search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல்"

    தமிழகத்தில் சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு செய்துள்ளதாக திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    திருச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடைய தல்ல என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக இன்று பகலில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைகேடு தொடர்பான புகாரில் நியாயமான விசாரணை நடத்தவே சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் என் மீது எந்த குற்றமும் சொல்லவில்லை. முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் உள்ளதால் மேல்முறையீடு செய்துள்ளேன்.

    கொள்ளிடத்தில் கதவணை கட்ட விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து டெண்டர் விடப்படும். காவிரியில் உபரிநீரை தடுத்து நிறுத்த ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பார்.

    அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அ.தி.மு.க. ஒரு குடும்பம். அதனை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்களின் சதி திட்டத்தை தொண்டர்களின் ஆதரவோடு முறியடிப்போம். எப்போதுமே அ.தி.மு.க. நிலைத்து நிற்கும் என்றார்.


    ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை திறம்பட செய்து வருகிறோம். எந்த பக்கத்தில் இருந்தும், எத்தனை சுனாமி வந்தாலும் உள்ளேயோ, வெளியிலேயே எங்களை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

    2 பேரும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறோம். எங்களுக்குள் பிரிவினையை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. அவர்களின் கனவு பகல் கனவாகத் தான் மாறும் என்றார். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    புதுடெல்லி:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என மனுவில் கூறப்பட்டுள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    எடப்பாடி பழனிசாமி தன் மீது வழக்கு போட்டால் சந்திக்கத் தயார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    காஞ்சீபுரம்:

    மதுராந்தகத்தில் எஸ்.டி. உகம்சந்த் படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய துறையை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் அடிப்படையிலே தன்னுடைய உறவினருக்கு காண்ட்ராக்டை கொடுத்திருக்கிறார். ஏறக்குறைய ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேலே அதிலே ஊழல் நடைபெற்றிருக்கிறது.

    இதை உடனடியாக விசாரிக்க வேண்டும். இதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கிட வேண்டும் என்று அமைப்புச் செயலாளர் அந்த வழக்கை தி.மு.க. சார்பில் தொடுத்தார்.

    சென்னை உயர்நீதிமன்றம் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது.

    அடுத்த வினாடியே அவர் முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அந்த வழக்கை சந்திக்காமல், உளுந்தூர்பேட்டையிலே போய் அவர் இதை திசை திருப்புகிற வகையில் நாங்களும் தி.மு.க. மீது வழக்கு போடுவோம் என்கிறார்.

    எங்கள் மீது வழக்கு போடுங்கள், நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். எத்தனையோ வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டதுண்டு. எம்.ஜி.ஆரே எங்கள் மீது வழக்கு போடவில்லையா? சர்க்காரியா கமி‌ஷனை மறந்திருப்பீர்களா?

    சென்னை மாநகரத்திலே 9 மேம்பாலங்கள் நான் மேயராக இருந்தபோது கட்டப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்ததற்கு பிறகு அதற்காக வழக்கு போட்டார்.

    வழக்கு போட்டது மட்டுமல்ல, இரவோடு இரவாக தலைவர் கலைஞர் வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்தபோது காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி உள்ளே புகுந்து தரதரவென இழுத்து வந்த அந்தக் கொடிய காட்சிகள் எல்லாம் பார்த்து உலகமெங்கும் இருக்கக் கூடிய தமிழர்கள் அத்தனைபேரும் வேதனைப் பட்டார்கள்.

    பாலம் வீக்கென்று சொன்ன ஜெயலலிதா, அதே பாலத்தின் மேல்தான் தொடர்ந்து கோட்டைக்கு போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார். பாலம் வீக்கென்று சொல்லி நம் மீது வழக்கு. வழக்கு போட்டு ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. ஐந்து வருடமாக ஒரு சார்ஜ்சீட் பைல் பண்ண முடிந்ததா?.

