search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வானிலை ஆய்வாளர்"

    • தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பெரிய அளவில் கோடை மழைக்கு வாய்ப்பு குறைவு.
    • கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

    ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தற்போதுள்ள வெப்ப நிலை நீடிக்கும். கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். 5 அல்லது 10 நிமிடங்கள்தான் மழை பெய்யும். கன்னியாகுமரி, சேலம், ஏற்காடு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பெரிய அளவில் கோடை மழைக்கு வாய்ப்பு குறைவு. கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் 36, 38 டிகிரி செல்சியஸ் அளவிலேயே உள்ளது. மே முதல் வாரத்தில் இருந்து மேற்கு திசை காற்று, தரைக்காற்று கடலோர மாவட்டங்களுக்கு வரக்கூடும் என்பதால் வெப்பம் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும். காவிரி டெல்டா பகுதிகள் உள்பட வடதமிழகம், தென் தமிழக பகுதியிலும் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் அதிகரிக்கும். சுட்டெரிக்கும் வெயில் தாக்கக்கூடும். எனவே வரும் நாட்களில் வெப்ப அலை அதிகம் வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    • 'எல் நினோ' என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது

    'எல் நினோ' கால நிலை முடிவுக்கு வந்தது. வரும் தென்கிழக்கு பருவமழைக்குப் பின் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    'எல் நினோ' என்பது பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக, உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. இதனால் அதீத மழை, திடீர் புயல், கடுமையான வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

    கடந்த மே மாதம் வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்தது. தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது.

    மழை பொழிவு குறைவுக்குக் காரணம் எல் நினோ என்று கூறப்பட்டது. எல் நினோ சில நேரங்களில் வறட்சியையும் சில நேரங்களில் வெள்ளத்தையும் கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு சரியாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டின் பங்கு தண்ணீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கர்நாடகா வறட்சியை சந்தித்துள்ளதாக அங்குள்ள ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் எல் நினோ முடிவுக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

    அவர் தனது X பக்கத்தின் பதிவில் "எல் நினோவிற்கு குட் பை. வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.


    ×