search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DVAC"

    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. #SecretariatCase
    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து இந்த புதிய கட்டிடத்துக்கு தலைமை செயலகம் மாற்றப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் பழைய இடத்துக்கே தலைமை செயலகம் மாற்றப்பட்டது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தரவும் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, ஜெயலலிதா உத்தரவிட்டார்.

    இதன்படி, நீதிபதி ஆர்.ரெகுபதி விசாரணை நடத்தினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி நீதிபதி ஆர்.ரெகுபதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில், கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனுக்கும், விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அமைக்கும் விசாரணை ஆணையம் என்பது கண் துடைப்பு நாடகம் என்றும், விசாரணை ஆணையம் அமைப்பதால், எந்த ஒரு பலனும் இதுவரை ஏற்பட்டது கிடையாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பின்னர், நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தை கலைத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், அதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்தார். நீதிபதி ஆர்.ரெகுபதியும் விசாரணை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இதுவரை நடத்திய விசாரணையின் விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய தலைமை செயலகம் கட்டிடம் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.


    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதை பார்த்த பின்னர், போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை தமிழக அரசு பரிசீலிக்காமலேயே, நேரடியாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று வாதிட்டார்.

    தமிழக தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டியதில் சுமார் ரூ.629 கோடி ஊழல் நடந்துள்ளது, இவ்வளவு பெரிய ஊழலை சும்மா விட்டு விட முடியாது. இந்த ஊழலுக்கு முகாந்திரம் உள்ளது என்பதால் தான் போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி ஆர்.ரெகுபதியின் விசாரணை அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் படிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில், நீதிபதி ஆர்.ரெகுபதி தன் விசாரணையை முடிக்கவில்லை. ஆதார ஆவணங்களை எல்லாம் திரட்டி, முழுமையாக விசாரணை முடிந்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே, போலீஸ் விசாரணைக்கு மாற்ற முடியும்.

    எனவே அரைகுறை ஆவணங்களை கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார். #SecretariatCase
    தமிழக முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    புதுடெல்லி:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டதும் டெண்டரை ரத்து செய்யாமல் வழக்கு தொடர்ந்தது ஏன்? என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும், முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு குறித்த புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர். மேலும் வழக்கு விசாரணையையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    புதுடெல்லி:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என மனுவில் கூறப்பட்டுள்ளது. #TenderScam #EdappadiPalaniswami #DVAC
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான புதிய தலைமை செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #TNGovt #DMK #MKStalin #DVAC
    சென்னை:

    தமிழக அரசின் சட்டசபையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் செயல்பட்டு வருகின்றன.

    அங்குள்ள கட்டிடங்கள் பழமையாகி விட்டதாலும், கடும் இட நெருக்கடி உருவானதாலும் புதிய தலைமைச் செயலகம் கட்ட கடந்த தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ஜெர்மனி நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்ததற்கு ஏற்ப புதிய தலைமைச் செயலகம் பசுமைக் கட்டிடங்களாகக் கட்டப்பட்டன. ரூ.425 கோடி செலவில் 80 ஆயிரம் சதுர அடி அலுவலக பரப்பளவில் இந்த தலைமைச் செயலகம் உருவானது. அந்த வளாகத்தின் மத்தியில் திராவிட கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் கோபுரம் ஒன்றையும் கருணாநிதி அமைத்தார்.

    2008-ல் தொடங்கப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிகள் இரண்டே ஆண்டுகளில் முடிந்தன. இதையடுத்து 2010-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் புதிய தலைமை செயலகத்தை திறந்து வைத்தார். மார்ச் 16-ந்தேதி அந்த கட்டிடத்தில் சட்டசபை கூட்டம் நடந்தது.

    இந்த நிலையில் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். புதிய தலைமைச் செயலகத்தில் போதிய வசதிகள் இல்லை என்று கூறி அவர் மீண்டும் சட்டசபையையும் தலைமைச் செயலகத்தையும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார்.

    அதோடு புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளில் கூடுதல் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து 14.9.11 அன்று புதிய தலைமைச் செயலக கட்டிடங்களை மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்போது அங்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.


    இதற்கிடையே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    மேலும் இது போன்ற விசாரணை ஆணையங்களால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்றும் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

    ரகுபதி ஆணையத்துக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்றும் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “ரகுபதி ஆணையத்துக்கு ரூ.4 கோடியே 11 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் கோர்ட்டு தடை விதித்த 3 ஆண்டுகளில் ரூ.2 கோடி செலவிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து நீதிபதி ரகுபதி புதிய தலைமைச் செயலக விசாரணை ஆணைய பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது, “புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக 27-ந்தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக தெரிய வந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இந்த வழக்கு விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் இன்று தமிழக அரசு தெரிவிக்க உள்ளது.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், “நீங்கள் (ஸ்டாலின்) செய்த தவறுகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இதில் நாங்கள் விட்டாலும் மக்கள் விட மாட்டார்கள்” என்று பேசியிருந்தார். அடுத்த நாளே மு.க.ஸ்டாலினை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க தீவிரமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. #TNGovt #DMK #MKStalin  #DVAC
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு தொடர்பாக பதில் அளிக்க செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. #EdappadiPalaniswami #RSBharathi #DMK
    சென்னை:

    தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக டெண்டர் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



    இவ்வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த வரைவு அறிக்கையை ஊழல் தடுப்புப்  பிரிவு இயக்குனருக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வருக்கு எதிரான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 12-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம் அளித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார். #EdappadiPalaniswami #RSBharathi #DMK

    ×