    தலைவரை கைது செய்தீர்கள். என்னை கைது செய்தீர்கள், பொன் முடியை கைது செய்தீர்கள், கோ.சி.மணியை கைது செய்தீர்கள். இப்படி பலபேரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள். வழக்கு போட்டதற்கு பிறகு அதே அ.தி.மு.க. ஆட்சி ஒரு சார்ஜ் சீட் பைல் செய்ததா என்றால், கிடையாது.

    2ஜி, 2ஜினு ஒரு பிரச்சனையை கிளப்பினார்ளே. எவ்வளவு திட்டமிட்டு பிரசாரம் நடந்தது. அது என்ன ஆனது? நீதிமன்ற தீர்ப்பில் எந்த முகாந்திரமும் இல்லை. அத்தனை பேரும் விடுதலை. இதுதான் தி.மு.க. நாங்கள் எத்தனையோ முறை சிறைக்குப் போய் இருக்கிறோம். ஆனால் இவர்களைப் போல கொள்ளையடித்து விட்டு போகவில்லை.

    இதே எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தி.மு.க. தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்கிறார். அதை இன்றைக்கு நாங்கள் போய் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டோம். அந்த வழக்கு போடப்பட்டதற்கு பிறகு இதுவரையிலே 7 வருடம் ஆயிற்று. இதுவரையில் அதுபற்றி விசாரணை நடந்ததா? கிடையாது.

    ஆனால் விசாரணைக் கமி‌ஷன், அதற்கு ஒரு அலுவலகம், 3 கார்கள், போலீஸ் ஏறக்குறை 10 கோடி ரூபாய் அந்த நீதிபதிக்கே செலவு. இதைக் கண்டித்து உயர்நீதிமன்றம் என்ன செய்தது என்றால், அந்த கமி‌ஷனையே கலைத்து விட்டது.

    ஆனால் முதல்-அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது? ஆதாரங்கள் இருக்கிறது, அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதை எதிர்த்து நியாயமாக எடப்பாடி என்ன செய்திருக்க வேண்டும்?

    சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கியிருக்க வேண்டும். வாங்குவேன் என்று சொன்னார். இதுவரைக்கும் வாங்கவில்லை. ஆனால், வாங்குவதற்கு நாம் தடை போட வேண்டும். அதை வாங்கினால் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சொல்லி, நம்முடைய ஆர்.எஸ்.பாரதி சார்பில் கேவியட்டும் போட்டு வைத்துள்ளோம்.

    எங்களுக்கு தைரியம் இருக்கிறது. தெம்பு இருக்கிறது, நாங்கள் கேவியட் போடுகின்றோம். தலைமைச் செயலக வழக்கில் எங்களுக்கு ஸ்டே கொடுத்துள்ளார்கள். அதை எதிர்த்து அப்பீலுக்கு செல்லும் தைரியும் உங்களுக்கு இல்லை. ஆனால் உளுந்தூர்பேட்டையில் வந்து புலம்பிக் கொண்டு போயிருக்கிறீர்கள்.

    18 எம்.எல்.ஏ. தீர்ப்பு வரட்டும். வந்ததற்கு பிறகு தான் இருக்கிறது கதை. ஏதோ ஆட்சியில் இருக்கிறோம். பதவியில் இருக்கிறோம். அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய காலம் வரப் போகிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    தி.மு.க. கூறுவது பொய் புகார் என்றும் தன் உறவினர் யாருக்கும் காண்டிராக்ட் வழங்கவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ADMK #Edappadipalaniswami #MKStalin
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உளுந்தூர் பேட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஒழிப்பு துறையில் என் மீது ஒரு புகார் செய்தார். அது முழுக்க முழுக்க ஒரு பொய் புகார். அதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். எனது உறவினருக்கு நான் ஒப்பந்தம் கொடுத்ததாக கூறுவது ஒரு பொய் தகவல். 1968-ல் யார் யாரெல்லாம் உறவினர், யார் யாருக்கெல்லாம் ஒப்பந்தம் கொடுக்கப்படலாம் என்று ஒரு விதி வகுக்கப்படுகிறது.

