search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக தேர்தல் அறிக்கை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம்.
    • அற்புதமான திட்டங்களை எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கை போலவே பாராளுமன்ற தேர்தல் அறிக்கையும் உள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

    அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன?, பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது. அவர் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் சென்றவர் அல்ல. எந்த நடவடிக்கையையும் கவனித்தவரும் அல்ல.

    10 ஆண்டு காலம் கியாஸ், பெட்ரோல் விலையை உயர்த்தி இந்திய நாட்டில் உள்ள மக்கள் அத்தனை பேரையும் வஞ்சித்தது மோடி அரசு.

    தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம். கியாஸ் விலை 500 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருப்பது போன்று உரிமைத் தொகை இந்தியா முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். இந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம்.

    இது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா? இல்லை எப்போதுமே பேசவேண்டும் என்பதற்காக பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்பதே எங்களுடைய கேள்வி.

    தி.மு.க. அரசு மக்கள் மத்தியில் பலமாக ஊடுருவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். 75 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இன்னும் சில திட்டங்கள், பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் சில கட்சிகள் வெற்றி வாய்ப்பு வேட்பாளர்களுக்கு தடுமாறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தி.மு.க. வெற்றி வேட்பாளர், வெற்றி கூட்டணி அமைத்து தி.மு.க. பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார்.

    இது மகத்தான கூட்டணி. 40 என்ற மந்திரத்தை நிதர்சனத்தில் உருவாக்கும் என்ற ஒரு தேர்தலாக தான் இந்த தேர்தல் 100 சதவீதம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
    • குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    திமுக மக்களை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் மத்தியத்தில் 'இந்தியா' கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் என தலைப்பில் கீழ்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

    1. இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

    3. அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

    4. மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சிக்குழு அமைக்கப்படும்.

    5. பா.ஜ.க அரசால்கலைக்கப்பட்ட மத்திய திட்டக்குழு மீண்டும் அமைக்கப்பட்டு நாடு முழுமையிலும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் திட்டங்கள் வகுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள நிதி ஆயோக் கலைக்கப்படும்.

    6. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

    7. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    8. தொழில் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் கான்கிரீட் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

    9. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

    10. குடியுரிமைத் திருத்தச் சட்டம்' (CAA-2019) ரத்து செய்யப்படும்.

    11. கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற 'இலவச சிம் கார்டு' வழங்கப்படும்.

    12. மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

    13. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

    14. மத்திய திட்டக் குழுவைப்போல, மத்திய நிதிக் குழுவும் நிரந்தர குழுவாக அமைக்கப்படும்.

    15. வசூலிக்கப்படும் கூடுதல் வரி செலவிடப்படும் முறை வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்படும்.

    16. கண்காணிப்பு அமைப்புகளின் நியமனங்கள் ஒரு நியமனக் குழுவால் நியமிக்கப்படுவர். இக்குழுவில் 50 சதவிகித உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    17. அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய அரசால் நிறுவப்பட்டு, தரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்.

    18. அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களைக் களையெடுக்க நிதியுதவி செய்ய மத்திய அளவில் நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

    20. இந்தியாவில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும்.

    21. இந்தியாவில் உள்ள முக்கிய புனிதத் தலங்களுக்குப் பயணிகள் வர வசதியாக அந்தந்த ஊர்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    22. இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

    23. மேல் வரியை (CESS) மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் பரிந்துரைக்கப்படும். மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியில் 42% முதல் 50% வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க நிதிக் குழுமம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

    24. பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

    25. இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும்.

    26. கச்சத்தீவு மீட்பு: கச்சத்தீவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மீனவர்களின் நலன் காக்கப்படவும், கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

    27. இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும். மேலும், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

    28. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும். மேலும், மக்களவை தொகுதி உறுப்பினர் எண்ணிக்கையில் தற்போதைய நடைமுறையே (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு) பின்தொடர ஆவன செய்யப்படும்.

    29. இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மை நிலைநாட்டப்பட பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாமல் கடுமையாகத் தடுக்கப்படும்.

    30. யுபிஎஸ்சி தேர்வு கமிட்டியில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் குழு அமைக்கப்படும்.

