search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponnaiyan"

    • அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம்.
    • அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம்.

    அ.தி.மு.க.இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப் படுகிறார்கள்.

    அதற்கு பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டு உள்ளார். கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொது செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமிக்கப்பட்டு உள்ளார்.

    அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ராஜன் செல்லப்பா, பாலகங்கா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ்.மணியன் ,காமராஜ், ப.தனபால், பெஞ்சமின் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

    அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
    அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன், அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ள பா.ஜனதா முயற்சி செய்வதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததாகல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வருகின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது. திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

    அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    வி.பி.துரைசாமி எந்தக் கட்சியில் இருந்து எந்தக் கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். வி.பி.துரைசாமி போன்ற கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை. சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால், அதிமுகவின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை.

    பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்தாகும். அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கூறினர்.

    இதையும் படியுங்கள்.. கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பா.ஜ.க. குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது. பேரவை மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தை நேற்று முன்தினம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து பேரவை மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த நிறைவு நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பா.ஜ.க. குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது:-

    உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டாம், கர்நாடகத்துக்கே காவிரி நீரை தர வேண்டும் என கர்நாடக பா.ஜ.க. கூறுகிறது. உச்சநீதிமன்றம் கூறியபடி காவிரி நீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என தமிழக பா.ஜ.க. கூறினால் வரவேற்கலாம்.

    ஆனால் அ.தி.மு.க. பின்னுக்கு தள்ளப்படும் பிரசாரத்தை பா.ஜ.க. மறைமுகமாக செய்கிறது. நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை போன்றவற்றில் தமிழக பா.ஜ.க. குரல் எழுப்புவது இல்லை. இதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். தோழமை கட்சி என்பதால் நாம் இதை செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் இதை பரப்ப வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜ.க.வால் தான் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு என்ற கருத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. அதை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபை தேர்தல் முடிவின் போது வெளிப்படையாக கூறினார். பா.ஜ.க.வால் தான் அ.தி.மு.க. தோற்றது என்று பகிரங்கமாக கூறினார்.

    அ.தி.மு.க. அதிருப்தியாளர் புகழேந்தியும் இதே கருத்தை வலியுறுத்தினார். இந்த நிலையில் பொன்னையனும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    பா.ஜனதாவுடன் கூட்டணி என்று நாங்கள் சொல்லவில்லை என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். #ADMK #BJP #Ponnaiyan

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து வியூகம் வகுத்து வருகிறது.

    இதில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்குமா? அல்லது அ.தி.மு.க. தனித்து களம் இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்று எங்கள் கட்சியில் யாரும் சொல்லவில்லை. எங்களை பொறுத்தவரை அம்மா வகுத்து தந்த கொள்கைப்படி செயலாற்றுவோம்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலிலும் வெற்றி பெற அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தல் பணியை துவக்கி விட்டனர்.

    ‘பூத்’ வாரியாக நிர்வாகிகளை நியமித்து பணியாற்றி வருகிறோம். தமிழகத்தை மதிக்கிற ஆட்சி மத்தியில் வேண்டுமானால் அ.தி.மு..க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்வோம். யார் பிரதமர் என்பது அப்புறம்தான்.

    பாரதிய ஜனதாவை காவி கட்சி, மதவாதம் என்று தி.மு.க. கூறுகிறது. எதிர்க்கிறது. இதே தி.மு.க. வாஜ்பாய் அமைச்சரவையில் பல முக்கிய இலாக்காவை பெற்று அமைச்சர் பதவி சுகம் அனுபவித்தது.

    எனவே கூட்டணி என்பது அரசியலில் அவ்வப்போது மாறிக்கொண்டேதான் உள்ளது. எங்களை பொறுத்தவரை பிரதமர் யார் என்று சொல்லித்தான் ஓட்டு கேட்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை.

    மக்கள் பிரச்சினைக்காக பாடுபடும் கட்சி அ.தி.மு.க. அதனால் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #Ponnaiyan

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பொன்னையன் இன்று காலை ஆஜரானார். #JayaDeathProbe #Ponnaiyan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், கார் டிரைவர்கள், அரசு துறை செயலாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ-அரசு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்ட 148 பேர் ஆஜராகி உள்ளனர்.

    இவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா, செந்தூர் பாண்டியன் சிலரிடம் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளார். தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து அரசு எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்தார்.


    இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை ஏற்று பொன்னையன் இன்று காலை ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது இவர் பத்திரிகை- தொலைக்காட்சிகளுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்த விவரங்களை வைத்து ஆணையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    யார் சொன்ன தகவலை வைத்து பேட்டி அளித்தீர்கள். அந்த தகவல் எல்லாம் உண்மைதானா? என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பொன்னையன் சொன்ன பதில்களை வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்தனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு வேறொரு நாளில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது. #JayaDeathProbe #Ponnaiyan
    அ.தி.மு.க.வுக்கு பெண் தலைமை தாங்குவார் என்று சசிகலாவைத்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு விரைவில் பெண்மணி தலைமை தாங்கிடும் நிலை வரும் என்று செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். ஏற்கனவே பொதுச்செயலாளராக பெண்மணிதான் தலைமையில் இருக்கிறார். செல்லூர் ராஜூ சூசகமாக சொல்வது, மற்றவர்களை விட அவருக்கு நன்றி உணர்வு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

    மற்றவர்கள் எல்லாம் பொதுச்செயலாளரை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு தைரியம் உள்ளவர்கள் போன்று காண்பிக்கின்றார்கள்.

    அவரோ இன்று வரை சின்னம்மா என்று மரியாதையாக அழைக்கின்றார். மனதில் உள்ளதை சொல்லியுள்ளார். பெண்மணி தலைமையில் வரவேண்டும் என்று கூறி உள்ளார்.


    ஏற்கனவே அம்மாவின் காலத்தில் அ.தி.மு.க. ஒரு பெண்மணி தலைமையில்தான் இருந்தது. இப்போதும் கட்சியில் பொதுச்செயலாளராக இருப்பதும் பெண்மணி தலைமைதான். சசிகலா பொதுச்செயலாளராக உள்ளார். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என்பதுதான் 18 எம்.எல்.ஏ.க்கள் விருப்பம். அது தொடர்பாக ஒரு நெறியாளர் என்னிடம் கேட்டபோது அப்போது நான் சொன்னேன் அரசாங்கத்தின் மீது ஊழல் என்றால் தனிப்பட்டது. அமைச்சர்கள் 10, 12 பேர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளது.

    எனவே அவர்களை நீக்கி விட்டால் இவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என்று சொன்னேன். ஒருவேளை 33 பேரும் ஊழல்வாதிகள் என்றால் அதில் மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் தேர்தல்தான் வரும் என்று சொன்னேன்.

    முதல்-அமைச்சர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

    இதில் கட்சிக்கு என்ன வேண்டி கிடக்கிறது. டி.வி.ஏ.சி. (கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகம்) தொடரும் என்று சொல்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

    டி.வி.ஏ.சி.யை தலைமை ஏற்றிருப்பவர் யார் என்றால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முருகன்தான். அவர் சொல்வதற்கு தயாராக இருக்கின்றாரா? என்று தெரியவில்லை. பொன்னையன் எப்படி சொல்ல முடியும். உடனே மறுநாள் மாற்றி பேசுகிறார்.


    ஜெயக்குமார் தினந்தோறும் பேட்டி தருவாரே? அவரை ஏன் காணவில்லை? என்ன காரணம்? அதைப் பற்றி ஏன் ஊடகத்தார் சொல்ல மாட்டீர்களே? பழனிசாமி விவகாரத்தில் வாயை திறக்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்.

    டி.வி.ஏ.சி. சரியாக விசாரிக்கவில்லை என்பதால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனால்தான் பொன்னையன் தவறுதலாக பேசி விட்டு இப்போது வாபஸ் பெறுகிறார்.

    சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளாகியுள்ள பழனிசாமி தார்மீகப் பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியது.

    ஆனால் தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் பெருந்தன்மை, தைரியம் கிடையாது. அவர் அது போன்று நடந்து கொள்ள மாட்டார். ராஜினாமா செய்ய மாட்டார்.