    அதில் இவர் வருவதில்லை. ரத்தம் சம்பந்தப்பட்ட உறவு என்று சொன்னால், என்னுடைய அப்பா, அம்மா, அந்தத் துறையினுடைய அமைச்சர், அவருடைய மகன், மகள் இவர்கள்தான். அதுமட்டுமல்ல, நிறைய உறவினர் என்று வரும்பொழுது அந்த இலாக்காவினுடைய அமைச்சர், அவருடைய அப்பா, அம்மா, அவருடைய மனைவி, மகன், மகள், மகளுடைய கணவர், மகனுடைய மனைவி, அதுமட்டுமல்லாமல், அந்த அமைச்சருக்கு இரண்டாம் தாரமாக மனைவி இருந்தால் அந்த மனைவி, அவருடைய மகன், மகள், அந்த அமைச்சர் ஏதாவது மகனையோ, மகளையோ தத்து எடுத்திருந்தால், அவர்கள். இதுதான் நெருங்கிய உறவினர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் எதிலும் அவர் வருவதில்லை.

    ஆகவே, எப்படி நெருங்கிய உறவினருக்கு டெண்டர் கொடுத்தேன் என்று சொல்வது. இந்த ராமலிங்கம் அன் கோ 35 ஆண்டுகளுக்கு முன்பே பணி செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக் காலத்திலேயே 10 டெண்டர் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். 5 டெண்டர் வழங்கியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க உலக வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. எந்த முறைகேடும் இல்லை. அதிகமாக பணம் கொடுத்திருக்கின்றோம் என்கிறார்கள்.

    அதுவும் அல்ல. ஆர்.எஸ்.பாரதி, ஒரு கிலோ மீட்டருக்கு 2 கோடியே 20 லட்சம் ஆகும் என்று சொல்கிறார். அவருடைய ஆட்சியில், டி.ஆர்.பாலு, மந்திரியாக இருந்தபோது சேலம்குமாரபாளையம் 4 வழிச்சாலைக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.8 கோடியே 78 லட்சம் செலவு செய்திருக்கிறார். 2006ல் டெண்டர் ஆரம்பித்து 2010ல் முடிந்திருக்கிறது. அதற்குப் பிறகு குமாரபாளையம்செங்கம் சாலை, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.7 கோடியே 83 லட்சம் செலவு செய்திருக்கிறார். 2006-ம் ஆண்டு துவங்கப்பட்டு, 2009-ம் ஆண்டு முடிந்திருக்கிறது.

    அதேபோல, சென்னை பைபாஸ்-ல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 கோடியே 42லட்சம் செலவு செய்திருக்கிறார். 2005ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2020-ம்ஆண்டு முடிந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு தொகை செலவு செய்திருக்கின்றார்கள் என்றால், 10 ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு 5 சதவீதம் விலையேறினால்கூட இன்றைக்கு 50 சதவீதம் விலையேறியிருக்கும். அப்படிப் பார்த்தால், இன்றைக்கு நான்கு வழிச்சாலைக்கு நாங்கள் ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 10.16 கோடி தான் ஒதுக்கியிருக்கின்றோம். அப்படியானால் யார் ஊழல் செய்தார்கள் என்று நன்றாகத் தெரியும்.

    தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 4 டெண்டர் விட்டார்கள். 611.07 கோடிக்கு டெண்டர் விட்டுவிட்டு , கூடுதலாக 161.67 கோடிக்கு கொடுத்திருக்கிறார்கள். 161.67 கோடியை வேலை செய்ய ஏதோ ஒரு வகையில் போட்டுபோட்டு பணத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் அவர்கள் காலத்தில். 26.43 கோடி அதிகம் கொடுத்திருக்கிறார்கள் அதேபோல நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை உள்ள சாலை மேம்படுத்துவதற்காக 198.77 கோடி மதிப்பிற்கு டெண்டர் விட்டார்கள். அதில் கூடுதலாக, டெண்டர் விட்ட பிறகு 72.49 கோடி கொடுத்திருக்கிறார்கள். அதில் 36.4 சதவீதம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள்.

