சென்னைக்கு இந்தாண்டு புயல் ஆபத்து இருக்கு..!- தனியார் வானிலை ஆய்வாளர்

சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம்.வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.
சென்னைக்கு இந்தாண்டு புயல் ஆபத்து இருக்கு..!- தனியார் வானிலை ஆய்வாளர்
Published on

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு 11 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 30ம் தேதி சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னையில் இந்தாண்டு புயல் ஆபத்தும் இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு காலக்கட்டத்தில், குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் வலி மண்டலம் மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளை பார்க்கும்போது, நமக்கு லா நினோ உருவாக வாய்ப்புள்ளது.

இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) பொறுத்தவரையில் எதிர்மறை ஐஓடி நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் லா நினா ஆண்டுகளாக அமைந்திருக்கிறது. 2023ம் ஆண்டில் மட்டும் எல் லினோ ஆண்டுகளாகவும் அமைந்துள்ளது.

இந்த லா நினா மற்றும் அதன் காரணிகளை பார்க்குமபோது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை சற்று தாமதமடைந்தாலும், பருவமழை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மழை பொழிவு இருக்கும். தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மழை பொழிவு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லா நினா:

பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள தண்ணீர் சில பகுதிகளில் சூடாகவும், சில பகுதிகளில் குளிர்ச்சியாகவும் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள வானிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்களே எல் நினோ மற்றும் லா நினா வானிலை நிகழ்வுகள் ஆகும்.

எல் நினோ:

எல் நினோ பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடலின் வெப்பநிலையை வழக்கத்தை விட சூடாக்குகிறது, குறைந்தது 0.5 டிகிரி அதிகரித்தால் எல் நினோ உருவாகியதாக அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com