    தானாக சி.பி.ஐ. விசாரணை செய்து அதில் வழக்குப்பதிவு செய்து வழக்கு நடைபெற்று கைது செய்யும் அளவுக்கு சென்றால்தான் அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து இறங்குவார். அவரிடம் அதுபோன்ற பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

    எதிர்க்கட்சியை விட எங்களுக்கு பழனிசாமியை பற்றி நன்றாக தெரியும். நிச்சயம் பழனிசாமி முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    முதலமைச்சர் பழனிசாமி மீதான் சிபிஐ விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று தான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் சி.பி.ஐ. விசாரணையில் மேல்முறையீடு குறித்து நான் சொல்லாததை சொன்னது போல் மு.க. ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

    அதாவது சி.பி.ஐ. விசாரணை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அப்பீல் செய்யும் என்ற கருத்தை நான் கூறியதாக சொல்லி இருக்கிறார். அது தவறான தகவல். உண்மைக்கு மாறானது.

    லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்பது ஒரு தன்னிச்சையான, தன்னாட்சி நிலையிலே செயல்படுகிற ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் செயல்படுகிறது.

    இது அகில இந்திய அளவில் இருக்கிற ஒரு நடைமுறை. சி.பி.ஐ. என்ற அமைப்பு மைய அரசின் அமைப்பு என்ற போர்வையில் இருந்தாலும் நீதிமன்றம் ஒரு ஆணை வெளியிடும் போது நடுநிலை தவறாமல் செயல்படுவது தான் வழக்கமாக உள்ளது.

    இதிலே தன்னாட்சி அமைப்பான லஞ்ச ஒழிப்பு போலீஸ் மேல்முறையீடு செய்யும் என்று நான் கூறியதாக கூறி இருப்பது தவறு.

    என்னிடம் நிருபர்கள் கேட்ட போது அவர்கள் ஒருவேளை அப்பீல் செய்யலாம் என்று பொருள்பட தான் சொன்னேன். அதாவது மேல்முறையீடு செய்யலாம் செல்லாமலும் இருக்கலாம் என்பது தான் இதன் தத்துவம்.

    லஞ்ச ஒழிப்பு துறையை பொறுத்தவரை அது பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்கிற உணர்வு அவர்களுக்கு வரும்போது அப்பீல் செல்வதா? செல்ல வேண்டாமா? என்று முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. இதில் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை.


    டெண்டர் விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இல்லை. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இல்லை. இதுதான் உண்மை நிலை. அதனால் மேல்முறையீடு என்பது லஞ்ச ஒழிப்பு துறை எடுக்க வேண்டிய முடிவு.

    இதில் தெளிவுப்பட ஆவணங்கள் பேசுகிறது. அன்றையதினம் நான் பேட்டி கொடுத்த போது சற்று பரபரப்பான சூழலாக இருந்தது. எந்த ஒரு விசாரணையாக இருந்தாலும், ஆரம்பகட்ட புலனாய்வு உண்டு. அதன் பிறகு தான் ஆழ்ந்த புலனாய்வு விசாரணை நடைபெறும்.

    ரோடு டெண்டரை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் ‘பாக்ஸ்’ டெண்டர் நடைமுறை இருந்தது. இதில் யார்? என்ன தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது கமிட்டிக்கு தெரியும். ஆட்சியாளர்களுக்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் பல தவறுகள் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது ஆன்லைன் டெண்டர் நடைமுறையில் உள்ளது. இதில் யார் மனு போடுகிறார்கள் எவ்வளவு தொகையை குறிப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதில் எந்த தவறுமே நடக்க முடியாது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையை, நேர்மையை, இந்தியாவே பாராட்டுகிறது. மத்திய அரசும் பாராட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Ponnaiyan #EdappadiPalaniswami #MKStalin
    ஓ.பன்னீர்செல்வம், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி.தினகரனை சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டதாக கே.சி.பழனிசாமி கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.

    அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.

    ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.

    அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனு‌ஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.

    இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.

    இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.

    1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.

    2. கோட்டூர்புரத்தில் யாருடைய வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது?


    3. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது இவருக்கும் நண்பர். அவருக்கும் நண்பர் என்கிறார்கள். அப்படியானால் அவர் தொழில் அதிபரா? அரசியல்வாதியா? அவரைப் பற்றிய விவரங்களை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்.

    4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #OPanneerSelvam KCPalanisamy
    ×