    ஆக, அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஊழல் நடந்திருக்கிறது, எங்கள் ஆட்சிக்காலத்தில் அல்ல. சட்டத்துறை அமைச்சர் சொல்கின்றதைப் போல, இதையெல்லாம் தோண்டி எடுக்கின்றபோதுதான் இந்த உண்மைகள் எல்லாம் வெளியில் வரும். இதுபற்றி சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியில் கட்டினார்கள். முதலில் 8 லட்சம் சதுரஅடி கட்ட வேண்டுமென்று டெண்டர் கோரப்பட்டது, அதற்காக 200 கோடி ஒதுக்கினார்கள். அப்புறம் 262 கோடி ஆக்கினார்கள், அப்புறம் 84 கோடி சேர்க்கிறார்கள், 347 கோடி ஆகியது. அதனால், அதில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று சொல்லி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு ஆணையம் அமைத்தார்கள். அந்த ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று அப்போது திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கிவிட்டார். இதனால் அந்த ஆணையம் செயல்பட முடியவில்லை.

    அதற்குப் பிறகு நீதியரசர் முடங்கியிருக்கின்ற அந்த ஆணையத்தை நீங்கள் முடித்துவிடுங்கள், அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நீங்கள் விசாரிக்கலாம் என்று ஒரு தீர்ப்பை கொடுத்தார். அதன் அடிப்படையில் அந்த ஆணையம் கலைக்கப்பட்டது, அந்த ஆணையத்தின் தலைவர் ராஜினாமா செய்துவிட்டார். உடனே ஸ்டாலின் அதற்கும் தடையாணை வாங்கிவிட்டார். நாங்கள் உண்மையாக இருக்கிறோம், தர்மமாக இருக்கிறோம், நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை என்று சொல்கிறார்.


    தப்பு செய்யாதவர் ஏன் தடையாணை வாங்குகிறீர்கள்? கருணாநிதி இருந்தபோதும் நான்காண்டு காலம் அந்த ஆணையம் செயல்பட முடியாமல் தடையாணை வாங்கினார்கள், அப்புறம் நீதிபதி இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்ட பிறகு, அதற்கு ஏன் தடையாணை வாங்குகிறீர்கள்? நீங்கள் தப்பு செய்யவில்லை என்றால் வழக்கிற்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா? என்மீது புகார் தொடர்ந்தார்கள், நான் அதை சந்திக்கவில்லையா? எங்களிடத்தில் மடியிலே கனம் இல்லை, வழியிலே பயம் இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Edappadipalaniswami #MKStalin
    முதலமைச்சர் பழனிசாமி மீதான் சிபிஐ விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று தான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையில் மேல்முறையீடு குறித்து நான் சொல்லாததை சொன்னது போல் மு.க. ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

    அதாவது சி.பி.ஐ. விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அப்பீல் செய்யும் என்ற கருத்தை நான் கூறியதாக சொல்லி இருக்கிறார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது.

    லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்பது ஒரு தன்னிச்சையான, தன்னாட்சி நிலையிலே செயல்படுகிற ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது.

    இது அகில இந்திய அளவில் இருக்கிற ஒரு நடைமுறை. சி.பி.ஐ. என்ற அமைப்பு மைய அரசின் அமைப்பு என்ற போர்வையில் இருந்தாலும் நீதிமன்றம் ஒரு ஆணை வெளியிடும் போது நடுநிலை தவறாமல் செயல்படுவது தான் வழக்கமாக உள்ளது.

    இதிலே தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று நான் கூறியதாக கூறி இருப்பது தவறு.

    என்னிடம் நிருபர்கள் கேட்ட போது அவர்கள் ஒருவேளை அப்பீல் செய்யலாம் என்று பொருள்பட தான் சொன்னேன். அதாவது மேல்முறையீடு செய்யலாம் செல்லாமலும் இருக்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.

    லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரை அது பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்கிற உணர்வு அவர்களுக்கு வரும்போது அப்பீல் செல்வதா? செல்ல வேண்டாமா? என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதில் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை.


    டெண்டர் விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இல்லை. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இல்லை. இதுதான் உண்மை நிலை. அதனால் மேல்முறையீடு என்பது லஞ்ச ஒழிப்பு துறை எடுக்க வேண்டிய முடிவு.

