search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் டிரைவர்"

    • பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.

    பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பருத்தியூர் கிராமத்திற்கு தடம் எண் 33 என்ற டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை டிரைவர் பிரபாகர் ஓட்டினார். கண்டக்டராக குமார் பணிபுரிந்தார். இந்தநிலையில் தேவனூர் புதூர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து 3 பேர் பஸ்சில் ஏறினார்கள்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் கண்டக்டரிடம் தங்களை இலவசமாக உடுமலைக்கு அழைத்துச் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் டிக்கெட் எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் கண்டக்டர் சின்னப்புதூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமிகளை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் புங்கமுத்தூர் பிரிவில் பஸ்சை வழிமறித்து செங்கல் மற்றும் கல்லைக்கொண்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர், டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு கீழத்தெருவை சேர்ந்த மனோகரன் மகன் ஆனந்தன் (22) , கோவை மாவட்டம் கோட்டூர் அங்கலகுறிச்சியை சேர்ந்த சுந்தரேஸ்வரன் மகன் மகேந்திரபிரசாத் (19)ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சுமார் 45 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுப்பு மறுக்கப்படுவதாகவும், வார ஓய்வையும் நிர்வாகம் வழங்குவது இல்லை எனவும் அடிக்கடி புகார் எழுந்தது. மேலும் டிரைவர்-கண்டக்டர்கள் வேறு வழித்தடத்திற்கு செல்லமாட்டேன் எனவும், அதிக நேரம் பணி செய்ய முடியாது என கூறினால் எந்தவித விசாரணையும் இன்றி தற்காலிக பணிநீக்கம் அல்லது பணியிட மாற்றத்தில் வள்ளியூர் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் ஈடுபடுவதாக டிரைவர்-கண்டக்டர்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து இன்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், தொழிலாளர்கள் மீது அதிக பணி சுமையை ஏற்படுத்துவதோடு தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக நெல்லை அரசு போக்குவரத்து கழக மண்டல வணிக மேலாளர் சசிகுமார், தொழில்நுட்ப துணை மேலாளர் சங்கர நாராயணன், வள்ளியூர் கிளை மேலாளர் வினோச் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர். இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்படும், தொழிலாளர்களுக்கு வார ஓய்வு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 3 மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தின்போது 45 பஸ்களில் 5 பஸ்கள் மட்டுமே இயங்கின. 3 மணி நேரமாக 40 பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் காலையில் பணிக்கு செல்லும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். 

    • அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இடமாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட அறை, பணிக்காலங்களில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார். மேலும் குழந்தையை அவரது காலடியில் வைத்து தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தார்.

    இதனை பார்த்த அதிகாரிகள் குழந்தையை கையில் தூக்கி கொண்டனர். தொடர்ந்து அவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே தேனியில் உள்ள எனது பிள்ளைகளை என்னால் கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.

    பெற்றோர்களுக்கு வயதானதால் அவர்களை இங்கு அழைத்து வந்து குழந்தைகளை பார்த்து கொள்வதிலும் சிரமமாக உள்ளது.

    எனவே எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். பலமுறை இது தொடர்பாக பொதுமேலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்த டிரைவர் கண்ணன் கோவையில் இருந்து திண்டுக்கல் மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார்.
    • சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, திண்டிவனம் புறவழிச் சாலை தீர்த்தகுளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, ஓசூரில் இருந்து புதுவை சென்று கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சவுந்தர்ராஜன் தனது குடும்பத்தாருடன் வந்த கார் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அரசு பஸ் டிரைவரும், சவுந்தர்ராஜனும் சமாதானமாகி அங்கிருந்து சென்றனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது திண்டிவனம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனி கிளையில் இருந்து அரசு பஸ்சை இயக்கி வருகிறார்.

    இவர் கடந்த சில மாதங்களாக பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்நிலையில் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் பலமுறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தும் தொழிற்சங்க நிர்வாகிகளின் தூண்டுதலால் தனக்கு ஓய்வில்லாத அளவிற்கு பணி வழங்குவதாகவும் கூறினார்.

    எனவே மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது மரணத்திற்கு காரணம் போக்கு வரத்துக் கழக மேலாளர் கார்த்திகேயன் என்பவரே என கூறி வீடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    அதன்பிறகு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த சக பணியாளர்கள் ராஜ்குமாரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது.
    • சென்னைக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் 4½ நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது.

    இந்தப் பணிமனையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை சென்னைக்கு காலை 5 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல காலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய பஸ் பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த பஸ்சை இயக்க வேண்டிய பேரணாம்பட்டு அடுத்த வேப்பனேரியை சேர்ந்த டிரைவர் தேவராஜ். பள்ளிகொண்டாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்டக்டர் பாபு வரவில்லை.

    அவர்களை கிளை மேலாளர் வெங்கடேசன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர்கள் அழைப்பை எடுக்காததால் சக பணியாளர்கள் பஸ்சை இயக்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை தேவராஜ், பாபு பணிக்கு வந்தனர். அப்போது சென்னை பஸ்சை இயக்க சென்றனர்.