    31. இந்தியாவில் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டன. அவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.

    32 கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் இந்தியா கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடன் மறுபரிசீலனை செய்யப்படும்.

    33. மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.

    34. புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 முற்றிலும் அகற்றப்படும்.

    35. நிதிக்குழுவின் அமைப்பு, ஆய்வு விதிகள் ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.

    36. FRBM Act - நிதியியல் பொறுப்பு -வரவு செலவு மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய நிபந்தனைகளை நிராகரிக்க வழிவகை செய்யப்படும்.

    37. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

    38. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும்.

    39. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள்/இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாடு, மொழி அறிவு, உள்ளூர்ப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் வழிகாட்டல் ஆகியவற்றை மத்திய அரசே அளிக்கும். நாடு திரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தேவையான கடனுதவிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    40. MSME-க்கான வருமான வரிச் சட்டம் 43(h) பிரிவு நீக்கப்படும்.

    41. மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.

    42. பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் பங்குகளை விலக்கிக் கொள்வது முற்றிலுமாக நிறுத்தப்படும்.

    43. மாணவ- மாணவிகள் நலன் கருதி இந்தியா முழுவதும் நான் முதல்வன்- புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

    44. தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும்.

    45. அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும்.

    46. தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    47. பெட்ரோல் ரூபாய் 75 க்கும் - டீசல் ரூபாய் 65 க்கும்- கேஸ் ரூபாய் 500 க்கும் வழங்கப்படும்.

    • இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    * வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.

    * இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

    * பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

    * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.

    * மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில்புதியதாக அமைக்கப்படும்.

    * பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.

    * ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

    * மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.

    * ரெயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

    * இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

    * சென்னையில் மூன்றாவது ரெயில் முனையம் அமைக்கப்படும்.

    • ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
    • குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்பின் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    * திமுக தேர்தல் அறிக்கை மட்டுமில்லை... தமிழக மக்களின் தேர்தலை அறிக்கை.

    * பத்து வருட பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்ப்படுத்தியுள்ளது.

    * கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

    * மத்தியில் அமைய போகும், ஆட்சி மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமையவேண்டும் என்றார்.

    இதன்பின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    * ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும்.

    * மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.

    * நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்.

    * குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    * காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்

    * புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.

    * திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

    * சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயா நிர்ணயிக்கப்படும்.

    * ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    * தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
    • திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம் என கனிமொழி கூறினார்.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலில் பேசிய கனிமொழி எம்.பி., திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம் என கூறினார்.

    அதன்பின், தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.




    • எழுத்துப் பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் வரப்பெற்றன.
    • சென்னையில் மட்டும் அண்ணா அறிவாலயத்தில் 2 நாட்கள் பரிந்துரைகள் பெறப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் தி.மு.க. செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், அப்துல்லா, ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், எழிலன், மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று பொதுமக்களிடம் பரிந்துரைகளை பெற்றனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    எழுத்துப் பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் வரப்பெற்றன.

    தொலைபேசி வாயிலாக 18 ஆயிரம் அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டது. அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பினார்கள்.

    சென்னையில் மட்டும் அண்ணா அறிவாலயத்தில் 2 நாட்கள் பரிந்துரைகள் பெறப்பட்டது.

    அனைத்து மாவட்டங்களிலும் பரிந்துரைகள் பெறும் பணிகள் முடிந்ததால் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையில் எந்தெந்த பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் என்று பட்டியலிட்டு வருகின்றனர்.

    இவற்றை முழுமையாக தொகுத்து இந்த வாரம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க உள்ளனர். அவற்றை சரி பார்த்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதி வடிவம் கொடுக்க உள்ளார்.

    இம்மாதம் 10-ந்தேதிக்குள் தேர்தல் அறிக்கையை தயாரித்து முடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.

    கடந்த தேர்தலிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 2 தொகுதியிலும், தி.மு.க. 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    இதனால் தங்கள் கட்சிக்கே பலம் உள்ளதாக கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.


    அதே வேளையில் சிட்டிங் எம்.பி. என்ற பெயரில் காங்கிரசே போட்டியிடும் என்று அக்கட்சி தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு அப்போதைய கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.

