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்யுமாறு மாமியார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
தானம் செய்ய மறுத்ததால், தீப்தி தாக்கப்பட்டும், மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளார். புகாரி ஏற்று, தீப்தியின் கணவர் உட்பட மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- மாதேபுராவில் இருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
- மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த பணியாளர்களின் நிலை குறித்து விசாரித்தார்.
பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார்.
மாதேபுராவில் இருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது கோரால் அருகே பாட்னா-முசாபர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தேஜஷ்வி யாதவுடன் வந்த வாகனங்கள் தேநீர் குடிப்பதற்காக நள்ளிரவு 12.30 மணியளவில் ஓரிடத்தில் நிறுத்தினர். அப்போது எதிரே வந்த லாரி இரண்டு கார்கள் மீது வேகமாக மோதியது.
தேஜஸ்வி யாதவ் சென்ற காரின் மீது லாரி மோதாததால் அதிர்ஷ்டவசமாக யாதவ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவருடன் வந்த மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த மூன்று பேரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் தேஜஸ்வி யாதவ் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த பணியாளர்களின் நிலை குறித்து விசாரித்தார்.