    தேவராஜும், பாபுவும் அந்த பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் மண்ணெண்ணெய் எடுத்து வந்து தீக்குளிக்க போவதாக கூறி பஸ்சின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டரிடமும், டிரைவரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    உங்களுடைய பணி குறித்து ஏற்கனவே நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது நீங்கள் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பஸ்சை இயக்க வேண்டும் என விளக்கி கூறினர்.

    இதில் சமாதானம் அடைந்த டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து சென்றனர்.

    இதனால் இன்று காலை 5 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் 4½ நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இந்தச் சம்பவம் பணிமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
    • பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே மெதுகும்பல் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 30). வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுபிஜா (27) இவர்களது மகள் அஸ்வந்திகா (3). இவர்கள் தற்பொழுது களியக்காவிளை அருகே கூட்டப்புளி பகுதியில் வசித்து வந்தனர்.

    வெளிநாட்டிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அருள்ராஜ், சுபிஜா மற்றும் மகள் அஸ்வந்திகாவுடன் மோட்டார் சைக்கிளில் குழித்துறையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றனர். அங்கு உறவினரை பார்த்துவிட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    குழித்துறை கல்லுக்கட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருள்ராஜ் சுபிஜா, அஸ்வந்திகா 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் மகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பலியான சுபிஜா 3 மாத கர்ப்பிணியாகவும் இருந்து உள்ளார். ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான 3 பேர் உடல் பிரேத பரிசோதனை இன்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை அலங்காநல்லூர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது42). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கல்லணை பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த பால்வண்டியும், அவரது இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் படுகாயமடைந்தார். அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டக்டர் மாணவர்களை சாலையின் நடுவே செல்லாமல் ஓரமாக செல்லும்படி கூறியதால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    கன்னிவாடியில் இருந்து திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு இன்று காலை அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் திவாகரன்(32) ஓட்டிவந்தார். கண்டக்டராக வடிவேலு(46) என்பவர் பணியில் இருந்தார். பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு சில மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    இதனால் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். மேலும் கண்டக்டர் மாணவர்களை சாலையின் நடுவே செல்லாமல் ஓரமாக செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன்பின் பஸ் ரேக்கில் டிரைவர் நிறுத்திவிட்டு கண்டக்டருடன் சாப்பிட சென்றுவிட்டார். மீண்டும் அவர்கள் திரும்பி வந்தபோது மாணவர்கள் தங்கள் நண்பர்கள் மேலும் சிலரை அழைத்து வந்து டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சத்தம்போட்டும் அருகில் இருந்தவர்கள் யாரும் தடுக்க வரவில்லை. இதனைதொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகராறில் மாணவரின் சட்டைகாலர் கண்டக்டரின் கையில் சிக்கி கொண்டது. அதனை வைத்து நகர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே செயல்படும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்தான் இந்த தகராறில் ஈடுபட்டது உறுதியானது.

    இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் ெதாடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்ட மாணவர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். பஸ்நிலையத்தில் டிரைவர் , கண்டக்டர் ஆகியோர் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆலமரத்துப்பட்டி சென்று திரும்பிய அந்த பஸ்சை கோடாங்கிபட்டியில் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
    • அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கரூர்:

    கரூர் அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்த நான்கு பெண்கள், 3 வயது பெண் குழந்தை ஒருவருடன் அரசு பஸ்சில் ஏறி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சிமங்கலம் கிராமத்தில் செயல்படும் ரேசன் கடைக்கு சென்றனர். பின்னர் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து ஆலமரத்துப்பட்டி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. உடனே 3 பெண்கள் ரேசன் பொருட்களுடன் பஸ்சில் ஏறினர். அப்போது மூன்று வயது சிறுமியின் தாயார் தனது மகளை பஸ்சில் ஏற்றி விட்டு இன்னொரு அரிசி மூட்டையை எடுக்க சென்றார். அதற்குள் கண்டக்டர் விசில் அடித்துள்ளார். உடனே டிரைவரும் பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதற்கிடையே 3 வயது சிறுமி தாயை காணாமல் அழத்தொடங்கினாள். பின்னர் பஸ்சில் ஏறிய பெண்கள் மற்றும் அந்த குழந்தையை கோடாங்கிபட்டியில் இறக்கிவிட்டனர். பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் தகவல் கொடுத்தார். இதையடுத்து ஆலமரத்துப்பட்டி சென்று திரும்பிய அந்த பஸ்சை கோடாங்கிபட்டியில் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்தில் பயணம் செய்யும் பெண்களை இந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஓசி பயணம் என்றும், தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பான வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து பெண்களை ஏற்றிச் செல்ல மறுத்த டிரைவர் பன்னீர்செல்வம் மற்றும் கண்டக்டர் மகேந்திரன் ஆகியோரை கரூர் அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்டு காலத்திற்கு பின்னர் டிரைவரை காரைக்குடிக்கும், கண்டக்டரை தேவகோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×