    தற்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் கமிஷன் அரசு நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுவார். அவரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். அவரை அபார வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

    • பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.
    • திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.


    இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்க திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

    கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நாளை தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்கின்றனர்.

    • உங்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது.
    • தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக தி.மு.க. மக்களிடம் கருத்து கேட்கிறது. இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் உங்கள் பதிவுகளை வரவேற்கிறது. DMKManifesto2024-க்கான உங்கள் பதிவுகளை வரவேற்கிறது.

    வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல்!

    பாராளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது!

    தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும்!

    • எழுத்துப்பூர்வமாக நீங்கள் சமர்ப்பிக்கலாம்:

    தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது.

    • தொலைபேசி எண் மூலம் பகிருங்கள்:

    நீங்கள் நேரடியாக தொலைபேசியில் அழைத்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.

    • சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள்:

    #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் (@DMKManifesto2024) ட்வீட் செய்யுங்கள் அல்லது உங்கள் பதிவுகளை பேஸ்புக் பக்கம் DMKManifesto2024 அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் உங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • டவுன் ஹால் கூட்டங்களில் பங்குபெறுங்கள்:

    வரவிருக்கும் நாட்களில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு பயணித்து டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்.

    • ஆன்லைன் படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்:

    QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், உங்களின் தேர்தல் அறிக்கை பரிந்துரைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்!

    உங்களின் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். அவை நம் சமூகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்கள் தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பதை உறுதிசெய்யும். வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு திமுக அறிக்கை குழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

    தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடு 25/02/2024 வரை உள்ளது. அதன் பிறகு, ஒரு விரிவான அறிக்கையை உருவாக்க, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையை வெளியிடும்.

    மக்களாட்சி நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாக நீங்கள் இருப்பதற்கு நன்றி.

    தமிழ்நாட்டை சுயாட்சி மாநிலமாகவும், இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும் நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

    சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்...

    • மாணவர்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க அரசு முடக்கியுள்ளது.
    • ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்ததாக இருக்கும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

    எடப்பாடி:

    எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ சமுதாயம் பயன்பெறும் வகையில், எடப்பாடி அருகே அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பி.எட் கல்லூரி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு அதில் தற்போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு, அப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க அரசு முடக்கியுள்ளது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதால், மாநில முழுவதும் அதிக எண்ணிக்கையிலான அரசு பள்ளி மாணவர்கள் எந்த கட்டணமும் இன்றி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளில் தற்போது பயின்று வருகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்ததாக இருக்கும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

    சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து வீணாக காவிரி ஆற்றில் பாய்ந்து, கடலில் கலக்கும் உபரி நீரை கொண்டு இப்பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்கான புதிய பாசன திட்டம் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதை தற்போதைய தி.மு.க அரசு கிடப்பில் போட்டதால், இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையிலான மகத்தான திட்டம், விவசாயிகளுக்கு பயனளிக்காத அவல நிலை தொடர்ந்து வருகிறது.

    இதேபோல் குடிமராமத்து பணி, அம்மா மினிக்கிளினிக் போன்ற அ.தி.மு.க அரசின் நல்ல பல மக்கள் நல திட்டங்களை தி.மு.க அரசு வேண்டுமென்று முடக்கி உள்ளது. கடந்த 2-ஆண்டுகளாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிறைவுற்ற திட்ட பணிகளை மட்டுமே திறந்து வைத்து பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். தமிழக முழுவதும் தற்போது கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.

    இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மாணியக் கோரிக்கை விவாதத்தில் நான் உள்பட அ.தி.மு.கவினர் எழுப்பும் கேள்விகள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படாமல் தி.மு.க அரசால் மறைக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நீதிமன்ற ஆணை பெறப்பட்டு தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்து அ.தி.மு.க.வினர் எழுப்பும் நியாயமான கேள்விகள் வெளிச்சத்திற்கு வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி, ஆடையூர், பக்க நாடு, பூலாம்பட்டி, சித்தூர் கள்ளுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அவர் அப்பகுதியில்லிருந்து புதிதாக அ.தி.மு.கவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் எடப்பாடி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    செட்டிமாங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மாதேஸ் வரவேற்று பேசினார்.

    ×