    இதில் தெளிவுப்பட ஆவணங்கள் பேசுகிறது. அன்றையதினம் நான் பேட்டி கொடுத்த போது சற்று பரபரப்பான சூழலாக இருந்தது. எந்த ஒரு விசாரணையாக இருந்தாலும், ஆரம்பகட்ட புலனாய்வு உண்டு. அதன் பிறகு தான் ஆழ்ந்த புலனாய்வு விசாரணை நடைபெறும்.

    ரோடு டெண்டரை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் ‘பாக்ஸ்’ டெண்டர் நடைமுறை இருந்தது. இதில் யார்? என்ன தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் பல தவறுகள் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது ஆன்லைன் டெண்டர் நடைமுறையில் உள்ளது. இதில் யார் மனு போடுகிறார்கள் எவ்வளவு தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதில் எந்த தவறுமே நடக்க முடியாது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையை, நேர்மையை, இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசும் பாராட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தனியரசு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #Edappadipalaniswami #Thaniyarasu #Karunas #CBI
    கோவை:

    கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    எதிர்கட்சிகளின் புகார் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

    தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்று நீதிமன்றங்கள் விரைவாக முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுத்ததில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. வழக்கு போடப்பட்டுள்ளது.

    முதல்வர் தயங்காமல் பாரதியின் நெஞ்சுரத்துடன் வழக்குகளை சந்திக்க வேண்டும். நேர்மையாக இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.

    இது பின்னடைவு இல்லை. இந்த நடவடிக்கைக்கு முதல்வர் ஒத்துழைப்பார். ஒத்துழைக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட இந்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி விரைவில் விடுதலையாவார்.

    அமைச்சர்களை அன்பாக அணுகி தனது தொகுதிக்கு தேவையான நிதியை கருணாஸ் பெற்று இருக்க வேண்டும்.

    கருணாசை இந்த அரசு மென்மையாக, தோழமையுடன்தான் பார்க்கிறது. கருணாஸ் மீண்டும் எங்களுடன்இணைந்து பணியாற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Edappadipalaniswami #Thaniyarasu #Karunas #CBI
    அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம் என்று கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    நெடுஞ்சாலை துறையில் கடந்த 7 ஆண்டுகாலமாக ஊழல் நடைபெற்று உள்ளது என்று முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் தற்போதைய கவர்னர்பன்வாரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.

    இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவி விலக வேண்டும் அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    பதவியில் உள்ள ஒரு முதல்-அமைச்சரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.

    நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஊழல் குவிந்து உள்ளது. ஊழலில் தமிழகம் 3- வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது.


    கவர்னர் உயர்கல்வி துறையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது என்று கூறி விட்டு மறுநாள் மாற்றி கொண்டார். ஒரு கவர்னர் ஊழல் நடந்து உள்ளது என்று கூறுவது தவறு. அவர் தான் இதனை விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.

    ரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ. 550 கோடி. இந்த ஆட்சியில் ரூ. 1,600 கோடிக்கு பேசி உள்ளார்கள்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தேவையான ஊதியம் வழங்குங்கள்.

    தனியார் போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் 2 மாதம் ஆகியும் ஏன் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் நடப்பது பா.ஜனதா அரசுக்கு தெரியாதா? ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஊழலை ஆதரிப்பது தானே அர்த்தம்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கார் மூலமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami #Banwarilalpurohit
    தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #tenderirregularities #Edappadipalaniswami
    சென்னை:

    தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  டெண்டர்கள் விட்டதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.


    இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட் இன்று  உத்தரவிட்டுள்ளது.

    இவ்விவகாரத்தில் 3 மாதங்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணையை சி.பி.ஐ.  முடிக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    மேலும், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்னும் ஒரு வாரத்துக்குள் சி.பி.ஐ.யிடம் லஞ்ச ஒழிப்புதுறை  ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #MadrasHC #CBIenquiry #tenderirregularities #Edappadipalaniswami

    ×